Category: Literature

  • நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    நேர்முகம் 7: அருண் அருணாச்சலம்

    அருண் அருணாச்சலம் ஓவியர். இரா.முருகனின் படைப்புகள் (மிளகு நாவல், சிவிங்கி குறுநாவல்) சொல்வனம் இதழில் தொடராக வந்தபோது பல அத்தியாயங்களுக்கு ஓவியங்கள் வரைந்தார். ஐந்து புத்தகங்களுக்கு அட்டை படம் வரைந்திருக்கிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) முதல் முறை சந்தித்தேன்.  வலைதளம் : https://www.artstation.com/arun-artist/albums/10066400

    தொடர்புக்கு: aak211th.artist@gmail.com

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    பிறந்து வளர்ந்தது கோவையில். குறிப்பாக கே கே. புதூர் (குப்பைக்கோணம் புதூர்). பள்ளி கல்லூரியும் கோவையில் தான். கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பஞ்சாலைகளை பிரதானமாகக் கொண்டு நிறைய குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று அப்படி இருப்பது போல தெரியவில்லை. பெரும்பாலான பஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டது. எங்கள் குடும்பம் கடந்த மூன்று தலைமுறையாக பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணிபுரிந்தனர். 

    தற்போது நான் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கிறேன். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். மனைவி சரவண்யா, பத்துவயதிற்கு உட்பட்ட இரண்டு மகன்கள். திகழ்வன் மற்றும் நிலன்.

    ⁠ஓவியம், வரைகலை அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    நான் முதன் முதலில் வரைந்த ஓவியம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அது ஒரு தண்ணீர் குழாய். பள்ளி பாடநூலில் உள்ள படத்தைப் பார்த்து ஒரு தாளில் வரைந்தேன். அப்போது ஆறு ஏழு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். அதன்பின் தொடர்ச்சியாக நிறைய வரைந்து பார்த்து நானே சுயமாக கற்றுக்கொண்டேன். கண்களில் காணும் எல்லா காட்சிகளையும் ஓவியமாக வரைய எப்படி அணுக வேண்டும் என்று  மானசீகமாக திட்டமிட்டுக்கொண்டிருப்பேன். இளமையில் முறைப்படி ஓவிய வகுப்பிற்கு சென்று ஓவியக்கலையை கற்கவில்லை என்றாலும் இயல்பிலேயே ஓவிய அடிப்படைகளை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றல் அமையப்பெற்றது ஒரு நல்லூழ் என்று நம்புகிறேன்.  90’களில் திரைப்பட கட்டவுட்கள் எல்லாமே கையால் வரைந்த ஓவியங்கள் தான். என்னை மிகவும் கவர்ந்தது ஆங்கில திரைப்பட கட்டவுட்கள். கோவையில் சென்ட்ரல் மற்றும் மாருதி திரையரங்குகளில் ஆங்கிலத்திரைப்படங்கள் வெளியாகும். அப்பாவுடன் சைக்கிளில் செல்லும்போது நிப்பாட்டச்சொல்லி கட்டவுட் ஓவியங்களை பார்த்து ரசிப்பேன். எல்லாமே கோவை ஒப்பணக்கார வீதி சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஓவியர்கள் வரைந்தது. கட்டவுட்டின் கீழே ‘சினி ஆர்ட்ஸ்’ என்று கையெழுத்து இடம்பெற்றிருக்கும். அதைப்பார்த்து தான் என் ஓவியங்களிளும் கையெழுத்துப் போட ஆரம்பித்தேன்.

    பின்னர் ஓவியம் வரைவதற்கு முறையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டீர்களா ? 

    ஆம், 30 வயதுக்கு மேல் தான் என் முதல் ஓவிய வகுப்பு அமைந்தது.  அதன் பின் பல வகுப்புகள், பட்டறைகள் சென்றுள்ளேன். “self learners” என்பவர்களுக்கு நேரடியாக மற்றவரிடம் இருந்து ஒன்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு விலகல் அல்லது ஆணவம் உண்டு என்று படுகிறது. என் முதல் சவாலே அதைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவதுதான். “அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.” என் விடாப்பிடிகளை தளர்த்திய ஜெயமோகனின் வரிகள் இவை. 

    புத்தக வாசிப்பு குழுமம் போல ஏதேனும் ஓவிய குழுமத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா ?

    சில ஓவிய இணைய குழுமத்தில் உள்ளேன். அடிக்கடி கூட்டு ஓவிய பயிற்சி கூடத்திற்கு செல்வேன்.  அதில் வெவேறு ஓவியர்களின் பயிற்சி முறை மற்றும் செய்முறையை காண்பது எனக்கு பிடிக்கும்.   

    உங்களுக்கு பிடித்த ஓவியர் யார் ?

    பலவகையான ஓவியக்கலை வகைகள் உள்ளது. அதில் என்னுடைய களம் என நான் கருதுவது “இலுஸ்ட்ரேஷன்” வகையை சார்ந்தது. அதில் நான் ஆதர்சமாக நினைக்கும் ஓவியர்கள் தென் கொரியாவை சார்ந்த கிம் ஜுங் கி (Kim Jung Gi). ஓவியத்தில் ஆசாத்தியாமான மானுடத்திறன் பெற்றவர். அவர் உள்ளத்தில் எழும் சித்திரக் கொப்பளிப்பு என்னைக் கவர்ந்தது ஆனால் துரதிஷ்டிரவசமாக 2022இல் தன்  47ஆவது வயதில் பல்வேறு உடல்நல சிக்கல்களால் உயிரிழந்தார். அடுத்து அமெரிக்காவை சார்ந்த நார்மன் ராக்வெல் (Norman Rockwell). நார்மனின் ஓவியங்கள் அமெரிக்காவின் கலாச்சாரத்தை நேரடியாக பிரதிபலிப்பவை. அடுத்து காமிக்புக் ஓவியரான ஃபிராங்க் ஃப்ராசெட்டா (Frank Frazetta).

    முதல் ஓவியம் எப்போது வெளியானது ?

    எழுத்தாளர் இரா. முருகன் எழுதிய சிவிங்கி குறுநாவல் சொல்வனம் இதழில் 2023’இல் வெளியானது அதற்குத்தான் முதலில் சித்திரம் வரைய ஆரம்பத்தேன். அதற்கு முன்பு நான் படித்த கல்லூரி ஆண்டுமலரில் என் ஓவியம் பிரசுரமானது. முதலில் ஒரு நாய் சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற தத்ரூபமான ஒரு ஓவியம் வரைந்து கொடுத்தேன். நான் சமர்ப்பித்த அசல் படம் திருட்டு போய்விட்டது. அதனால் அவசரமாக டாக்டர் அம்பத்கரின் உருவப்படம் வரைந்து கொடுத்து பின் பிரசுரமானது. நண்பன் இது பார்ப்பதற்கு இயக்குனர் கே. பாலச்சந்தர் போல உள்ளது என்றான். எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் அவனுக்கும் தட்டுப்பட்டது சற்று ஏமாற்றம்தான். 

    “வர்த்தமான்” என்ற உங்கள் புனைப்பெயர் பற்றி ? 

    இந்தியாவின் முதல் கார்ட்டூன் சீரிஸ் பெயர் வரதமான். சிறுவயதில் இருந்தே மிக அணுக்கமான பெயர். எங்கள் ஊரில் பலருக்கு ‘வரத’ என்று பெயர் இருக்கும், வரதராஜ் வரதாத்தாள். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நபருக்கு வரதராஜன் என்ற பெயர் இருக்கும். நான் பார்த்த முதல் கார்டூனும் அதுதான். வளர்ந்த பின் தான் வர்தமான் சமண மதத்துடன் தொடர்புடையதை அறிந்து கொண்டேன்.

    இந்திய புராணங்களை படக்கதையாக கொண்டுவருவதில் உள்ள சவால் என்ன ? 

    மேற்கில் நாம் காணும் விட்ச்(witch) என்ற உருவம் வெவ்வேறு காலகட்டத்தில் பல நூறு ஓவியர்களின் பல ஆயிரம்  ஓவியம் மூலம் திரண்டு அடைந்த ஒரு சித்திரம். ஒரு குச்சியின் மீது அமர்ந்து ஒரு கிழவி பறப்பதை போல ஒரு சித்திரத்தை பார்க்கிறீர்கள். உடனடியாக அது ஒரு சூனியக்காரி (witch) என்று பார்வையாளர்களுக்கும் தெரியும்.

    ஆனால் நமக்கு மிகமிக குறைவான இமேஜ் லைப்ரரியே உள்ளது. நம் தொன்ம மற்றும் பூரண மாந்தர்கள் (உதாரணம்: கிண்ணரர், கிம்புருடர், கிராதர், பூதங்கள்) களுக்கு என்று ஒரு  இமேஜ் லைப்ரரி உருவாகி வர வேண்டும். எண்ணிப்பாருங்கள்  இன்று திருஷ்டி பொம்மைக்கு  என ஒரு இமேஜ் லைப்ரரி திரண்டு வந்திருக்கிறது. அதுபோல அணைத்து தொன்ம புராண மாந்தர்களும் இமேஜ் லைப்ரரி உருவாகவேண்டுமென்றால் பல ஆண்டு கூட்டு செயல்பாடு தேவைப்படும்.

    “எதற்காக வரைகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    எதைக்கொண்டும் நிரப்பமுடியாத அகவயமான தீரா வெற்றிடத்தை ஏதேனும் ஒரு கலையை கொண்டே நிறப்ப முடியும் என்று இலக்கியம் வாயிலாக கண்டுகொண்டேன். கைவசம் ஒரு கலை இருப்பது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!

    உங்களுடைய ஓவியம் வரையும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் வரைவீர்களா? )

    ஆம் வீட்டிற்குள் ஒரே இடத்தில் அமர்ந்துதான் வரைவேன். குறிப்பிட்ட நேரகாலம் என்றில்லை. ஆனால்  ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் அமர்ந்து பயிற்சி எடுப்பேன். வரையும்போது கைபேசியை அறையின் வெளியே வைத்துவிடுவேன். வரையும்போது இசை கேட்பதோ, தொலைபேசியில் உரையாடுவதோ இல்லை. சமீபகாலமாக பெரும்பாலான ஓவியங்களை ஒரே அமர்வில் முடித்து விடுகிறேன். சில ஓவியங்களை மாதக்கணக்கிலும் வாரக்கணக்கில் நாள்கணக்கில் அமர்ந்தும் முடித்திருக்கிறேன். சில சமயங்களில் பூங்காக்களிலும், பொது இடங்களிலும், வனங்களிலும் அமர்ந்து படம் வரைவேன். ஆனால் இவையெல்லாம் தனிப்பட்டவை இதழ்களுக்கானது இல்லை. இதழ்களுக்காக வரையும்போது உரையைப் படித்தவுடனேயே வரைய மாட்டேன். குறைந்தபட்சம் ஒன்று இரண்டு நாட்கள் எண்ணங்களை நொதிக்க விடுவேன். முதலில் எண்ணங்களைக் கொண்டு புத்தியில் வரைந்தெடுப்பேன் painting in the head என்று சொல்லலாம். இங்கு எண்ணங்கள் என்று நான் குறிப்பிடுவது மொழியாலான எண்ணங்கள் கிடையாது அது முற்றிலும் அருவமானது. பின் உள்ளத்தில் திரண்டுவந்த படத்தை வெளியே வார்த்தெடுப்பேன்.

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ? 

    நான் அடிக்கடி செல்லும் கூட்டு ஓவிய அமர்வுக்கு அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்மணி வருவார். மேடையில் அமர்ந்திருக்கும் மாடலை  பார்த்து தன் வெண்மையான கான்வாஸில் சிறப்பான உருவப்படத்தை தீட்டுவார். சந்தையில் கண்டிப்பாக குறைந்தது சில நூறு அமெரிக்க டாலர்கள் விற்கக்கூடிய அழகிய கலைப்படைப்பு அது. ஆனால் அவர் அடுத்தவாரம் வரும்போது அதே ஓவியத்தின் மேல் வெள்ளை நிறம் பூசி காயவைத்து புதிய கான்வாஸில் அடுத்த ஓவியம் வரைவதற்கு தயாராவர். இதுவே ஒவ்வொருமுறையும் சுழற்சிமுறையில். 

    நான் கண்டடைந்து என்னவென்றால் ஏ.ஐ மானுடத்திடம் களவாட முயற்சிப்பது மனிதனின் செயல்முறையை. ஒருமுனையில்  படைப்பிற்காக கருக்கொள்ளும்  ஒரு எண்ணம் அல்லது யோசனை மறுமுனையில் அதன் இறுதி விளைவு அல்லது படைப்பு. ஒரு கலைஞனுக்கு எது முக்கியம்? இறுதி விளைவா (படைப்பா) அல்லது இறுதி விளைவிற்கான படைப்புச் செயல்முறையா? ஒரு கலைஞனுக்கு இறுதி விளைவு எந்த அளவிற்கு முக்கியம்? ஒரு கலைஞன் எந்த கணத்தில் கலைஞனாகிறான் ? நடனம் நிகழும்போதா அல்லது இறுதியிலா? இவையெல்லாம் தனிநபர் தெரிவுகள். 

    நான் ஒவ்வொருமுறையும் கலைப்படைப்பில் ஈடுபடுவதற்கு காரணமே அதில் உள்ள படைப்பு செயல்முறைக்காகத்தான். அதில்தான் கற்றல் நிகழ்கிறது என்று படுகிறது. இதில் AI  துணை கொண்டு படங்களை வரைந்தால் பலர் வியக்கும்படி வேண்டுமானால் படைக்கலாம் ஆனால் தன்னளவில் நிறைவின்மை அடைவது கண்கூடு. 

    நீங்கள் புத்தகங்களுக்கு அட்டைப்பட ஓவியம் வரைந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

    ஒரு ஆர்வத்திற்காக செய்துபார்த்தேன். இதுவரை ஐந்து ஆறு ஆங்கில சுய வெளீயிட்டு புத்தகங்களுக்கு அட்டைப்படம் போட்டுள்ளேன். இவை commissioned art  என்ற வகைமையில் வருவது. ஆட்டைப்படத்தை கோருவோர் சிலருக்கு ஏற்கனவே அதில் என்ன இடம்பெறவேண்டும் எப்படி இருக்கவேண்டும் என்று தோராயமாக ஒரு யோசனை இருக்கும். சிலருக்கு அப்படி முன் யோசனை என எதுவும் இருக்காது. ஆதலால் இந்த வகை அட்டைப்பட ஓவியம் முழுக்க முழுக்க என்னுடைய படைப்பு என்று சொல்லிவிட முடியாது. இரண்டு மனங்களின் ஓத்திசைவு என் வழியாக நிகழ்கிறது என்று சொல்லலாம். 

    ⁠நீங்கள் நல்ல வாசகரும் கூட. இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    எதுவுமே படிக்காமல் எடுத்த எடுப்பிலேயே தீவிர இலக்கியத்தில் நுழைந்துவிட்டேன். என் இருபதுகளில் ஜெயமோகனின் ‘விசும்பு’ அறிவியல் புனைவு சிறுகதைத்தொகுப்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்தேன். விசும்பு முடிந்த பின்பு ஜெயமோகன் எழுதிய நாவல்கள் என்ன என்று இணையத்தில் தேடி அடுத்து விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். எல்லாமே தற்செயல்தான். ஆனால் தற்செயல்கள் தானாக நிகழ்வதல்ல என்று நம்புகின்றேன். அதன் பின்புதான் இப்படி ஒரு தீவிர இலக்கிய உலகம் இருப்பதைக் கண்டுகொண்டேன். பிடித்த எழுத்தாளர்கள் ஜெயமோகன், கா.நா.சு, சுந்தர ராமசாமி. பிடித்த பிறமொழி எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல், தால்ஸ்தோய், தாஸ்தோவ்ஸ்கி. 

    ⁠ஓவியம் சார்ந்த எதிர்கால திட்டம் என்ன ?

    சிறார் நூல்களுக்கான பணியில் ஈடுபடும் எண்ணம் உண்டு.

  • நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    நேர்முகம் 6: பிரதீப் பாரதி

    பிரதீப் பாரதி எழுத்தாளர். மருத்துவத்துறை பின்புலம் கொண்டவர். டெக்சஸ் மாகாணம் டாலஸ் நகரில் வசிக்கிறார். டாலஸ் புத்தக வாசிப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டாலஸ் நகர நூலகத்தில் சந்திக்கிறார்கள். இதுவரை 35 சந்திப்புகளை நடத்தி இருக்கிறார்கள்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையைப் பற்றி?

    நான் தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகிலுள்ள சிறகிழந்தநல்லூர் என்ற கிராமத்தில் பத்து வயது வரை வளர்ந்தேன். அதன் பிறகு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்ற சிறுநகரிலும், பின்னர் சென்னையில் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். மேற்படிப்பு படிக்கும் எண்ணத்தில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தேன். மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

    முன்பே சொன்னதுபோல, சிறு கிராம வாழ்க்கையில் புத்தகங்கள்தான் முக்கியமான பொழுதுபோக்கு. தொலைக்காட்சி இன்னும் பரவலாகாத காலம் அது. தெருவிலிருந்த அக்காக்கள் நூலகத்திற்குச் செல்லும்போதெல்லாம், அவர்களுக்குத் துணையாக என்னையும் அனுப்பிவைப்பார்கள். என் நினைவில், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே மாலைமதி போன்ற இதழ்களில் வந்த கதைகளைப் படித்துவிட்டு வீட்டில் திரும்பச் சொல்லியிருக்கிறேன்.

    என் கிராமத்திற்கு மிக அருகில்தான் நம்பியாண்டார் நம்பி வாழ்ந்த திருநாரையூர் இருக்கிறது. அவர் பொன்னியின் செல்வன் நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறார் என்று கேள்விப்பட்டு, ஊரில் இருந்த ஒரு பெரிய மனிதர் வீட்டில் கல்கி இதழ்களிலிருந்து வெட்டி பைண்ட் செய்யப்பட்ட பிரதியை, அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்தே வாசித்தேன். ஐந்து பாகங்களையும் நான்கு நாளில் படித்திருப்பேன். அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

    இப்போது அதை இலக்கியப் படைப்பாக நான் கருதுவதில்லை. ஆனால், ஒரு வாசகனாக என்னை உருவாக்கிய புத்தகங்களில் அது முக்கியமான இடம் பெற்றிருக்கிறது.

    அதன்பிறகு கிரைம் நாவல்கள், காமிக்ஸ், சுஜாதா, பாலகுமாரன் என்று வாசிப்பு இயல்பாகவே அடுத்தடுத்த படிநிலைகளுக்குச் சென்றது.

    தீவிர இலக்கியம் என்று நான் முதலில் வாசித்ததாக நினைவில் இருப்பது எஸ். ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்.

    எங்கள் ஊர் நூலகத்தில் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் தனியாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும். அப்பா, மாமா போன்ற பெரியவர்கள் வந்து பொறுப்பு எடுத்துகொண்டு கையெழுத்து போட்டு கொடுத்தால்தான் அவற்றை தருவார்கள். நான் படித்த வேகத்தில் அது ஒவ்வொரு முறையும் சாத்தியமாகாது.

    எங்கள் ஊர் நூலகரைப் பொறுத்தவரை, சுந்தர ராமசாமியே இன்னும் “புதிய எழுத்தாளர்” தான். வெளியே இருந்த அலமாரிகளில் புதுமைப்பித்தன், மௌனி, லா. ச. ரா., ஜெயகாந்தன், பாலகுமாரன், கொஞ்சம் அசோகமித்திரன் — பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர் போன்ற நூல்கள்தான் கிடைக்கும்.

    2006  ஆம் ஆண்டு ஜெயமோகன் எழுதிய பின்தொடரும் நிழலின் குரல் புத்தக அறிமுகம் நிகழ்ந்தது. பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் அவரது வலைத்தளம் ஒவ்வொருநாளும் செல்லும் இடமாக இருக்கிறது.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார்?

    “பிடித்த” என்று சொல்லும்போதே ஒரு முன்முடிவு உருவாகிவிடுகிறது, இல்லையா? மேலும் அது தனிப்பட்ட ரசனை சார்ந்த விஷயமும் கூட.

    தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் உடனே சொல்லக்கூடிய பெயர்கள் ஜெயமோகன், தஸ்தயேவ்ஸ்கி, தாராசங்கர் பந்தோபாத்யாய, ஹெமிங்வே, ஜார்ஜ் ஆர்வெல், கப்ரியல் கார்சியா மார்க்கேஸ். 

    பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். கடந்த ஒரு மாதமாக யுலிசிஸ் நாவலை வாசிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். இந்தப் பட்டியல் முழுமையானதல்ல.

    எனக்கு உவப்பில்லாத எழுத்து என்றால், முக்கியமாக நவீனத்துவ இருத்தலியல் சார்ந்த எழுத்துக்கள். அது என் தனிப்பட்ட பிரச்சனை என்பதை அறிந்திருக்கிறேன்.

    கவிதை குறித்த என் வாசிப்பு இன்னும் மிகவும் குறுகிய எல்லைக்குள்ளேயே இருக்கிறது.

    நீங்கள் ஒருங்கிணைக்கும் டாலஸ் நகர வாசகக் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது தொடங்கினீர்கள்?

    ஜெயமோகன் 2022-ல் டாலஸ் வந்தபோது வாசகர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. நீங்களும் அதில் கலந்துகொண்டிருந்தீர்கள். அன்றே ஆறு நண்பர்களின் தொலைபேசி எண்களை வாங்கி ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம். ஆனால், அதை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்போது தெளிவாக இருக்கவில்லை.

    பிறகு 2024-ல் பூன் தத்துவ முகாமிற்கு மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் போன்ற நண்பர்கள் சேர்ந்து கலந்துகொண்டோம்.

    ஒரு நாள் காலை காபியின் போது, கேரளத்துக்கு வரும் வெளிநாட்டினர் பறவை பார்ப்பதிலிருந்து எப்படி இன்னும் ஆழமான தேடல்களுக்குச் செல்கிறார்கள் என்பதை ஜெயமோகன் அவருக்கே உரிய சாகச மனநிலையுடன் பகிர்ந்துகொண்டார். அதை ஒட்டி நான் கேட்ட கேள்விக்கு, “ஒரு கதை எழுதி பாருங்கள். இல்லையெனில், தீவிரமாக ஏதாவது ஒன்றில் இறங்கி அதை அறிந்துகொள்ளுங்கள்,” என்றார்.

    ஒப்புநோக்க, இரண்டாவது வழி எளிதாகத் தோன்றியது. நண்பர்கள் மூவரிடமும் ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் செந்தில் இமைக்கணம் வாசித்துக்கொண்டிருந்தார். அதையே ஒன்றாக வாசித்து, பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் நால்வரும் முடிவு செய்தோம்.

    டிசம்பர் 2024 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நூலகத்தில் நேரில் சந்தித்து வருகிறோம். அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொருவராக இணைந்துகொண்டனர்.

    எழுத்தாளர் ஜெயமோகனுடன் டாலஸ் வாசிப்பு குழுமம்.

    இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள்?

    புனைவு இலக்கியம் தொடர்பாக இதுவரை 35 சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஒரு கூடுகைக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

    கடந்த ஆண்டு இறுதியில் தீம்புனல் – கம்பராமாயண கூடுகையை நியூஜெர்சியைச் சேர்ந்த நண்பர் பழனிஜோதி “கம்பனின் குகன்” என்ற சிறப்புரை ஆற்றி தொடங்கி வைத்தார். கம்பராமாயண வாசிப்பு தொடர்பாக இதுவரை 22 சந்திப்புகளும் நடந்துள்ளன.

    அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்?

    எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு சந்திப்பில் சுமார் 20 பேர் வரை கலந்துகொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் ஆஸ்டின், சான் அன்டோனியோ, அட்லான்டா போன்ற நகரங்களிலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்திருக்கிறார்கள்.

    ஆனால் எண்ணிக்கையைவிட முக்கியமானது வாசிப்பின் தீவிரம். வாசிப்புகோண தீவிரத்தன்மையின் அடிப்படையில் ஒருவர் மூன்று அல்லது நான்கு தனித்துவமான பார்வை கோணங்களை முன்வைப்பது இதுவரை தவறாமல் நடக்கிறது. அதுவே மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.

    உங்கள் வாசிப்புக் குழுமத்தில் என்னென்ன புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்?

    இதற்கு, எங்கள் வாசிப்பு முறை பற்றிச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

    தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஒரு படைப்பாளியைத் தேர்ந்தெடுத்தால், அவருக்குக் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களாவது ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். பொதுவாக நான்கு கூடுகைகளுக்கு குறையாமல் அவரது படைப்புலகை வாசித்து விவாதிப்போம்.

    அந்த வகையில் புதுமைப்பித்தன், அ. முத்துலிங்கம், அசோகமித்திரன், ப. சிங்காரம், கு. அழகிரிசாமி ஆகியோரின் படைப்புகளை விரிவாக வாசித்துள்ளோம்.

    அசோகமித்திரன் படைப்புலகம் மட்டும் ஆறு மாதங்களுக்கு மேல் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் ஒரு நாவலை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக கலந்துரையாடபட்டுள்ளது

    இடையிடையே ஜெயமோகனின் படைப்புகளையும் வாசித்து, அவற்றின் மீது வாசிப்புக் கோணங்களைப் பகிர்ந்துகொள்கிறோம்.

    அண்மையில் நடைபெற்ற நியூயார்க் வாழும் தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட எழுத்தாளர்களான திருச்செந்தாழை, ம. நவீன், செந்தில் ஜெகநாதன், அ. வெண்ணிலா, கலைச்செல்வி, அழகுநிலா ஆகியோரின் படைப்புகள் குறித்து மூன்று மாதங்களில் ஆறு சந்திப்புகள் நடத்தினோம்.

    அதேபோல், அமெரிக்கா விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்த நிர்மல் அவர்களின் படைப்புகளை மையமாகக் கொண்டு ஒரு சந்திப்பும், பாலாஜி ராஜூ, சு. வெங்கட், விஜய் ரெங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து ஒரு சந்திப்பும் நடத்தினோம்.

    ஒரு எழுத்தாளரை நான்கு சிறுகதைகளில் வாசித்து முடித்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஒரு எழுத்தாளரின் உலகத்துக்குள் நுழைய, அவருடன் சில மாதங்களாவது வாழ வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருக்கிறது.

    வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ?

    திரள்வதின் நெறிகள்” என்று ஜெயமோகன் எழுதிய கட்டுரையை வாசிப்புக் குழும நண்பர் மூர்த்தி ஒருமுறை பகிர்ந்திருந்தார். என் அனுபவத்தின் அடிப்படையில் சில விஷயங்களைப் பகிரலாம்.

    முதலாவது, குறிப்பிட்ட இடமும் நேரமும் என்ற ஒழுங்கு. அதை உறுதியாகக் கடைப்பிடித்துவிட்டால், அந்த ஒழுங்கே நண்பர்களை அழைத்துவரும். ஒரு வாசிப்புக் குழுமத்தை வெற்றிகரமாக நடத்துவது புதிய வாசகர்களைத் திரட்டுவதைக் காட்டிலும், அந்த ஒழுங்கைத் தொடர்ந்து காப்பாற்றுவதில்தான் இருக்கிறது.

    இரண்டாவது, “சரியான வாசிப்பு” என்று ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்வது. ஒரு வாசிப்புக் குழுமத்தின் நோக்கமே, நம்முடைய தனிப்பட்ட வாசிப்புக் கோணம் கேள்விக்குள்ளாகவும், நாம் இதுவரை பார்க்காத புதிய பார்வைகளை அறிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை உருவாக்குவதுதான்.

    மூன்றாவது, ஒரு ஒருங்கிணைப்பாளர் அவசியம். அவருக்குத் திடமான இலக்கியக் கருத்துகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துகள் குழுமத்தின் மீது தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

    நான்காவது, அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்கொள்வது. முதல் ஆண்டு நிறைவில் நாங்கள் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கினோம். குடும்பத்தினரையும் அழைத்து ஒன்றாகச் சந்தித்தோம். அப்போது வாசக நண்பர்களின் இணையர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன்:  “அமெரிக்கா வாழ்வில் வார இறுதியில் அரை நாளை இலக்கியத்துக்கு எடுத்து கொள்கிறோம். இவர் வார இறுதியில் இலக்கியக் கூட்டத்துக்குப் போகிறாரே, அதற்காக வீட்டில் நீங்கள் என்னையோ அல்லது குழுமத்தையோ திட்டுவதுண்டா?”

    பெரும்பாலானவர்கள் சிரித்தபடியே, “ஆரம்பத்தில் திட்டினோம். ஆனால் கூட்டத்திலிருந்து திரும்பி வந்த பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது எல்லாம் எப்போது தப்பித்து வீட்டுக்கு போவோம் என்று இருப்பவர், இந்தக் கூட்டத்துக்காக மட்டும்இன்னும் இரண்டு வாரம் மீண்டும் சந்திக்க, அதற்குள் இதை எல்லாம் படிக்க வேண்டும் என்று ஆவலாகக் காத்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கே ஒரு விதத்தில் மகிழ்வாக சற்று பொறாமையாக இருக்கிறது” என்றார்கள். 

    அந்த பதிலிலிருந்து நான் புரிந்துகொண்டது ஒன்றுதான். ஒரு வாசிப்புக் குழுமம் என்பது அறிவு/கருத்து பரிமாற்றம் மட்டுமல்ல. அது மகிழ்ச்சியையும் உருவாக்க வேண்டும். அந்தக் கொண்டாட்ட உணர்வு மிக முக்கியம்.

