ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

அன்புள்ள நண்பர்களுக்கு,

நண்பர் விசுவின் இணையதளத்துக்கு நான் அண்மையில் அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பில் ஏ.ஐ பயன்பாடு குறித்து என் கருத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் இன்றுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் ஏ.ஐ அல்லது கூகுள் டிராண்ஸ்லேட் பயன்படுத்தித்தான் மொழிபெயர்க்கிறார்கள் என்ற புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய கருத்தை அந்தப் பொருளில் நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் ஏ.ஐ பயன்பாடு எவ்வாறு மொழிபெயர்ப்புக்கு உதவக்கூடும் என்று விளக்குவதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இது மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், இன்று மொழிபெயர்ப்பில் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் அவமானப்படுத்தும் தொனியில் உள்ளதாகப் பலராலும் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் பணியை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. மாறாக அவர்கள் மீது பெரும் மதிப்பும், பிரேமையுமே கொண்டுள்ளேன். உலக இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வருவதற்காகவும், தமிழை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதிலும் அவர்கள் பங்கை நான் சற்றும் குறைத்து மதிப்பிட மாட்டேன்.

நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன். மேலும், நண்பர் விசுவிடம் மொழிபெயர்ப்பு குறித்த அந்தப் பகுதியை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நான் பதில் அளித்த இன்னொரு கேள்வியில் வாழும் தமிழ் விழாவுக்கு தொகுத்த இரு சிறுகதைத் தொகுப்புகள் குறித்துப் பேசியுள்ளேன். அந்த பதிலையும், என் ஏ.ஐ குறித்த பதிலையும் இணைத்து அத்தொகுதிகளின் தரம் குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தொகுதிகள் எவ்வாறு உருவாயின என்று விரிவாகவே அதில் பதிலளித்துள்ளேன். இருப்பினும், மேலும் குழப்பங்களை உருவாக்காமலிருப்பதற்காக அந்தப் பகுதியையும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
ஜெகதீஷ் குமார்.

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading