சாரதி இணைய இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதி வருகிறார். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் கலிஃபோர்னியா விரிகுடா பகுதி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்.

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்னணி பற்றி?
தமிழ்நாட்டில் சிவகாசிக்கு அருகிலுள்ள திருத்தங்கல் எனது சொந்த ஊர். அப்பாவின் பணி நிமித்தமாக என் சிறுவயதிலேயே மதுரையில் குடியேறினோம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் சென்ற ஆரம்பக் காலம் வரை முழுக்கவே மதுரைதான். மனதுக்கு மிகவும் நெருக்கமான ஊர். என் மகள் பெயர் மதுரா.
அப்பா ஒரு தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக இருந்தார். தாத்தா கோவில் மடப்பள்ளியிலும், பாட்டி ஒரு பட்டாசுத் தொழிற்சாலையிலும் வேலை செய்ய, வீட்டின் ஒட்டுமொத்தப் பொறுப்பும் அம்மாவிடம். சுஜாதாவின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒரு சரியான ‘மத்யமர்’ வாழ்க்கை.
கல்வி மட்டுமே எதிர்காலத்திற்கான திறவுகோல் என்று சொல்லியே வளர்க்கப்பட்டதால், இயல்பாகவே படிப்பிலும் அதன் நீட்சியாக வாசிப்பிலும் ஈடுபாடு வந்தது. இரு தலைமுறைகளின் கடின உழைப்பின் பலனான எனது பொறியியல் பட்டமும், இரண்டாயிரத்துக்குப் பின்னான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் முதலில் சென்னைக்கும் பின்னர் அமெரிக்காவுக்கும் என்னைக் கூட்டிவந்தன. தற்போது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில், மனைவி விஜயலஷ்மி மற்றும் மகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன்.
இலக்கிய அறிமுகம், வாசிப்பு படிநிலைகள் குறித்து?
நான் வளர்ந்த சிவகாசி, மதுரையில் கோவில் திருவிழாக்களும் சினிமாவும்தான் முக்கியமான பொழுதுபோக்குகளாக இருந்தன. வீட்டின் பற்றாக்குறை பட்ஜெட்டில் புத்தகங்களுக்கு இடமிருக்கவில்லை. ஆனாலும் என் வாசிப்பை வீட்டில் ஒருபோதும் தடை செய்ததுமில்லை. சிறுவர் மலர், வாரமலர், விடுமுறையில் உறவினர் ஊர்களுக்குச் செல்லும்போது காமிக்ஸ் புத்தகங்கள், ஏழாம், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ராஜேஷ்குமார், சுபா பாக்கெட் நாவல்கள் என என் வயதுக்கு ஏற்றவையா இல்லையா என்றெல்லாம் பார்க்காமல், கைக்குக் கிடைத்த அனைத்தையும் படித்துக்கொண்டிருந்தேன்.
பத்தாவது படிக்கும்போது என்னுடைய நண்பனின் வீட்டிலிருந்து கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலைத் தற்செயலாக எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். அந்த வரலாற்றுப் பின்புலமும், கல்கியின் நடையும் உடனே உள்ளிழுத்துக் கொண்டன. ஒரே இரவில் அதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, மறுநாள் காலை ஆறு மணிக்கே அடுத்த பாகத்தை வாங்குவதற்காக அவன் வீட்டிற்குச் சென்று நின்றேன்(“படிக்கிற புள்ள பாடப்புத்தகம் கேட்டு வந்து நிக்குது, நீ இன்னும் தூங்குறியே” என்று வகுப்பின் முதல் மாணவனாகிய என் நண்பனுக்குத் திட்டு வேறு!). அதிலிருந்து கல்கி, சாண்டில்யன் என்று தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
பின்னர் விகடன் வழியாக சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துக்களுக்கு அறிமுகமானேன். அவர்கள் மூலமாகவே நவீன தமிழ் இலக்கியம் என்ற முற்றிலும் புதியதோர் உலகிற்கு அறிமுகம் கிடைத்தது. வேலைக்குச் சென்று புதிதாகச் சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையைப் புத்தகங்களுக்காக ஒதுக்கிவைப்பேன். அப்போது எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைத்த சிறந்த நூறு புத்தகங்களின் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு, சென்னையில் இருந்த புத்தகக் கடைகளுக்குச் சென்று தேடிப் பிடித்துப் புத்தகங்களை வாங்குவேன். அந்தக் காலகட்டத்தில்தான் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரையும் படிக்க ஆரம்பித்தேன்.