    இறுதியாக, இலக்கியக் கருத்துக்களை விடவும், வாசிப்புப் பார்வைகளை விடவும் முக்கியமானது, நம்மைப் போலவே வாசிக்கும் இன்னொரு உயிரை, இன்னொரு நண்பரைச் சந்திப்பதுதான். இலக்கியக் கருத்துக்கள் எப்போது வேண்டுமானாலும்  மாறலாம். வாசிப்பின் பார்வையும் மாறலாம். ஆனால் வாசிக்கும் நண்பர்கள் அரிதானவர்கள். அந்த அரிய நட்பை, எதன் பொருட்டும் இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஒரு நல்ல வாசிப்புக் குழுமத்தின் மிகப் பெரிய சாதனை என்பது நல்ல வாசகர்களை  அல்லது மிகச்சரியான வாசிப்பு கோணத்தை உருவாக்குவது அல்ல. நீண்ட காலம் நீடிக்கும் வாசிப்பு நட்புகளை உருவாக்குவதுதான் என்று நம்புகிறேன்.

    உங்கள் வாசிப்பு குழுமத்தில் இணைவது எப்படி? யாரை எல்லாம் இணைத்து கொள்வீர்கள்?

    வாசிக்கும் நண்பர் யார் என்றாலும், வாசிப்பில் எந்த நிலையில் இருந்தாலும், எந்த விதமான வாசிப்புக் கொள்கை கொண்டவர் என்றாலும் அவரை வரவேற்கிறோம்.

    ஆனால் ஏற்கனவே சொன்ன மாதிரி குழுமமாக இயங்க சில அடிப்படை விதிமுறைகள் தேவையாகின்றன

    அதில் முதன்மையானது, குழுமத்தில் எந்தவித முன்முடிவும் இல்லாமல், அரசியல், இலக்கியக் கொள்கைகள், பிடித்த/ பிடிக்காத ஆக்கங்கள் , எழுத்தாளர்கள் என்பதை எல்லாம் தாண்டி , இணைமனம் என்ற அளவில் பரஸ்பர நட்புணர்வை எதிர்பார்க்கிறோம்.

    இணைய விரும்பும் நண்பர்கள் dfwbookclub2024@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் தொடர்பு எண்ணை பகிர்ந்து கொள்ளலாம்.

    சொல்வனம் இதழில் வெளிவந்த மருத்துவம் குறித்த உங்கள் தொடருக்கு என்ன எதிர்வினைகள் வந்தன?

    ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து பரவிவரும் சில கருத்துருக்களை வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்ற சட்டகங்களில் கொஞ்சம் கற்பனை வைத்து பார்க்க முடியுமா என்பதே என் ஆர்வமாக இருந்தது. இன்னும் பரந்த மனித சிந்தனையின் பின்னணியில் அவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள முடியுமா என்ற தேடலும் அதில் இருந்தது. அதன் அடிப்படையில் தான் தொடருக்கு “மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்” என்று தலைப்பு போடப்பட்டது.

    மருத்துவம் சார்ந்த படிப்பும், பின்புலமும் இருந்தாலும் கூட மேற்சொன்ன சட்டகங்கள் வழியே சில கருத்துருக்களை உசாவிக்கொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் அந்தத் தொடரில் மிகுந்த மனநிறைவை அளித்தது. அதன் வழியாக நான் மேற்கொண்ட ஒரு சிந்தனைப் பயணமும் இருக்கிறது.

    இப்படிப்பட்ட தொடரை எழுத வேண்டும் என்ற முதல் எண்ணத்தை விதைத்தது நீங்கள். தொடர்ந்து  எழுத சொல்வனம் பாலா ஊக்கமளித்தார். பிரசுரித்த சொல்வனம் குழுவிற்கு நன்றி. சு. வெங்கட், நிர்மல், விவேக் போன்ற விஷ்ணுபுரம் நண்பர்களுடன் இந்த விஷயங்களைப் பற்றி தொடர்ச்சியான உரையாடல்கள் நடந்துகொண்டே இருந்தன.

    உங்களுடைய முதல் சிறுகதை எது?

    என்னுடைய முதல் பிரசுரமான சிறுகதை இந்த ஆண்டு சொல்வனம் இதழில் வெளியான சுழற்பிரயாணம்.

    அது வடிவ ரீதியாக சிறுகதைதானா என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது. எழுதி முடித்த பிறகுதான், அது ஒரு நாவலின் சிறிய துண்டைப் போன்ற உணர்வை எனக்குத் தந்தது, ஒன்றும் செய்வதற்கு இல்லை. இப்போது ஒரு மாதிரி குறுநாவல் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    அது எங்கள் அசோகமித்திரன் வாசிப்புக் கலந்துரையாடலின் விளைவாக உருவானது. அவரது பிரயாணம் சிறுகதை குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்றது. அதற்கு நான் “அசோகமித்திரனும் அறிவியல் பொருண்மைவாதக் கசப்பும்” என்ற தலைப்பில் ஒரு எதிர்வினை எழுதினேன்.

    அந்தக் கதையை, எனக்கு உகந்த விதத்தில், என் அனுபவத்தின் வழியாக மறுபடியும் நிகழ்த்திக்கொள்ளும் முயற்சியாகத்தான் சுழற்பிரயாணம் உருவானது. குறிப்பாக, பிரயாணம் எனக்குள் உருவாக்கிய ஒரு கசப்புணர்விலிருந்து வெளியேற நான் மேற்கொண்ட படைப்புச் செயல் என்றும் சொல்லலாம்.

    இதைச் சொல்லும்போது, அசோகமித்திரனை உலக இலக்கியத்தின் ஒரு மாஸ்டர் என்ற நிலையில் அவர் மீது எனக்கு இருக்கும்  அளவில்லாத மரியாதையும் பிரியத்தையும் கருத்தில் கொண்டே சொல்கிறேன்.

    இலக்கியம் தவிர மற்ற துறைகளில் உங்கள் ஆர்வம் என்ன?

    வரலாறு, தத்துவம், உளவியல், யோகம் ஆகிய துறைகளில் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த ஆர்வம் பெரும்பாலும் வாசிப்பின் வழியாகவே உருவானது.

    அதே நேரத்தில், அதை வெறும் வாசிப்பாக மட்டுமே வைத்திருக்காமல், அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாக மாற்ற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது.

    உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

    அன்றாட வாழ்க்கை எழுப்பும் சில கேள்விகளும் போதாமைகளும் என் வாசிப்பின் திசையை உருவாக்குவதில் பங்காற்றி இருக்கின்றன. அவற்றுக்கான சில பதில்களை வாசிப்பின் வழியாகக் கண்டடைகிறேன். இதை ஒரு ஒருவழிப் பாதை என்று சொல்லலாம்.

    ஆனால் அதற்கு மாறாக, வாசிப்பதிலிருந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கி, அதை மீண்டும் அன்றாட வாழ்வில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அப்போது அது இருவழிப் பாதையாக மாறுகிறது.

    ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பிரசுரம், வடிவம் போன்றவை எல்லாம் பொருட்டல்ல. தனிப்பட்ட இந்த இருவழிப்பார்வையை நான், எனது என்று மட்டும் இல்லாமல் ஒரு நிலப்பகுதிக்கு, அதன் கலாச்சாரத்திற்கு விரித்துக் கொள்ளமுடியுமா என்று பார்ப்பதே நோக்கம்.

    அதைச் செய்வேன் என்றும் நம்புகிறேன்.

    முடித்து கொள்வதற்கு முன், நீங்கள் செய்யும் இந்த நேர்காணல் பணிக்கு நன்றி . நேர்காணல்களை தொடந்து வாசிக்கிறேன். இந்த நேர்காணல் வழியே அவர்கள் எழுத்தாளுமையை இன்னும் அணுக்கமாக அறிய முடிகிறது. அது அவர்களின் படைப்புலகை மேலும் ஆழமாக காட்டுகிறது. தொடர்ந்து செய்யுங்கள். நன்றி.

  • நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    நேர்முகம் 5: பாலாஜி ராஜு

    பாலாஜி ராஜு அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் வசிக்கிறார். கவிஞர். எழுத்தாளர். சொல்வனம், ஆவநாழி, கவிதைகள் இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் பாலாஜியை முதலில் சந்தித்தேன். வலைதளம்: https://balajirajuwrites.blogspot.com/

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?

    பள்ளிப் படிப்பை கரூரில் எங்கள் கிராமமான புலியூர் காளிபாளையத்தின் அருகில், செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான தனியார் பள்ளியில் முடித்தேன். எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டு வரை ஒரே பள்ளிதான். பத்தாம் வகுப்பு வரை தென்னைமரங்கள் அணிவகுக்கும் பாதை வழியாக பள்ளிக்கு நடந்தே செல்வேன், பிறகு சைக்கிளில் செல்லத் தொடங்கினேன். கரூர் மாவட்டத்தில் பல காளிபாளையங்கள் உண்டு. கரூர் திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த ஊர் எங்களுடையது. திருச்சியில் தனியார் கல்லூரியில் இளங்கலையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலையும் முடித்தேன். 

    முதுகலை முடித்து கரூரில் ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏழு வருடம் பணியாற்றினேன். 2010ம் ஆண்டு சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராகச் சேர்ந்தேன். நான்கு வருடம் சென்னை வாசம், பிறகு அமெரிக்கா வந்துவிட்டேன். தற்போது கொலம்பஸ் நகரில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மனைவி, மகன், மகளுடன் கொலம்பஸை ஒட்டிய புறநகரில் வசிக்கிறேன்.

    பெற்றோர் தம்பி குடும்பத்துடன் கரூரில் எங்கள் கிராமத்திலேயே வசிக்கிறார்கள். தம்பி கரிகாலியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் கிளை நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

    முப்பது வயது வரை எங்கள் ஊரிலேயே இருக்கும் அரிய வாழ்வு எனக்கு அமைந்தது. போகன் சங்கரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது, ‘நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை’. எனக்கும் சென்னை நகரம் குறித்த இதே சித்திரம்தான் எழுகிறது. வார இறுதியில் சென்னை மங்களூர் விரைவு இரயிலில் கரூர் வந்துவிடுவேன். சென்னையில் வசித்த நான்கு வருடங்களும் இதையே வழக்கமாக வைத்திருந்தேன். 

    இந்த இரயில் பயணங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிப்பேன், பெரும்பாலும் வண்ணதாசன் கவிதைகள். அவர் கவிதைகள் வாயிலாகவே நவீனக் கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

    என்னுடைய கதைகளின் மாந்தர்கள் எல்லோரும் எங்கள் கிராமத்தில் வீட்டைச் சுற்றித்தான் வாழ்கிறார்கள். இந்த வருடம் ஊரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். ‘ஐஸ்கிரீம்’ கதையின் ‘வெள்ளையம்மா’, ‘இருபது ரூபாய்’ கதையின் ‘குணசேகரன்’, ‘உறம்பரையான்’ கதையின் ‘முத்துசாமி தாத்தா’ என எல்லோருடனும் உரையாடினேன்.

    முத்துசாமி தாத்தா’ ஒவ்வொரு வருடம் என்னைச் சந்திக்கையிலும் “அங்கையெல்லாம் நல்ல மழையா?” என்றுதான் உரையாடலைத் தொடங்குவார். இந்த முறையும் தவறாமல் அப்படியே நிகழ்ந்தது. இந்த முறை எல்லோரையும் போலவே தற்போதைய அமெரிக்க அதிபர் குறித்த வியப்பும் அவருக்கு இருந்தது 

    இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள சிற்றூர்களில் இலக்கில்லாமல் மதிய வெயிலில் உலவுவது என் பழக்கம். மனதுக்குள் கதைக் கருக்களின் தருணங்களை அசைபோட்டவாறு, மிதமான வேகத்தில் விட்டேத்தியாக அலைவது அலாதியான ஒரு அனுபவம்.

    கோடைக்காலங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தங்கியதே இல்லை. கிணற்றில் நீந்துவது, வயல் வெளிகளில் அலைவது, மீன் பிடிப்பது, மைதானத்தில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது என்றே என்னுடைய பால்யத்தைக் கழித்திருக்கிறேன். என்னுடைய பால்யத்தையும் இளமையையும் ஒளிரும் வெயிலும், இளையராஜாவின் கிராமிய திரைப்பாடல்களும் முயங்கிய ஒரு வெளியாக அடையாளம் காணலாம்.

    அமெரிக்காவிலும் கோடைக்காலங்களின் பெரும்பகுதியை கிரிக்கெட் மைதானங்களில்தான் செலவிடுகிறேன். விரிந்த வானின் கீழ், பச்சைப் புல்வெளிகளால் சூழப்பட்ட பல்வேறு மைதானங்களில் இருப்பது எனக்குள் உள்ள சிறுவனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது. என்ன, அந்தச் சிறுவன் குடும்பத்துக்கும், இலக்கியத்துக்கும் அளிக்கவேண்டிய நேரத்தை எடுத்து ஒளித்துவைத்துவிடுகிறான். குளிர்காலங்களில்தான் ஒளித்துவைத்த இடத்தை என்னிடம் காட்டுகிறான். அவனுடன் போராடிக்கொண்டேதான் இருக்கிறேன், பெரும்பாலும் என்னை வென்றுவிடுகிறான்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    என்னுடைய பெற்றோர் இருவருமே வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை துவக்கத்திலேயே கைவிட்டவர்கள். ஆனாலும் எதையாவது வாசிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. என்னுடைய அம்மா பழைய வார இதழ்களில் உள்ள கதைகளை வாசிப்பார். அவர் மூலமாகவே எனக்கும் வாசிப்புப் பழக்கம் உருவானது.

    இளம் வயதிலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது; அம்புலிமாமாவும் நிறைய வாசித்திருக்கிறேன். முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாயிலாக அமெரிக்க வன்மேற்கு நிலத்தின் கதைகளும், வேதாளன், இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லூக், வேட்டைக்கார வேலு போன்ற மனதில் அகலாமல் நிலைத்திருக்கும் மாந்தர்களும் அறிமுகமானார்கள். காமிக்ஸ் புத்தகங்கள் வாயிலாக கற்பனையான உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகக் கடைகள் தென்பட்டால் உள்ளே சென்று ஒரு நோட்டம் விடுவது உண்டு. 

    ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரின் பாக்கெட் நாவல்களை வாசித்திருக்கிறேன். இருபதுகளின் தொடக்கத்தில் முழுமையாக சுஜாதாவின் படைப்புகளில் மூழ்கியிருந்தேன். அவர் மூலமாக ‘சுந்தர ராமசாமி’ எனும் பெயர் அறிமுகமானது. ‘ஒரு புளியமரத்தின் கதை’ நான் வாசித்த முதல் இலக்கியப் படைப்பு. பிறகு என்னுடைய இருபதுகளின் இறுதியில் சாரு நிவேதிதாவின் வலைத்தளம் எப்படியோ என் வாழ்வில் குறுக்கிட்டது. சாருவின் வாயிலாக ஜெயமோகனின் வலைத்தளத்தை வந்தடைந்தேன். இன்று வரை அவர்கள் இருவருடைய தளங்களையும் வாசிக்காமல் என்னுடைய ஒரு நாள் கூட நகர்ந்தது கிடையாது. சுஜாதா வாயிலாகவே வண்ணதாசனும் அறிமுகமானார்.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?

    தமிழில் ஜெயமோகன், சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், அ.முத்துலிங்கம் ஆகியோருடைய எழுத்து எனக்கு நெருக்கமானது. திருச்செந்தாழையின் கதைகள் பிரமிப்பை அளிக்கின்றன; அவருடைய சிறுகதைகளை பலமுறை மறுவாசிப்பு செய்திருக்கிறேன். உறங்கும் முன் ஜெயமோகனின் ஏதாவது ஒரு சிறுகதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சொற்களோடு உறங்கச் சென்று சொற்களோடு எழுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.

    இலக்கிய ஆதர்சங்கள் என ஜெயமோகனையும், சாரு நிவேதிதாவையுமே குறிப்பிடுவேன்.

    அபி, மதார், போகன் சங்கர் என ஆதர்ச கவிஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் மதாரின் பரிந்துரையில் தேவதச்சனின் ‘தேதியற்ற மத்தியானம்’ தொகுப்பை வாசித்தேன். அபாரமான கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அவரையும் இந்த ஆதர்சப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அன்றாட வாழ்வின் எளிய தருணங்களை உயர்ந்த கவிதைகளுக்கே உரிய மாயமான தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறார். வாசித்த பிறகும் கவிதைகளின் தாக்கம் நீங்காமல் எஞ்சுகிறது. தேவதச்சனின் கவிதைகளுக்குள் இயங்கும் அவருடைய மனநிலை குறித்த பிரமிப்பு எனக்கு உண்டு. இவர்கள் எல்லோரிடம் இருந்தும் கவிதைகள் இயங்கும் தன்மை குறித்து நிறைய கற்றுக்கொள்கிறேன். 

    ஆங்கிலத்தில் சார்லஸ் புக்கோவ்ஸ்கி, வால்ட் விட்மன், எமிலி டிக்கின்சன், மேரி ஆலிவர் ஆகியோருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். மேரி ஆலிவரை நண்பர் விவேக் சுப்ரமணியன் பரிந்துரைத்தார். மேரி ஆலிவருடைய கவிதைகள் வாசித்தவுடன் மனதுக்குள் அமர்ந்துகொள்கின்றன. 

    பெரும்பாலான அயல்மொழிக் கவிதைகளை தமிழ் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே வாசிக்கிறேன். க. மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘நீரின் திறவுகோல்’ உலகலாவிய கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அடங்கியது. மொழிபெயர்ப்புக்கான கவிதைகளின் தேர்வும், அவருடைய மொழியாக்கமும் இணைந்து எழுச்சி மிகுந்த வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.

    தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், ரேமண்ட் கார்வெர், ஆல்பர்ட் காம்யூ, எர்னஸ்ட் ஹெமிங்வே, ஒர்ஹான் பாமுக், நிகோஸ் கசந்த்சாகிஸ், குர்அதுல்ஐன் ஹைதர், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். பஷீரின் ‘மதிலுகள்’, தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’, ஒர்ஹான் பாமுக்கின் ‘பனி’ ஆகிய நாவல்கள் பிடித்தமானவை.

    பஷீர் குறுநாவல்களில் அங்கதம் மின்னும் நடையில், நேரடியான கூறுமுறையில், எழுச்சி தரும் தருணங்களை அளிக்கிறார். தல்ஸ்தோய் பிரம்மாண்டமான ஒரு உலகைப் படைத்து அதில் கவித்துவமான பல தளங்களை எழுப்புகிறார். தற்போது ‘Lonesome Dove’ என்றொரு அமெரிக்க மேற்கு நிலத்தை களமாகக் கொண்ட நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரசியமான நாவல், புலிட்சர் பரிசு வாங்கியிருக்கிறது. இந்த நாவலை யதேச்சையாக நான் சந்தித்த ஒரு அமெரிக்கர் பரிந்துரைத்தார். அவர் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியப் பின்புலத்தைச் சார்ந்தவர்.

    உங்கள் முதல் கவிதை எப்போது வெளியானது ?

    முதல் கவிதை ‘சொல்வனம்’ இதழில்தான் வெளியானது. 2018 ல் இருந்து கவிதைகள் எழுதுகிறேன். தொடக்கத்தில் ‘வனம்’ இதழுக்கு சில கவிதைகளை அனுப்பினேன், அவர்கள் நிராகரித்தார்கள். பிறகு நிறைய எண்ணிக்கையில் எழுதிய பிறகே கவிதைகளை அனுப்பவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்குள் இருக்கும் கவிதை வாசகனையும் தொடக்கத்தில் எழுதிய கவிதைகள் திருப்திப்படுத்தவில்லை. என்னுடைய சுபாவம் காரணமாகவும் கவிதைகளை பிரசுரத்துக்கு அனுப்பத் தயங்கினேன். 

    நூறு கவிதைகளை நெருங்குகிறேன். தற்போது எழுதும் கவிதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனி அவ்வப்போது கவிதைகளையும் பிரசுரத்துக்கு அனுப்பலாம் என்று தோன்றுகிறது.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    முதல் சிறுகதை ‘ஐஸ்கிரீம்’ சொல்வனம் இதழில் வெளியானது. 2024 ம் ஆண்டு இறுதியில் கரூர் பயணம் முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பியவுடன் எழுதிய சிறுகதை. ஒரு உருவகக் கதையாக எழுத உத்தேசித்தேன். அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் நண்பர்களால் பரவலாக வாசிப்புக்கு உட்பட்ட கதை. இன்றும் நண்பர்கள் சிலர் அந்தக் கதையை அவ்வப்போது பெருமனதோடு குறிப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என் நன்றி. 

    எழுத்து வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பெரிய வாசலைத் திறந்து வைத்திருக்கும் சொல்வனம் இதழுக்கு எப்போதும் என் மனதில் ஒரு இடம் உண்டு.

    கவிதை, சிறுகதை என இரண்டு வடிவங்களிலும் எழுதுகிறீர்கள்.  கவிதை அல்லது சிறுகதை என ஒரு படைப்பிற்கான வடிவத்தை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

    கவிதைகள் எழுதும் செயல் தர்க்கத்தை உதறி, முழுக்க கற்பனையின் துணைகொண்டும், உள்ளுணர்வினாலும் நிகழ்கிறது. கவிதைக்கான தருணங்களை அடையாளம் காண்பதை ஒரு விழிப்புணர்வு நிலை என்றும் கருதலாம். தொடர்ச்சியாக கவிதைகளை வாசிக்கையில், எழுதிக்கொண்டிருக்கையில் காணும் காட்சிகள் அனைத்திலும் ஏதேனும்  படிமங்களும், கவிதைக்கான கருக்களும் தென்பட்டு மனம் மயங்கி நிற்கும் இனிய நிலை அமைகிறது.

    பல தருணங்களில் எழுதிய கவிதைகள் அர்த்தமற்ற உளறல்களாகவும், அரற்றல்களாகவும் இருப்பது உண்டு. ஆனால் கவிதைக்கான எல்லாக் குரல்களுக்கும் செவிசாய்த்தல் அவசியமானது என்று நம்புகிறேன். இனி வரும் கவிதைகளுக்கான உரமாகவும் இத்தகைய கவிதைகள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அபூர்வமாக முழுக் கவிதையும் உதித்தவுடன் துல்லியமான சொற்களுடன், எந்த மாற்றமும் தேவைப்படாமல் அமைவதும் உண்டு. 

    அலுவலகத்தின் பரபரப்பான சூழல்களுக்கு இடையிலும் கவிதைக்கான கருக்கள் இடைமறிப்பது உண்டு. தோன்றும் கருக்கள் அருவமாக, கனவின் ஒரு துளி போல பிரக்ஞையில் இருந்து முழுமையாகக் கரைந்து போவதும் உண்டு.

    கவிதைக்கான கரு உதித்தவுடன் அதற்கே உரிய வார்த்தைகளும், கட்டுமானமும் வந்து அமர்ந்துகொள்கிறது. அப்போது மனம் ஒருவகை தானியங்கித்தன்மையுடன் முதல் வரைவை எழுதிவிடுகிறது. உடனடியாக திறன்பேசியில் தோன்றியவற்றை எழுதி வைக்கிறேன்.

    எழுதிய முதல் வரைவை திறன்பேசியிலிருந்து கணிப்பொறிக்கு மாற்றி செழுமைப்படுத்துவேன். சரியாக வருபவற்றை தனிக் கவிதைகளாக எழுதி வைத்திருக்கிறேன், அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்திலும் வெளியிடுகிறேன். இன்னும் முதல் வரைவாகவே நிற்கும் கவிதைகள் அதிகமான எண்ணிக்கையில் என்னுடைய கூகிள் கோப்பில் கிடக்கின்றன. 

    மாறாக சிறுகதைகள் ஒரு காட்சி, சந்தித்த மனிதர்கள், பல்வேறு நிலக் காட்சிகள், பிற சிறுகதைகள் வாயிலாக நமக்குள் உதிக்கும் வெளிச்சம் ஆகியவை மூலம் எழுகின்றன. கதைக்கான கரு தோன்றியவுடன் மனம் அதை அசைபோடத் தொடங்குகிறது. கதை மாந்தர்கள், சந்தர்ப்பங்கள், உரையாடல்கள், தோராயமான முடிவு என பல கோணங்களில் கதைகளை மனம் நிகழ்த்திப் பார்க்கிறது. உடனடியாக எழுதத் தொடங்கியவை, பல மாதங்களாக மனதுக்குள் இருந்துகொண்டு நெளிபவை, சில பத்திகள் மட்டும் எழுதி வளராமல் நிற்பவை என கலவையாக கதைகள் நிகழ்கின்றன.

    கவிதைகள் எழுதுவது சிறுகதைகளுக்கான வடிவ போதத்தை எனக்கு அளிக்கிறது என்று எண்ணுகிறேன். சிறுகதையா, கவிதையா எனும் தேர்வு கருக்கள் உதித்தவுடன் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது; அதில் தர்க்கரீதியான என்னுடைய தலையீடு மிகவும் குறைவு என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

    கரூர் மண் சார்ந்த யதார்த்த படைப்புகள், அமெரிக்க பின்புலத்தில் சிறுகதைகள் எழுதி இருக்கிறீர்கள். எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன ? 

    அமெரிக்காவுக்கு குடியேறி பன்னிரண்டு வருடங்களை நெருங்குகிறேன். பல்வேறு நிலப்பரப்புகள், பனி, குளிர், வெயில், வானோங்கிய மரங்கள் என இயற்கையின் மாபெரும் திகழ்மேடையாக விளங்கும் இந்த மண்ணில் விரிவாக பயணங்கள் செய்திருக்கிறேன். ஒரு வந்தேறியாக, அந்நியனாக அமெரிக்காவைக் களமாகக் கொண்ட கதைகளை எனக்கே உரிய பார்வையில் தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று எண்ணுகிறேன்.

    கரூர் முப்பது ஆண்டுகளாக நான் வாழ்ந்த நிலம். ஒவ்வொரு ஆண்டும் பிரியத்தோடு அங்கு திரும்பிச் செல்கிறேன். கரூர் பயணம் முடிந்து அமெரிக்கா திரும்புகையில் ஒவ்வொரு முறையும் சில துளிகள் கண்ணீரை அந்த நிலம் என்னிடம் இருந்து பெற்றுக்கொள்கிறது. 

    பிறந்து வளர்ந்த நிலம் நமக்குள் அருவமாக சிலவற்றை விதைக்கிறது. கரூரின் வெயிலை குறிப்பாகச் சொல்லலாம். நான் கதைகளைத் தரிக்கையில் வெயில் அங்கு பின்னணியில் இயங்குகிறது. விவரணைகளில் நேரடியாக அது இல்லாமல் போகலாம், ஆனால் அது நிகழ்கிறது. அமெரிக்காவில் கடுங்குளிர் சூழலில் இத்தனை ஆண்டுகளாக வாழ்கிறேன், வெயில் ஒரு பெரும் ஏக்கமாகவே எனக்குள் படிந்துகிடக்கிறது.

    கரூரில் நான் எதிர்கொண்ட மனிதர்கள் அயராத உழைப்பு, கருணை, மூர்க்கமான நம்பிக்கைகள், பெருமிதங்கள், வன்முறை என எல்லாமுமாக என் கண்முன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்களை அந்த நிலத்தின் பின்புலத்தில் வைத்து புனைவாக எழுதுகையில் உணர்வுரீதியான ஒரு விலகல் நிகழ்கிறது; எனக்குள் இருக்கும் நினைவேக்கம் மெல்ல அகல்வதை உணர்கிறேன், அது என்னை ஆற்றுப்படுத்துகிறது.

    எனக்கும் ஊருக்குமான பாலமாக என்னுடைய அம்மா இருக்கிறார். அன்றாடம் எங்களுக்குள் நிகழும் உரையாடலில் ஊரின் நிகழ்வுகள் வராமல் இருந்ததில்லை. திருமணமோ, இறப்போ, திருவிழாக்களோ, புதிதாக வருகை தரும் குருவியின் நிறமோ, இரவில் எங்கள் வீட்டை காவல் காக்கும் தெருநாயோ அவர் மூலமாகவே என்னை வந்தடைகின்றன. 

    “ஒரு வயசான காக்கா தெனம் சாப்பிட வரும், கொஞ்ச நாளாக் காணோம்” என்றோ, “நம்ம செடி அவரக்கா அவ்ளோ ருசி” என்றோ, “அட மெசின்காரமூட்டு ரவி இருக்காருல்ல,” என்றோ, “நம்ம கோழிய நாய் தூக்கீட்டு போயிருச்சு. எங்காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு கெடக்கும், பாவம்!” என்றோ, “குமிட்டிக் கீர கடஞ்சிருக்கேன். அல்சருக்கு நல்லது” என்றோ அவர் சொல்பவற்றை கூர்மையாக அவதானிக்கிறேன். என்னை ஆட்கொள்ளும் நினைவேக்கம் அவற்றை பெரு விருப்போடு பற்றிக்கொள்கிறது. 

