Tag: புத்தக விமர்சனம்

  • வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்

    [எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.]

    ##

    Buy Hardcopy

    Buy Ebook

    ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள் படிப்பதில்லை. ’இங்கே போனோம், இவரிடம் சாப்பிட்டோம். இன்று இதைப் பார்த்தோம். இன்னது சாப்பிட்டோம்’ என்று போய்க்கொண்டே இருக்கும். வாசிக்கத் தொடங்கும்போதே அலுப்பைக் கொடுக்கும். ஏ.கே செட்டியாரின் பயண நூல்கள் அத்தனையும் படித்திருக்கிறேன். அவை ஆயிரம் பக்கங்களுக்கு மேலே வரும் சுவையான எழுத்து; சுவாரஸ்யமான தகவல்கள். அப்படி ஒருவரும் இப்போவெல்லாம் எழுதுவதில்லை.

    புத்தகத்தை அசட்டையாகப் புரட்டிப் பார்த்தேன். அமர்ந்த இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே அமர்வில் படித்து முடித்த புத்தகம். என்ன எழுத்து, என்ன நடை, என்ன வாக்கிய அமைப்பு, எத்தனை விதவிதமான சம்பவங்கள். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

    அமெரிக்காவின் கிழக்கு கிரையிலிருந்து மேற்கு கடற்கரை வரைக்கும் பயணம். அதாவது அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரம் வரை. மே மாதம் 2022ல் தொடங்கி 15 நாட்கள் பயணம், 13 மாகாணங்கள், 4000 க்கும் அதிகமான மைல்கள். அட்டகாசமான இந்தப் பயணத்தை ஆறு பேர் ஒரு காரில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

    முதன் முதலில் கிழக்கில் இருந்து நிலப்பாதை வழியாக மேற்கு எல்லைக்கு பயணம் செய்தது 1804ல். அதற்கு Lewis and Clark பயணம் என்று பேர். 45 பேர் 12 குதிரைகளுடன் புறப்பட்டார்கள். பாதை இல்லை ஆகையால் பாதைகளை உண்டாக்கித்தான் பயணம் செய்ய வேண்டும். 18 மாதங்களில் அந்தப்  பயணம் வெற்றிகரமான முடிவுக்கு வந்தது.

    200 வருடங்கள் கழித்து இப்போது எத்தனை முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் 4000 மைல்கள் பயணம் இலகுவானது இல்லை. தினம் ஏதாவது எதிர்பாராதது நடக்கும். முன்னர் போயிருக்காத பாதை, பார்த்திராத மனிதர்கள், புதுவிதமான உணவுகள், கால நிலை மாற்றம், நேர வித்தியாசம் என பலவிதமான இடைஞ்சல்கள். எத்தனை நேர்த்தியாக திட்டமிட்டாலும் அடுத்து என்ன நடக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படியான பயணங்களைச் சுவையாக்குவது திட்டத்தில் இல்லாத ஏதோ ஒன்று நடந்து அதைக் குழப்புவது; பயணத்தை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான்.

    ஒரு கட்டத்தில் பயணக் குழுவின் ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. இவர்கள் கார் பிழையான திசையில் ஓடியது. பின்னர் அதைக் கண்டு பிடித்து சரிசெய்தார்கள். நான் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. இரண்டு நண்பர்கள் அமெரிக்காவில் ஒரு மாகாணத்திலிருந்து மற்ற மாகாணத்துக்கு தெற்குப் பக்கமாகப் பயணம் செய்தார்கள். ஒருவர் ஓட்ட, நண்பர் பக்கத்தில் அமர்ந்து வரைபடத்தைப் பார்த்து வழி சொல்லிக்கொண்டே வந்தார். ஓர் இடம் வந்ததும் ‘ஐயோ, இது என்ன? கனடா வந்துவிட்டது’ என்று அலறினார். காரை ஓட்டியவர் நண்பர் பக்கம் பார்த்துவிட்டு ’இடியட், நீ வரைபடத்தை தலைகீழாக அல்லவோ பிடித்திருக்கிறாய்’ என்றார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது.