நான் வேலை பார்த்த இடங்களுக்கெல்லாம் வீட்டிலிருந்து நீண்ட தூரம் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பயண நேரத்தை முழுவதும் வாசிப்பதற்குப் பயன்படுத்திக்கொண்டேன். அந்த முதல் பத்து ஆண்டுகளில் நான் வாசித்த புத்தகங்கள்தான் இன்றுவரை என்னுடைய வாசிப்புப் பழக்கத்திற்கான அடிப்படையாக இருக்கின்றன. இப்போதும் எனது வீட்டிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிலிருக்கும் என் அலுவலகத்திற்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகிவிடும். அந்த நேரத்தை என் வாசிப்பிற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறேன்.
இளவயதிலிருந்தே காந்தி, நேரு போன்ற நேர்நிலை லட்சிய பிம்பங்கள் மீது எனக்கு பெரும் ஆர்வம் உண்டு. பள்ளி இறுதி நாட்களில் படித்த காந்தியின் சத்திய சோதனை எனக்கு மிக விருப்பமான புத்தகம். காந்தியைப் பற்றிப் பெருமிதமாக நான் பேசியதைக் கேட்ட கல்லூரி நண்பன் ஒருவன் டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ புத்தகத்தைக் கொடுத்து இதைப் படி, அவர்களின் உண்மை முகம் தெரியும் என்று என்மேல் இரக்கமும் எள்ளலுமாகச் சொன்னான். பிரிவினையைச் சமாளிக்க இயலாமல் மவுண்ட் பேட்டன் முன் நேருவும் பட்டேலும் பள்ளிச் சிறுவர்களைப் போல கைகட்டி நின்றார்கள் எனக்கூறும் அந்தப் புத்தகம் எனக்கு அப்போது மிகவும் ஆயாசத்தைத் தந்தது. நல்லவேளையாக பஷீரும் அசோகமித்திரனும் பின்னாளில் ஜெயமோகனுமாக இலக்கியம் வழியாக நான் கண்டடைந்த காந்தி, என் இளவயது கனவுருவத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். அரசியல் வரலாறும் வாழ்க்கை வரலாறும் ஆளுமைகளை மதிப்பிடுவதற்கான தகவல்களைத் தான் வழங்குகின்றன. ஆனால் ஒரு மனிதனின் அகச்சிக்கல்கள், அறப்போராட்டங்கள், முரண்பாடுகள் ஆகியவற்றுக்குள் சென்று அவனைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை இலக்கியமே அளிக்கிறது.
இலக்கிய வாசிப்பு உங்களின் வாழ்க்கைப் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து?
வாழ்க்கை சிலருக்கு எல்லா வாய்ப்புகளையும் எளிதாக்கிவிடுகிறது. சிலருக்கோ அடிப்படைத் தேவைகளுக்குக் கூட எண்ணற்ற தடைகளை விதிக்கிறது. இந்த வேறுபாட்டை மிகச் சிறிய வயதிலேயே நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். திருத்தங்கலில் அரசுப்பள்ளியில் படிக்கையில், என் வயதொத்த பல சிறுவர் சிறுமிகள் பட்டாசுத் தொழிற்சாலைக்கும், தீப்பெட்டித் ஆலைகளுக்கும் வேலைக்குச் செல்வதைக் கண்டிருக்கிறேன். வருடத்திற்கு குறைந்தது இரண்டு மூன்று பெரும் விபத்துகளும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து அங்கு வேலைக்குச் செல்வதுண்டு. அவர்களால் எப்படி மரணத்தை அப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள் முடிகிறதென்று மிகத் திகைப்பாக இருக்கும். பின்னாளில் யோசிக்கும்போதுதான், அது மரணத்தின் மீதான அச்சமின்மை அல்ல; வேறு வழியில்லாத வாழ்க்கையின் நிர்ப்பந்தம் என்று புரிந்தது.