    இவை மிகச் சாதாரண நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நான் எனக்குள் சிறிது தூரம் பயணிக்கிறேன். என்னுடைய சில கதைகளையும் அம்மா வாசித்திருக்கிறார். அந்திமழையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற ‘உறம்பரையான்’ சிறுகதை, அச்சு இதழில் என்னுடைய புகைப்படத்துடன் வெளிவந்திருந்தது. அதன் ஒரு பிரதியை எனக்காக பத்திரப்படுத்தி  வைத்திருந்தார். அவரையும் இப்போது நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    எழுதுவது ஆழந்த அமைதியை அளிக்கிறது. எதையாவது எழுதுகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன், மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த வாழ்விற்கு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன். நாமே ஒரு உலகத்தை உருவாக்கி, அதற்கே உரிய தர்க்கத்தை அளித்து, அந்தக் கதைகளுக்குள் பயணிப்பது பெரும் உவகை அளிக்கிறது. எழுதுவதைப் போன்ற வசீகரமான, நிறைவை அளிக்கும் செயலை நான் வேறு எதிலும் உணர்ந்ததில்லை.

    இத்தனை வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும், இந்த நிலத்தில் முழுமனதாக என்னால் ஒன்ற முடியவில்லை; உணர்வுரீதியாக அந்நியனாக இருப்பதன் பதைப்பு எப்போதுமே எனக்குள் இருக்கிறது. எளிய தத்துவார்த்த சிக்கலாக இது தோற்றமளித்தாலும், என்னால் இந்த பதைப்பைக் கையாள முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன். இங்குதான் இலக்கியத்தையும், எழுத்தையும், ஏன் கிரிக்கெட் விளையாடுவதையுமே கூட உறுதியாகப் பற்றிக்கொள்கிறேன்.

    மேலும், இலக்கியம் அளிக்கும் வரையறைகளுக்கு அப்பால், படைப்புகளுக்குள் இருக்கும் கதைகளையே என் மனம் நாடுகிறது. ஒரு கதைசொல்லியாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

    எழுதும் அனைத்தும் பிரபஞ்சத்தில் எங்கோ சென்று சேகரமாகின்றன. நம் அறிவுத்தொகைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு நோக்கமும் அதற்கு இருக்கிறது என்று நம்புகிறேன். இதை என்னால் தர்க்கரீதியாக விளக்கமுடியவில்லை, ஆனால் உணர்கிறேன்.

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் சிறுகதை எழுதிவிடுவீர்களா?)

    சிறுகதைகளை கணிப்பொறியில்தான் எழுதுகிறேன். வார இறுதி நாட்களில், காலையில் எழுந்து கதைகளை எழுதுகிறேன். விடிகாலையில் படுக்கையில் இருக்கும் போதே மனதுக்குள் இருக்கும் கதை விசை கூடி, சொற்களின் எடையுடன் எழுந்துகொள்கிறேன். நான் எழுதிய கதைகள் அனைத்தும் இப்படி அமைந்தவைதான்.

    இதுவரை இருபத்து ஐந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஏழு கதைகளை பிரசுரத்துக்கு அனுப்பினேன், ஒரு கதை நிராகரிக்கப்பட்டு ஆறு கதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம் இதழில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த ‘எழுகை’ கதையை மட்டுமே ஒரே அமர்வில், இரண்டு மணிநேரத்தில் எழுதி முடித்தேன். பிற கதைகள் அனைத்தும் நாட்கள், வாரங்கள், மாதங்களாக வளர்ந்தவைதான். புனைவுகளை எழுத கணிப்பொறி முன் அமர்வதுதான் முக்கியமானது, அதற்குப் பின் கதைகள் தானாகவே வளர்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன்.

    எழுதிய கதைகளை ஆறவைத்து, எதிர்பாராத தருணங்களில் வாசித்துப் பார்ப்பதை ஒரு முறையாகவே பின்பற்றுகிறேன். அலுவலகத்தின் வேலைகளுக்கு இடையில், கூகிள் கோப்பில் இருக்கும் கதைகளை வாசித்துப் பார்ப்பது என்னுடைய வழக்கம். அப்போது கதைகளில் புதிய தருணங்களோ, இயற்கை வர்ணனையோ, உரையாடல்களோ, ஒட்டுமொத்தமாக கதையின் பார்வையில் இருக்கும் இடைவெளியோ தென்படும்.

    வார நாட்களில் மாலை நேரம் மட்டுமே எதைவாயது எழுதுகிறேன். குறைந்தது அரைமணி நேரமாவது எழுத முயல்கிறேன். மாலை நேரம் புனைவுகள் எழவில்லையென்றால் நாட்குறிப்பும், நண்பர்களின் படைப்புகளுக்கான எதிர்வினைகளையும் எழுதுகிறேன். 

    வேலை நாட்களில் என்னுடைய படைப்புகள் உறைநிலைக்குச் செல்கின்றன. எழுத்து எனும் செயலுடன் தொடர்பில் இருப்பதையும், வாசிப்பின் மூலம் மொழியால் மனதை மீட்டிக்கொள்வதையும் தவறாமல் செய்கிறேன். அலுவலகம், மகனின் பள்ளிக்கு என ஒரு நாளில் இரண்டு மணிநேரம் காரில் பயணிக்கிறேன். அப்போது படைப்புகளை மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பது பிடித்திருக்கிறது.

    என்னுடைய படுக்கை அறையில் ஒரு மெத்தை நாற்காலி இருக்கிறது. அதன் மீது அமர்ந்து, கணிணியை அதற்கே உரிய பலகையின் மீது வைத்து எழுதுகிறேன். எனக்கு எதிரில் மூன்று பெரிய கண்ணாடிச் சாளரங்கள் உள்ளன. அதன் வழியாகத் தெரியும் புல்வெளியையும், மரங்களையும், தொலைதூர வீடுகளையும் பார்த்துக்கொண்டே எழுதுகிறேன்.

    எழுதும் அறையில் படுக்கை, எழுதும் நாற்காலி, ஒரு புத்தக அலமாரா, சில ஓவியங்கள், புகைப்படங்கள், ஒரு கடிகாரம், இரவு விளக்கு தவிர வேறு எதையும் குவிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நிர்வாணமான, எடையற்ற விரிந்த அறை ஏன் எனக்குப் பிடிக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை; எல்லா வகையான லௌதீகமான பொருட்களும் நம் மீது எதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனும் நம்பிக்கை காரணமாக இருக்கலாம். 

    என் மனைவியிடம் மிகக் கறாராக இந்த அறையில் வேறு எதையும் கொண்டுவரக்கூடாது என்றும் சொல்லிவைத்திருக்கிறேன். அவளுக்கு அறை என்றால் அதை லௌதீகமான அலங்காரப் பொருட்களால் நிரப்பவேண்டும் எனும் எளிய நம்பிக்கை உண்டு.

    இன்னொன்று, படுக்கை அறையில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஹவாய் தீவுகள் பயணத்தின்போது ஒரு கனடா நாட்டு தெரு ஓவியன் வரைந்த என்னுடைய கோட்டுச் சித்திரமும் இருக்கிறது. நான் எழுதுகையில் அந்தக் கோட்டுச் சித்திரம் என்னைக் கண்டு புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. கோட்டுச் சித்திரம் குறித்து ஒரு கவிதையும் எழுதியிருக்கிறேன்,

    “கித்தானில்

    தூரிகை உராயும்

    மயக்கொலி

    காதுகளில்,

    எவனோ 

    ஒரு ஓவியன்

    தீட்டுகிறான்

    வரைந்து தீராததோர்

    கோட்டுச் சித்திரத்தை”

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ?  

    நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவன் என்றாலும், மிகச் சமீபத்தில்தான் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கினேன். இது எனக்கு நானே விதித்துக்கொண்ட பத்திய நிலைப்பாடு.

    கதைகளுக்கான தரவுகளுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். சில குறிப்பிட்ட சொற்களின் அர்த்தங்களுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நாடுகிறேன். முன்பு கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஏ.ஐ. தொழில்நுட்பம் உரையாடும் தன்மையுடன் தகவல்களை சரளமாக அளிக்கிறது. உரையாடும் தன்மை இருப்பதாலேயே நம் மீது ஆதிக்கமும் செலுத்துகிறது. 

    ஒட்டுமொத்தமாக எழுதிய படைப்புகளின் மொழியைச் சீரமைக்கவோ, பிழை திருத்தவோ கூட நான் எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லை. படைப்புகளில் எல்லாத் தளங்களிலும் மனிதக் கைத்தடம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. கூகிளின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்துகிறேன்.

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    குறுநாவல் எழுதும் எண்ணம் உண்டு. அது கரூர் பிண்ணனியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு கதைக்களம் புகைமூட்டமாக மனதில் ஓடுகிறது, சற்று கனிந்து வரட்டும் என்று எண்ணுகிறேன். நிறைய சிறுகதைகளை எழுதவேண்டும், பெருநாவல்களை வாசிக்கவேண்டும். பிரபஞ்ச சக்தி என்மீது கருணையுடன் இருக்க வேண்டுகிறேன்.

  • பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

    பால் கிரஹாம் – வாழ்க்கை வரலாறு – 2

     

    http://www.paulgraham.com/worked.html – பெப்ரவரி 2021இல் பால் கிரஹாம் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

    முதல் பகுதி

    [2]

    அதேசமயம் நான் வேர்ல்ட் வைட் வெப் (WWW – உலகாளவிய வலை அல்லது “வலை”) என்பதை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். ஹார்வெர்டில் முதுநிலை படித்து கொண்டிருந்த ராபர்ட் மோரிஸை சந்திக்க சென்றபோது, அவன் எனக்கு “வலை”யை அறிமுகப்படுத்தினான். இணையம் பெரியதாக ஆகும் என்று தோன்றியது. குறுங்கணினிகளின் (microcomputer) புகழிற்கு கிராபிக்கல் இன்டெர்ஃபேஸ்தான் (GUI) காரணம் என்பதை நான் பார்த்து வளர்ந்திருந்தேன். வலை (web) அதுபோல இணையத்தைப் (internet) பரவலாக்கும் என்று தோன்றியது. (ஒரு பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்த மெயின்ஃபிரேம் பெருங்கணினிக்கு நீங்கள் கட்டளைகளை (input) ‘துளை அட்டைகள்’ (punched cards) வழியே தரவேண்டும். பின்பு மேஜை மீது வைக்கக்கூடிய அளவுள்ள மைக்ரோகம்ப்யூட்டர்கள் வந்தபோது அதற்கு நீங்கள் கட்டளைகளை உங்கள் விரல் நுனி அசைவில் விசைப்பலகை (keyboard) வழியே அளிக்கமுடிந்தது. இணையம் 1980களில் வந்துவிட்டது. ஒவ்வொரு கணினிக்கும் எண்களால் ஆன முகவரி இருக்கும். ஆனால் ஒரு கணினியையும் உலகின் வேறொரு மூலையில் இருந்த இன்னொரு கணினியையும் இணைப்பது எளிதானதாக இல்லை. (அது பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம்).  

    நான் பணக்காரனாக வேண்டுமென்றால் இதோ ரயில் நிலையத்திலிருந்து அடுத்த வண்டி புறப்படுகிறது. வலைதளங்கள் பரவலாகும் என்ற என் கணிப்பு சரி. ஆனால் என்னுடைய வலைதளத்திற்கான ஐடியா தவறு. கலைக்கூடங்களுக்கான இணைய விற்பனை வலைதளம் துவங்கினேன். ஆனால் அன்று கலைக்கூடங்கள் இணையத்தில் வர விரும்பவில்லை. இன்றும் புகழ்பெற்ற கலைக்கூடங்களுக்கு இணைய விற்பனையில் துளியும் விருப்பமில்லை. கலைக்கூடங்களுக்கு வலைதளங்களை உருவாக்கும் மென்பொருளை எழுதினேன். வலைதள சர்வரை நிறுவும் வேலையை ராபர்ட் செய்தான். அதன்பின் நாங்கள் கலைக்கூடங்களை எங்கள் வலைதளத்தை உபயோகப்படுத்த அணுகினோம். அதை கடினமான விற்பனை என்று சொல்வதேகூட குறைத்துச்சொல்வதுதான். இலவசமாக உபயோகப்படுத்துவதற்கு கூட ஆள் இல்லை. மிகச்சில கலைக்கூடங்கள் உபயோகப்படுத்தின. அவையும் எங்களுக்கு பணம் தரவில்லை. 

    அதன்பின் வேறு சில வணிக இணைய தளங்கள் தோன்றின. அப்பொழுது ஒன்றை கவனித்தேன். ஒரு சில பட்டன்களைத்தவிர அவை எங்கள் கலைக்கூட இணையதளம் போலவே இருந்தன. “இணைய கடைகள்” (online store) என்பதை உருவாக்கி இருக்கிறோம் என்று தோன்றியது. 

    1995 கோடையில் “ANSI common Lisp” புத்தகத்தை பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டு, இணையத்தில் விற்பனை செய்யும் கடைகளுக்கான மென்பொருளை எழுத துவங்கினேன். ஆரம்பத்தில் இது டெஸ்க்டாப் மென்பொருளாக இருக்கவேண்டும் என நினைத்தோம். மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள்தான். அந்த எண்ணமே திகிலாக இருந்தது. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் விண்டோஸில் எப்படி மென்பொருள் எழுதுவது என்று தெரியாது. விண்டோஸை கற்று கொள்ளவும் விருப்பமில்லை. நாங்கள் இலவச மென்பொருளான யுனிக்ஸ் உலகில் வாழ்ந்தோம். யுனிக்ஸில் ஒரு மாதிரியை (prototype) உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். ராபர்ட் ஷாப்பிங் கார்ட்டை எழுதினான். நான் கடைகளுக்கான புதிய வலைதளங்கள் உருவாக்கும் நிரல்களை எழுதினேன் (லிஸ்ப் மொழியில் தான்.)   

    கேம்பிரிட்ஜிலிருந்த ராபர்டின் அபார்ட்மெண்டிலிருந்து வேலை செய்தோம். அவனுடைய அறை நண்பன் நீண்ட நேரம் வெளியேதான் இருப்பான். சில நேரங்களில் அங்கு தூங்கி ஓய்வெடுக்கவும் எனக்கு வசதியாக இருந்தது. கட்டிலோ, போர்வையோ இல்லை. வெறும் மெத்தை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. ஒரு காலையில், அந்த மெத்தையில் படுத்திருந்த போது, ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று L வடிவத்தில் எழுந்து அமர்ந்தேன். எங்கள் மென்பொருளை பயணர்களின் கணினியில் இருந்து ஓட்டுவதற்கு பதில் சர்வரிலிருந்தே ஓட்டினால் என்ன? பயனர்களின் தனிப்பட்ட கணினியில் ஓடும் எந்த மென்பொருளும் எழுதத்தேவையில்லை. பிரௌசர் மட்டுமே போதும். பயணர்கள் ஒரு வலைதளத்திற்கு சென்று சில சுட்டிகளை க்ளிக் செய்து கொள்ளலாம். 

    இப்படிப்பட்ட வலைதள செயலிகள்(web app) – தற்போது மிக பரவலாக உள்ளது. (உதாரணம்: கூகிள் டாக்ஸ் Vs மைக்ரோசாப்ட் வேர்ட். கூகிள் டாக்ஸிற்கு உங்கள் பிரௌசரே போதும். மைக்ரோசாப்ட் வேர்டிற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலியை உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும்.) ஆனால் அன்று அது சாத்தியமா என்று கூட தெரியவில்லை. அதன் சாத்தியத்தை தெரிந்துகொள்ள செய்து பார்ப்பது என்று முடிவு செய்தோம். சில நாட்களில், ஆகஸ்ட் 12 இல் ஒரு மாதிரியை உருவாக்கினோம். அதை பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை. ஆனால் இப்போது மொத்த கடையையும் நீங்கள் வலைதளத்தின் வழியே பயன்படுத்தலாம், பயனர்களின் கணினியில் வேறெந்த மென்பொருளும் தேவையில்லை.   

    நாங்கள் பெரிதாக ஏதோ ஒன்றைத் தொட்டிருக்கிறோம் என்று தோன்றியது. அடுத்த தலைமுறை மென்பொருட்கள் அனைத்தும் இந்த வடிவில் எழுதப்படக்கூடிய சாத்தியம் எனக்கு தெரிந்தது. 

    வியாவெப் (Viaweb – வலையின் வழியே) என பெயரிட்டு ஒரு நிறுவனத்தை துவங்கினோம். ஐடில் வெப்பரின் கணவர் ஜூலியன் பத்தாயிரம் டாலரை துவக்க முதலீடாக தந்தார். எங்களுக்கான சட்ட மற்றும் வணிக ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், முதலீட்டிற்காகவும் நாங்கள் அவருக்கு எங்கள் நிறுவனத்தில் 10%  பங்கு தந்தோம். பத்து வருடங்கள் கழித்து நாங்கள் நடத்திய முதலீட்டு நிறுவனமான Y Combinator க்கு இது முன்மாதிரியாக இருந்தது. தொழில் துவங்குபவர்களுக்கு இதுபோன்று ஒன்று தேவைப்படும் என எங்களுக்கு தெரியும். ஏனென்றால் எங்களுக்கு அப்படி ஒன்று தேவைப்பட்டது.   

    அந்த கட்டத்தில் என்னுடைய நிகர சொத்து பூஜ்யத்திற்கும் கீழே இருந்தது. என் வங்கியில் இருந்த பணத்தைவிட அரசிற்கு நான் கட்டவேண்டிய வருமான வரி அதிகமாக இருந்தது. இண்டெர்லீஃபில் ஒப்பந்த பணிக்கு கிடைத்த ஊதியத்திற்கான வருமான வரியை சேமித்து வைத்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை. ராபர்ட்டிற்கு முதுகலை கல்வி ஊக்கத்தொகை வந்துகொண்டிருந்தது. என்னுடைய செலவுகளுக்கு ஜூலியன் தந்த முதலீடு தேவைப்பட்டது. 

    செப்டம்பரில் நிறுவனம் துவங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் மென்பொருள் வடிமைப்பு சிக்கலானதாக இருந்தது. ஒரு வழியாக WYSIWYG தள கட்டுமானம் ஒன்றை உருவாக்கினோம். பார்ப்பதற்கு அது பயனர்-செயலி (desktop application) போலவே இருக்கும், ஆனால் பிரௌசரில் (web application) ஓடும். 

    நான் படித்த ஓவியக்கலை இங்கு பயன்பட்டது. ஏனென்றால் பார்ப்பதற்கு உங்கள் வலைதளம் சிறுபிள்ளைகள் செய்ததுபோல இருக்க முடியாது இல்லையா ? நீங்கள் சரியான நிறங்கள், எழுத்து வடிவங்கள், தளத்தின் அமைப்புகளை பயன்படுத்தினால், உங்கள் வலைதளத்தை உங்கள் படுக்கை அறையில் இருந்து ஓட்டினாலும், உங்கள் பயனர்களுக்கு அது பெரிய நிறுவனத்தின் வலைதளம்போல தெரியும்.  

    செப்டம்பரில் ராபர்ட் பொறுமை இழந்தான். “ஒரு மாதமாக இதில் வேலை செய்கிறோம், ஆனால் இன்னும் முடியவில்லை”. இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த மூன்று வருடங்களுக்கும் அவன் அதில்தான் வேலை செய்தான். எனக்கு மேலும் கணினிநிரல் எழுத்தர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு கல்லூரியில் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். ட்ரெவொர் பிளாக்வெல் என்று அவன் பரிந்துரைத்தபோது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஏனென்றால் எனக்குத்தெரிந்த ட்ரெவொர், மொத்த வாழ்வையும் சில அட்டைகளாக மாற்றி, அடுக்கி வைத்துக்கொண்டு, தன்னோடு எங்கு சென்றாலும் கொண்டு செல்பவன். ஆனால் வழக்கம்போல ராபர்ட் சரியாக கணித்திருந்தான். ட்ரெவொர் அட்டகாசமான நிரல் எழுத்தராக இருந்தான்.

    ராபர்ட்டோடும் ட்ரெவொரோடும் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஜனவரி 1996இல், ஆறு இணைய கடைகளுடன் நாங்கள் எங்கள் வலைதளத்தை துவக்கினோம். நாங்கள் தாமதமாக துவங்குகிறோம் என்று நினைத்தாலும், உண்மையில் நாங்கள் மிகமிக சீக்கிரமாக துவங்கிவிட்டோம். பத்திரிக்கைகளில் இணையவழி வணிகத்தைப்பற்றிய செய்திகள் இருந்தாலும், மக்களுக்கு உண்மையில் இணையதள வணிகம் தேவைப்படவில்லை.[8]

    அந்த மென்பொருளை மூன்றாக பிரிக்கலாம்: எடிட்டர் – (தளங்களை உருவாக்க) – நான் எழுதியது. விற்பனை கூடை – ராபர்ட் எழுதியது. ஆர்டர்களை நிர்வகிக்கும் பகுதி – ட்ரெவோர் எழுதியது. நான் எழுதிய எடிட்டர் – பொதுவான இணைய தளங்ளை உருவாக்கும் சிறந்த மென்பொருள். மற்ற இருவருடைய நிரல்களுடன் பொருந்தி வேலை செய்தது. இதை மட்டுமே செய்ய வேண்டும் என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக செய்திருப்பேன். ஆனால் கணினிநிரல் எழுத்தை தவிர மேலும் மோசமான, மன அழுத்தங்களை உருவாக்கக்கூடிய வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.

    தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நிறைய மின்வர்த்தக மென்பொருட்கள் (ecommerce) எழுதப்பட்டு கொண்டிருந்தன. எங்கள் மென்பொருள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களிடம் பணம் இல்லாதது நல்லதாக போயிற்று. நாங்கள் நினைத்தை விட வியாவெப் விலை குறைவாக இருந்தது. எங்கள் வலைதளத்தில் சிறிய இணைய கடை நடத்த வேண்டும் என்றால் மாதம் $100. பெரிய இணைய கடைகளுக்கு மாதம் $300 விலை வைத்திருந்தோம். எங்களின் குறைந்த விலை பெரிய விளம்பரமாகவும், போட்டியாளர்களுக்கு பிரச்சனையாகவும் இருந்தது. படு புத்திசாலித்தனமான ஆராய்ச்சி எல்லாம் செய்து விலையை முடிவு செய்யவில்லை. $300 டாலரே எங்களுக்கு நிறைய பணம் போல தோன்றியது. 

    வணிகத்தை பற்றி எங்கள் தேவைக்கு அதிகமாகவே நாங்கள் தெரிந்து கொண்டோம். உதாரணமாக, ஆண்கள் சட்டை விற்பனை தளத்தில், ஒரு சட்டைக்கு ஒரு சிறிய படம் மட்டுமே போட முடியுமென்றால், மொத்த சட்டையையும் எடுக்காமல் காலர் பகுதியை படம் எடுத்தக்கொள்ளலாம். எனக்கு ஏன் இது நினைவில் இருக்கிறது என்றால், நான் 30 சட்டை படங்களை மீண்டும் எடுக்க வேண்டி இருந்தது. நான் முதலில் எடுத்த படங்கள் அழகாகவும் இருந்தன.

    கடைகளுக்கான வலைதளங்களை உருவாக்கியது எங்களுக்கு கடைகளுக்கான வணிகத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. எங்கள் மென்பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதையும் தான். ஆரம்பத்தில் எனக்கு “வணிகம்” என்ற சொல் ஒருவித மர்மத்தையும், விலக்கத்தையும் உருவாக்கியது. “வணிகம் தெரிந்த ஒருவரை” வேலைக்கு எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கு பயனர்கள் வரத் துவங்கியவுடன் நானும் ஒரு வணிகனாக மாறிவிட்டேன். குழந்தைகள் பிறந்தவுடன் தந்தையாக பொறுப்புடன் நடந்து கொள்வதுபோல. பயனர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருந்தோம். என்றோ ஒரு நாள் எனக்கு மிக அதிகமாக பயனர்கள் வருவார்கள், அப்போழுது அவர்களுடைய படங்களை எல்லாவற்றையும் என்னால் ஸ்கேன் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதுவரை செய்வதற்கு வேறெந்த முக்கியமான வேலையும் இல்லை.  

    வளர்ச்சி விகிதம் தான் ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தின் அதிமுக்கிய அளவுகோல் என்பது அன்று எனக்கு தெரியவில்லை. எங்களின் வளர்ச்சி நன்றாக இருந்தது. 1996ஆம் ஆண்டின் இறுதியில் எங்கள் வலைதளத்தில் 70 கடைகளும், 1997ஆம் ஆண்டின் இறுதியில் 500 கடைகளும் இருந்தன. மொத்த பயனர்களின் எண்ணிக்கை தான் முக்கியம் என்று தவறாக கணித்தேன். ஒருவகையில் எவ்வளவு வருமானம் வருகிறது என்பது முக்கியம்தான். தேவையான வருமானம் வரவில்லை என்றால், நாம் கடையை மூடவேண்டி வரும். தொலை நோக்கில், வளர்ச்சி விகிதம் எண்ணிக்கையை பார்த்துக்கொள்ளும். Y Combinator’இன் அறிவுரையை கேட்கும் ஒரு ஸ்டார்டப் ஆக இருந்தால், நான் இதை சொல்லி இருப்பேன்: ஒன்றும் வருந்த வேண்டாம். ஏனென்றால் உங்கள் நிறுவனம் நன்றாக வளர்கிறது. ஒரு வருடத்தில் ஏழு மடங்கு வளர்ந்திருக்கிறீர்கள். அதிக ஆட்களை வேலைக்கு எடுக்காமல் இருந்தாலே, விரைவிலேயே உங்கள் நிறுவனம் லாபகரமாக மாறும். அதன் பின், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.

    ஆனால், நான் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டேன். முதலீட்டாளர்கள் ஆள் சேர்க்க சொன்னார்கள், மேலும் 2001 வலைதள குமிழி காலகட்டத்தில் எல்லோரும் அதிக ஆட்களைத்தான் வேலைக்கு சேர்த்தார்கள். மிக குறைந்த ஆட்கள் வேலை செய்தார்கள் என்றால் அப்போது அது மிக சிறிய நிறுவனம் போல இருந்திருக்கும். யாஹூ நிறுவனம் எங்களை 1998இல் வாங்கும் போது, எங்கள் வருமானம் செலவுகளை ஈடு செய்ய துவங்கியிருந்தது. அதனால் எங்கள் நிறுவனத்தை நடத்திய காலம் முழுவதும் செலவுகளுக்கு முதலீட்டாளர்களின் கருணையை எதிர் பார்த்திருக்க வேண்டியிருந்தது. எங்கள் முதலீட்டாளர்களும் எங்களைப்போலவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் புதியவர்கள் என்பதால் இருவருமே தடுமாறினோம். 

    யாஹூ எங்களை வாங்கியது பெரிய நிம்மதியை தந்தது. வியாவெப் பங்குகளுக்கு மதிப்பிருந்தது. அதிவளர்ச்சி அடையும், லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தின் பங்கு அது. ஆனால் எனக்கு அது மதிப்பு மிக்கதாக தோன்றவில்லை; எனக்கு ஒரு நிறுவனத்தை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் நிறுவனத்திற்கு வாழ்வா சாவா போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. மேலும் நாங்கள் நிறுவனத்தை நடத்திய காலகட்டத்திலும் என்னுடைய கல்லூரி வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளவில்லை. அதனால் யாஹூ எங்கள் நிறுவனத்தை வாங்கியவுடன், எனக்கு பிச்சைகாரனிலிருந்து பணக்காரன் ஆனது போல தோன்றியது. நியூயார்க்கில் இருந்து கலிஃபோர்னியாவிற்கு போக போவதால் ஒரு கார் வாங்கினேன். மஞ்சள் VW GTI. அந்த காரின் லெதர் சீட்டே அதுவரை நான் வைத்திருந்ததில் மிக சொகுசான பொருளாக தோன்றியது. 

    அடுத்த ஆண்டு – 1998 கோடை முதல் 1999 கோடை வரை – என் வாழ்நாளிலே வெட்டியான நாட்களாக இருந்தது. வியாவெப்பை நடத்தியது என்னை அழுத்தத்திற்கு உட்படுத்தி என் சக்தி அனைத்தையும் உறிஞ்சி விட்டது. கலிஃபோர்னியாவிற்கு சென்ற ஆரம்பத்தில், வழக்கம்போல அதிகாலை மூன்று மணி வரை நிரல்கள் எழுத முயற்சித்தேன். ஆனால் யாஹூவின் வேலை கலாச்சாரம், சாண்டா கிளாராவின் சோகமான நாற்காலி-வயல்கள் என்னை உற்சாகம் இழக்க வைத்தன. சில மாதங்களிலே எனக்கு முன்பு இண்டெர்லீஃபில் வேலை செய்வது போல தோன்றியது.  

    யாஹூ எங்களை வாங்கியபோது நிறைய பங்கு ஆப்ஷன்களை (பங்கு ஆப்ஷன்கள் – நீங்கள் உடனடியாக அந்த பங்குகளை விற்க முடியாது. முதல் ஆண்டில் 25%, பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு என நான்கு ஆண்டுகளில் உங்களுக்கு தரப்பட்ட 100% பங்குகளை விற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும்.) எங்களுக்கு தந்திருந்தது.  அப்பொழுது யாஹூவே அளவுக்கு அதிகமாக சந்தையில் மதிப்பிடப்பட்டிருந்ததால், அந்த ஆப்ஷன்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அந்த பங்குகள் 5X வளர்ந்தன. ஒருவருட முடிவில் என்னுடைய முதல் பங்கு ஆப்ஷன்களை விற்றுக்கொள்ளும் தேதி வரும்வரை யாஹூவில் இருந்தேன். 1999 கோடையில் பங்குகளை விற்றுவிட்டு யாஹூவில் இருந்து விலகிவிட்டேன். 

    ஓவியம் வரைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான்கு வருடங்களாக என் மூளை முழுவதும் மென்பொருளும், ஆண்களின் சட்டைகளும் மட்டுமே நிரம்பி இருந்தது. இந்த வேலைகளை செய்ததே நான் பணக்காரனாகி ஓவியம் வரைவதற்காகத்தான். இப்பொது பணக்காரனாகி விட்டதால், நான் ஓவியம் வரையலாம் என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன். 