    கார் விபத்திலே போலீசிடம் மாட்டினாலோ, லைசென்ஸ் காலாவதியாகி பிடிபட்டாலோ அவமானம். ஆனால் வேக வரம்பை தாண்டி ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் அது பெருமையானது. பிற நண்பர்களிடம் சொல்லலாம். அது உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பிரகடனப்படுத்தும். இரண்டு தரம் வேகத்தடையை மீறி ஓட்டி போலீசிடம் பிடிபட்டு தண்டக் கட்டணமும் கட்டவேண்டி வந்தது. இந்தப் பயணத்தில் நேர்ந்த ஒரே வீர சாகச நிகழ்ச்சி இதுதான்.

    புத்தகத்தில் நான் விரும்பும் தகவல்கள் இருந்தன. வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களுக்கு குறைவில்லை. பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் அங்கங்கே காணப்பட்டன. ஆங்கில எழுத்தாளர்கள் பற்றியும், அவர்கள் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் மாறுபட்ட நில அமைப்புகள், நேர வித்தியாசங்கள், கால நிலை மாற்றம் ஆகியவை அரிய தகவல்களாக கிடைத்தன, புத்தகத்தில் அடிக்கோடிட்டு, அடிக்கோடிட்டு புத்தகமே கிழிந்துவிட்டது.

    காரில் பயணம் செய்தவர்கள் ஜெமோ, அருண்மொழி நங்கை, ஸ்ரீராம், ராஜன், ஆசிரியர் விஸ்வநாதன், அவர் மனைவி பிரமோதினி. பயணம் முழுக்க மனைவி குறிப்பெடுக்க அதை புத்தகமாக எழுதியவர் விஸ்வநாதன். இந்த நூலை அவர் எழுதிவிட்டு மனைவியிடம் காட்டியிருக்கிறார். இது என்ன ’வள வள’ என்று ஓர் அன்பான வார்த்தையை சொல்லிவிட்டு முழு நூலையும் அழித்து மறுபடி எழுத வைத்தார். ஒரு முறை அல்ல இரண்டு தரம். அதுதான் பிரமோதினி.

    இந்த நூலுக்கு அருண்மொழி நங்கை முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரு முன்னுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக அது இருக்கிறது. ’பயணத்தில் புற உலகம் விரிகிறது என்பது நம் அக உலகம் விரிகிறது என்பதுதான்’ என்கிறார். ஆசிரியருக்கு பிரத்தியேகமான எழுத்து வடிவமும் மொழிநடையும் வாய்த்திருக்கிறது என்று கூறுகிறார். மிகச் சரியான கணிப்பு.

    பயணக் குழுவில் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இருந்தது பெரும் அதிர்ஷ்டம். பயணம் முழுக்க அவ்வப்போது இசை நுட்பங்கள் பற்றி அவர் பேசினார். மொழி தொடமுடியாத இடங்களை இசை தொடும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. கருப்பர்களின் ரொக் அண்ட் ரோல் இசையை பிரபலமடைய வைக்க எல்விஸ் பிரஸ்லி போன்ற ஒரு வெள்ளைக்கார முகம் தேவைப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

    புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஜெமோ மொழியில் சொல்லியே ஆகவேண்டும். ஒரு விடுதியின் வெளியே ஜெமோ சந்தோஷ் சிவனுடன் நின்றிருந்தார். ’சிவன் கிழிந்த பேண்ட் அணிந்திருந்தார். ஒரு இளம் தம்பதி வந்து சிவனிடம் மொபைலைத் தந்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு சிவன் ஒரு புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் என்பது தெரியாது. சிவன் அந்த மொபைலை வாங்கிப் பார்த்தார். தன் மணிக்கட்டைத் திருப்பி தோலில் எவ்வளவு சூரிய ஒளி விழுகிறது என்று பார்த்தார். போஸ் தரவேண்டாம் சும்மா பேசுங்கள் என்று சொல்லி புகைப்படங்கள் எடுத்து தந்தார். வாங்கி சென்றுவிட்டார்கள். சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்து ‘சார் யார்?’ என்று பரவசத்துடன் கேட்டார்கள். அந்தப் பெண் இதுவரை யாரும் இவ்வளவு அழகாக தன்னை புகைப்படம் எடுத்ததில்லை என்றாள். அந்தப் படம் பின்பு குங்குமத்தில் அட்டைப் படமாக வந்தது. இன்னொரு புகைப்படக் கலைஞர் அழைத்து இது சந்தோஷ் சிவன் எடுத்த படமா என்று விசாரித்திருக்கிறார்.’ கலைஞர்களின் கையொப்பம் அவர்கள் கைவைக்கும் எல்லாவற்றிலும் எப்படியோ தெரிந்துவிடும்.