மதுரையில் அப்பா பணியாற்றியது ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில். அந்த மருத்துவமனையில் அதன் உரிமையாளரான சேர்ந்த டாக்டரும், கம்பவுண்டராக அப்பாவும், உதவிக்கு இரு நர்சுகளும் மட்டும் தான். இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கும் அந்த மருத்துவமனையின் பிரதான வருமானம் அங்கு வரும் தற்கொலை ‘கேஸ்’களிடமிருந்து தான் கிடைத்தது. போலீஸ் வழக்கு ஆகிவிடுமென்றெல்லாம் பயப்படாமல் விஷம் என்றாலும் தீக்குளிப்பு என்றாலும் எல்லாவற்றையும் அட்மிட் செய்துவிடுவார் அந்த டாக்டர். பணம் மட்டும் கட்டிவிட்டால் போதும். பெரும்பாலான நோயாளிகளை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள். அப்பாவிற்கு தினமும் மதியமும் இரவும் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டிய வேலை. அதனால் பள்ளிக்குச் போக வருகையிலும், இரவு உணவு கொண்டு தருவதற்காகவும் நாங்களும் அங்கு செல்வதுண்டு. மரணத்துடன் போராடும் நோயாளிகளிடமும், அவர்களுக்காக அழுகின்ற உறவினர்களிடமும் வேறு மாதிரி பேசுகின்ற அப்பா, வீட்டிற்கு வந்தவுடன் அந்த உணர்வுகளையெல்லாம் சட்டையைக் கழட்டுவது மாதிரி எடுத்து வைத்துவிட்டு எங்களுடன் இயல்பாகச் சிரித்துப் பேசுவது மிக வியப்பாகவும், இதில் எது உண்மை என்ற கேள்வியும் என் மனதில் இருக்கும்.
மனிதர்கள் வெளியில் காட்டும் முகத்திற்குப் பின்னால், நமக்குத் தெரியாத துயரங்களும் நிர்ப்பந்தங்களும் இருக்கலாம் என்ற புரிதல் இந்த அனுபவங்களிலிருந்து எனக்கு வந்தது. பின்னர் இலக்கியம் அந்த அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கான மொழியையும் விரிவையும் எனக்குக் கொடுத்தது. ஒரு மனிதரின் செயல்களை மட்டும் வைத்து அவரை உடனடியாகத் தீர்மானிக்காமல், அவர் எந்தச் சூழ்நிலையிலிருந்து அந்த முடிவை எடுத்தார் என்று பார்க்கும் பழக்கத்தையும் வாசிப்பு வளர்த்தது.
மற்றொரு எல்லையில் நின்று பார்க்கும்போது, வாழ்க்கை எனக்கு அளித்திருக்கும் வாய்ப்புகளின் பிரம்மாண்டத்தை உணர்வதற்கும் இலக்கிய வாசிப்பே உதவியிருக்கிறது. பள்ளி விடுமுறை நாட்களில், என் சித்தி ஊரான நெல்லையை ஒட்டிய ஆழ்வார் திருநகரிக்குச் சென்றுவிடுவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்றும் அரையர் சேவை எஞ்சியிருக்கும் மூன்று ஊர்களில் ஒன்று அந்த ஊர். என் சித்தப்பா தான் அங்கு அரையராக இருந்தார். அந்த ஊரின் அருகிலிருந்த, பல வருடங்களாகப் பராமரிப்பின்றிக் கிடந்த அப்பன் கோவில் என்ற ஆலயத்தில் பூசை செய்ய என் சித்தப்பா ஒத்துக்கொண்டார். அவரோடு நானும் சென்று அந்தக் கோவிலை சுத்தம் செய்தேன். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த இடமென்று கருதப்படும் ஒரு மேடை அந்தக் கோவிலுக்குள் உண்டு. வௌவால்களும் எலிப்புழுக்கைகளும் மண்டியிருந்த அந்த இடத்தைச் சரி செய்த அன்று, எனக்கு நம்மாழ்வாரை ஒரு கடவுள் உருவகமாக மட்டுமே தெரிந்திருந்தது. மிகப் பல வருடங்களுக்குப் பின்னர் ஜெயமோகனின் ஒரு கட்டுரையைப் படிக்கையில், இந்திய மரபின் உயர் தத்துவத்தை முதலிரு வரிகளில் கூறி, அடுத்த வரிகளில் தாயுள்ளத்தின் உணர்ச்சி வேகத்திற்குச் சட்டெனப் பாய்ந்து விடும் நம்மாழ்வாரின் கவிதைகள் “பறக்கும் யானை” என உள்ளத்தில் இறங்கின. தமிழ் மரபின் மாபெரும் கவி ஒருவனின் பிறந்த இடத்தைப் அருகிருந்து பார்த்திருக்கிறேன் என்ற உணர்வு அன்று பெரும் சிலிர்ப்பைத் தந்தது.