    நான் வேலையை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னபோது, யாஹூ மேலாளர் என்னுடன் நீண்ட நேரம் உரையாடினார். என் எதிர்கால திட்டங்களை பற்றி பேசினோம். என்னவெல்லாம் நான் வரையப்போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அக்கறையாக கேட்டது எனக்கு உண்மையிலே மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது யோசித்து பார்த்தால், நான் பொய் சொல்கிறேன் என அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய பங்கு ஆப்ஷன்களின் அப்போதைய மதிப்பு – மாதம் $2 மில்லியன் டாலர்கள். (ஆம், ஒவ்வொரு மாதமும் நான் யாஹூ நிறுவனத்தில் வேலை செய்தால், பங்கு ஆப்ஷன் மூலம் எனக்கு $2 மில்லயன் டாலர்கள் கிடைக்கும்.) நாம் அவ்வளவு பணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால், நான் மீண்டும் ஒரு நிறுவனத்தை துவங்குவதற்காக மட்டுமே இருக்கவேண்டும், அப்படி நான் ஒரு நிறுவனம் துவங்கினால், என்னுடன் யாஹூவில் இருந்து ஆட்களை அழைத்து சென்று விடுவேன் என அவர் நினைத்திருந்தார். வலைதள குமிழி காலகட்டத்தின் உச்சம் அது. யாஹூவே அதன் மையம். என் மேலாளர் அப்போழுது பில்லியனர். யாஹூவை விட்டு விட்டு ஒரு புதிய நிறுவனத்தை துவங்க செல்வது ஒரு கிறுக்குத்தனமான, ஆனால் நிகழக்கூடிய திட்டம். 

    ஆனால் நான் உண்மையிலே ஓவியம் வரைவதற்காகத்தான் வேலையை விட்டேன். உடனடியாக ஓவியம் வரையவும் துவங்கினேன். மேலும் நேரத்தை வீணடிக்க முடியாது.  பணக்காரனாவதற்கே நான்கு வருடங்கள் போய்விட்டது. தங்கள் நிறுவனங்களை விற்றுவிட்டு செல்லும் நிறுவனர்களுக்கு இப்பொழுதும் என் அறிவுரை இதுதான் – கொஞ்சம் ஒய்வெடுங்கள். நானும் அதைத்தான் செய்திருக்க வேண்டும். எங்கேயாவது சென்று – ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை.

    நான் ஓவியம் வரைய முயற்சித்தேன். ஆனால் ஓவியம் வரைவதற்கான உந்துதலோ, சக்தியோ என்னிடம் இல்லை. கலிஃபோர்னியாவில் எனக்கு நண்பர்கள் பெரிய அளவில் இல்லை என்பது ஒரு சிக்கல். சாண்டா க்ரூஸ் மலையில் வீடு வாங்கியதும் அந்த சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. அருமையான இடம் அது. ஆனால் பல மைல் தொலைவிற்கு எதுவுமே இல்லை. மேலும் சில மாதங்கள் அங்கு தாக்குப்பிடித்து பார்த்தேன். பின்பு விரக்தியில் நியூயார்க்கிற்கு திரும்பி விட்டேன். அமெரிக்க வாடகை-சட்டத்தை பற்றி தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஆச்சர்யமான விஷயம் ஒன்று இருக்கும். நியூயார்க்கில் என்னுடைய பழைய வீடு இன்னும் அப்படியே இருந்தது. என் பழைய வாழ்க்கையின் ஒரு சமாதிபோல. ஐடெல் இன்னும் நியூயார்க்கில் தான் இருந்தார். மேலும் சிலர் ஓவியம் வரைய முயற்சித்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை.

    முதல் பகுதி

  • நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    நேர்முகம் 4: மலர்விழி மணியம்

    மலர்விழி மணியம் வல்லினம், சொல்வனம், விகடன் இதழ்களில் சிறுகதைகள் எழுதுகிறார். நாங்கள் ஒருங்கிணைக்கும் க.நா.சு உரையாடல் அரங்கில் மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் சிகண்டி நாவல் குறித்து ஒரு நல்ல உரை ஆற்றினார். அதற்கு அடுத்த மாதம் தத்துவ முகாம், பூன் (அக்டோபர், 2025) இல் மலர்விழியை சந்தித்தேன். அவருடன் ஒரு நேர்முகம்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    நான் பிறந்த ஊர் திருப்பூர். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கோயமுத்தூரில் படித்து முடித்தேன். என் குடும்பத்தோடு தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறேன். என் கணவர் பெயர் லேண்ஸிலின் சந்தோஷ். மகள் பெயர் எடினா மேக்டலீன், மகன் பெயர் எட்வின் மார்கஸ்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ?

    திருமணத்திற்கு முன்பு வரை இலக்கிய வாசிப்பு அறிமுகமோ அனுபவமோ எனக்கு இருந்ததில்லை. பள்ளிப் படிப்பிலும், ட்யூசனிலும் மூழ்கிய தலைமுறையில் நானும் ஒருத்தி. திருமணத்திற்குப் பிறகு நான் எடுத்த முதல் இலக்கியம் பைபிள். புதிய ஏற்பாடு நல்ல பரிட்சயமானது. அமெரிக்கா வந்த பிறகு என்னை வியப்பில் ஆழ்த்தியது இங்கு உள்ள நூலகங்கள். பைபிள் அறிந்தமையால் டால்ஸ்டாயின் படைப்புகளையும், தஸ்தவஸ்கியின் படைப்புகளையும் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. பிறகு மிஷிகனில் இயங்கி வரும் புத்தகவாசிப்புக் குழுவில் இணைந்த பொழுது நண்பர்கள் உதவியோடு தமிழ் இலக்கிய உலகம் அறிமுகம் ஆனது. தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். 

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    2022 ல் பாதியில் துவங்கி தான் தமிழ் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்தேன். மிஷிகன் தமிழ் ஆர்வலர்கள் குழுவில் இணையும் வரை எனக்கு தமிழ் எழுத்தாளர்களின் பெயர் கூடத் தெரியாது. நண்பர்கள் சங்கர் மற்றும் மதுநிகாவின் உதவியோடு நிறைய தமிழ் எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன். தமிழில் ஜெயமோகன், இமையம், லா.சா.ரா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, அ.முத்துலிங்கம், ம.நவீன், சு.வேணுகோபால், அஜிதன், அம்பை, பாமா, ப.சிவகாமி, நீலி ரம்யா, அமிர்தவள்ளி, ஆர்.சூடாமணி, செந்தில் ஜெகன்நாதன், திருச்செந்தாழை எனத் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டு தான் இருக்கின்றது..  

    பிற மொழி எழுத்தாளர்களில், லியோ டால்ஸ்டாய், தஸ்தவஸ்கி, குர்தலின் ஹைதர், காளிள் கிப்ரான், மிக்கேல் நெய்மி, பார் லாகர்க்விஸ்ட், அதீன் பந்தோபாத்யாய.. 

    பிடித்த சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பற்றி…

    என் வாசிப்பு குறைவானது. ஒரு கதையை வாசித்த பின்பும் கதையும் கதை மாந்தர்களும் வாசகனோடு எது வரை பயணிக்கிறார்கள் என்பதில் தான் அதன் வெற்றி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதில் என்னை பாதித்த கதைகளில் சிலவும் அதனோடு ஒன்றிய கதாப்பாத்திரங்களும் என்று சொன்னால், ஜெயமோகன் அவர்களின் ‘அறம்’ மற்றும் அதில் அறம் ஏந்தி நிற்கும் மனிதர்கள் ஒரு பெரிய திறப்பாக அமைந்தார்கள் எனக்கு. அதில் துவங்கி அவருடைய இரவு, காடு, கடல், கன்னியாகுமரி நாவல்கள் என்னை மிகவும் பாதித்தவை. காடு நாவலில் வலம் வரும் குட்டப்பனும் குருசும் சினேகம்மையும் ரெஜினாவும் என் நெஞ்சை விட்டு நீங்கா மனிதர்கள். 

    இமையம் அவர்களுடைய செல்லாத பணம் படித்துவிட்டு இரண்டு நாட்கள் தூக்கத்தை தொலைத்தேன்.  சு.வேணுகோபால் அவர்களது சிறுகதைகளைப் படித்துவிட்டு அதிர்ந்த தருணங்கள் எல்லாம் உண்டு. இருள் போர்த்தி வைத்திருக்கும் உணர்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அவரது எழுத்துக்களைக் கண்டு பிரமித்திருக்கிறேன். திருநங்கையைப் பற்றி அவர் எழுதிய பால்கனிகள் என்னை மிகவும் பாதித்தது.

    ம.நவீனின் சிறுகதைகள் ஆழம் மிக்கவையாகத் தோன்றும் எனக்கு. அவருடைய சிகண்டி நாவல் எனக்கு வாசிக்க பெரும் சவாலாக இருந்தது. கதாநாயகன் தீபனின் இருளை அவனோடு கடக்க மிகவும் சிரமப்பட்டேன். தீபனின் இருளின் ஆழம் கடக்க தீபனாக உருமாறி என் ஆழம் கடக்க வேண்டி இருந்தது. குறைந்தது ஐந்து முறை படிக்க வேண்டி இருந்தது.  மீண்டு வர பல நாட்கள் எடுத்தது. இன்னும் அதன் தாக்கம் நீங்கவில்லை. என் ஆழம் கடக்கும் தைரியம் பிறந்தது சிகண்டி வாசித்த பிறகு தான். அன்றாடத்தில் தீபனும், சராவும், நிஷாம்மாவும், ஈபுவும் என்னோடு கலந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. 

    ரம்யாவின் நீலத்தாவணியும், நான் உன்னைக் கைவிடுவதில்லை சிறுகதையும்  என் மனதிற்கும் வாழ்விற்கும் மிக நெருக்கமானவை. அமிர்தவள்ளியின் ‘செங்கேணி’  எனும் நாவலும் , ‘கால் நனைத்த பொழுதுகள்’ எனும் நாவலும் பாண்டிச்சேரியின் கடலோர குப்பத்து மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் நேர்மையான நாவல்கள் என்று கருதுகிறேன். செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண்ணும், அனாகத நாதமும், காகளமும் அவரது படைப்புகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை.

    டால்ஸ்டாயின் அன்னா கரினாவும், கிட்டியும் என்னுள் முட்டிக் கொள்ளும் இரு வேறு பிம்பங்கள். டால்ஸ்டாயின் ஃபாதர் சர்ஜியஸ் ஒரு பெரும் திறப்பு. தாஸ்தவஸ்கியின் மிஷ்கினை நான் என்றும் மனதோடு நெருக்கமாக வைத்திருக்கிறேன்.  காளிள் கிப்ரானின் “தி ப்ராஃபெட்” மற்றும் மிக்கேள் நெய்மியின் “தி புக் ஆஃப் மிர்தாத்” உம் என்னைப் பொருத்த மட்டில் பைபிளுக்கு நிகரான ஒன்று.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    முதல் சிறுகதை என்னுள் பிறந்தது இந்துக் கோயிலில் ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு இறையான பொழுது. அது ஒரு குறுங்கதை என்று சொல்லலாம். விசும்பைச் சுற்றும் பல்லாயிரம் விண்கற்களில் சில பூமியில் விழுவது போல அவளது மரணம் என்னைத் தாக்கியது. ஒலியால் விவரிக்க முடியாத வலியை எழுதிக் கடக்க அன்று பேனாவை எடுத்தேன். அதில் வடிவம் இருந்ததா, மொழி வளம் இருந்ததா, என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு விடுதலை உணர்வு வந்தது. எனது எழுத்துப் பயணத்தின் முதல் மைல் கல் ஆசிஃபா தான். இன்றும் இக்கணமும் இதை எழுதும் பொழுதும் என்னை அழ வைக்கும் கனமான மைல்கல் அவள். 

    ‘வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொரு வளைவிலும் உனக்கான மனிதர்கள் கை கொடுக்க நிற்பார்கள்’ என்று “தி புக் ஆஃப் மிர்தாத்” ல் ஒரு வரி வரும். என் எழுத்துப் பயணத்தை வழிநடத்திச் செல்லும் நண்பர்களை நான் அவ்வாறே கருதுகிறேன்.

    வடிவம் சார்ந்த பயிற்சி மிஷிகன் வாசிப்புக் குழுவில் சேர்ந்த பின்னர் தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு தொடர் வாசிப்பு எண்ணற்ற சொற்களை என்னுள் விதைத்ததை எழுதும் பொழுது உணர முடிந்தது. ஒரு எழுத்தாளருக்கு விமர்சனம் மிக முக்கியமானது, அவ்வகையில் நண்பர் ஓவியர் சங்கர் மற்றும் மதுநிகாவின் கராரான விமர்சனங்கள் என் எழுத்தை வடிவமைக்க உதவியாக இருந்தன, இருக்கின்றன. அதற்குப் பின் வந்த சிறுகதைகள் மட்டும் கணக்கில் கொண்டால் ஜனவரி 2023 ல் விகடன் மின்னிதழில் வெளிவந்த “வள்ளியம்மையும் ஆட்டுக்குட்டிகளும்” என்பதே எனது முதல் சிறுகதை. பிறகு சொல்வனம் மின்னிதழில் எழுத ஆரம்பித்தேன். சொல்வனம் பாலாவின் உதவியோடு அடுத்த படிக்கு முன்னேறினேன். சொல்வனத்தில் என் கதைகளைப் படித்து விட்டு அண்ணன் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் என்னை சேர்த்துக் கொண்டார்கள். அவரது வழிகாட்டலில் வல்லினம் மின்னிதழுக்கு ஒரு சிறுகதை அனுப்பினேன். அன்று துவங்கியது என் எழுத்தை மேலும் செம்மை ஆக்கும் பயணம். ஒரு ஆசானின் வழிகாட்டல் எவ்வளவு முக்கியம் என்பது ம.நவீனை சந்தித்த பிறகு தான் உணர்ந்தேன். நான் எழுதும் பொழுது என் கதையில் நான் வைக்கும் ஒரு புள்ளி கூட எனக்கு முக்கியமாகப் படுகிறது. கத்திரியை எடுத்துக் கொண்டு ம.நவீன் அவர்கள் என் கதையில் வேண்டாததை சுட்டிக் காட்டி நறுக்கித் தள்ளிவிடுவார். நான் ஆசானாகக் கருதும் ம.நவீனின் வழிகாட்டலில் என் எழுத்துப் பயணத்தில் அடுத்த படிநிலையில் இருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். ரயில் தண்டவாளம் போல வாசிப்பும் எழுதும் பணியும் ஒன்றாக நிகழ வேண்டும். தோழி பிரேம்மாயா அவர்கள் வாசித்தப் புத்தகக் கிடங்கில் இருந்து என்னால் வாசிக்க முடியும் என்று தோன்றும் நிறைய புத்தகங்களை  எனக்கு அறிமுகம் செய்கிறார். கட்டுரைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை நண்பர் சின்னய்யாவின் வழிகாட்டலில் அறிந்து கொண்டேன். 

    கிறித்தவ இறையியல் உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. அது குறித்து ?

    பைபிள் வாசிக்கத் துவங்கும் பொழுது நிறைய முரண்களும் என்னுள் எழுந்தன. என் ஆழம் கடந்து என்னை சோதித்துக் கொள்ள மிகவும் சிரமப் பட்டேன். உலகியலோடு பொருத்திக் கொண்டு செயல்படுத்த நேர்ந்த சிக்கல்கள் தான் என்னை கிறிஸ்துவப் பின்புலத்தோடு எழுத உந்துகிறது. என்னுள் நான் இரண்டாகப் பிரிந்து சண்டை இட்டது தான் கதையாகப் பிறக்கிறது என்று தோன்றுகிறது. 

    பைபிளின் வசனங்களின் கருப்பொருள் மாறாமல் கதைப் பின்னல் இருக்க வேண்டும் என்பது ஒரு சவால். அதேசமயம் பிரச்சாரக் கதையாக இல்லாமல் எழுதுவது அடுத்த பெரும் சவால்.  

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    என்னை மீட்டெக்கும் பொருட்டு பேனாவைக் கையில் எடுத்தேன். முதலில் எனக்காகவே எழுதுகிறேன் என்பது தான் என் பதில். நான் எழுதும் கதைகள் எல்லாருக்குமான கதைகள் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எழுதி பிரசுரம் ஆன பின் என் கதைகள் அதற்கான வாசகர்களைக் கண்டடைந்து கொள்கிறது. அல்லது என் கதைகளுக்கான வாசகர்கள் வந்து சேர்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    கதைக்கான கரு என்னுள் உதித்து விட்டால் எழுதத் துவங்கிவிடுவேன். இடம், நேரம் பொருத்தெல்லாம் அது என்னுள் நிகழ்வதல்ல. சில கதைகளை ஒரே அமர்வில் எழுதியிருக்கிறேன். துவங்கும் பொழுது முடிவை நோக்கி அதுவே என்னை இழுத்துச் செல்லும் மாயங்கள் அதில் நிகழும். சில கதைகளை நான்கு அல்லது ஐந்து முறை எழுதிப் பார்க்கின்றேன். நடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து எழுதவும் செய்கிறேன். இடமும் நேரமும் என் எழுத்தை நிர்ணயிப்பதில்லை. 

    உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ? 

    பேனாவை எடுத்துத் தாளில் எழுதும் பொழுது தான் எனக்கு எழுத வரும். என் எண்ண ஓட்டங்கள் அப்பொழுது தான் பெருகும். ஏதேனும் தவறாக எழுதிவிட்டாலோ, திருத்த முணைந்தாலோ மீண்டும் முதலில் இருந்து எழுதுவேன். பிறகு தான் கணிணியில் டாக்குமெண்டாக பதிவேற்றுவேன். எழுதுவதற்கே வர்ட் டாக்குமெண்டை உபயோகிக்காத நான் ஏ.ஐ எல்லாம் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. 

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    இப்போதைக்கு சிறுகதை வடிவத்திற்குள் எழுதவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதும் எண்ணம் உண்டு. திட்டம் வகுத்து செயல் பட இன்னும் முனையவில்லை. கலைத் தெய்வம் அதற்கு இன்னும் அருள் புரியவில்லை.

  • ஏ.ஐ குறித்து: 

    இலக்கியத்திலும், கலைகளிலும் ஈடுபடும் ஆளுமைகளுடன் வாரம் ஒரு நேர்முகம் என திட்டமிட்டு, மூன்று நேர்முகங்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன். வாசகர் மதுநிகா சுரேஷ், இளம் எழுத்தாளர் விஜய் ரெங்கராஜன் மற்றும் எழுத்தாளர் ஜெகதீஷ் குமார். 

    ஜெகதீஷின் நேர்முகத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த அவருடைய பதில் மொழிபெயர்ப்பாளர்கள் இடையே கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எனக்கு எழுதிய மறுப்பை என் தளத்தில் பிரசுரித்திருக்கிறேன்.  எழுத்தாளர் சுசித்ரா ஒரு கடும் கண்டனத்தை அவர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். முகநூலில் மேலும் கடுமையான கண்டனங்கள் பதிவாகி இருக்கின்றன.

    “நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன்” – என ஜெகதீஷ்  விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் அவர் வேண்டுகோளை ஏற்று நேர்முகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விளக்கங்களுக்கு அவரை தொடர்புகொள்ளலாம். 

    ஏ.ஐ குறித்து என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுகிறேன். என் தொழில்நுட்ப வேலையில் ஏ.ஐ விரிவாக பயன்படுத்துகிறேன். தகவல் திரட்டுவதற்காக கூகிள் தேடுபொறிக்கு பதில் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழி ஆவணங்களை படிப்பதற்கும் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். உதாரணம்: டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள் இணையத்தில் உள்ளன. 

    ஆனால் நான் புனைவு, அபுனை எழுதுவதற்கு ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. மொழியாக்கங்களுக்கும் ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. நான் இதுவரை மிகக்குறைவாகவே எழுதி இருக்கிறேன். இரண்டு சிறுகதைகள், சில கட்டுரைகள் மற்றும் ஒரு பயன நூல். தொழில்நுட்பத்துறை சார்ந்து ஆங்கிலத்தில் இருந்து இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இவை எதிலும் கூகிள் டிரான்ஸ்லேட் உட்பட எந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை. 

    கடந்த எட்டு மாதங்களாக பெரும்பாலான நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் எழுதுகிறேன். தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருந்தாலும், எழுதுவதில் ஒட்டுமொத்தமாக ஒரு இன்பம் இருக்கிறது. அதற்காகத்தான் எழுதுகிறேன். அந்த இன்பத்தை ஏ.ஐ உடன் பகிர்ந்துகொள்வதில் உடன்பாடில்லை. 

    ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி கதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டால்,  மொழிபெயர்ப்பு செய்யப்பட்டால் எழுத்தாளர்கள் அதை குறிப்பிட வேண்டும். அந்த படைப்புகளை பிரசுரிக்க வேண்டுமா என்பதை பதிப்பகங்களும், படிக்க வேண்டுமா என்பதை வாசகர்களும் முடிவு செய்ய வேண்டும்.  

    ப்ரியம்வதா தன்னுடைய கடிதத்தில் சில சாரமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அவற்றை குறித்து ஒரு முறையான உரையாடல் வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம், அதன் பரிணாமம், அது எப்படி செயல்படுகிறது என ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குறைந்தபட்சம் ஏ.ஐ குறித்த புரிதலை விரிவாக்கும் என நினைக்கிறேன்.

  • ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    ஜெகதீஷ் – ஒரு விளக்கம்

    அன்புள்ள நண்பர்களுக்கு,

    நண்பர் விசுவின் இணையதளத்துக்கு நான் அண்மையில் அளித்த பேட்டியில் மொழிபெயர்ப்பில் ஏ.ஐ பயன்பாடு குறித்து என் கருத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் இன்றுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் ஏ.ஐ அல்லது கூகுள் டிராண்ஸ்லேட் பயன்படுத்தித்தான் மொழிபெயர்க்கிறார்கள் என்ற புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் என்னுடைய கருத்தை அந்தப் பொருளில் நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் ஏ.ஐ பயன்பாடு எவ்வாறு மொழிபெயர்ப்புக்கு உதவக்கூடும் என்று விளக்குவதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இது மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும், இன்று மொழிபெயர்ப்பில் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் அவமானப்படுத்தும் தொனியில் உள்ளதாகப் பலராலும் கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்களின் பணியை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இல்லை. மாறாக அவர்கள் மீது பெரும் மதிப்பும், பிரேமையுமே கொண்டுள்ளேன். உலக இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வருவதற்காகவும், தமிழை உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதிலும் அவர்கள் பங்கை நான் சற்றும் குறைத்து மதிப்பிட மாட்டேன்.

    நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன். மேலும், நண்பர் விசுவிடம் மொழிபெயர்ப்பு குறித்த அந்தப் பகுதியை நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், நான் பதில் அளித்த இன்னொரு கேள்வியில் வாழும் தமிழ் விழாவுக்கு தொகுத்த இரு சிறுகதைத் தொகுப்புகள் குறித்துப் பேசியுள்ளேன். அந்த பதிலையும், என் ஏ.ஐ குறித்த பதிலையும் இணைத்து அத்தொகுதிகளின் தரம் குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தொகுதிகள் எவ்வாறு உருவாயின என்று விரிவாகவே அதில் பதிலளித்துள்ளேன். இருப்பினும், மேலும் குழப்பங்களை உருவாக்காமலிருப்பதற்காக அந்தப் பகுதியையும் நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி
    ஜெகதீஷ் குமார்.

  • On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    On the usage of AI in translation – a rebuttal – Priyamvada

    Dear Visu,

    I have high regard for your dedication to literature and am grateful for the warmth and hospitality you have extended to me whenever I have visited the U.S. However, I must share that I was rather shocked to read your recent interview with writer and translator, Jegadeesh Kumar. I write today to record my objection to certain statements made by Jegadeesh about the practice of translation.

    To your question about the use of A.I. in literary works, Jegadeesh says (and I quote him in my translation): “As far as translation goes, I regard A.I. as a boon. If I say that no translator today sits with a pen and paper in hand and translates line by line from the source text, I think you will agree with me. Today’s translation practice consists of creating a rough draft of each paragraph (of the text) using Google Translate, then using the translator’s felicity with language to edit it. If one understands that A.I is a much superior translation tool to Google Translate, it can be used effectively to produce very many translations. A.I. is a tool. If a person who translates with this tool is an expert in the two languages at play and, in addition, has deep knowledge of the domain they operate in as a translator, he or she can produce brilliant translations. A.I. can provide you with an array of potential translations for any given sentence. The duty of selecting the most precise translation rests with the translator. I think that those with the ability to make such a choice are the ones who will be known as talented translators from here on.”

    Frankly, I was horrified to read this perspective from Jegadeesh, and I felt it is my duty to record my objection to such a regressive view on the art of translation itself.

    First off, I wish to clarify that I do translate line by line from the source text, as do all literary translators I know, regardless of the language pair they handle. It is true of both veterans like Arunava Sinha, Nallathambi, and Kalyan Raman and young translators like Suchitra, Iswarya, and Avineni Bhaskar. In fact, Daisy Rockwell, the international booker winning translator is famous for “slowing down” her practice with a handwritten first draft. So yes, she does, in fact, translate with pen and paper in hand! All this is to say that A.I or Google Translate is not the norm in literary translation, as Jagadeesh claims in the interview. Far from it, these tools are viewed with a good degree of skepticism. Coming from a person who translates leading Tamil writers, and works in various capacities with young translators from the diaspora, it is a highly misleading, even harmful, statement to make. It is one thing to state an opinion, but quite another to speak on behalf of the entire community. The former can be debated, but the latter needs to be categorically dismissed, especially when it is so misinformed.

    Why have literary translators been skeptical about the use of A.I.? A.I. learns from what exists. Whereas a creative writer pushes the boundaries of language; he or she employs language to a singular effect, that is, in a manner that is different from what exists. As far as creative texts go, A.I., it follows, will always encounter unknown territory while translating. Today, this gap is far from bridged. Without a human mind, it is impossible to produce a translation that is alive to the freshness in the original work.

    But, for a moment, let’s extend this argument. What if there comes a time when A.I does achieve what a human translator can today (I personally think great translators will always trump AI, but let’s keep with the argument for argument’s sake). Well, then, maybe AI will replace human translators fully or partially. However, it would be downright unethical for any translator who uses AI, even partially, to claim the work as their own. They must disclose and credit the use of AI. As a reader, I would want to know if AI has been used in translation and be given the opportunity to decide whether I’d even want to invest time in reading such a work. I wonder if Jegadeesh has made such a disclosure in any of his translations.  

    The interesting question for me, though, is not how to deal with the use of AI when AI becomes that good, but where it would leave us as translators and human beings. Elsewhere in the interview, Jegadeesh talks about having begun to translate in order to develop as a creative writer—to improve his language and his understanding of craft. He quotes how Jonathan Franzen and Jeyamohan also translated early on in their writing life. He goes on to say that he doesn’t write for fame or to claim his place in history, or even for the sake of being called a writer. That is great. I wholeheartedly subscribe to the idea of writing or translating as an inherently personal journey. As I said in my panel at the Living Tamil Litfest, for me, translation is not a profession, it is a pursuit. I am by no means unique in this regard. Most of us translate because we are passionate about what we read and we derive joy from rewriting it in another language. Therefore, I’d argue that translation is not in service of a text, it is in service of the self. Jegadeesh says he began to translate in order to learn. Doesn’t the use of AI defeat that very objective? For those of us who are not professional translators in a capitalistic sense, what would we gain from using AI?  What will happen to our creativity? To our idealism? What will our sense of self-worth be? If we can’t trust our own minds to be inventive and allow our hearts a chance to leap with joy when we strike a perfect note, why write at all?

    In his book, The Philosophy of Translation, Damion Searls notes that “Happily, it is now possible to take for granted that translation is not just the poor stepchild of literary production—a mechanical, work-for-hire job in more or less the same category as typesetting—but a rich and fascinating practice that sheds light on many facets of art and the human condition. This has not always been the case, but in the past ten or fifteen years several prominent translators, including Edith Grossman in her 2010 book Why Translation Matters, have published personal records or reminiscences with an advocacy component—translation really is important, creative, vital—that the author proves by example.” Jegadeesh’s description of a translator’s role as a “selecting” agent sitting on top of AI generated content, negates everything that Damion talks about, everything our past masters have worked hard at establishing. It turns back the clock on translation as a creative practice and traps it in a mind numbingly boring routine. 

    – Priyamvada

    https://tamil.wiki/wiki/Priyamvada_Ramkumar

  • நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    நேர்முகம் 3 : ஜெகதீஷ் குமார்

    ஜெகதீஷ் குமார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணம் சார்ல்ஸ்டன் நகரில் வசிக்கிறார். தமிழ் விக்கி: https://tamil.wiki/wiki/ஜெகதீஷ்குமார்.

    எமர்சன் இலக்கிய முகாம், பூன்(2022) இல் ஜெகதீஷை முதலில் சந்திதேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் அசோகமித்ரனின் “பிரயாணம்” கதை குறித்து உரை ஆற்றினார். தெளிவான உச்சரிப்பு, கச்சிதமான உரை. அவர்மீது எனக்கு உடனடியாக ஒரு மதிப்பும், அன்பும் உருவானது. கடந்த மூன்று வருடங்களில் மொழிபெயர்ப்பு, சிறுகதை தொகுதி, தொகுப்பாசிரியர் என தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஜெகதீஷின் வலைதளம்: https://jegadeeshk.blogspot.com

    “Swaying, Flowing”, Turiya Press (2026) ஆங்கில சிறுகதை தொகுதி சமீபத்தில் வெளியானது.