    ஆசிரியர்  விவரித்த இன்னொரு சம்பவத்தை நான் ஒரு முறையல்ல, பல முறை படித்தேன். மணமுடித்து அமெரிக்கா வந்த புதிதில் இவருடைய மனைவி ஒரு கேள்வி கேட்டார். ‘டெயிலர் ஸ்விஃப்ட் யார்ன்னு தெரியாதா? அமெரிக்கால தான் ஆறு வருஷம் இருந்த?’ இவருக்கு அவமானமாகப் போய்விட்டது. டெயிலர் ஸ்விஃப்ட் உலகின் நம்பர் ஒன் பாடகி. இவர் அமெரிக்காவுக்கு படிக்க வந்த காலத்தில் அமெரிக்கா பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்தது. சாப்பாட்டில் பறந்துவிழும் கரப்பான் பூச்சிகளைத் தள்ளிவைத்து சாப்பிட வேண்டும். வெளியே பெய்த பனி உருகி ஊறி தரையில் உள்ள படுக்கை விரிப்பை  நனைத்துவிடும். சப்பாத்து பிய்ந்து நடக்கும்போது டக் டக் என்று வினோதமான ஒலி எழுப்பும். இப்படியான அவல வாழ்க்கையில் டெயிலர் ஸ்விஃப்டாவது, மயிலர் ஸ்விஃப்டாவது என்று அவருடைய மனம் அங்கலாய்த்தது. இந்த இடத்தை நூலில் படித்தபோது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

    ஆசிரியருடைய எழுத்தில் அருமையான உவமைகள் அடிக்கடி வந்து விழும்.. ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஜெ உடனடியாக சூழலைக் கவனிக்கக் கூடியவர். தீவிரமான உரையாடல்கள் சபையிலே சென்று சேராது என்று தெரிந்தால் உடனே தீவிரத்தை குறைத்துக் கொள்வார். சச்சின் டெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைத்து ஒரு தெரு முனையில் கிரிக்கெட்  ஆடுவதுபோல இருக்கும்.

    வேறு ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘பள்ளியில் ஷூவைக் கழட்டிவிட்டு செல்லும் இன்னொரு இடம் கணினிக்கூடம்.. இருபது கணினிகள் இருக்கும். அப்போது (1995) விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்கூட 20 கணினிகள் இருந்திருக்குமா தெரியாது. கோயில் யானையிடம் ஒரு ரூபா தந்து ஆசி வாங்குவதுபோல அந்த கணினிகளில் LT40, RT90  என தட்டுவோம்.

    இவருடை எழுத்து நடை என்னைக் கவர்ந்தது என்று சொல்லவே தேவையில்லை. நியூ மெக்சிகோ மணல் குன்றுகளை வரை மருள் நெடுமணல் என்று வர்ணிக்கிறார். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த ஆரம்பகாலத்தை விருந்துண்ணும் பெருஞ்செம்மல் வாழ்க்கையை கனவு காணும் இரந்துண்ணும் இள மாணாக்கன் வாழ்க்கை என்று சொல்கிறார். நண்பனின் குறட்டையை ‘நள்ளென யாமம் முழுதும் ஒலித்தது’ என்கிறார். இன்னோர் இடத்தில் ‘கடைசித் துளி ஒளியையும் இருள் விழுங்கியபோது பேஜ் நகருக்குள் நுழைந்து விட்டோம்’ என்று எழுதுகிறார்.