நாம் நேரில் பார்த்த பல விஷயங்களின் ஆழமும் அருமையும், அந்தத் தருணத்திலேயே நமக்குப் புரிந்துவிடுவதில்லை. வாசிப்பு நமது கடந்தகால அனுபவங்களுக்குப் புதிய பொருளைக் கொடுக்கிறது. ஒரு பக்கம், மனிதர்களின் துயரங்களையும் நிர்ப்பந்தங்களையும் புரிந்துகொள்ள அது உதவுகிறது. மறுபக்கம், நமக்குக் கிடைத்த வாய்ப்புகளையும், நம்மைச் சூழ்ந்திருக்கும் மரபின் செழுமையையும் உணரச் செய்கிறது. அந்த வகையில் இலக்கிய வாசிப்பு என் வாழ்க்கைப் பார்வையை ஆழமாக மாற்றியிருக்கிறது என நம்புகின்றேன்.
உங்களுக்குப் பிடித்த தமிழ் மற்றும் பிறமொழி எழுத்தாளர்கள் யார்?
ஜெயமோகன் எனக்கு எப்போதுமே ஓர் ஆதர்சமான எழுத்தாளர். ஆனால் அவருடைய எழுத்துகளுக்கு நான் கொஞ்சம் தாமதமாகத்தான் அறிமுகமானேன். அதற்கு முன்பே புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ப.சிங்காரம், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா ஆகியோரின் படைப்புகளைப் படித்திருந்தேன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீரும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள்.
சு.ரா.வின் ஜேஜே சில குறிப்புகள் புத்தகத்தை பக்கத்திற்கு பக்கம் அடிகோடிட்டே வாசித்து முடித்தேன். அதில் வரும் இந்த வரிகள் எனக்கு மிக விருப்பமானவை. “என்னால் இவர்களுடன் உறவாட முடியாது . புழுதிப்பாய்ச்சல் மூளைகள். எனக்கு அளக்கத் தெரியவில்லை. பின்தொடரத் தெரியவில்லை. ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் கனவுகள்; கொஞ்சம் அசட்டுத்தனம்; கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால்தான் என்னால் சமாளிக்க முடியும்.” “உணவுதான் உணவு என்றாகி விட்டது. கனவுகள் உணவல்ல என்று வெகு தீர்மானமாக முடிவு செய்திருக்கிறார்கள்.எனக்கு நேர்மாற்றித்தோன்றுகிறது.”