     

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், பின்புலம் பற்றி ?

    பிறந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்து சில காலம் ஆன பிறகுதான் அங்கு மீண்டு திரும்பி சில ஆண்டுகள் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தேன். ஒரு தம்பி, ஒரு தங்கை. சிறுவயதில் தம்பியும், நானும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதால் எங்களைப் பிரித்து வைப்பதற்காக என்னை என் அப்பாவழி தாத்தா வீட்டில் குளித்தலையில் விட்டு விட்டு எங்கள் குடும்பம் சென்னையில் இருந்தது. தாத்தா வீட்டில் இருப்பதை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று பலகாலம் நம்பவைக்கப்பட்டிருக்கிறேன். தாத்தா குளித்தலையில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர் பணிக்காலத்தில் கட்டிய ஏதோ கட்டிடத் திறப்பு விழாவுக்கு அப்போதைய எம்.எல்.ஏ கருணாநிதி வந்து திறந்து வைக்க, கண்ணதாசன் வாழ்த்துக் கவிதை எழுதிக் கொடுத்ததையும், விழாவில் கே.பி. சுந்தராம்பாளின் பாட்டுக் கச்சேரி நடந்ததையும் தாத்தா என்னிடம் கதைகதையாகச் சொல்லியிருக்கிறார். புனைவு எழுதும் திறன் எனக்கு அவரிடம் இருந்து கூட வந்திருக்கலாம். அவர் பணி ஓய்வு பெற்றதும் அவருடன் கோவை சென்று அவரது மகன்கள் (என் சித்தப்பாக்கள்) ஆதரவுடன் சில காலம் வாழ்ந்தோம். பின் ஒன்பதாம் வகுப்பின் முடிவில் என் பெற்றோருடன் இணைந்து கொண்டேன். அப்பாவின் பணி காரணமாக அரியலூரில் மேநிலைப் படிப்பு, ஈரோட்டில் இளங்கலை படிப்பு என்று பல ஊர்களில் வாசம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது என் பெற்றோர் ஈரோடு மாவட்டம் குப்பாண்டபாளையத்தில் வசித்து வருகின்றனர்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    அம்மாவுக்கு வாசிக்கப் பிடிக்கும். நான் வயிற்றில் இருந்த போது நாவல்களாக வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள். சாண்டில்யன், கல்கி ஆகியோரின் நாவல்கள். நான் மிகச் சிறுவயதிலேயே வாசிக்கத் துவங்கி விட்டேன். நாலு அல்லது ஐந்து வயதிலேயே அம்புலிமாமா, படக்கதைகள், மாயாஜால நாவல்கள், என்று வாசித்துக் கொண்டிருந்தேன். ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் நினைவு தெரிந்து வாசித்த பெரிய நூல். விகடன், கல்கி ஆகிய இதழ்களின் தீபாவளி மலர்களில் எண்பதுகளின் இறுதியில் வாசித்த கதைகளில் சில இன்னும் நினைவிருக்கின்றன. வயது ஏற ஏற ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பிகேபி, சுபா என்று கிரைம் நாவல்களாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

    உண்மையான இலக்கிய அறிமுகம் என்பது அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் மூலமாகத்தான் நிகழ்ந்தது. அது இலக்கியப் புனைவு என்றெல்லாம் தரம் பிரிக்கத் தெரியாத பதினாலு வயதில் அதை வாசித்தேன். அ.மி ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். நான் அறிந்த உலகம்தான். ஆனால் நான் பார்க்காத கோணம். அந்த வயதடைதல் நாவல்தான் உண்மையில் இலக்கியத்தில் நான் வயதடைவதற்கும் காரணமாக இருந்தது என்று இப்போது தோன்றுகிறது.

    இலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபடத்தொடங்கியது கல்லூரி முதலாண்டின் போதுதான். அப்போதும் நிறைய வாசித்துக் கொண்டிருந்தேன். சாண்டில்யனிலிருந்து முன்னேறி சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, போன்றோர்களை வாசித்துக் கொண்டிருந்த காலம். என் ஆங்கிலப் பேராசிரியர் எத்திராஜ் அகிலன் (காலச்சுவடுக்காக ஓரான் பாமுக் நாவலை மொழிபெயர்த்தவர்) எனக்கு நவீன இலக்கியம் பற்றி அறிமுகம் செய்தார். கணையாழி, சுபமங்களா போன்ற இதழ்களை எனக்குத் தந்து வாசிக்கச் செய்தார். தீவிர இலக்கியம் குறித்த அறிமுகம் நிகழ்ந்தது.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார் ?

    தமிழில் அசோகமித்திரன், தி. ஜானகிராமன், சுஜாதா, லா.ச.ரா, பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர். அசோகமித்திரன்தான் ஆதர்சம். பிறமொழிகளில் ஹெர்மென் ஹெஸ், டால்ஸ்டாய், தாஸ்தாவ்ஸ்கி, ஜோசஃப் கான்ராட், கஸூவோ இஷிகுரோ, கார்மாக் மெக்கார்த்தி, இயன் மக்யூவன், அமோர் டவல்ஸ், அலிஸ் மன்ரோ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிடித்த எழுத்தாளர்கள் என்பதைவிட பிடித்த நூல்கள் என்ன என்பதுதான் சரியான கேள்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு எழுத்தாளரின் மாஸ்டர்பீஸை வாசிக்கும்போது அந்த எழுத்தாளர் மனதுக்குப் பிடித்தவராகி விடுகிறார்.

    முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

    எது முதல் சிறுகதை என்பதில் குழப்பம் இருக்கிறது. கல்லூரி முதலாண்டு படிக்கும்போது பாக்யா இதழில் “என் உயிர்த்தோழி” என்ற சுமாரான ஒரு கதை வெளிவந்தது (எழுதியபோது நான் அப்படி நினைத்திருக்கவில்லை). அதே ஆண்டு இலங்கையில் இருந்து வெளிவந்த கலைக்கதிர் இதழ் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் நான் எழுதிய ந்யூமாவின் நகல்” என்ற சிறுகதை இரண்டாம் பரிசு இரண்டாயிரம் ரூபாய் வென்றது. இவ்விரண்டில் ஒன்றுதான் முதலில் வெளிவந்த கதையாக இருக்கலாம். இந்தக் கதை இப்போது கேரளத்தில் ஒரு பல்கலை கழகத்தில் தமிழ்ப்பாடத்தில் இருப்பதாக பாஸ்டன்பாலா ஆதாரத்தை எனக்கு அனுப்பி இருந்தார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்! கல்லூரிக்காலத்தில் மிக தைரியமாக நிறைய கவிதைகளும் எழுதியிருக்கிறேன். கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் (முதலிடம் பெற்றவர் “பெண்ணல்ல பெண்ணல்ல ரோசாப்பூ” எழுதியவர்) பெற்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கையால் இரண்டு பவுன் தங்கச் சங்கிலி பெற்றேன். அதே ஆண்டு எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு கவிதை வாசிக்கச் சொல்லி என்னைத்தான் கேட்டுக் கொண்டார்கள். ஒரே ஆண்டில் இரு பெரும் தலைவர்களைச் சந்தித்ததை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

    இலக்கியத்தரமான சிறுகதை முதலில் வெளியானது என்றால் உயிரோசை (அல்லது உயிரெழுத்தா?) இதழில் வெளியான நல்லசிவம் சிறுகதைதான். 2008 வாக்கில் இருக்கலாம்.

    “பொற்குகை ரகசியம்” – உங்கள் முதல் சிறுகதை தொகுதி 2024 இல் வெளியாகி இருக்கிறது. அந்த தொகுப்பில் “கல்லளை” எனக்கு பிடித்த கதை. இந்த சிறுகதை எழுதிய அனுபவம் குறித்து சொல்லுங்கள்.

    வெவ்வேறு களங்களில் கதைகள் எழுதிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஒரு வரலாற்றுப் புனைவும் எழுத வேண்டும் என்று உந்தப்பட்டு எழுதியதுதான் “கல்லளை.” இந்தச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டபோது இக்கதை குறித்துப் பேசிய ஜெயமோகன் புறசாம்ராஜ்யத்தை வெல்வதற்காக ஒருவனும், அகசாம்ராஜ்யத்தை வெல்வதற்கான ஒருவனும் போராடுவது குறித்த கதை இது என்று குறிப்பிட்டார். அப்படி ஒரு கதையை எழுத வேண்டும் என்ற ஆவலில் எழுதியதுதான் இந்தக் கதை. வரலாற்றிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு முழுக்க முழுக்க புனைவாகவே கதையை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு எழுதினேன். கங்காமூலாவின் மலைக்காடுகளில் வாழும் ஐந்து குடிகள் பற்றி நிறைய தகவல்கள் சேகரித்தேன். ஐந்து பெரும் மலைக்குடியினரின் பழக்க வழக்கங்கள், அவர்கள் பயன்படுத்தும் கருவிகள், உண்ணும் உணவு, கங்காமூலாவின் மரம், செடிகொடிகளின் பெயர்கள் இவை குறித்து நிறைய சேகரிக்க வேண்டியிருந்தது. அம்மக்களின் பெயர்களை அறிந்து கொள்வது மிகுந்த சிரமமாக இருந்தது. இப்போதெல்லாம் சாதாரணமான பெயர்கள்தாம் வைத்துக் கொள்கிறார்கள். பஸ்தாவா என்ற பெயரைக் கண்டுபிடித்ததும் பாதி கதையை எழுதி விட்டதைப் போல மகிழ்ச்சியாக இருந்தது. 

    கதையில் ஒரு வேதாந்த ஆசிரியர் வருகிறார். கதையை எழுதிய காலத்தில் நான் ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். வித்யாரண்யர் எழுதியது. கதையின் குருசாமியை அவர் நினைவாகத்தான் அமைத்தேன். வித்யாரண்யகர் என்று பெயர் மாற்றி அமைத்தேன். எனக்கு ஏற்கனவே இருந்த வேதாந்தம் குறித்த அறிவு இக்கதையின் போக்குக்கு உதவியாக இருந்தது. கதைக்கான குறிப்புகளைச் சேகரிப்பதற்குத்தான் எனக்கு நாட்கள் பலவானது. கதையை இரண்டே நாட்களில் எழுதி முடித்து விட்டேன்.

    வேதாந்தம் குறித்த தொடர் ஒன்றை சொல்வனத்தில் எழுதுகிறீர்கள். உங்கள் சிறுகதைகளில் வேதாந்தம் பேசுபொருளாகவும் இருக்கிறது. வேதாந்தத்தின் மீது எப்போது ஈடுபாடு வந்தது ?

    இளம்வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை வாசித்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஓஷோவின் மாணவனைப் போலவே என்னை உணர்ந்திருந்தேன். அவர் சொல்வதை செயலில் நடத்திக் காட்டுவதுபோல ஜகி வாசுதேவின் ஈஷா யோக மையம் ஆன்மிகப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கியிருந்த காலம். அம்மையத்தில் இணைந்து சகஜ ஸ்திதி யோகா, ஹடயோகா, பாவஸ்பந்தனா போன்ற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதில் பாவஸ்பந்தனா வகுப்பை அப்போதெல்லாம் ஜகியே முன்னின்று நடத்துவார். மிகக் குறைந்த நபர்களே கலந்து கொண்ட அந்த வகுப்பில் அவருடன் உரையாடிய பொழுதுகள் இனிமையானவை. இரண்டு வருடம் தீவிரமாக ஹடயோக, தியான, பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

    ஆனால் அவை போதாமலிருந்தன. என்னுள்ளிருந்த கேள்விகள் அப்படியே இருந்தன. எனக்குத் திருமணமான புதிது. என் மனைவி அனுஷாவின் பெற்றோர் இருவருமே வேதாந்த மாணவர்கள். கொமாரபாளையத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகிலிருந்த, கோவிலூர் மரபில் வந்த வேதாந்த மடம் ஒன்றில் உள்ள ஆசிரியரிடம் கைவல்ய நவனீதம் என்ற நூலை முறையாகக் கற்றவர்கள். சங்கரரின் தத்துவபோதம் என்ற வேதாந்த அறிமுக நூலுக்கு இணையானது இந்த நூல். வேதாந்தம் என்றாலே வறட்டு வேதாந்தம் என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு, ஆனந்தா என்று முடியும் எந்தச் சாமியாரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்க வேண்டும் என்ற அவ நம்பிக்கையிலிருந்த எனக்கு, அனுவின் பெற்றோர் மூலம் வேதாந்தத்தை முறையாகக் கற்பதற்கான அமைப்புகள் உள்ளன என்று தெரிய வந்தது.

    ஆனால் அவர்கள் மூலம் வேதாந்த அறிமுகம் ஏற்படவில்லை. அனுவுக்கே கூட தன் பெற்றோர் மூலம் வேதாந்தத்தின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அனு தன்னுடைய வழியில் ஒரு ஆன்மிகப் பாதையை அப்போது தேர்ந்தெடுத்திருந்தாள். சிவன் மீது பக்தி செலுத்துவதன் மூலம் பிறப்பற்றுப் போக வேண்டும் என்பது அவளது விருப்பமாக இருந்தது. இருவருக்குமே ஆன்மிகத்தில் நாட்டம். ஆனால் சரியான பாதை எது என்பதில் எனக்குக் குழப்பமிருந்தது. என் கல்லூரி நண்பன் ஜெயச்சந்திரன் விவேக சூடாமணி என்ற நூலை என்னிடம் வாசிக்கக் கொடுத்தான். சங்கரர் எழுதிய விவேக சூடாமணி என்ற நூலிலிருந்து தேர்ந்தெடுத்த 101 பாடல்களை எடுத்துக் கொண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி அளித்த விளக்கம்தான் அந்த நூல். அந்த நூலை வாசித்தபோது அத்வைதம் குறித்தும், இறுதி உண்மையைப் பற்றிய அறிதலின் வழிமுறைகள் குறித்தும் தெளிவாக அறிந்து கொண்டேன். அந்த நூல்தான் நான் அத்வைத வேதாந்தம் கற்க வேண்டும் என்று முடிவு செய்ததற்குத் தூண்டுதலாக இருந்தது. அதன்பின் ஜெயச்சந்திரனுடைய அறிமுகத்தின் பேரில் சுவாமி குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை ஒலி வடிவில் கேட்கத் துவங்கினேன். அப்போது நாங்கள் மாலத்தீவுகளில் வசித்து வந்தோம். இந்தியாவுக்கு விடுமுறையில் சென்றபோது, குருபரானந்தரின் வேதாந்த வகுப்புகளை குறுந்தகடுகளில் பதிந்து எடுத்துக் கொண்டு வந்து, மாலத்தீவுகளில் அவ்வகுப்புகளைக் கேட்போம். ஒரு மணி நேர வகுப்புகள். கையில் நோட்டுப் புத்தங்களுடன் ஒலிப்பேழையின் அருகில் அமர்ந்து குறிப்பெடுத்தபடி ஆண்டுக்கணக்கில் வகுப்புகளைக் கேட்டோம். இப்போது அமெரிக்காவிலிருப்பதால் இங்குள்ள அர்ஷவித்யா குருகுலம் சென்று சுவாமி தத்துவவிதானந்தா, சுவாமி முக்தாத்மானந்தா போன்ற வேதாந்த ஆசிரியர்களிடம் நேரடியாகவே வேதாந்தம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தியா செல்லும்போது ஆனைக்கட்டியிலுள்ள அர்ஷவித்யா குருகுலம் செல்வோம். அங்கு சுவாமி சதாத்மானந்தா என்ற அற்புதமான ஆசிரியர் இருக்கிறார்.

    வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்து கதைகள் எழுதுவதில் உள்ள சவால் என்ன?

    ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் எழுதலாம் என்ற தூண்டுதல் வந்தபோது, என்னுடைய புனைவுகளில் வேதாந்தத்தை உசாவ வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது. வேதாந்தத்தை கருப்பொருளாக வைத்துக் கதைகள் எழுதுவதில் உள்ள முக்கியமான சவால் அந்தக் கதை வேதாந்தப் பிண்ணனி கொண்ட இன்னொருவருக்குத்தான் முழுமையாகப் புரியும் என்பதுதான். நேரடியான வேதாந்தக் கருத்துக்களை புனைவில் பேசும்போது கட்டுரைத் தன்மை வந்து விடுகின்றது என்று வாசகர் எண்ணுவதற்கு இடமுண்டு. குறிப்பாக சிறுகதை என்னும் வடிவத்துக்குள் தத்துவ விவாதங்களைக் கொண்டு வருதல் சவாலானது. அசைவும், பெருக்கும், கல்லளை ஆகிய இரு கதைகளும் வேதாந்தத்தைக் கருப்பொருளாக கொண்டவை. ஆனால் அவை சிறுகதை வடிவத்துக்குள் அமைந்தமையால்தான் வாசகருக்கு நெருடல் அளிக்காத வாசிப்பு அனுபவம் கிடைத்தது. வானப்ரஸ்தம் என்ற இன்னொரு கதை தினமணி தீபாவளி மலருக்காக எழுதினேன். அக்கதை வேதாந்த அறிமுகம் கொண்டவருக்கே முழுக்க ஈடுபட்டு வாசிக்கும் அனுபவம் அளிக்கும். நவீன இலக்கிய வாசகர்கள் பெரும்பாலும் மேலைத் தத்துவப் பிரிவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வேதாந்தத்துக்கு அளிப்பதில்லை. எனவே புனைவில் மறைமுகமாகக் குறிப்பிடப்படும் பல வேதாந்தக் குறிப்புகளை அவர்கள் தவறவிடக்கூடும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் நமது நவீன எழுத்தாளர்களில் பலர் வேதாந்திகள்தாம். பாரதி, க.நா.சு, பிரமிள், தேவதேவன், ஜெயமோகன் போல. அவர்களது படைப்புகளில் பலவற்றில் வேதாந்தம் பயின்று வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் புனைவு எழுதுவது எனக்காகத்தான். என் படைப்புகளில் வேதாந்தத்தைக் கருப்பொருளாக வைக்க வேண்டும் என்பது நான் விரும்பி எடுத்த முடிவு. இன்னொரு வாசகரும் அப்படைப்பை படைக்கையில் நான் அடைந்த அதே அனுபவத்தைப் பெற முடிந்தால் மகிழ்வேன். 

    மொழிபெயர்ப்பில் எப்படி ஆர்வம் வந்தது ? முதல் மொழிபெயர்ப்பு என்ன?

    மீண்டும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் வந்தபோது புனைவுப் பரப்பில் என்னுடைய போதாமைகளை உணர்ந்தேன். சரளமான, தெளிவான மொழி எனக்கு இயல்பாக வந்தது. ஆனால் புனைவுக்கு அது மட்டும் போதாது. புனைவின் கட்டுமானம், புனைவினூடாகக் கதாபாத்திரங்களின் வளர்ச்சி, கதை சொல்லும் முறை, ஒரு கரு எவ்வாறு புனைவில் விரிவடைந்து பரிணமிக்கிறது போன்ற புனைவுத் தொழில் நுட்பங்கள் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். கோவிட் காலத்தில் நிறைய நாவல்கள் வாசித்தேன். கிட்டத்தட்ட டால்ஸ்டாய், தஸ்தாவ்ஸ்கியின் முக்கியமான அனைத்து நாவல்களையும் ஆங்கிலத்தில் வாசித்தேன். நிறைய ஆங்கிலத்தில் வாசித்தது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதற்கு முதல் படியாகவும், நான் மேலே சொன்ன புனைவுத் தொழில் நுட்பங்களை கற்பதற்குண்டான ஒரு வாயிலாகவும் நான் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஜானதன் ஃப்ரான்ஸன் என்ற எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் (ஃப்ரீடம், கரெக்ஷன்ஸ் போன்ற நாவல்களின் ஆசிரியர்) முதலில் தன் தாய்மொழியான ஜெர்மனியிலிருந்து இரு நூல்களை மொழிபெயர்த்த பின்னரே ஆங்கிலத்தில் புனைவெழுத வந்திருக்கிறார். ஜெயமோகனும் தான் முதலில் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட்லேண்டை மொழிபெயர்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களின் அடியொட்டி நானும் முதலில் மொழிபெயர்ப்பில் துவங்கலாம் என்று முடிவெடுத்தேன்.

    முதல் மொழிபெயர்ப்பு ஜெயமோகனின் குமிழிகள் என்ற சிறுகதை. ஒரு முறை நானும், விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் வ. சௌந்தரராஜனும் பேசும்போது இந்தக் கதை குறித்து சிலாகித்துக் கொண்டோம். அவரிடம் என் மொழிபெயர்ப்புத் திட்டம் பற்றிச் சொன்னபோது, இதை ஏன் நீ மொழிபெயர்க்கக் கூடாது என்று சொன்னார். இரண்டே நாட்களில் அந்தக் கதையை மொழிபெயர்த்தேன். ஆனால் அதைத் திருத்த ஒருமாதம் எடுத்துக் கொண்டேன். அந்த முதல் மொழிபெயர்ப்பு எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. குமிழிகளின் மொழிபெயர்ப்பு தி இண்டியன் பீரியாடிகல் என்ற இதழில் வெளியானது. அதே நாளில் நான் மொழிபெயர்த்த இன்னொரு சிறுகதையான மலைகளின் உரையாடல் ப்ரொமிதியஸ் டிரீமிங் என்ற அமெரிக்க இலக்கிய இதழில் வெளியானது. அதைத் தொடர்ந்து ஜெயமோகன் மற்றும் அ. முத்துலிங்கம் ஆகியோரது சிறுகதைகள் என் மொழிபெயர்ப்பில் அமெரிக்க மற்றும் ப்ரிட்டிஷ் இலக்கிய இதழ்களில் தொடர்ந்து வெளியாயின.

    “Writers who write” என்ற அமைப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்கள். இந்த அமைப்பு குறித்து ?

    Writers who write என்ற அமைப்பு பால்மெட்டோ ஸ்டேட் லோகன்ட்ரி எனப்படும் தெற்கு கரோலைனாவின் தாழ்வுப்பகுதியைச் சேர்ந்த படைப்பாளிகளுக்கான அமைப்பு. என்னுடைய மொழிபெயர்ப்பு முயற்சிகளையும், இலக்கிய இதழ்களில் வெளியான என் கதைகளையும் வாசித்து விட்டு என்னை இக்குழுவில் இணைத்துக் கொண்டனர். பதினைந்து பேர் மட்டுமே கொண்ட இந்தக் குழுவில் ஏழு நாவலாசிரியர்கள், நான்கு கவிஞர்கள், இரண்டு அபுனைவு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அட்டர்னி கூட இருக்கிறார். நான் மட்டுமே மொழிபெயர்ப்பாளன். மாதம் ஒருமுறை வால்டர்பரோ நூலகத்தில் சந்தித்துக் கொள்வோம். குழுவின் தலைவர் பிகே பாட்ஸ் முன்னின்று புனைவு குறித்த பயிற்சிப் பட்டறைகளை நடத்துவார். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் குறித்த பிறருடைய கருத்துக்களைக் கேட்டுப் பெறலாம். எழுதுவது குறித்த பல நுட்பங்களை இந்தக் குழுவில் இணைந்தபின் நான் அறிந்து கொண்டேன். இப்போது இந்தக் குழுவிலிருந்து “துரீயா லிடரரி ரிவ்யூ” என்ற இலக்கியக் காலாண்டிதழ் துவங்கப்பட்டுள்ளது (துரீயா என்ற பெயர் நான் பரிந்துரைத்தது. நான்காவது நிலை என்று பொருள். உறக்கம், கனவு, விழிப்பு இந்த மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக இருக்கும் நான்காவது நிலை). இதன் புனைவு மற்றும் மொழிபெயர்ப்புப் பிரிவின் ஆசிரியராக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். சென்ற அக்டோபரின் இந்தக் குழுவுக்கு ஜெயமோகன் வருகை தந்து இந்திய இலக்கியம் குறித்துப் பேசினார். எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் ஜெயமோகன் பிடித்தமான எழுத்தாளராகி விட்டார். கவிஞர் ஜெரால்டின் ஜெ-யின் பேச்சைக் கேட்டு, நீண்ட நாள் தன் மனதில் அரித்துக் கொண்டிருந்த ஓர் ஐயம் தீர்ந்தது என்றார். அவர் அமெரிக்காவின் கூலாகீச்சி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர், ஆனால் அமெரிக்காவின் மையப் பண்பாட்டுடன்தான் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வளர்ந்திருக்கிறார். தன் வேர்களை, தன் பண்பாட்டுக் கூறுகளை எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்குத் தயக்கமிருந்தது. ஜெ அன்று பேசியதன் சாராம்சம் “உங்கள் குரலைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்பதுதான். அன்றிலிருந்து தன் எழுத்து குறித்து சுதந்திரமாக உணர்வதாக அவர் என்னிடம் தெரிவித்தார். ஜெரால்டின் வாழும் தமிழ் விழாவின் ஒரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

    என் சிறுகதைத் தொகுப்புக்கு புனைவெனும் அறாக்கனவு என்ற தலைப்பில் எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

    “ஒரு மொழியில் தீவிரமாக இயங்குகையில் அடையும் விடுதலை உணர்வு; மொழி என்னும் கருவியைக் கொண்டு வாழ்வு குறித்த அடிப்படையான ஐயங்களுக்கும், வியப்புகளுக்கும் ஆதாரமான ஒன்றைத் தொட்டு விட எத்தனிக்கும் முயற்சிகள் தரும் கிளர்ச்சியும்,சிலிர்ப்பும்; மொழியில் சமைக்கச் சாத்தியமான உலகங்களும், மாந்தர்களும் நம் கண்முன் உருக்கொள்கையில் ஏற்படும் உவகை; இவைதான் நான் எழுத்தில் இயங்குவதற்கான அடிப்படையான காரணங்கள்.”

    எழுத்தை நான் வாசிப்பின் நீட்சியாகவே பார்க்கிறேன். இந்த இடத்தில் எழுத்து என்று பெரும்பாலும் புனைவெழுத்தைத்தான் குறிப்பிடுகிறோம் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் எழுதும்போதோ, என் வகுப்புகளுக்கென பக்கம் பக்கமாகத் தயாரிக்கும்போதோ, அல்லது நான் இப்போதுதான் முடித்த என் முதுகலைப் பட்டத்துக்கான ஆய்வுத்தாள்களை எழுதும்போதோ எழுத்தாளன் என்ற பெருமிதம் எனக்கு உருவானதில்லை. இலக்கியம் புனையும்போது மட்டுமே அந்தப் பெருமிதம் தோன்றுகிறது. நானும் புனைவை மட்டுமே நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாசிக்கும் புனைவுகளில் ஒரு கட்டத்தில் நானும் எழுத்தாளரோடு இணைந்து ஒரு சக படைப்பாளியாக மாறி விடுவதை உணர்கிறேன். அந்த உணர்வு கொடுத்த சிலிர்ப்பு எழுதத் தூண்டுகிறது. நான் வாசித்த இலக்கிய நாவல்களைப் போல நாமும் நாவல்கள் எழுதிவிட வேண்டும் என்ற நப்பாசையால் எழுதுகிறேன். மேலும் வாசிப்பும், எழுதுதலும் எனக்கு இயல்பாகவே வருகின்றது என்பதை உணர்கிறேன். எனவே இவை இரண்டையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உந்துதல் இயல்பாகவே என்னிடம் உள்ளது. எனவே எழுதுகிறேன். எதற்காக எழுதவில்லை என்பதையும் இங்கு கூறிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். புகழுக்காகவோ, வரலாற்றில் நிலைப்பதற்காகவோ, நாலுபேர் என்னை எழுத்தாளன் என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ எழுதவில்லை. 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    வாசிப்பு, எழுத்து இரண்டு செயல்களுமே மிகுந்த உழைப்பையும், காலத்தையும், ஒழுக்கத்தையும் கோருபவை. என்னிடம் இந்த மூன்றுமே குறைவாக இருப்பதைக் காண்கிறேன். எனவே நான் நினைத்த அளவுக்கு என்னால் தினசரி எழுத முடிவதில்லை என்பதுதான் உண்மை. வீட்டில் எழுதுவதெற்கென்று ஒரு அறை இருக்கிறது. என் மடிக்கணினியுடன் இணைந்த மானிட்டர் ஒன்றும் இருக்கிறது. ஆனால் அங்கு நான் அமர்ந்து எழுதும் நேரம் குறைவுதான். எங்கள் படுக்கையறையில் ஒரு ரிக்லைனர் சோஃபா உள்ளது. இப்போது அதில் அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அங்கு அமர்ந்து எழுதுகிறேன். பள்ளியில் எனக்கு ஒன்றரை மணி நேரம் கிடைக்கும். அப்போது எழுதுவேன். எப்படியும் ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் எழுதுவேன். தொடர்ந்து ஒரே அமர்வில் எழுதுவதென்பது சிரமமாகத்தான் இருக்கிறது. விட்டு விட்டுத்தான் எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் வேகம் சற்று அதிகமானது. ஒரு மணிநேரத்தில் ஆயிரம் சொற்கள்; ஆங்கிலத்தில் என்றால் இரண்டாயிரம் வரை கூட எழுத முடியும். எழுதுவதற்கு மூடு அமைய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. சோம்பலை வென்று விட்டால் எழுத்து அது பாட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் விடும். என்னுடைய முதுகலைப் படிப்புக்காக ஒரு வாரத்தில் எழுபது, எண்பது பக்கங்கள் வரை எழுதியிருக்கிறேன். ஆனால் புனைவை அவ்வளவு விரைவாக எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. நான் மேற்சொன்ன உழைப்பு, ஒழுக்கம், காலம் இவை மூன்றையும் அளித்தால் எழுத்து கைகூடி விடும் என்றே நம்புகிறேன். இந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்ற உறுதியோடு உள்ளேன்.

    நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன?

    The Rising Land என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். வேதாந்தத்தைப் பிண்ணனியாகக் கொண்ட நாவலாக இது இருக்கும். நான் வாழ்ந்த கொமாரபாளையத்தின் நெசவாளர்களின் வாழ்க்கையும், அந்த மக்களிடமிருந்து தன் விடுதலையின் மீது தாகம் கொண்ட சிலரின் பயணத்தையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

    #

    குறிப்பு: இந்த நேர்முகத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த கேள்வி மொழிபெயர்ப்பாளர்கள் இடையே கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. “நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன் – ஜெகதீஷ் ” என ஜெகதீஷ் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் வேண்டுகோளை ஏற்று அந்த பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.

  • நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    நேர்முகம் 2 : விஜய் ரெங்கராஜன்

    விஜய் ரெங்கராஜன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் வாசகராக அறிமுகமாகி, 2024இல் சிறுகதைகள் எழுதத்துவங்கினார். இவருடைய சிறுகதைகள் சொல்வனம், அகழ், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளது. தளம்: https://apvijay.me 

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலை பற்றி?

    நான் திருச்சிராப்பள்ளியில், உறையூர் பகுதியில், பிறந்து வளர்ந்தேன். பள்ளிப் படிப்பும் திருச்சியில்தான். கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் இளங்கலைப் பொறியியல் பட்டமும் (BE ECE, PSG Tech), பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் கணினிப் பார்வை துறையில் முனைவர் பட்டமும் (PhD in Computer Vision, IIT Madras) பெற்றேன். பின்பு கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தேன். திருச்சிராப்பள்ளி, கோவை, பெங்களூர், சென்னை என வட்டமடித்து, இப்போது கலிஃபோர்னியா விரிகுடா பகுதியில் என் இணையனுடன் வசித்துவருகிறேன்; கணினிப் பார்வை-செயற்கை நுண்ணறிவுத் துறை சார்ந்து பணிபுரிகிறேன்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது?

    முற்காலச் சோழர்களின் தலைநகரம் உறையூர் எனப் பள்ளிப் பாடங்களில் படித்தபோது வரலாற்றில் ஆர்வம் உண்டானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லூரிக் காலத்தில் எழுத்தாளர் கல்கியின் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியதற்கு அந்த ஆர்வமே வித்திட்டது. பின்னர், நான் பெங்களூரில் இருந்தபோது நண்பர் அசோக் அவருடைய வலைத்தளங்களில் எழுத்தாளர் ஜெயமோகனின் இணையக் கட்டுரைகளைப் பகிர்வார். அவருக்கு ஏற்கனவே தமிழிலக்கிய அறிமுகம் உண்டு. அவ்வாறுதான் ஜெயமோகனின் தளம் எனக்கு அறிமுகமானது. அதன் பின், ஜெயமோகனுக்குத் தன்பாலுறவைப் பற்றி கேள்விக்கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன்; அவர் கதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அவருடைய கட்டுரைகள் வழியாகப் பிற தமிழ் எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள்; தமிழிலக்கியம் அறிமுகமானது.

    உங்களுக்குப் பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள் யார்?

    எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளை வாசிக்கத் தொடங்கியபோதே, அவை என்னைத் தங்களின் உலகங்களுக்குள் உள்ளிழுத்துக்கொண்டன. என் இலக்கிய அறிமுகக் காலத்தில் வாசித்த ‘காடன்விளி’, ‘மாடன்மோட்சம்’, ‘திருமுகப்பில்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘டார்த்தனீயம்’ போன்ற கதைகள் எண்ணற்ற காட்சிகளையும் நிறங்களையும் மணங்களையும் ஒலிகளையும் மனத்தில் கொட்டி, அவற்றின் வழியாக உணர்வுகளைத் தீட்டியெழுப்பின. வழக்கமாக ஓவியம் தீட்டுபவரின் விரல்களில்தான் வண்ணம் படிந்து தோலில் உறைந்திருக்கும்; ஆனால் ஓவியத்தைக் காண்பவரின் விரல்களிலும் வண்ணம் தேங்கச் செய்யும் குணம் கொண்டவை ஜெயமோகனின் கதைகள்.

    எழுத்தாளர் யுவன் சந்திரசேகரை வாசிக்கத் தொடங்கியது சமீபத்தில்தான் – கடந்த இரண்டு ஆண்டுகளில். கணினிப் பார்வை ஆராய்ச்சியில் Accidental Cameras என்றொரு கருத்துரு உண்டு. மழை பெய்தபின் காரின் முன்கண்ணாடியில் சின்னச் சின்னத் துளிகள் படிந்திருக்கும்; ஒவ்வொரு துளியிலும் ஒவ்வோர் உலகத்தைக் காணலாம். அவை நம் கண்கள் காணும் அதே உலகம்தான்; ஆனால் அந்த நீர்த்துளிக் கண்களில், சற்றே வேறான கோணத்தில், வேறான குவிய அளவுகளில், அவ்வுலகம் வேறுபட்டுத் தெரியும்; மாயமாய் முளைத்த பல்லாயிரம் கண்கள். அதேபோல், pinhole camera-வின் ஒரு வடிவமாக, இருளறையின் ஒற்றைச் சன்னல், வெளியுலகத்தை உட்சுவரில் தலைகீழாக மங்கலாகப் படம்பிடிக்கும். இவ்வாறு, அதே புறவுலகம் வெவ்வேறு பார்வைப்புலன்களில் வெவ்வேறு வடிவங்களில் தெரிகிறது. யுவனின் படைப்புகள் இவற்றைப் படம்பிடிப்பதாக எனக்குப் படுகிறது. ‘வெளியேற்றம்’, ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவல்கள், ‘தாயம்மா பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்’, ‘நார்ட்டன் துரையின் மாற்றம்’ சிறுகதைகள் – இவை எனக்குப் பிடித்தவை. பல யதார்த்தங்கள், மாற்றுக்கோணங்கள் என எவ்வாறு வரையறுத்தாலும், யுவனின் படைப்புகள் அவற்றின் அடியில் நம் உணர்வுகளைத் தீண்டும் புள்ளிகளைக் கொண்டவை.

    பல தமிழ் எழுத்தாளர்கள் வெவ்வேறு வகையில் என்னைப் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனிலிருந்து கி. ராஜநாராயணன், பூமணி, இமையம் என அலைகளாய் மோதிக்கொண்டே இருக்கின்றனர்; அவற்றை வாங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஆரம்பகாலத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் மௌனி, கு. ப. ராஜகோபாலன் முதலிய எழுத்தாளர்களின் கதைகள் ஒரு குறிப்பிட்ட அகத்திணைக் களத்தை உருவாக்குகின்றன என்பது என் செல்லக் கருதுகோள். உதாரணமாக, மௌனியின் அழியாச்சுடர், கு.ப.ரா.வின் நூர் உன்னிஸா, திரை, கனகாம்பரம், ஆற்றாமை போன்ற பல கதைகள், ஏதோவொரு அகத்தருணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு ஒரு சிறுகதைத் தொகுப்பு அமைந்தால், அதைச் சுற்றி திணைக்கோட்டுபாடுகளை எழுப்பலாம். அக்கதைக் களத்தின் சுற்றுவெளி எல்லைக்குட்பட்டதென்றாலும், சங்க காலக் கவிதைகளில் போல, அவ்வெல்லையே அக்கதைகளின் உணர்வுகளுக்குத் திணைகளை வகுத்துத் தருகிறது எனத் தோன்றுகிறது. அக்காலத்தில் எழுதிய எழுத்தாளர் விந்தியாவின் சிறுகதைகளை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்; இவரின் கதைகள் வாசிப்புத் தளத்திலும் விமர்சனத் தளத்திலும் இன்னும் போதிய கவனம் பெறாதவை. 

    தமிழ் அபுனைவுத் தளத்தில் பேராசிரியர் டி. தருமராஜை முக்கியமான ஒருவராகக் காண்கிறேன். அவருடைய கட்டுரைகள் கூர்மையும் வீச்சும் மிக்கவை. அவரது உரைகளும் இணையத்தில் இருக்கின்றன; அவருடைய “அயோத்திதாசர் – பார்ப்பனர் முதல் பறையர் வரை” நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை, என் “மெய்ப்பொருள்” சிறுகதைக்கு ஓர் உந்துதலாக இருந்தது. 

    பிறமொழி எழுத்தாளர்கள் என்று சொன்னால் உலக இலக்கியமே வந்துவிடும். டால்ஸ்டாயின் பன்முகப்பட்ட கதாபாத்திரப் படைப்புகள் பிடிக்கும்; சாதாரணமாக விவரித்துச் செல்லும் போக்கில் எழுதப்பட்டாலும், அவை மனத்தில் எங்கோ தங்கிவிடும். உதாரணமாக, ‘போரும் அமைதியும்’ நாவலில் வரும் மரியா டிமிட்ரியேவ்னா – “டிராகன்” என அழைக்கப்படும் கதாபாத்திரம். செக்காவ் மற்றொரு பிடித்த எழுத்தாளர்; கவிதைத்தன்மை வாய்ந்த அவரின் ‘தி ஸ்டெப்’ (The Steppe) ஒரு சிறந்த குறுநாவல். ஆலிஸ் வாக்கரின் ‘தி கலர் பர்ப்பிள்’ (The Color Purple) எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று. இப்போது தாமஸ் மன்னின் பெரும்படைப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 

    சங்க இலக்கியம், கம்பராமாயண வாசிப்பு எப்படி அறிமுகமானது?

    “கணையாழி கடைசிப் பக்கங்கள்” கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் சுஜாதா சுட்டிய “ஏற்றுக உலையே ஆக்குக சோறே”, “சிற்றில் நற்றூண் பற்றி” ஆகிய பாடல்களால் தூண்டப்பட்டுப் புறநானூற்றை வாசிக்கத் தொடங்கினேன். “சிற்றில்” பாடலைப் பள்ளியில் படித்த நினைவு அப்போதுதான் மூளையின் எங்கோவொரு ஆழத்திலிருந்து எழுந்து இணைந்துகொண்டது. பின்னர், 2011ல் எழுத்தாளர் ஜெயமோகன் சென்னையில் ஆற்றிய “குறுந்தொகை: தமிழ்க் கவிமரபின் நுழைவாயில்” என்ற உரையின் வழியாக அகத்திணைப் பாடல்களை வாசிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து தமிழ்ப் பண்டைய இலக்கிய ஆற்றில் படகு வலிக்க முடிந்தது. ஒற்றை நிழற்படங்களென குறுந்தொகையும் புறநானூறும், சில நொடிக் குறுங்காணொளிகளெனக் கலித்தொகைப் பாடல்களும், பின்னர் அவ்வுலகத்திலேயே வாழவைக்கும் சிலப்பதிகாரக் காப்பியமும் என வாசிப்புத் தொடர்ந்தது. 

    கம்பராமாயணத்தைத் தொடர்ச்சியாக, முழுமையாக வாசித்ததில்லை; அதில் எனக்கு விரிவான வாசிப்புண்டு என்று நான் கருதவில்லை. அவ்வபோது ஏதோ ஒரு பகுதியை எடுத்து வாசிப்பேன். அமெரிக்கா-பூன் இலக்கிய முகாமில் நடந்த கம்பராமாயண உரையாடலை நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது, அதை மேலும் உன்னிப்பாக வாசிக்கத் தூண்டியது. மேலும், என் இணையன் வங்காளி என்பதால், அங்கு ராமாயணக் கதை எவ்வாறு வேறுபடுகிறது, எந்தக் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று பார்ப்பது சுவாரசியம். உதாரணமாக, ராவணனின் மகன் மேகநாதன் வங்காளத்தில் முக்கியமான பாத்திரம்.    

    ⁠⁠முதல் சிறுகதை எப்போது வெளியானது?

    ⁠⁠முதல் சிறுகதை “குறியீடு” சொல்வனம் இதழில் ஜூலை 2024ல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, “வெறியாட்டு” சொல்வனத்திலேயே பிப்ரவரி 2025ல் வெளியானது. அதன் பின் தொடர்ந்து இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். https://apvijay.me என்ற என் தளத்தில் என் கதைகளையும் கட்டுரைகளையும் வாசிக்கலாம்.

    எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன?

    சிறுகதைகளும் குறுநாவல்–நாவல் உள்ளிட்ட பெருங்கதைகளும்தான். சமீபத்தில் குறுநாவல் வடிவம் குறித்தான தீவிரமான கட்டமைப்பு வாசிப்புகளும் கவனிப்புகளும் நிகழ்ந்தன; அதையொட்டி ஒரு புதிய குறுநாவலுக்கான கரு இப்போது மனத்தில் உருப்பெற்று வருகிறது.

    உங்களுடைய சிறுகதைகளில் வெறியாட்டு, உள்ளுறை எனக்குப் பிடித்தவை. இந்தக் கதைகளை எழுதிய பின்புலம் குறித்துச் சொல்ல முடியுமா?

    இயல்பான ஒரு மனித வெளிப்பாட்டுக்கு எப்போதும் ஏதேனும் ஓர் எதிர்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. சங்க காலப் பாடல்களில் காதல் இயல்பாக இருக்கும்போதே, பெண்ணின் தாய் அதை மறுப்பதைக் காண்கிறோம். மகளின் உடம்பில் முருகு வந்துவிட்டதாகவும், வேலன் வந்து வெறியாட்டு ஆடி அம்முருகை விரட்டுவதாகவும் காண்கிறோம். தற்காலத்தில் அதே நிராகரிப்பு, சாதி, மதம், பணம், இனம் என வெவ்வேறு உருவங்களில் இருக்கிறது. தன்பால் காதலுக்கும் அதுவே தான்; வெறியாட்டு என்கிற சமூக நிராகரிப்பு, பெரும்பாலும் ஒரு மனிதரின் இளமைப் பருவத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது. இந்தத் தொடர்பை வரலாற்றுத் தளத்தில் வைத்து வலியுறுத்தவே, சங்க கால வெறியாட்டையே இக்கதையின் கட்டமைப்பாக அமைத்தேன். இயல்பான காதலுணர்வும் அதற்கான எதிர்ப்பும் ஒருசேர உண்மையாக வெளிப்படுவதே “வெறியாட்டு” கதை என்று நினைக்கிறேன்.

    “மெய்ப்பொருள்” சிறுகதையில், மொழியின் வழியாகத் தற்கற்ற மணி என்கிற செயற்கை நுண்ணறிவு எந்திரன், மொழிக்கு முன் ஆதியாக என்ன இருந்திருக்கலாம் என்று யோசிக்கிறான். “உள்ளுறை” சிறுகதை, அதே கதாபாத்திரங்களைக்கொண்டு அகம்-புறம் இரண்டுக்குமான தொடர்பு என்ன என்ற கேள்வியை ஆராய்கிறது. இந்தக் கதையை எழுதத் தொடங்கிய தருணத்தை இப்படிச் சொல்லலாம். தொல்காப்பியத்தில் நகைப்பு, அழுகை முதலிய எட்டு மெய்ப்பாடுகள் (ரசங்களுக்கு நிகரானவை) கூறப்படுகின்றன; ஒன்பது அல்ல, எட்டுதான். பின்னர், அபிநவகுப்தர் சாந்தம்/அமைதி என்பதை ஒன்பதாவது ரசமாகத் தன் அழகியல் கோட்பாட்டில் முன்வைத்தார். இந்த எட்டு மெய்ப்பாடுகளையும் எந்திரன் மணி தன் முகத்தில் வெளிப்படுத்துவது போல என் மனத்தில் தோன்றிய சித்திரமே இக்கதையின் தொடக்கப்புள்ளி. அந்த ஆரம்பமே, அகப்புற வெளிப்பாடுகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் உண்டான தொடர்பென்ன என விரிந்து, எழுதும்போது இன்மையை நோக்கிப் போய்ச் சேர்ந்தது.

    மாற்றுப்பாலியல் (LGBT) உங்கள் கதைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுபொருளாக உள்ளது. இந்த வகைமை கதை எழுதுவதில் உள்ள சவால் என்ன ?

    இலக்கியம் ஏதோவொரு வகையில் நுண்மையைப் பேசவேண்டும். ஆனால் நுண்மையைப் பேசுவதற்கு, முதலில் சமூகத்திலோ இலக்கிய மரபிலோ ஒரு சாதாரணத் தன்மை வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். காட்டின் நிறம் பச்சை என்று ஒரு வரையறை இருந்தால் வெவ்வேறு பச்சைகளுக்கிடையிலான நுண்வேறுபாடுகளை வெளிப்படுத்த முடியும். 

    தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவு சாதாரண தளத்தில் காமம், ஈர்ப்பு, உறவு என பலவகையாக ஏற்கனவே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து மேலெழுந்து, உன்னதக் காதலாகவோ, தியாகமாகவோ, காதல் தெய்வமாக்கப்படுவதாகவோ, மாயத்தன்மை ஏற்றப்படுவதாகவோ – இவையெல்லாம் இலக்கியத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன. போலவே ஆண்பெண் உறவின் கள்ளத்தனம், கீழ்மைத்தனம், நெகிழ்வு, “பிறழ்வு” எனப் பல கோணங்களும் நுண்மை பெறுகின்றன. ஆனால், ஆண்-ஆண், பெண்-பெண் உறவுகளுக்கு இந்த விரிவான சாத்தியங்கள் தமிழ் இலக்கியத்தில் இல்லை; ஒற்றைப் படைத்தன்மையான கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவையும், பன்முக ஆண்–பெண் உறவுகளுக்கு நடுவே, தேய்வழக்காகச் சொல்லப்பட்ட ஒற்றைக் கதாபாத்திரமாகவே இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் இலக்கியப் பரப்பில் தனித்திருக்கின்றன; தமிழிலக்கிய வரலாற்றுத் தளத்தில் அந்தக் கதாபாத்திர நாட்காட்டிகளை மாட்டுவதற்கு ஆணியே இல்லை. 

    அதனால், இலக்கியத் தளத்தில் பால்புதுமைக் (queer) கதைகளுக்கு ஒரு புதிய வரலாற்றுப் போக்கையே உருவாக்கவேண்டும். இனிக்க இனிக்க ஊறியெழும் காதலையும் எழுதவேண்டும், மறுபக்கம், பொய்யையும் புரட்டையும் எழுதவேண்டும். இவ்விரண்டுமே இல்லாததால், இரண்டு விரல்களால் சக்கரைப் பாகின் பதம் பார்க்கும் அந்த நுண்ணிய இழையும் இல்லை. சவால் என்பது, ஒரு குறுகிய காலக்கட்டத்திற்குள் இந்த எல்லாவிதமான எழுத்துகளையும் எழுதவேண்டும் என்பதே. ‘பொன்னியின் செல்வன்’ நாவல் போல ரொமான்ஸ்தன்மையும் எழுதப்படவேண்டும், ‘அம்மா வந்தாள்’ போல உறவின் பல பக்கங்களும் எழுதப்பட வேண்டும். கைவிரல்களால் ஒரு கதையையும், speech-to-text வழியே வாய்மொழியாகச் சொல்லி இன்னொரு கதையையும் ஒரே நேரத்தில் எழுதும் திறன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    “எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன?

    சொல்லவேண்டிய கதைகள் இருக்கின்றன; அவற்றை யாரும் இதுவரை சொல்லவில்லை. அதனால் எழுதுகிறேன். சொல்லாமல் விடுவதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. 

    பாரதியாரின் இந்த “கண்ணன் என் காதலன்” பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். 

    ஆசை முகமறந்து போச்சே – இதை

    ஆரிடம் செல்வேனடி தோழி?

    நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்

    நினைவு முகமறக்க லாமோ?

    கண்ணனைத் தன் காதலனாக வரித்துக்கொண்டு ஒருவர் பாடுகின்ற பாடல். யாருடைய நோக்கில் சொல்லப்படுவதாக நம் மனத்தில் எழுகிறது? ஒரு பெண்ணின் நோக்கில்? ஏன் ஒரு இளைஞன் தன் காதலனை நினைத்து, தன் தோழியிடம் கூறுவதுபோல் தோன்றுவதில்லை? சிலருக்குத் தோன்றினாலும் “நாயகி பாவம்” என்பதும் கூடவே வருகிறதோ? பாரதியார் தன்னைப் பெண்ணாக நிறுத்திக்கொண்டு இப்பாடலை எழுதியிருப்பாரோ? இத்தகைய கேள்விகள் இருக்கின்றன. அவற்றுக்கு எனக்கேயான விடைகளைக் காணவே எழுதுகிறேன் எனவும் சொல்லலாம். 

    “வெறியாட்டு” கதையில் வரும் சண்முகம், புராணங்களிலோ மதக்கதைகளிலோ இலக்கியக்கதைகளிலோ வரலாற்றுக்கதைகளிலோ யாரோடு தன்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்? எவரோடும் முடியாது. ஆனால் இப்போது, தமிழ் வாசிக்கும் ஒரு தன்பால் ஈர்ப்பாளர், அந்தச் சண்முகத்தோடு தன்னைப் பொருத்திக்கொள்ளமுடியும். அந்த ஒரு நம்பிக்கை, அந்த ஒரு பிடிமானம், அதுவே சமூகத்தின் ஆழ்மனத்துக்குத் தேவைப்படுகிறது. 

    உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் எழுதிவிடுவீர்களா? )

    மையப்புள்ளி என ஏதோவொன்று, பல கதைகளுக்கு மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும். ஏதோவொரு நாளில் அந்தப் புள்ளி கதையாக உருப்பெறும். பொதுவாக அந்தத் தருணத்திலேயே உடனடியாக எழுதத் தொடங்கிவிடுவேன். ஒன்றிரண்டு அமர்வுகளில் சிறுகதை பெரும்பாலும் வந்துவிடும்; ஆனால் பின்னர் தோன்றும் புதிய உச்சக்கணங்களை எழுதிச்சேர்ப்பதுமுண்டு. முழுவதும் எழுதி முடித்தபின், எழுத்துப்பிழைகளைக் களைவேன்; வாக்கியங்கள் கோவையாக இல்லையென்றால் செப்பனிடுவேன். சில நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் கருத்துகளைக் கேட்பதுண்டு.

    இடம் என்று குறிப்பிட்ட ஒன்று இல்லை. பொதுவாக வீட்டில் மடிக்கணினியில் எழுதுவேன்; சிலவேளைகளில் பூங்காவில் செல்பேசியில் எழுதியிருக்கிறேன். இதுவரை எழுதியவற்றை வைத்துப் பின்னோக்கிப் பார்த்தால், எழுந்த காலையிலும் உணவுக்கு முன்னான மாலையிலுமே பல கதைகளை எழுதியிருக்கிறேன்.

    ⁠உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உண்டா ? 

    எழுத்துப்பிழைகளையும் தகவல்பிழைகளையும் களைவதற்குச் செயற்கைநுண்ணறிவைப் பயன்படுத்தியிருக்கிறேன். தேய்வழக்குச் சொற்றொடர்களை அடையாளங்காணப் பயன்படுத்தியிருக்கிறேன். குறுநாவலுக்கும் நாவலுக்கும் செயற்கை நுண்ணறிவு இன்னும் அதிகமாகப் பயன்படும் என்று நினைக்கிறேன்; நாவலின் புறக்களத்தை அறிந்துகொள்ளத் தேவையான தகவல் சேகரிப்பில் அது உதவியாக இருக்கலாம். சில சமயம், செயற்கை நுண்ணறிவை ஒரு வாசகராக நிறுத்தி, என் கதைகளை வாசிக்கச் சொல்லி, அதன் எதிர்வினையைக் கேட்பது எனக்குக் களிப்பளிக்கும். 

    ⁠நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

    மனித உறவுகளின் வரையறைகளும் கட்டுப்பாடுகளும் கூட இலக்கியத்தின் வழியே வடிவமைக்கப்படுபவைதான். ஆண்-பெண் காதல், குடும்பம் போன்ற கட்டமைப்புகள், வேளாண்மைக் காலத்திற்குப் பின்னரே ஏற்பட்டவை. அதற்கு முன் இவை எவ்வாறு இருந்தன என்று நமக்குத் தெரியாது. தமிழ்ப் பண்பாட்டில் காதல் என்ற சமூகக் கருத்துருவுக்குச் சங்க காலக் கவிதைகள் பெரும் அடித்தளம். பின்னர், பக்தி காலத்தில் அது இறைக்காதலாக உன்னதப்படுத்தப்பட்டு, இக்காலத்தில் வெவ்வேறு ஓடைகளாக நம்மை வந்தடைகிறது. 

    இதே போன்று ஆண்-ஆண் காதலையோ பெண்-பெண் காதலையோ சமூகத்தில் வைக்க இடமில்லை; ஏனென்றால் இவற்றுக்கு இலக்கியத்தில் முன்னோடி இல்லை, பண்பாட்டிலும் இவை எதிரொலிக்கவில்லை. இவற்றுக்கான ஆழ்படிம உருவகங்களே உருவாகவில்லை. அதனாலேயே நல்ல வாசகர்களும் நல்ல எழுத்தாளர்களும்கூட, ஒரு தன்பால் ஈர்ப்புக் கதாபாத்திரம் வரும் ஒரு கதையை வாசிக்கும்போது, சமூகத்துக்கு ஏற்கனவே பரிச்சயமான ஆண்தன்மை-பெண்தன்மை அடுக்குகளில் அக்கதாபாத்திரங்களை எங்கேயோ பொருத்த முயல்கிறார்கள்; அவ்வாறு பொருத்திப் பார்த்து திருப்தியடைகிறார்கள்; அல்லது ஓர் ஏளனத்துடன் நிராகரித்துக் கடந்துசெல்கிறார்கள். இது காதலுக்கு மட்டுமல்ல; ஆண்மை, தாய்மை என எல்லாவற்றுக்கும் பொருந்தும். அவ்வளவு ஏன், சமூகத்தில் இப்போது உதாரணமாக, ஓர் ஆண் இளைஞன் மற்றொரு ஆணால் உடல்சார்ந்த வன்முறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானால், சமூகம் அதை ஒரு மீறலாகப் பார்க்கவே மறுக்கிறது. ஓர் ஆணுக்கு எப்படி இப்படியெல்லாம் நேரும் எனக் கேட்டு, இது அவதூறாகவே இருக்கவேண்டும் என முத்திரை குத்துபவர்களே அதிகம். மறுபுறம், தன்பால் ஈர்ப்பும் பால்புதுமையும் மனக்கோளாறோ எனவும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    இலக்கியம் பொதுமைப்படுத்தப்பட்ட உண்மையைச் சொல்ல வருவதில்லை; ஒவ்வொரு எழுத்தாளருக்குமான சிறப்புண்மையே அதில் வெளிப்படுகிறது. வாசகர்கள் அந்தச் சிறப்புண்மைகளில் தங்களைக் கண்டுகொள்கிறார்கள். இத்தகைய சிறப்புண்மைகள் காலப்போக்கில் தாமாகத் தொகைத்து, விழுமியங்களாகவும் படிமங்களாகவும் வெளிப்படுகின்றன. ஆனால், இவை ஒரே நிறம் கொண்ட விழுமியங்களல்ல. பல்வேறு நிறங்கள் கொண்டவை. ஆண்-பெண் உறவுகளின் பல்வேறு நிறச்சாத்தியங்கள், கதைகளில் இவ்வாறுதான் உருவாகியுள்ளன. அதேபோல, பால்புதுமை மனிதவுறவுகளும் பல நிறப்பட்டைகள்கொண்டவைதாம். 

    இவற்றை ஒற்றை நிறமாக தேய்வழக்காக முன்வைக்காமல், அம்மனிதர்களின் பல்வேறு பாவனைகளையும், நடிப்புகளையும், பழிவாங்கலையும், தியாகங்களையும், கையறுநிலையையும், அன்பையும், காதலையும், நெகிழ்ச்சியையும், அழுகையையும் உண்மையாக முன்வைக்க வேண்டிய தேவை தமிழிலக்கியத்தில் உள்ளது. இவற்றைத் தமிழிலக்கிய வரலாற்றினுள் வைத்து, ஒரு சக-வரலாறாக நாவலில் சொல்லவேண்டும் என்ற விருப்பமும் கனவும் உண்டு – வரலாற்றுப் பெருக்கையே பால்புதுமைக் கோணத்தில் ஒரு நாவலாக்க வேண்டும். அதற்குப் புதுவித அழகியலும், புதிய படிமங்களும் குறியீடுகளும் உருவாக்குவது அவசியம். இவையெல்லாம் “தானாகச்” சமூகத்தில் திரண்டு வரவேண்டும் என்று சொல்வதை நான் மறுக்கிறேன்; எதுவும் தானாக உருவாவதில்லை. ஒருவரோ பலரோ ஏதோவொரு காலப்புள்ளியில் தம் அகத்தில் எழுந்ததையும் வாழ்ந்துணர்ந்த அனுபவங்களையும் இலக்கியமாகவும் கலையாகவும் ஆக்கியவையே, பின்னர் மூலப்படிமங்களாகவும் விழுமியங்களாகவும் புராணங்களாகவும் நிலைபெற்றுள்ளன. நான் பண்பாட்டை மறுத்து, பண்பாட்டை உருவாக்க முனையவில்லை; மறுபண்படுத்தல் வழியாகப் பண்பாட்டு விரிவாக்கத்தையே முயல்கிறேன்.

    #

  • நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    நேர்முகம் 1 – மதுநிகா சுரேஷ்

    “எங்கள் புத்தக வாசிப்பு குழுமம் ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு வாரமும் இணையவழியில் சந்திக்கிறோம். இதுவரை நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.”

    மதுநிகா சுரேஷ் அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் வசிக்கிறார். “தமிழ் ஆர்வலர்கள் குழு” என்ற இணையவழி வாசிப்பு குழுமத்தை ஒன்பது வருடங்களாக நடத்தி வருகிறார். இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட இணைவழி இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைத்திருக்கிறார். சமீபத்தில் தல்ஸ்தோயின் “போரும் அமைதியும்” நாவலை இருபத்தேழு வாரங்களாக வாசித்து நிறைவுசெய்திருக்கிறார்கள்.

    2022 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய எமர்சன் இலக்கிய முகாமில்தான் மதுநிகாவை முதலில் சந்தித்தேன். சிறுகதை அமர்வில் எழுத்தாளர் திருச்செந்தாழையின் ஆபரணம் சிறுகதை குறித்து ஒரு நல்ல உரையாற்றினார். 2023 எமர்சன் இலக்கிய முகாமில் கு. அழகிரிசாமி எழுதிய திரிபுரம் சிறுகதையையும், 2024 எமர்சன் இலக்கிய முகாமில் தல்ஸ்தோயின் அன்னா கரினினா நாவல் குறித்தும் உரையாற்றினார். வலைதளம்: “மதுவின் பக்கங்கள்”. மதுநிகாவுடன் ஒரு நேர்முகம்.

    உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?

    நான் பிறந்து வளர்ந்தது தஞ்சாவூரில். படித்தது Bachelor of Engineering in Electrical and Electronics Engineering. கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தேன். அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசிக்கிறேன். இங்கு முழுநேரமும் இலக்கியம் தான். கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர். இரண்டு பிள்ளைகள். என் மகன் ஒரு வயது குழந்தையாக இருந்த போது மிச்சிகன் இலக்கிய குழுவில் இணைந்தேன். அவனோடு சேர்ந்து என் வாசிப்பும் வளர்ந்தது. நான் வாசிப்பதைப் பார்த்து என் மகளும் நிறைய வாசிக்கிறாள்.

    இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

    இலக்கிய அறிமுகம் அப்பா திரு.இரா.நெடுமாறனிடம் இருந்துதான் தொடங்கியது. எங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறது. அப்பா ஆங்கிலம் மற்றும் தமிழில் தீவிரமாக வாசிக்கும் பழக்கம் உடையவர். எனது வாசிப்பு அப்படி ஆரம்பித்ததுதான். முதலில் நான் வாசித்தது கல்கி, பாலகுமாரன், சுஜாதா நாவல்கள்தான். அதிலும் தஞ்சை என்பதால் பொன்னியின் செல்வன்,உடையார் போன்ற நாவல்கள் விரும்பி வாசித்தேன். கல்லூரி நாட்களில் கல்லூரி நூலகத்தில் கிடைக்கும் Robin sharma, Napoleon Hill, Shiv khera, Dale Carnegie புத்தகங்களை வாசித்தேன். அங்கே தொடங்கிய வாசிப்பு ஒரு கட்டத்தில் முதிர்ச்சியான தீவிரமான வாசிப்பிற்குள் தற்பொது வந்தடைந்து இருக்கிறேன் என்றால் ஜெயமோகன் அவர்களின் அறம் தொகுப்பை வாசித்தப்பின். இலக்கியம் என்பதன் அர்த்தத்தை உணர வைத்த நூல் அது. தேடல் நமக்கு இருக்கும்போது நம்மை  நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டி அழைத்து செல்வார்கள்.

    உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?

    பிடித்த எழுத்தாளர்களின் பட்டியல் பெரியது. என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்து என்பது  கம்பர், தல்ஸ்தோய், தஸ்தாவெஸ்கி, செக்காவ் மற்றும் ஜெயமோகன். கவிதை என்று வரும்போது ரூமி, நகுலன், அபி, தேவதேவன்.

    நீங்கள் ஒருங்கிணைக்கும் இணையவழி கலந்துரையாடல் குழுமம் பற்றி சொல்லுங்கள். எப்போது துவங்கினீர்கள் ? 

    நான் இம்பர்வாரி, சுக்கிரி போன்ற வாசிப்பு குழுமங்களில் இருக்கிறேன். மிச்சிகனில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் குழுவில் 2017இல் இணைந்தேன். அந்த குழுவை  திருமதி.கலையரசி அவர்கள் தொடங்கினார். சங்கர் மற்றும் லஷ்மன் அந்த குழுவில் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.அவர்கள் மூலமாகத்தான் எனக்கு அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் அறிமுகம் கிடைத்தது.  மிச்சிகன் தமிழ் ஆர்வலர் குழுவில் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் குறித்த இணைய வழி கலந்துரையாடலை ஒன்பது வருடங்களாக வாரம் தோறும் நிகழ்த்துகிறோம். இந்த குழுவில் நவீன இலக்கிய நிகழ்ச்சிகளை நானும், நண்பர் சங்கரும் ஒருங்கிணைக்கிறோம். எங்கள் நிகழ்வை நாங்கள் பதிவு செய்வதுண்டு. அதன் பதிவை பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். இலக்கிய முன்னெடுப்புகளுக்கு நண்பர்கள் குழு மிக அவசியம் .

    உங்கள் கலந்துரையாடலில் புதிதாக ஒருவர் இணையவிரும்பினால் எப்படி இணைவது ? 

     புதிதாக எங்கள் குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் madhuparu09@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

    இதுவரை எத்தனை சந்திப்புகள் நடத்தியிருக்கிறீர்கள் ? அதிகபட்சமாக ஒரு சந்திப்பில் எத்தனை வாசகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள் ? 

    குறைந்தது பத்து  முதல் பதினைந்து நபர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள். இதுவரை எத்தனை சந்திப்புகள் என்று கணக்கிட முடியாது. ஒன்பது வருடமும் ஒவ்வொரு வாரமும் சந்திக்கிறோம். நானூறு சந்திப்புகளுக்கும் மேல் நடத்தியிருப்போம்.

    இதுவரை என்ன என்ன புத்தகங்களை குழுவாக வாசித்திருக்கிறீர்கள் ?

    வாசித்த புத்தகங்களின் பட்டியலில் நினைவிலிருப்பவை மற்றும் சொல்கிறேன்.

    நீலகண்ட பறவையைத் தேடி-அதீன் பந்தோபத்யாய், போரும் வாழ்வும்- தல்ஸ்தோய், கரம்சவ் சகோதரர்கள்- தஸ்தாவெஸ்கி, புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி, செல்லாத பணம்- இமையம், அஞ்சலை- கண்மணி குணசேகரன், கு. அழகிரிசாமி சிறுகதைகள், தி. ஜானகிராமன் சிறுகதைகள், அசோகமித்திரன் படைப்புகள்,அம்பை, வண்ணதாசன்,எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறோம். தற்கால எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதோடு அவர்களுடன் இணைய வழி சந்திப்பும் நடத்துகிறோம். திரு.செந்தில் ஜெகந்நாதன், திரு. திருச்செந்தாழை, திரு. கண்மணி குணசேகரன், திரு. இமையம், கவிஞர் ஆனந்த், திரு.நவீன் என்று பல எழுத்தாளர்களின் படைப்புகளை முழுவதுமாக படித்து அவர்களுடன் ஒரு மிகச்செறிவான இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம். வாசகர்களாக எழுத்தாளர்களுக்கு மரியாதையும், ஊக்கமும் செய்வதாக இது அமைகிறது .

    ஒரு புத்தகத்தை படித்து முடித்தபின் அடுத்த புத்தகத்தை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள் ?

    ஒரு புத்தகத்தை வாசித்தப்பின், தொடர்ந்து குழுவில் வாசிப்பில் ஆர்வமாக பங்கேற்கும் நண்பர்களின் பரிந்துரைகளை ஏற்று வாக்கெடுப்பு நடத்தி வரிசைப்படுத்தி அட்டவனை தயாரித்து வரிசையாக அடுத்தடுத்து தொடர்ந்து வாசிப்போம்.

    வாசிப்பு குழுமங்கள் வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஆலோசனைகள் என்ன ? 

    1. தொடர்ந்து வாசிப்பில் தீவிரமாக இருக்கும் நடத்துனர் வேண்டும்.

    2. குழுமத்தில் செய்யக்கூடியதும் செய்யத்தகாதவைகளுமான விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவரின் கருத்திற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் போது அது அந்த நபரை தாக்கும் முறையில் அல்லாமல் இருக்க வேண்டும். ஒருவர் பேசும்போது இடையில் பேசக்கூடாது.

    3. ஒவ்வொரு கூடுகையின் போதும் நேரமேலாண்மை மிக அவசியம்.அறிவிக்கப்பட்ட நேரத்தில் நிகழ்வை தாமதமின்றி ஆரம்பித்து நிகழ்வில் ஒவ்வொரு நபருக்கும் ஐந்து நிமிடங்கள் என்றால் அதை மீறாமல் கடைப்பிடித்து குறித்த நேரத்தில் நிகழ்வை முடிப்பதற்கு தக்க திட்டமிடலுடன் செயல்படும் மட்டுறுத்தனர் வேண்டும்.

    4. தொடர்ந்து வாசிப்பில் பங்களிப்பை ஆற்றாதவர்கள் குழுவை தோய்வடைய செய்வார்கள். அதனால் ஆர்வமாக பங்களிப்பவர்களை மட்டுமே குழுவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    5. அரசியலுக்கு இடமளிக்க கூடாது.

    6. வருடா வருடம் வாசிப்பு மாரத்தான் போட்டி நடத்துகிறோம் குழு சுறுசுறுப்பாக இயங்க இதுபோன்ற போட்டியும் தேவை. 

    இலக்கியம் உங்களுக்கு அளித்தது என்ன ? வாசிப்பு குழுமங்களை நடத்துவது மூலம் நீங்கள் அடைந்தது என்ன ? 

    வாழ்க்கையில் நாம் பல இன்பதுன்பங்களை சந்திப்போம். சில வேளைகளில் சமநிலை தவறுவோம். அந்த தருணங்களில் இலக்கியம் ஊன்றுகோளாக இருக்கிறது.சின்ன சின்ன விசயங்களைக்கூட ரசிப்பதற்கும் ,என்னிடம் இருப்பவைகளுக்கு நன்றி சொல்வதற்கும், முக்கியமாக மனிதர்களை அவர்களின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதற்கும், என்னை நானே நேசிப்பதற்கும், ஈகோ இல்லாமல் மன்னிப்பு கேட்பதற்கும் இலக்கியம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது.

    வாசிப்பு குழுமங்கள் நடத்துவதன் மூலம்  குழுவாக செயல்படும் தன்மை,ஒருவர் வாசிப்பின் மூலம் பக்குவம் அடைதலை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு, பல வாசகர்களின் வித்தியாசமான புரிதல்கள், சில அனுபவம் வாய்ந்த வாசகர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, நாம் பிறருடன் நாம் கற்றதை பகிரும் வாய்ப்பு என்று இந்த குழுமத்தின் மூலம் நான் அடைந்ததவை பல.

    உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ?

    எதிர்காலத் திட்டம் வாசித்த படைப்புகளைப் பற்றிய வாசிப்பனுபவத்தை எழுத்துவடிவில் பதிவு செய்யவேண்டும். ரஷ்ய படைப்புகளைப் போல் பிற மொழிப்படைப்புகள் பல வாசிக்க வேண்டும். சிறுகதைகள் எழுதும் முயற்சியிலும் இருக்கிறேன். கம்பராமாயணம் தற்போது யுத்த காண்டம் மூன்றாம் பாகத்தை வாசித்துகொண்டிருக்கிறேன். மூன்று வருடங்கள் தவம் போல் ஒரு அனுபவம். இம்பர்வாரி குழுமத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். மேலும் கம்பராமாயணம் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும்.

    #

  • ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

    ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

    திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழின் சார்பாக ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பதற்கு ஒரு தமிழ் இலக்கிய வாசகராக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்திய மொழிகளில் ஞானபீட விருதே இலக்கியத்திற்கான உயரிய விருதாக கருதப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழின் சார்பாக அகிலன், ஜெயகாந்தன், வைரமுத்து மூவருக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனும், வைரமுத்துவும் ஞானபீட விருதிற்கு முற்றிலும் தகுதியற்றவர்கள். இந்த விருதை வைரமுத்துவிற்கு வழங்கியதன் மூலம் ஞானபீட அமைப்பு தன்னையும், தமிழையும் சிறுமைப்படுத்தியிருக்கிறது. தமிழிற்கு இது ஒரு தீராத அவமானம்.

    I strongly condemn awarding Jnanpith to Tamil lyricist Vairamuthu. Jnanpith award was considered the highest literary award in India. Three Tamil writers were awarded Jnanpith so far. Akilan, Jeyakanthan and Vairamuthu. Akilan and Vairamuthu are totally unqualified for Jnanpith award. Now not only once, but twice Jnanpith committee has awarded two unqualified writers from Tamil. By awarding Jnanpith to Vairamuthu, Jnanpith committee not only insulted Tamil, but also destroyed it’s own reputation.

  • VLC Bay Area – March 2026 Monthly Meet

    VLC Bay Area – March 2026 Monthly Meet

    விலாஸம் – பா.திருச்செந்தாழை

    [https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் தொடர்ந்து உரையாடுகிறோம். மார்ச் 14, 2026 இல் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் குறித்த என் ஏழு நிமிட உரையின் எழுத்து வடிவம். மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட் ]

    நண்பர்களுக்கு வணக்கம். 

    சீத்தலை சாத்தனாரை நமக்கு தெரியும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை எழுதியவர். இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையை சொல்லி சிலப்பதிகாரத்தை எழுதத்தூண்டியவர். சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோவிலை கட்டுவதற்கு தூண்டுதலாக இருந்தவர். சீத்தலை சாத்தனாரின் முழு பெயர் – மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தன். மதுரையில் கூலவாணிகம் செய்தவர். நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம் என எட்டுவகை தாணியங்களின் வணிகம்தான் கூலவாணிகம்.  தமிழ் விக்கியில் மேலும் படிக்கலாம்.   

    மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் வழியில் வந்த மதுரை நவதானிய வணிகர் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் சிறுகதை குறித்த சிறிய உரை இது. திருச்செந்தாழை மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்துகிறார். 2008 இல் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. மீண்டும் கோவிட் காலத்தில்தான் (2021 இல்)  இணைய இதழ்களில் சிறந்த சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கோவிட் காலத்தில் எழுதிய கதைகள் “விலாஸம்” என்ற பெயரில் இரண்டாவது சிறுகதை தொகுப்பாக வெளிவந்தது. அந்த தொகுப்பின் முகப்பு கதை “விலாஸம்”.

    கதை என்ன ? 

    யானை உயர காம்பவுண்டுக்குள் சாரட் வண்டி வீடு என்று அழைக்கப்பட்ட ராமவிலாஸ் இருக்கிறது. தேக்கினாலும், மொசைக்கினாலும் கட்டப்பட்ட பங்களா. பெருங்காட்டில்  பாய்ந்தோடுகிற ஒற்றை பேராறைப்போல தேனியில் பணம் நுழைகின்ற எல்லாவழியிலும் ராமவிலாஸ் மட்டுமே இருந்தது. பொன்கொண்ட பெருமாள் என்ற பெரிய வணிகரின் வீடு அது. ஆனால் நாற்பது வருடங்களில் வணிகம் சுருங்கி ராமவிலாஸ் வெறும் ராமபவனம் ஆக தேய்கிறது. உடற்குறை கொண்ட ஒரு மகள் பிறந்ததால் மருமகன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். ராமவிலாஸ் குடும்பம் நடத்திய பள்ளிக்கூடத்தை ஜாதி சங்கம் எடுத்து நடத்துகிறது. இப்போது பள்ளிக்கூடத்தில் மகள் கல்யாணி சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். முழுமையான வீழ்ச்சி.

    அந்த பெரிய வணிகரின் எண்ணற்ற வணிகங்களின் ஒன்றில் ஒரு எடுபிடி சிறுவனாக நுழைந்து, அவர்கள் கீழே இருபது வருடங்கள் நசுங்கி வேலை செய்து, ஒரு சிறிய விதையை கைக்கொண்டு அந்த பேராற்றின் இழுவிசையை மீறி கடலை அடைந்த வலிய மீன் தன்ராஜ். பொன்கொண்ட பெருமாளிடம் வணிகத்தின் சூட்சமத்தை கற்றுக்கொண்டு வென்றவர். ராமவிலாஸில் இருந்து ஒரு சிறு நெருப்பை கையளவு வைக்கோலில் பற்றிக்கொண்டு வந்து ஒரு மலையையே பற்றவைத்த புதிய பணக்காரர் தன்ராஜ். 

    தன்ராஜின் விரிவடையும் வணிகத்தின் ஒரு பகுதியாக அவர் புதுதாக துவங்கிய ஒரு மில்லின் அழைப்பிதழுடன் வாழ்ந்து கெட்ட தன் முதலாளியை பார்க்க போகிறார்.  தன்ராஜுக்கும் பொன்கொண்ட பெருமாளுக்குமான உரையாடல், அதன்பின்னான நிகழ்வுகள், தன்ராஜின் வாழ்க்கை, புகழேந்தி, அய்யாவு போன்ற கடை சிப்பந்திகளின் வாழ்க்கை என  தன்ராஜின் மகனான கதைசொல்லியின் பார்வையில் விரியும் சிறுகதை. 

    கதையில் எனக்கு பிடித்தது:

    • கதையின் புதிய களம்: நவீன தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுதான் பெரும்பாலான கதைகளின் பேசுபொருள். நம் குழுமத்தில் விவாதிக்கப்பட்ட சிறுகதைகளிலே பொரும்பாலும் இந்த பின்புலம்தான். எழுதாத களங்கள் நிறைய இருக்கிறது. வணிக பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை ஒரு புதிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. 
    • சிறுகதையில் இருக்கும் இருக்கும் நுண்தகவல்களும், நிகர்வாழ்வும்: 
      • தன்ராஜ் போன்ற வெற்றிகரமான வியாபாரியை “எல்லாம் அங்க இருந்து திருடிட்டு வந்துட்டான்” என்றே பொதுவாக சொல்வார்கள். தன்ராஜின் கடுமையான உழைப்பு, மாறும் சூழல், அந்த மாறும் சூழலை பயன்படுத்தும் அவருடைய கூர்மையான அறிவு என விவரிக்கப்படுகிறது. இருபது வருடங்கள் முன்பு ஆரம்பத்தில் “முன்ன பின்ன தெரியாத உன்னை எப்படி நம்புவது?” என சம்சாரிகள் தன்ராஜை ஒரு தாசியை போல அவமானப்படுத்துகிறார்கள். பொறுமையாக இருக்கிறார். அப்போது சர்க்கரை நோய் இன்னும் பெரிதாக பரவவில்லை. வரகரிசி போன்ற சிறுதானியங்களுக்கு இன்னும் சந்தையில் விலை இல்லை. ஆனால் தன்ராஜ் சிறுதானியத்தின் மீது கவனம் செலுத்துகிறார். கழிவு என குப்பையில் கொட்டப்பட்ட தவிடில் இருந்து எண்ணை எடுக்கலாம், மறுசுழற்சி செய்து அந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம், அதை விற்று லாபம் பார்க்கலாம் என்பதை கண்டுகொள்கிறார் தன்ராஜ். தவிட்டு எண்ணெய் லாபத்தில் ஒரு பங்கை வைத்து, வடக்கு வியாபாரிகளைவிட குறைவான விலைக்கு சிறுதாணியங்களை விற்று, மொத்த சிறுதாணிய சந்தையையும் பிடிக்கிறார். சர்க்கரைநோய் பெருகி, ராமவிலாசில் இருந்து, பத்தோடு பதினொன்றாக “தாய்ப்பால் மறந்த சிறு குழந்தையை” போல இருந்த சிறுதாணிய வியாபாரத்தை பிடிங்கிக்கொண்டு வந்தவர், அதனை ஒரு யானையை போல வளர்த்தெடுக்கிறார்.    
    • சிறுகதையில் வெளிப்படும் தத்துவ பார்வை:
      • மகிழ்ச்சி என்பது என்ன ? நிறைவு என்பது என்ன ? என்ற கேள்வியை சிறுகதை முன்வைக்கிறது.
        • வணிகத்தின் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் தன்ராஜ் மகிழ்ச்சியாக இருக்கிறாரா ? வணிக வெற்றி என்பது சூதில் வெல்லும் ஒரு போதை. தன்ராஜ் துயரத்துடன் வரும்போதும் சரி, வெற்றியின் உச்சத்திலும் சரி,  வெறும் நீரையும் உணவையும் தரும் மனைவியிடம் ஒரு இணை-மனதை எதிர்பார்த்து ஏமாறும் தனிமையில் இருக்கிறார். ஒரு நொடியில் ஆறில் ஒரு பங்கு நேரத்திற்கும் மேலாக அவரால் சிரிக்கவே முடியவில்லை. 
        • முழுமையான வீழ்ச்சியை சந்தித்த பழைய முதலாளி “மாப்பா” பொன்கொண்ட பெருமாள் துயரத்தில் இருக்கிறாரா ? போலி பவ்யத்துடன், ஒரு சீண்டலை எதிர்பார்த்து தன் வீட்டிற்கு வந்திருக்கும் தன்ராஜிடம், வேட்டையின் வாசலுக்கே வராமால் கடந்து செல்லும் முதிய யானை போல இருக்கிறார். “எத்தனை பேர் காலை ஒடச்சிட்டு இவன் முன்னால ஓடுறான்” என தன்ராஜை வன்மத்துடன் புகழேந்தி சொல்லும்போதும், “வியாபாரம் என்பது போர்தான். போரில் தலையென்ன, காலென்ன ? பள்ளத்துக்கு அருகில்தான் மேடு உருவாகிறது” என்கிறார். அவரின் கடந்தகால துயரம் தரும் சோர்வு படர்ந்து, குழந்தைத்தனமான சிரிப்பு குறையும்போது வரும் உடற்குறை கொண்ட பேத்தி நங்கவல்லி அவரை மீண்டும் மகிழ்ச்சிக்கு கொண்டுவருகிறாள்.
        • “புத்தகத்தை அப்பப்ப மூடி வைச்சுகிட்டு, பொறுமையா மூணாறுல வாங்குன இலைகளை நுணுக்கிபோட்டு தானா சிரிச்சுகிட்டு  மொதலாளி ஒரு டீ போடுறீங்களே…பாத்துருக்கேன். சாய்ங்கால தூத்தல் மாதிரி முகம் குளுந்து நிக்கும்” என கதைசொல்லியிடம் சொல்கிறார் அய்யாவு. கலையும், இலக்கியமும், ரசனையும் தரும் இன்பம் அது. தேனி தமிழ்நாட்டின் அழகிய மாவட்டத்தில் ஒன்று. முழுக்க வணிகத்தில் இருப்பவர்களுக்கு குளிர்ந்த மழைச்சாரலே தீப்பற்றிக்கொண்டதை போல இருக்கிறது. மழையில் தினை காயவைக்கும் களம் குளிர்ந்துவிடக்கூடாது என தவிட்டை பரப்பி, தார்ப்பாய் போட்டு மூடுவதற்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு மழையையும், முகில்களையும், மலையையும் நின்று ரசிப்பதெற்கெல்லாம் நேரமும் இல்லை. அதற்குரிய மனமும் இல்லை. ஆனால் கதைசொல்லி லௌகீக உலகத்தில் வெல்பவர்களை ஒரு மேட்டிமை மனநிலையில் நின்று இளக்காரமாக பார்க்கவில்லை. அவர்களின் லௌகீக உலகில் வெல்லும் திறனை  ஒருவித பயத்துடனும், வியப்புடனுமே பார்க்கிறார். ரசனையும், மகிழ்ச்சியையும் அனுபவியுங்களேன் என ஒருவித ஏக்கத்துடனேதான் சொல்கிறார். 
      • குரு-சீட உறவு: முந்தைய தலைமுறையை வென்றே அடுத்த தலைமுறை வளர்கிறது. ராமவிலாஸ் தன்னுடைய கிட்டங்கிகளை தன்ராஜுக்கு லீஸுக்கு தருவதில் தன்ராஜ் முழுமையாக ராமவிலாஸை வெல்கிறார். ஆனால் தன்ராஜ் அந்த வெற்றியை கொண்டாடவில்லை. பொன் கொண்ட பெருமாளுக்கும் – தன்ராஜுக்குமான உறவு, புகழேந்திக்கும் – தன்ராஜுக்குமான உறவு, அய்யாவு – கதைசொல்லுக்குமான உரையாடல் என இந்த குரு-சீட உறவு விவரிக்கபடுகிறது. 

    கதை எனக்கு மிகப்பிடித்திருந்தது. நன்றி.

  • இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்

    இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்

    [ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.]

    அன்பு நண்பர் விசு,

    என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் இன்ஜினியராகி , ஜப்பானில் வேலை பார்க்க சென்றேன். 12 வருடங்களாகிறது ஜப்பான் வந்து . வெகுநாள் ஜெ வாசகன். 2015 இல் வெண்முரசு வாசித்து கொண்டிருக்கிறேன். 2019 இல் ஜெ ஜப்பான் வந்த போது நடந்த வாசகர் சந்திப்பில் ஜெ வை முதல் முறை சந்தித்தேன். பின்பு 2025 புத்தாண்டு அன்று நித்தியவனத்தில் ஜெ மற்றும் நண்பர்களோடு இரு நாள், பின்பு சென்னை புத்தக திருவிழாவில் மறுமுறை ஜெ யுடன் பேசும் சிறுவாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெ விடம் “இரு கடல் ஒரு நிலம் வாங்கிருக்கேன் ஜெ , விசு உங்களை அமெரிக்கா முழுக்க அழைத்து சென்றது போல, முழு ஜப்பானிற்கும் உங்களை கூட்டி செல்ல வேண்டும் என்பது என் கனவு. அதற்காகவே இந்த நூலை வாங்கினேன். கையொப்பம் போட்டு தாங்க” என்றேன். ஜெ மகிழ்ச்சியுடன் கையொப்பமிட்டு தந்தார். ஜப்பானை பற்றி யோசிக்கிறேன் என்றார். 

    இந்தியாவில் இருந்து திரும்ப வந்த பிறகு வேலையில் மும்முரமாகி படிக்க நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். ஜூன் மாதம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு கான்பரன்ஸ் இருப்பதால், அமெரிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே எனது முதல் அமெரிக்க பயணம். டோக்கியோவில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ், அங்கிருந்து பிலடெல்பியா என விமான சீட்டு பதிவு செய்தேன். பதிவு செய்தபின் முதல் வேலையாக உங்கள் நூலை எடுத்து பெட்டிக்குள் வைத்தேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் இல் இருந்து பிலடெல்பியா செல்லும் விமானத்தில் முழு நூலையும் படித்துவிட வேண்டும் என திட்டம். உங்கள் நூலின் வழியாக அமெரிக்காவை அறியப்போகிறேன் என்பது ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது. 

    விமானம் புறப்படும் முன் முன்னுரை மற்றும் படங்களை மட்டும் ஒரு புரட்டு புரட்டினேன். இது போன்ற Travelogue நூல்களுக்கு படங்கள் முக்கியமானவை. படித்து நாம் அடைந்த கற்பனையை படங்களுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். முதல் பார்வையில் ஈர்த்தது இரண்டு படங்கள். ஒன்று Grand canyon. அப்படத்தில் தெரியும் சிவப்பும், வெள்ளையுமான குடைவு செய்யப்பட்டது போலான மலைகள் ஒரு பேரியற்கைச் சித்திரம். இயற்கையின் பெருவெளி தரிசனம். இவ்வளவும் கொலராடோ ஆறு அரித்து உருவானவை என படித்தபோது, அந்த ஆற்றின் வலிமை முன் மிக சிறிதாக உணர்ந்தேன் . மற்றோரு படம் கூகிள் மேப்பில் வரையப்பட்ட உங்கள் கிராஸ் கண்டரி பயணத்தின் வரை படம். அமெரிக்காவின் ஊடாக ஒரு கோடு. இந்த வரை படம் ஒன்றே பலதரப்பட்ட நிலக்காட்சிகளையும், பலதரப்பட்ட மக்களையும், கலாச்சாரங்களையும், மொழிகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. 

    அருணா அக்காவின்(என்னையும் இப்படி விளிக்க அனுமதிக்க வேணும்) முன்னுரை செறிவானது. ஆரம்பத்தில் அவர் சொல்லும் இமயமலை பொங்கல் வாழ்த்து அட்டை பற்றிய அனுபவமே இந்நூலுக்கு ஒரு முன்னோட்டத்தை கொடுத்து விடுகிறது. எங்கள் வீட்டில் சிங்கப்பூரின் சின்னமாகிய merlion சிம்மம் தண்ணீரை பயீச்சி அடிக்கும் படத்துடன் ஒரு காலண்டர் இருந்தது. சிறு வயதில் அக்காட்சி ஒரு அறை கூவலை போன்று தோன்றும். 2022 இல் சிங்கப்பூர் சென்று பார்த்த போது நினைத்துக்கொண்டேன் , Merlion நிஜமாகவே இவ்வுலகத்துக்கு சிங்கப்பூரின் அறை கூவல் தான் என. வெறும் ஐம்பது சொச்ச கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு நாடு, உலக வர்த்தகத்தின் ஒரு மையமாக வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது . இமயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் கண்முன்னே பல அடுக்காக விரிந்த போது கண்ணீர்வந்ததாக எழுதி இருந்தார். எனக்கும் ஜப்பானின் மவுண்ட் ஃபுஜியில் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. மலைகள் தங்கள் அசைவிண்மையால் நம்மில் ஒரு பெரும் நிலைக்குலைவை நிகழ்த்தி விடுகின்றன 

    பூண் முகாம் போன்ற ஒன்றை ஜெ அமெரிக்காவில் தொடங்குவது என்பது அதிதேவையான செயல். இந்தியர்கள் நாம் நன்கு படித்து கார்ப்பரே ட் உலகத்திற்கு ஏற்றவாறு வேலை செய்ய பழகி கொண்டோம். ஆனால் இந்த ஓட்டத்தின் பயன் என்ன என்ற கேள்வி நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது . அதற்கு விடையளிக்கும் தத்துவ பின்புலம் நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ கிடையாது. சரி இவ்வளவு எல்லாம் யோசிக்காமல் செயல்தான் யோகமென எண்ணி, புதுசாக ஒரு கலையோ, தத்துவமோ, விளையாட்டோ கற்று கொண்டு எழலாம் என நினைத்தால், சுற்றி உள்ள மொண்ணை கூட்டம் அதற்கும் பெருங்கூச்சல் போடும். அவ்வளவு கேலியும் கிண்டலும் உண்டு. நாங்க சினிமா,சீரியல், அரசியல்னு பேசிட்டு இருப்பபோம், நீ மட்டும் எதோ தீவிரமா சுத்திட்டு இருக்கியே என்று சீண்டுவார்கள். அதை சமாளிப்பதற்கே அபாரமான மனவலிமை தேவைப்படும். இவற்றை சமாளிக்க ஆரம்பித்ததே ஜெ வின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பிறகுதான். ஜப்பான் போன்ற நாடுகளில் புதிதாக ஒன்றை கற்று கொள்ள அவர்களுக்கான சமூக தடைகள் மிக குறைவு . குறைந்தபட்சம் யாரும் உங்களை கேலி செய்ய துணிவதில்லை . என்னுடன் வேலை செய்யும் நண்பர் தன் 60வது வயதில் தான் Scuba Diving ஆரம்பித்தார். 40 வயதிற்கு மேல் பேட்மிண்டன் ஆரம்பித்த பல நண்பர்களை அறிவேன். இந்திய சமயல்களை பற்றி ஜப்பானிய சமுகதிற்கு அறிமுகம் செய்யும் எழுத்தாளர், கேன்சர் நோய் இருந்தும் Badminton விளையாடும் 60 வயதுக்காரர் என செயலே யோகமென இந்த சமூகம் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கிறது . அந்த வகையில் புலம்பெயர் நாடுகளில் ஜெ இது போன்ற ஒரு அறிவியக்க செயலை நடத்தி வருவது நமக்கு செயல் குறித்த விழிப்புணர்வை தரும். அரசியல், சினிமா என மேலோட்டமாக இயங்காமல் செய்யும் செயல்களின் ஆழத்தை நோக்கி நம்மை செலுத்தும். பூண் முகாமிற்க்கு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மக்கள் பயணித்து வந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

    கிராஸ் கண்டரி பயணம் என்ற சொல்லே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜப்பானில் இது போன்ற நிறைய பயணங்கள் செய்து இருக்கிறேன். கிழக்கு எல்லையான டோக்கியோவில் இருந்து மேற்கு எல்லையான கணசவா வரை ஒரு பயணம் மேற்கொண்டேன். மொத்த பயண தூரமே ஆயிரம் கிமீதான் வரும். இதே போன்று கியுஷு மாகாணத்தை ஒரு சுற்று வருவது , ஹொக்கைடோவின் தெற்க்கு பகுதியை சுற்றி வருவது போன்ற பயணங்கள் சென்று இருக்கிறேன். அனைத்துமே ஆயிரம் கிமீக்குள் தான். ஆனால் நீங்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கே ஆயிரம் கிமீபயணம் செய்ய வேண்டுமென எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியம் அளித்தது. ஒரு நாளில் ஆயிரம் கிமீபயணிக்க முடியுமென்றால் அந்நாட்டின் சாலைகள் எவ்வளவு பெரியதாக, நேர்த்தியாக செய்யபட்டிருக்கவேண்டும், கார்கள் இந்த நெடிய பயனங்களுக்காகவே வடிவமைக்க பட்டிருக்கவேண்டும். கற்பனை செய்து பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது. விமானத்தில் நூலை படித்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஜப்பானை விட நூறு மடங்கு பெரியதாக இருக்கும் என கற்பனை செய்து கொண்டேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமானநிலயத்தில் இறங்கியதும் அதை உறுதி செய்து கொண்டேன். பன்னாட்டு முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்கு நடக்கவே 45 நிமிடம் எடுத்தது. காபி கோப்பை ஜப்பானில் குடிப்பதை விட இரு மடங்கு பெரியது . ஒரு சாண்ட்விச்சை முழுசா கடிக்க ஒரு வாய் போதாது. நூலை படித்து முடித்த போது அமெரிக்காவின் அகண்ட தன்மை ஒரு நினைவாகவே தங்கிப்போனது. 

    மைக்ரோசாப்ட் கதை, வேகாஸ், நெடுஞ்சாலைகளின் விளம்பர பலகைகள், கான்யன்களின் வரலாற்று செய்திகள், கலிஃபோர்னியாவின் கோல்ட் ரஷ் என பொதுவான அமெரிக்க செய்திகளை உங்கள் சுவாரசியமான அவதானிப்புகள் மூலமாக கூர்மை படுத்தியிருக்கிறீர்கள். ஒரு இடம் செல்லும்போது அந்த இடத்தின் வரலாற்றை ஒன்று தொட்டு ஒன்றென விரித்து கொள்வது நுண்ணுணர்வு உள்ள எல்லோரும் செய்வது. ஒரு காட்சியின் தொடர்புடைய வரலாற்றை நீங்கள் எப்படி யோசிப்பீர்களோ அதே போலவே எழுத்திலும் வந்து இருப்பதாக எனக்கு பட்டது. 

    மெம்பிஸ் நகரத்துக்கு வந்த போது கறுப்பின மக்களின் சொந்த இசையான ஜாஸ் மற்றும் ராக் &ரோல் பற்றிய வரலாறும் கறுப்பின மக்களின் இசையை உலகறிய செய்ய எப்படி ஒரு வெள்ளையரின் துணை தேவைபட்டது என்பதும் சுவாரிசயமான தகவல்கள். பிலடெல்பியாவில் இருக்கும் போது அமெரிக்க சுதந்திர மியூசியம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஐரோப்பிய குடியேறிகளும், அடிமை படுத்தப்பட்ட கறுப்பின மக்களும் , இந்தியன்ஸ் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி மக்களும் எவ்வாறு பிரிட்டிஷை எதிர்த்து போரிட்டு வென்றனர் என்பதை மிக உணர்வுபூர்வமாக விளக்கும் மியூசியம் அது. இந்நூலில் ராக் & ரோல் பற்றி படித்து விட்டு அந்த மியூசியம் சென்ற போது ஒன்று தோணியது. அடிமைகளாக இருந்தும் கறுப்பின மக்கள் தங்கள் பண்பாடு, இசை, உணவு, அரசியல் பிரதிநிதித்துவம் என சிலவற்றை போராடி தக்க வைத்து கொண்டுள்ளனர் எனப்பட்டது. ஆனால் பூர்வகுடிகளான இந்தியன்ஸின் நிலை அங்கு இப்பொழுது என்னவாக உள்ளது. அவர்களது இசையோ ,உணவு பண்பாடோ ஆவண படுத்த பட்டுள்ளதா ? 1800களில் Tear of trails என பூர்வகுடி மக்கள் கொத்து கொத்தாக மிஸிஸிபி ஆற்றின் மேற்க்கை நோக்கி இடம் பெயரவைக்க பட்டிருக்கின்றனர். Mt Rushmore எனப்படும் பூர்வகுடிகளின் புனிதமான பிளாக்ஹில்சை குடைந்து வெள்ளையின தலைவர்களின் முகங்களை செதுக்கி அதை ஒரு பிரபல சுற்றுலா தலமாக மாற்றி விட்டனர். நிறைய Cow Boy திரைப்படங்களில் பூர்வ குடிகளே வில்லன்களாக சித்தரிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். இவையெல்லாம் நான் வெறும் படித்து அறிந்தவை மட்டுமே . நீங்கள் பார்த்த வரையில் அங்குள்ள பூர்வகுடிகள் வாழ்வு எப்படி உள்ளது. அவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவம் உண்டா ? குறைந்தபட்சம் ஒரு இசையோ, உணவோ பொது சமூகத்தின் புழக்கத்திற்கு வந்துள்ளதா ? 

    ஜப்பானிலும் இது போன்ற பொது வெளிக்கு வராமலே அழிந்துபோன பண்பாடுகள் உண்டு. வடக்கு தீவான ஹொக்கைடோவின் அய்னு இனமக்களை ஒற்றை ஜப்பானிய அடையாளத்தின் கீழ் கொண்டு வரும் பொருட்டு, தங்கள் மொழியை கைவிட்டு ஜப்பானிய மொழியை கட்டாயமாக படிக்கும்படி பணிக்கப்பட்டார்கள். அது போலவே தெற்கு தீவான ஒகினாவாவின் ரியூகியு இன மக்கள். அய்னுக்களுக்காவது 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மியூசியம் கட்டப்பட்டது, ரியூகியுக்களுக்கு அதுகூட கிடையாது.

    ஒவ்வொரு நகரத்திற்கு செல்லும் போதும் அந்நகரத்தின் நிலக்காட்சிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளது. நூலை படித்து முடித்த பின் அமெரிக்க நிலங்களின் நிறங்களை இப்படி கற்பனை செய்து கொண்டேன். நாஷ்வில்லில் இருக்கும் பச்சை, ஆஸ்டின் வரை சென்று அதன் பின் வைல்ட் வெஸ்டின் பாலை நிலங்கள் ஒருவித மஞ்சளாக மாறி, கன்யான்களின் நிலங்களில் ஆரஞ்சாக கண் நிறைத்து , வெஸ்ட் கரையோர மலைகளின் பிரவுனாக நிலை கொள்கிறது . வண்ணக்கடலில் இளநாகன் இந்திய நகரங்களில் வழியாக பயணம் செய்வதும் அவன் கண் வழியாக இந்திய நிலக்காட்சிகள் மாறுவதும் எழுதப்பட்டிருக்கும். நான் திரும்ப திரும்ப படிக்கும் வெண்முரசு அத்தியாயங்கள் அவை. ஜப்பானில் இது போன்ற நிலங்களின் நிறங்கள் மாறுவது அரிது. எங்கு சென்றாலும் பச்சை போர்த்திய மலைகள். மலைகளின் இடை வெளியில் உள்ள சமவெளிகளில் டோக்யோ, ஒசாகா, நகயோ போன்ற பெருநகரங்கள். பிலடெல்பியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப வரும் விமானப்பயணம் பகல் நேர பயணம் என்பதால் விமானத்தின் ஜன்னல் வழியாக நிலங்களின் நிறங்கள் மாறுவதை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன். புது அனுபவமாக இருந்தது. 

    மான்யுமண்ட் வேலியின் புகைப்படமே நான் கற்பனை செய்து வைத்திருந்த ஊரக அமெரிக்கா. பிரேக்கிங் பேட் போன்ற வெப் சீரிஸ்கள் வழியாக அமெரிக்காவை தெரிந்து கொண்டதால் இருக்கலாம். ஆள் அரவமற்ற அகண்ட சாலைகள், தூரத்தில் பெருமலைகள், எத்திசையில் காணினும் விரிவு. இம்மலைகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பற்றிய உங்கள் வர்ணனைகள் அந்த காட்சிகளுக்கே எனை கொண்டு சென்றது. மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது கிராண்ட் கன்யான்களை பற்றிய அத்தியாயங்களுக்காகவே. திருஇடஞ்சுழி சரியான ஆரம்பம். ஸ்லாட் கன்யான்கள் விண்டோஸ் வால்பேப்பர்களாக புகழ் பெற்றவை. என்றாவது நேரில் சென்று பார்க்கும் அனுபவம் கிடைக்குமென நம்புகிறேன். கன்யான்களை பற்றி எழுதும் போது “பெரிய என்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குள் விரிவடையும் அளவிற்கு மிகப்பெரிதாக இருக்கிறது” என்று எழுதி இருந்தீர்கள். அந்த அனுபவத்தை ஒரு துளி சொல்லாக மாற்றியது போல இருந்தது. கிராண்ட் கன்யான்களை பிளம் கேக்குடன் ஒப்பிடுவது, சுடாமல் குளிர்ந்து நிற்பது, ஜூனிப்பர் மரங்களின் வயதை கன்யான்களின் வயதுடன் ஒப்பிட்டது என கூர்மையான அவதானிப்புகள். இருளில் மலைகளுக்கு அருகில் பயணிக்கும் போது உள்ள அழுத்த உணர்வு பற்றி எழுதியிருக்கிறீர்கள் , எனக்கும் அதே போல ஒரு அனுபவம் உண்டு. இருளில் ஏதோவொன்று கூடவே பயணிப்பது போல இருந்தது, காலையில் எழுந்து பார்த்தபோதே தெரிந்தது மிக அருகில் மலைகளென. இருளில் மலைகளின் நிழல்கள் பெருகிவிடும் போல. 

    இந்நூலில் மிக அதிகமான எழுதப்பட்ட சொல் சாண்ட்விச் ஆகவே இருக்குமென நினைக்கிறேன். நான் சென்ற போதும் அமேரிக்காவில் எங்கு காணினும் சாண்ட்விச்தான். விதவிதமான வகைகள். பிலடெல்பியாவில் பிரசித்தம் என சொல்லப்பட்ட Philly Cheese Steak சுவைத்து பார்க்கலாம் என வாங்கினேன். அந்த பிரட் எனது முழங்கை அளவானது . கிட்டத்தட்ட அரை கிலோ கறி இருந்திருக்கும் . இரு வேளைக்கு வைத்து சாப்பிட வேண்டியதாகியது. அமெரிக்கர்களின் சாண்ட்விச் மோகத்திற்கு ஏதோவொரு வரலாறு இருக்க வேண்டும். அவசர உலகில் செய்வதற்கு எளிமையாக இருப்பதாக இருக்கலாம். ஆனால் அதை விட ஆழமான வரலாறு ஒன்று இருந்திருக்கவேண்டும். ஐரோப்பிய குடியேறிகளும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் உணவு பண்பாடுகள் அதிக முரண்கள் இல்லாமல் சந்திக்கும் இடம் சாண்ட்விச் ஆக இருந்திருக்கலாம். 

    கலிபோர்னியாவின் கோல்டு ரஷை உங்கள் வாழ்வுடன் இணைத்த இடம் அருமை . “கணினி தந்த திரு”, சத்தியமான வார்த்தை . நானும் உங்களை போலவே, எலிவளை வாழ்வில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்தவன். தொழில்நுட்ப கல்லூரிகளும், கணினி துறையும் இப்படி பல பேரை வாழ வைத்து இருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம். ஆனால் ஜெ சொல்வது போல பண்பாட்டு அறிவோ, கலையறிவோ சிறிதும் அற்று ஒரு நுகர்வு அடிமை குழுமமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம் தலைமுறையில் இந்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகி அடுத்த தலைமுறையாவது வாசிப்பு, கலையறிவு என சிறந்து விளங்கும் என நம்புவோம். 

    ஜெ போன்ற ஒரு அறிவாளுமையுடன் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது செறிவான அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். அவருடன் பயனிப்பவர்கள் அர்த்தமுள்ள ஒரு செயலை நோக்கி செலுத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிவியக்கமாக வளர்ந்து இருக்கிறார்கள். உங்கள் அலுவலக நண்பர் சொல்வது போல “ஓ … ஃபார் ஷியூர் கல்டிஷ் ”, ஆம் அறிவு தேடலுக்கான கல்ட் இது. 

    ஒரு நூல் வாசித்து முடித்த பின், பல வித உணர்வுகள் எழும். இந்நூல் எனக்குள் ஒரு அமெரிக்க சித்திரத்தை வரைவதற்கு மிக உதவியாக இருந்தது. நீங்கள் சொல்லும் ஒரு வரலாற்று செய்தி இன்னொரு வரலாற்றை பத்தி என்னை யோசிக்க வைத்தது. உதாரணமாக கறுப்பின இசையில் இருந்து பூர்வகுடிகளின் வாழ்வு வரை பயணிக்க முடிந்தது. கோல்டு ரஷ் படித்தபோது, லாஸ் ஏஞ்செல்ஸ் எவ்வாறு அமெரிக்க சினிமாவின் தலைநகரமாகியது என தேட ஆரம்பித்தேன். ஒட்டுமொத்தமாக அங்கங்கு வந்து செல்லும் நகைச்சுவை சிரிப்பு வரவைப்பைவையாகவும், சமகாலத்தவையாகவும் தோன்றியது. உங்களது சமூக அவதானிப்பும், மெல்லிய நகைச்சுவை கலந்த எழுத்தும் இன்னும் நிறைய படைப்புகளில் வருமென ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். 

    நீங்கள் அவசியம் ஜப்பான் வர வேண்டும். நுண்ணுணர்வு உள்ளவர்களை கொண்டாடும் நாடு இது. ஜப்பானிய பயணக்கட்டுரையான “கீற்றோவியம்” நூலில் ஜெ ஜப்பானை பற்றி “நுண்மையில் விரிவு காணும் நாடு” என்று எழுதியிருப்பார். நூறு சதவிகிதம் பொருத்தமான சொல். அமெரிக்கா விரிவின் நாடு, சாலைகள், வியாபாரம் மட்டுமல்ல மக்கள் யோசிக்கும் விதம்கூட பெரும் விரிவு கொண்டவை. ஜப்பான் நுணுக்கங்களில் இருந்து விரிவை நோக்கி செல்லும் நாடு. ஓரிகாமி போல நுணுக்கமாக, கைக்கு அடக்கமாக ஒன்றை செய்து, தேவை வரும்போது மடிப்பு தெரியாமல் விரித்து எடுக்கும் கலை தெரிந்தவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் சந்திப்போம், இன்னும் உரையாடுவோம்.

    ##

    அன்புள்ள நண்பர் முத்து,

    உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.  நீங்களும் ஜெ.வின் தீவிர வாசகர், வெண்முரசு வாசித்தவர், வெள்ளிமலைக்கு சென்றிருக்கிறீர்கள், ஜப்பானில் ஜெ.வுடன் ஒரு பெரிய பயண திட்டம், மென்பொருள் துறை என எல்லாவற்றிலும் ஒரு இணை மனதை கண்டு கொண்ட ஒரு பரவசம்.  

    உங்கள் தனிப்பட்ட ஜப்பான் பயணங்களை பற்றி அறிவதற்கும் மேலும் ஆர்வமாக இருக்கிறேன். மௌண்ட் ப்யூஜியில் உங்ககளுடைய அனுபவம், நீங்கள் ஜப்பானில் பார்த்த இடங்கள், ஜப்பானிய பண்பாடு, அய்னு, ரீயூகியு போன்ற பழங்குடிகள் என வாய்ப்பிருந்தால் விரிவாக (அல்லது கட்டுரைத்தொடராக எழுதவும்.)  நீங்கள் அமெரிக்க சாலைகளை பற்றி சொல்வதைப் போலவே எனக்கு ஜப்பானின் அதிவிரைவு ரயில்கள் மேல் பெரிய காதல் உண்டு.  

    இன்னும் சில வருடங்களில் கண்டிப்பாக ஜப்பான் வரும் திட்டம் இருக்கிறது.  நீங்களும் சான் பிரான்சிஸ்கோ வந்தால் தெரியப்படுத்தவும், கண்டிப்பாக நேரிலும் சந்திப்போம்.

    அன்புடன்,

    விசு

    இரு கடல் ஒரு நிலம் புத்தகம் வாங்க : https://vishnupurampublications.com/index.php?route=product/product&product_id=445

    கிண்டில் பதிப்பு வாங்க: https://a.co/d/00m5cpHa

  • VLC Bay Area – Feb 2026 Monthly Meet

    VLC Bay Area – Feb 2026 Monthly Meet

    https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம்.

    மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட்

    சிறுகதைகள் குறித்த என் வாசிப்பு:

    சிறுகதை : வைரம் – ம.நவீன்

    குமாரசாமியும் லட்சுமணனும் வகுப்பு தோழர்கள். குமாரசாமி பணக்காரன், நன்றாக படிக்கக்கூடியவன். ரப்பர் தோட்டத்தில் குமாரசாமியின் அப்பா பெரிய நிலம் வைத்திருந்தவர். லட்சுணண் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்தவரின் மகன். பள்ளி நாட்களில் லட்சுமணனை கோலிகுண்டு விளையாட அழைத்து, இருட்டில் ஒளிரும் அந்த குண்டின் மீது பொறாமைப்பட்டு, அந்த கோலிகுண்டு வைரமாகும் என ஒரு மரத்தடியில் புதைக்க சொல்கிறான் குமாரசாமி. ஐம்பது வருடங்கள் கழித்து, தன் மகன் திருமணத்திற்காக குமாரசாமிக்கு பத்திரிக்கை வைக்க வருகிறார் லட்சுமணன். லட்சுமணண் சொந்தமாக தையற்கடை வைத்திருக்கிறார். குமாரசாமி வக்கீலாகி, பெரிய பணக்கரனாக இருக்கிறார். பென்ஸ் கார் வைத்திருக்கிறார். லட்சுமணனை சீண்டுவதற்காக அந்த குண்டை தோண்டிப்பார்க்க விரும்புகிறார். லட்சுமணன் தோண்டும்போது வைரம் போல ஏதோ மின்னுகிறது. குண்டு வைரமாயிருப்பதை தாங்கமுடியாமல் அதன் மீது மண் அள்ளிப்போட்டு மூடுகிறார் குமாரசாமி.

    இந்த கதையில் அந்த வைரம் என்பது என்ன ? என் வாசிப்பில் அது லட்சுமணனின் வாழ்க்கை என்று தோன்றுகிறது. தையற்கலைஞராக எளிய வாழ்க்கையாக இருந்தாலும், அது சுதந்திரமான வாழ்க்கை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார். அந்த சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் குமாரசாமியால் தாளமுடியவில்லை என்று படுகிறது.

    சிறுகதை: அறைக்குள் புகுந்த தனிமை: சந்திரா தங்கராஜ்

    தனிமையிலும், வெறுமையிலும் இருக்கும் ஒரு பெண் தன் தோழியை சந்திக்க செல்கிறாள். தோழியும் தனிமையில்தான் இருக்கிறாள். இருவரும் கடற்கரைக்கு செல்கிறார்கள். ஆழமான விஷயத்தை பேசாமல் வேலை, சினிமா, இலக்கியம், வாழ்வின் இருப்பு என ஏதேதோ மேலோட்டமாக பேசிவிட்டு பிரிகிறார்கள். அவள் தன்னுடைய இருசக்கர வண்டியை எடுக்க வரும்போது வயதில் இளைய ஒரு “ரோமியோ”வை பார்க்கிறாள். ஒரு டீ கடையில் அவளை பின் தொடர்ந்து வந்து போலியாக அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அவன் போலித்தனம் அவளை எரிச்சலடைய வைக்கிறது. கல்லூரியில் படிப்பதாக சொல்கிறாள். சிறிது நேரத்திற்குபின் அவனை சீண்டும்விதமாக, தான் மாணவி இல்லை, “பிராஸ்டியூசன்” செய்கிறேன் என்கிறாள். அவன் தோனி மாறுகிறது. “நீங்கள்” என அதுவரை அழைத்தவன், “நீ” என அவளை அவமதிக்கும் நோக்கோடு “எவ்வளவு?” என்கிறான். அவளும் “இரண்டாயிரம் ரூபாய்” என்கிறாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்து, ஏமாற்றி ஒரு அறையில் பூட்டி வைக்கிறாள். அவன் இரவு முழுதும் அழுது, மிரண்டு, கதறி, காலையில் அரண்டு ஓடிவிடுகிறான். அவள் அறையில் தனிமையில் இருக்கிறாள்.

    சந்திரா தங்கராஜ் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை. எனக்கு பிடித்திருந்தது. “அவன்”, “அவள்” “தோழி” என யாருக்கும் பெயர் இல்லாத, வாழ்வின் இருப்பை, அதன் வெறுமையை ஆராயும் நவீனத்துவ பாணியிலான கதைகள் என்னுடைய விருப்பமான கதைகள் இல்லை. கதையின் முதல் சில பத்திகள் படித்தபோது, இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதை என நினைத்தேன். ஆனால் அந்த ஆண் வந்தவுடன் கதை விறுவிறுப்படைகிறது. “காதல்” என நாம் பொதுவாக சொல்லும் ஆண்-பெண் கற்பனாவாத லட்சிய உறவின் நேர் தலைகீழாக்கம் இந்த கதை. காமத்திற்காக அவன் ஆடும் நாடகம், அவனுடைய நாடகத்தை கலைப்பதற்காக அவள் சொல்லும் பொய், அந்த பொய் உருவாக்கும் சிறுமை உருவாக்கும் சிறுமையும் கசப்பும், அந்த பொய்யை நீட்டிப்பதில் உருவாகும் அபாயம், கடைசியில் வேட்டைக்காரன் வேட்டையாடப்படுகிறான். ஏன் அந்த பெண்களுக்குள் ஆழமான எதையும் பேசமுடியவில்லை ? அறைக்குள் புகுந்த தனிமை எது ? வெறுப்பும், கசப்பும், தனிமையும் உருவாகும் புள்ளி எது ? என நிறைய யோசிக்க வைக்கும் ஆற்புதமான கதை.

    அம்புப் படுக்கை : சுனில் கிருஷ்ணன்

    பர்மாவில் இருந்து பல்வேறு ஆபாயங்களில் மயிரிழையில் தப்பி வந்த ஆனாரூனா செட்டியார் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவர் தப்பி வந்ததாக சொல்லும் கதைகள் பெரும்பாலும் அவரே சொல்லும் புளுகுகள். செட்டியாரின் மரணத்தை எதிர்பார்த்து சுற்றமும் நட்பும் “சீக்கிரம் முடிஞ்சா வேறு வேலைய பார்ப்போம்” என்ற பாவனையில் காத்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துக்கல்லூரியில் படிக்கும் சுதர்ஷனை ஆனாரூனாவின் நாடி பார்க்க அழைத்து வருகிறார்கள். சுதர்ஷனின் தாத்தா ஆயுர்வேத வைத்தியர். ஆனாரூனாவின் புளுகுகளை ரசித்துக்கேட்டவர். நாடி பார்த்து யார் எப்போது மரணிப்பார்கள் என சரியாக கணித்த வைத்தியர் தாத்தா, முதுகுத்தண்டுவட டி.பி. வந்து அம்புப்படுக்கையில் படுத்தைப்போல கொடுரமான வலியில் இறக்கிறார். நாடி பார்ப்பது, ஆயுர்வேதமே கப்சா என நினைக்கும் பேரன் ஆனாரூனாவின் நாடியை பார்க்கிறார். நாடி பார்த்து என்ன சொன்னார் என்பதுதான் கதை.

    சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” தொகுப்பில் இருக்கும் தலைப்பு கதை. ஆயுர்வேதத்தை குடும்ப பாரம்பரியமாக கொண்ட ஒருவன், ஆனால் ஆயுர்வேதம் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பவன் அடையும் அறிதல்தான் கதை. மரணத்தருவாயில் இருக்கும் நோயாளியிடம் என்ன சொல்ல வேண்டும் ? நோயாளி நம்ப விரும்பும் கடைசி ஆசையா ? அல்லது “உண்மையா” ? ஆயுர்வேத நாடி வர்ணணைகள் பிரமாதமாக இருந்தது.

    சொல்ல முடிந்தது: சு.வேணுகோபால்

    ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரகுராம் தன் அம்மா வரதம்மாளை வேற்றாளான தர்மராஜுடன் உறவில் இருக்கும்போது பார்த்துவிடுகிறான். அவள் தலைமுடியை பிடித்து இழுத்து, அடித்து ஊர் முன்பே அவமானப்படுத்துகிறான். தர்மராஜை கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சந்தர்ப்பம் அமையவில்லை. ரகுராம் ஊரை விட்டு ஓடி, எச்சில் தட்டு கழுவி, திரும்பிவந்து, மில் வேலைக்கு போகிறான். தர்மராஜ் வயதாகி இறக்கிறார். “ஏம்பா, அந்த எழவு வீட்டில் போய் ஒரு பாட்டம் அழுதிட்டு வந்திரட்டுமா?” என அவன் அம்மா ரகுராமிடம் கேட்க, அவன் திடுக்கிட்டு சரி என்கிறான்.

    பதின்பருவத்தில் இருக்கும் ஒரு சிறுவன் வயதானபின் உறவுகளை புரிந்து கொள்ளும் உணர்ச்சிகரமான கதை. தனியாக வருவான் என கறிக்குழம்பு வைத்து காத்திருந்த ரெஜினா அக்காள், சீக்கு வந்து சாவும் பெரியம்மாவின் மகள், உறவு மீறல்கள் வாழ்வின் ஒரு பகுதி என எடுத்துக்கொள்ளும் கண்ணம்மா கிழவி என பல பெண்களை பார்த்து ரகுராமன் அடையும் மாற்றம்தான் கதை.