    இவருடைய எழுத்தில் நகைச்சுவை வந்தபடியே இருக்கும். பயணத்தின்போது கண்ணால் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அதை அவருடைய வார்த்தைகளில் சொன்னால்தான் சுவை முழுமையாக வெளிப்படும். ‘அருகில் ஒரு ஆசிய ஜோடி இருந்தார்கள். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அந்தப் பெண் கையடக்க சிறிய கண்ணாடியில் பார்த்து, காற்றில் கலைந்த மேக்கப்பை சரிசெய்துகொண்டாள். நாங்கள் அங்கு அரை மணிநேரம் இருந்திருப்போம். அவர்கள் நகரவே இல்லை. ஷூட்டிங் தொடர்ந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் பெரிய கேமராவெல்லாம் இல்லை. எல்லாமே வெறும் மொபைலில்தான். சமூக வலைத்தள லைக்குகளை அள்ளப்போகும் ஒரு இன்ஸ்டா போட்டோ வரும்வரை அவள் ஓயப் போவதில்லை. அதல பாதாள விளிம்பில் அவள் அமர்ந்திருந்தாள். ‘வாழ்வின் விளிம்பிற்கே சென்றாலும் மேக்கப் போடுவதை விடமாட்டாள்’ என்றார் ஜெ.’

    புத்தகத்திலே ஒரு சுவாரஸ்யமான புதிர் வருகிறது. ‘புதிதாக ஒரு பழம் அறிமுகமாகிறது. அந்தப் பழத்தை சாப்பிட்டால் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆயிரம் வருடங்கள் கழித்து பழத்தை சாப்பிட்ட அனைவரின் சந்ததிகளையும் அந்தப் பழம் அழித்துவிடும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தப் பழத்தை இப்போது சாப்பிடலாமா வேண்டாமா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?’ இதுதான் புதிர். இதற்கு விடை தெரிய வேண்டுமானால் நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.

    இந்த நீண்ட பயணத்தில் ஜெமோவின் தினசரி பணிகளில் ஒரு குறையும் ஏற்படவில்லை. கடிதங்களுக்கு பதில் எழுதினார். கட்டுரைகள் வரைந்தார். காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு திரைக்கதை முன்வரைவுகள் எழுதி அனுப்பினார். எப்படியோ அந்த இடத்து கடவுச்சொல்லை பெற்று ஒரு நாள்கூட தவறாமல் தமிழ் விக்கி பதிவுகளை எழுதி அனுப்பிவிடுவார்.

    அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை நல்ல தேநீர் தயாரிப்பது. ஜெமோ தேநீர் தயாரிப்பதற்கு அவராகவே கண்டுபிடித்த ஒரு செய்முறையை வைத்திருந்தார். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளரின் ரகஸ்யக் கண்டுபிடிப்பு. பாதி பால், பாதி தண்ணீர். இதில் மூன்று தேநீர் பைகளைப் போட்டு இரண்டு நிமிடம் மைக்ரோவேவில் கொதிக்க விடவேண்டும். அவ்வளவுதான், தேநீர் தயார். நானும் மனைவியும் இந்த முறையில் வீட்டில் தேநீர் தயாரித்து அருந்தினோம். மனைவி இரண்டு நாட்களாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    இந்த நூலில் பல இடங்களில் ஆசிரியரின் வாழ்க்கையின் சில கூறுகளையும் படிக்க முடிகிறது. கல்வியின் மேன்மை பற்றிக் கூறும் உருக்கமான பகுதியும் உண்டு. அமெரிக்காவில் அவர் அனுபவித்த கஷ்டமான வாழ்க்கை பற்றி பதிவு செய்கிறார். பளபளப்பான முகங்கள் கொண்ட அமெரிக்க மாணவர்களுடன் இவர் படிக்கிறார். அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை. திடீரென்று வங்கி திவால் ஆனால் என்ன செய்வது என்ற கவலை  மட்டும் கிடையாது. ஏனென்றால் இவர்தான் வங்கிக்கு 20 டொலர் கடனை திருப்பித் தரவேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தங்கப் புதையல் எடுக்கும் கனவு இவருக்கு அடிக்கடி வருகிறது. ஒருநாள் வேலை கிடைக்கிறது. முகத்தில் பளபளப்பு ஏறுகிறது. மூன்று மாதத்தில் வீட்டுக்கு பத்தாயிரம் டொலர் அனுப்பி கல்விக் கடனை முற்றிலுமாக அழிக்கிறார். கல்வியின் அவசியத்தை, மேன்மையை இதனிலும் சிறப்பாக எப்படி சொல்லமுடியும்?

    ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட பயண நூல்கள் எழுதிய ஏ.கே செட்டியார் ’பயண நூல்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம், அவை காலாவதியாகிவிடும்’ என்று சொல்வார்.  அது முற்றிலும் தவறு. வயது கூடக்கூட சுவை அதிகரிக்கும் வைன்போல பயண நூல்களின் சுவாரஸ்யம் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும். அவருடைய நூலிலேயே சான்று உள்ளது. ஏ.கே செட்டியார் கனடாவில் பயணம் செய்த  சமயம் ஒரு சம்பவம் நடந்தது. அவர் விக்டோரியா ஸ்டேசனுக்கு  ரயில் டிக்கட் வாங்கினார். பயணச் சீட்டையும் மீதிப் பணத்தையும் கொடுத்த டிக்கட் கிளார்க் எழுந்து நின்று ‘உங்களுக்கு மிக்க வந்தனம்’ என்றார். ரயில் டிக்கட் வாங்கியதற்கு தனக்கு வந்தனம் இதுவரை யாரும் செலுத்தியதில்லை என்று செட்டியார் வியப்புடன் எழுதுகிறார்.. கனடாவில் வசிக்கும் எனக்கு இந்தச் சம்பவம் இன்றும் அளவில்லாத ஆச்சரியத்தை தந்தது.

    அ.முத்துலிங்கம்

    விசு என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாதன் எழுதிய ‘இரு கடல், ஒரு நிலம்’ பயண நூலை ஐம்பது வருடத்திற்கு பின்னர்  படிக்கும் ஒருவருடைய உணர்வு நிலை எப்படி இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். படிப்பவருக்கு அது எத்தனை ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும், தகவலையும் கடத்தும்.

    ஆசிரியருடைய முதல் புத்தகம் இது. சிலர் ஏணிப்படிகளில் முதல் படி, இரண்டாம் படி என்று ஏறுவதில்லை. ஆரம்பத்திலேயே எட்டி நாலாம் படியில் கால் வைத்து விடுவார்கள். விஸ்வநாதன் அப்படித்தான் செய்திருக்கிறார். ஜெயமோகனின் ’புறப்பாடு’ நாவலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது விரைவில் வெளிவர இருக்கிறது. இப்பொழுது இவருடைய பயண நூலும் வெளிவந்துவிட்டது. இன்னும் பல நூல்களை ஆசிரியரிடம் எதிர்பார்க்கலாம். அவருக்கு என் வாழ்த்துகள்.

    அ.முத்துலிங்கம்

    ——————

    அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் ஜெ தளத்தில் வெளியான கடந்த இரு நாட்களாக புத்தகம் அமேசான் தளத்தில் பயண கட்டுரைகள் பிரிவில் மீண்டும் “பெஸ்ட் செல்லர்” ஆகியுள்ளது 🙂

    Buy Hardcopy

    Buy Ebook

  • நீர்ப்பறவைகளின் தியானம்

    08/06/2022 அன்று விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) ஒருங்கிணைத்த க.நா.சு உரையாடல் அரங்கில், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் “நீர்ப்பறவைகளின் தியானம்” சிறுகதை தொகுப்பை முன்வைத்து ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.

  • கொற்றவை நாவல் – ஒரு பார்வை

    https://kortavaidiscussions.blogspot.com/2014/07/blog-post_25.html?m=1

    சிலிக்கான் ஷெல்ஃப் தளத்தில் May 2014இல் எழுதியது.

    கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

    2014 ஆம் ஆண்டிற்கு முன் கொற்றவை நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவாகவே இணையத்தில் இருந்தன. தீவிரமான வாசிப்புகள் நிகழவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அவை பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். இந்த கட்டுரையை எழுதி எழுத்தாளர் ஜெ.விற்கு அனுப்பியபோது, அவர் அதுவரை (2014 வரை) வந்த வாசகர் கடிதங்களில் இது மிகச்சிறந்தது என்று பதில் எழுதியிருந்தார். கடந்த ஏழு வருடங்களில் என் பார்வையில் மேலும் சிறந்த வாசகர் கடிதங்கள் வந்துள்ளன. ஒருவகையில் வாசகர்களில் அடுத்தடுத்த தலைமுறைகள் முந்தைய தலைமுறையைவிட மேலும் சிறப்பாகவே வாசிக்கிறார்கள்.