ஒவ்வொரு எழுத்தாளரும் தமது படைப்புகளின் வழியாகச் சில தனித்துவமான விழுமியங்களையும் வாழ்க்கைப் பார்வைகளையும் நமக்குள் கொண்டுவருகிறார்கள். ஜெயமோகனின் எழுத்துக்கள் என் வாசிப்பை மேலும் தீவிரப்படுத்தியவை. ஒரு படைப்பை அதன் கதைக்காக மட்டும் வாசிக்காமல், அதன் பின்னால் இருக்கும் வாழ்க்கைப் பார்வை, அறம், வரலாறு, தொன்மம் ஆகியவற்றோடும் இணைத்து வாசிக்கலாம் என்ற புரிதலை அவை ஏற்படுத்தின. விஷ்ணுபுரத்தின் பிரம்மாண்டமும், கொற்றவையின் வரலாற்றுத் தரிசனமும் என்னை உடனே உள்ளிழுத்துக் கொண்டன. ஆனால் அவற்றை விட ஒருபடி மேலாக எனக்கு பின்தொடரும் நிழலின் குரல் பிடித்திருந்தது. மதுரையின் கம்யூனிஸ்ட் எம்பி மோகன் சர்வசாதாரணமாக ஒரு பழைய டிவிஎஸ்50 வண்டியில் தனியாகச் செல்லும் எளிமையைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்களுக்காகப் போராடியதால் கொல்லப்பட லீலாவதி எங்கள் பகுதியைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முகத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருந்த எனக்கு, எந்தக் கருத்தியல்வாதமும் அதன் கண்மூடித்தனமான எல்லைக்குச் செல்கையில் அதுவே பல உயிர்களைக் காவு வாங்கும் வன்முறைக்குக் காரணமாகிறது என்பதை அந்தநூல் உணர்த்தியது.
கி. ராஜநாராயணனின் படைப்புகள் குறிப்பாக கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை நிலம், மொழி, மக்கள் ஆகியவற்றின் உயிருள்ள தொடர்பைக் காட்டின. வைக்கம் முகமது பஷீரின் படைப்புகள் எளிமை என்பது ஆழமின்மை அல்ல என்பதை உணர்த்தின. நகைச்சுவை, துயரம், அன்பு, வறுமை, மனித அபத்தம் எல்லாவற்றையும் மிக இயல்பாக ஒரே உலகிற்குள் கொண்டுவர முடியும் என்பதை பஷீரிடம் கற்றுக்கொண்டேன். பாத்துமாவின் ஆடு, உப்பப்பவிற்கொரு ஆனை இருந்தது, மதிலுகள், பால்யகால சகி என அவரது எல்லா படைப்புகளுமே மனதிற்கு மிக விருப்பமானவை.
பிறமொழி எழுத்தாளர்களில் டால்ஸ்டாய்(போரும் அமைதியும், அன்னா கரீனினா) , தஸ்தயெவ்ஸ்கி (கரமசோவ் சகோதரர்கள்), செகாவ் சிறுகதைகள், நிக்கோஸ் கசன்ட்ஸாகிஸ் (Zorba the Greek, The Last Temptation of Christ) ஆகியோரை மிகவும் பிடிக்கும். இந்தியாவின் பிறமொழி எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் தமிழ் மொழிபெயர்ப்புகளின் வழியாக வாசித்திருக்கிறேன். பொதுவாக நான் தமிழில்தான் வாசிக்க விரும்புகிறேன். தமிழில் அந்தப் புத்தகங்கள் கிடைக்காதபோது ஆங்கிலத்தில் வாசிக்கிறேன்.
நம் புத்தக குழுவில் உங்கள் வாசிப்பு எப்போதும் விரிவானது. ஒரு படைப்பை அதன் பிரதிக்குள் மட்டும் நிறுத்தாமல் அது எழுதப்பட்ட பின்னணியையும் சேர்த்து வாசிப்பது குறித்து?
ஒரு சிறுகதையை அந்தக் கதைக்குள் ஆசிரியர் கொடுத்திருப்பதை மட்டுமே கொண்டு மதிப்பிடுவதே சரியான முறை. ஒரு எழுத்தாளனோ அல்லது விமரிசகனோ அப்படிப் பார்ப்பதே சரி. ஆனால் ஒரு வாசகனாக அந்தக்கதைக்கு கொஞ்சம் வெளியேயும் சென்று, அந்த எழுத்தாளனின் ஒட்டுமொத்தக் கதையுலகில் இந்தக் கதை சென்று பொருந்துமிடத்தையும், இந்தக் கதைக்கு முன்னொட்டும் பின்னொட்டுமாக அவர் எழுதிய மற்ற கதைகளையும் சேர்த்துப் பார்ப்பது இன்னும் சிறப்பான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றது.
மேலும் ஒரு கதையை அதன் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே கொண்ட தனித்த உலகமாக என்னால் பார்க்க முடிவதில்லை. அது எழுதப்பட்ட காலம், அந்தக் காலத்தின் சமூக அமைப்பு, பொருளாதார உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், சாதி, பாலினம், அதிகாரம் போன்ற பல அம்சங்கள் கதைக்குள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஒரு கதாபாத்திரம் ஏன் அப்படி நடந்துகொண்டது என்ற கேள்வி எனக்கு முக்கியமானது. இன்றைய மதிப்பீடுகளை மட்டும் வைத்துக்கொண்டு கடந்த கால மனிதர்களைத் தீர்மானிப்பதிலும் தயக்கம் உண்டு. அதே நேரத்தில், ‘அந்தக் காலம் அப்படித்தான்’ என்று எல்லாவற்றையும் நியாயப்படுத்திவிடவும் முடியாது. அந்த இரண்டுக்கும் இடையில் நின்று கதையைப் புரிந்துகொள்ள முயல்வதுதான் வாசிப்பின் சுவாரசியமான பகுதி.
“நான் ஏன் வாசிக்கிறேன்?” என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?
நம்முடைய சாதாரண வாழ்க்கையின் அன்றாடத்தன்மையிலிருந்தும் அதன் சலிப்பிலிருந்தும் விடுபடுவதற்காகத்தான் வாசிக்கிறேன் என்று சொல்லலாம். அன்றாட வாழ்க்கை ஒரே விதமாக நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, அந்த ஒரு வாழ்க்கை மட்டும் நமக்குப் போதுமானதாக இருப்பதில்லை. வாசிப்பின் மூலமாக வேறொரு காலகட்டத்தில், வேறொரு நிலப்பகுதியில், வேறுவிதமான மனநிலைகளிலும் குணநலன்களிலும் வாழும் கதாபாத்திரங்களுக்குள் சில மணி நேரங்களாவது நம்மால் வாழ முடிகிறது. நான் பிறக்காத காலங்களிலும், சென்றிராத இடங்களிலும், என்னிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைகளுக்குள்ளும் இலக்கியம் என்னை அழைத்துச் செல்கிறது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது.
வாசிப்பு எனக்குத் தகவல்களை மட்டும் தருவதில்லை. நான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் கருத்துகளிலிருந்து என்னை வெளியே இழுக்கிறது. நான் எளிதாகத் மதிப்பிட்டுவிடக்கூடிய ஒருவரின் மனநிலைக்குள் சில நேரங்களாவது என்னை நிறுத்துகிறது.
சில நேரங்களில் அந்த வாசிப்பு ஆறுதலாக இருக்கிறது. சில நேரங்களில் அது நம்மைத் தொந்தரவு செய்கிறது. நாம் தவிர்க்க விரும்பும் கேள்விகளை நம் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறது. அந்த அமைதியின்மையும் வாசிப்பின் முக்கியமான பயன்தான்.
இதற்கு ஜெயமோகனின் படைப்புகளையே உதாரணமாகச் சொல்லலாம். அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் இருந்த பல கதைகளை மிகுந்த ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். ஆனால் டார்த்தீனியம் என்ற கதையை முதன்முதலில் வாசித்தபோது, அது எனக்குள் ஒரு பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கதை என்னை அவ்வளவு தொந்தரவு செய்ததால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அதை மீண்டும் வாசிப்பதற்கான தைரியம் எனக்கு வரவில்லை.
இதன் இன்னொரு எல்லையாக குமரித்துறைவியைச் சொல்லலாம். அது முழுக்க முழுக்க மங்கலமும் இனிமையும் நிறைந்த ஒரு படைப்பு. அதை மீண்டும் வாசித்தால், முதல்முறை வாசிப்பில் ஏற்பட்ட அந்த இனிமை குறைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலேயே அதன் மறுவாசிப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன்.
இப்படி முற்றிலும் வேறுபட்ட இரண்டு எல்லைகளிலும் வாசிப்பு தொடர்ந்து என்னைத் தள்ளிக்கொண்டே இருக்கிறது. நான் நினைத்திருப்பதைவிட உலகம் மிகப் பெரியது; மனிதர்கள் மிகவும் சிக்கலானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் இலக்கிய வாசிப்பு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.
உங்களுடைய முதல் படைப்பு எப்போது வெளியானது?
நான் என்னை எப்போதும் ஒரு வாசகனாக மட்டும்தான் கருதுகிறேன். இப்போது எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது; அதற்காக முயற்சியும் செய்து வருகிறேன்.
நான் வாசித்த ஏதாவது ஒரு படைப்பு மிகவும் பிடித்திருந்தால், அதைப் பற்றி ஒரு கடிதமாக எழுதி ஜெயமோகனின் தளத்திற்கு அனுப்புவது வழக்கம். பூன் காவிய முகாமில் (2022) கலந்து கொண்ட பின்னர், பாஸ்டன் பாலா என்னை எழுதுவதற்கு மிகவும் ஊக்கப்படுத்தினார். உண்மையில் அவருடைய தூண்டுதலில்தான் எம்.டி. வாசுதேவன் நாயரைப் பற்றிய ஒரு கட்டுரையை முதலில் எழுதினேன். அது 2024-ஆம் ஆண்டு சொல்வனம் இதழில் வெளியானது.
அதற்குப் பிறகு, நான் வாசித்த நாவல்களைப் பற்றிய வாசிப்பு அனுபவங்களையும் மதிப்புரைகளையும் கட்டுரை வடிவில் எழுத ஆரம்பித்தேன். அவை சொல்வனம் இதழில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
எழுத்து சார்ந்த உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
தொடர்ந்து வாசிக்கவும், வாசித்த படைப்புகள் குறித்து முறையாக எழுதவும் விரும்புகிறேன். தற்போது எழுதுவது பெரும்பாலும் இலக்கியக் கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள். அவற்றை மேலும் செறிவாகவும், வெறும் நூல் அறிமுகமாக இல்லாமல் படைப்புடன் ஆழமான உரையாடலாகவும் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
மேலும் எழுதுவது என்னுடைய கருத்துகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தப் படைப்புகளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ளவதற்காகக்த்தான். வாசிக்கும்போது, கதை சுவாரசியத்தாலோ அல்லது வாசிப்பு வேகத்திலோ நிறைய விஷயங்களை விரைவாகக் கடந்து போய்விடுகிறேன். ஆனால் அதைப் பற்றி ஒரு கட்டுரையாக எழுதும்போது மறுவாசிப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எழுத உட்காரும்போதுதான் படைப்பு இன்னும் நெருக்கமாகவும் ஆழமாகவும் புரிகிறது. அந்த அனுபவத்திற்காகத்தான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். அதுவே என்னுடைய முக்கியமான தூண்டுகோலாக இருக்கிறது. உதாரணமாக, ம. நவீனின் பேய்ச்சி பற்றிய கட்டுரையும், சந்திரா தங்கராஜின் கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள் பற்றிய கட்டுரையும் அந்த வகையில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.
வாழும்தமிழ் விழாவுக்காகச் சில கதைகளை நான் மொழிபெயர்த்திருந்தேன். அதைத் தொடர்ந்து செய்வதற்கான ஆர்வமும் இருக்கிறது. ஆனால் புனைவு எழுதுவதற்கும் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் என்னை இன்னும் மேம்படுத்திக்கொண்டு, அதற்காகத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
நம் நண்பர்களில் நீங்கள், நிர்மல், விவேக், பாஸ்டன் பாலா எனப் பலர் தங்கள் தொடர் செயல்பாடுகளால் என்னைப் போன்ற பலருக்கும் வினையூக்கியாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
—
நேர்முகம் உதவி: பிரமோதினி




