    ———

    முதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்கதொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.

    கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்’ ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]

    jeyamohan_kotravai

    விஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.மூன்று வாவிகள்:
    சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

    கொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.

    கோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.

    மூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த்எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]

    காப்பியத்தின் மையம்:
    தென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.

    சிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
    ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
    ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
    அலமரல் அசைவிளி அலைப்ப என்
    உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.****உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.****கொற்றவையும் விஷ்ணுபுரமும் :சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
    காலம் என்று ஒன்று உண்டம்மாஎன்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
    கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
    நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
    மங்கையர் மன நிலை உணர வல்லரோ?என்பதும் கொற்றவைக்கான வரிகள்.

    சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.

    சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.****காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.******பின்குறிப்பு :
    [1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.][3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.

    ஜடாயு:
    [வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
    கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
    அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
    உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

    தாரை:
    மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.….
    தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
    …..
    மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
    கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
    பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
    நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
    ……..
    ‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
    வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
    தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
    பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
    ……
    என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
    நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
    நின்றனன்;…59வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்

  • இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.

    காந்தி :  ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’.

    ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன்.

    கேள்வி : 1850ஆம் ஆண்டு, வங்காள மாகானத்தில் பயன்படுத்தப் பட்ட உப்பில் 50% இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சமயல் உப்புதான். இயந்திரங்களால் மலிவாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள் இல்லை, வெறும் உப்பு. உங்களால் நம்ப முடிகிறதா ? இந்தியாவில் இல்லாத கடலா, உப்பளங்களா? பிறகு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

    பதில் : லாபம். இந்தியாவில் (குஜராத்தில்) விளையும் உப்பிற்கு அநியாய வரிகள் போடப்பட்டு, இறக்குமதி உப்பு, உள்ளூர் உப்பைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டது !!.

    இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, கம்பெனி லாபம் அடைகிறது என்றால், இங்கே என்ன தான் நடக்கிறது? முகமது கஜினி, நாதிர் ஷா, தைமூர் எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். அவை வழிப்பறி போன்றது. கையிலிருப்பது தான் களவாடப்படும், வங்கியிலிருப்பது அவர்களுக்கு தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை, திட்டமிட்டு சுரண்டப்பட்ட கொள்ளை. பணம் மட்டுமல்ல கட்டிய கோமணம், சிறுநீரகம் உட்பட சகலத்தையும் உருவிவிட்டார்கள்.  முகலாய அரசு வலுவிழக்க ஆரம்பித்த பின், கம்பெனி வணிகத்தை மட்டும் செய்யாமல், இந்திய அரசியலிலும் தலையிட ஆரம்பிக்கிறது. 1756இல், வங்காள நவாப், கம்பெனியை கல்கத்தாவிலிருந்து விரட்டுகிறார். அடுத்த வருடம், ராபர்ட் கிளைவ் தலைமையில், பிளாசிப் போரில் நவாப் தோற்கடிக்கப்படுகிறார். (போரெல்லாம் இல்லை.லஞ்சம் வாங்கிக்கொண்டு நவாப் படைகள் எதிரணிக்கு விலைபோய்விட்டன ). வென்ற கம்பெனி, வங்கத்தில், எல்லா ஊர்களிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் (பேக்டரி அவுட்லட்) திறக்கிறார்கள். உப்பு, புளி, சக்கரை, தானியம், புகையிலை, கஞ்சா என எல்லா பொருட்களுக்கும் கம்பெனி கடையில் வரியில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மூலப்பொருட்களை கம்பெனிக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் வியாபாரிகளின் கடைகள் படுத்துவிட்டது. பின்பு கிளைவ், கம்பெனியின் சில முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து ‘பிரத்தியேக சங்கம்’ (எக்ஸ்குலுசிவ் கிளப்) ஆரம்பித்து, புகையிலை, வெற்றிலை, உப்பு ஆகியவற்றை விற்கிறார். பிரத்தியேக சங்கத்தினால், கம்பெனி வருமானம் குறைகிறது. கம்பெனியின் ‘மற்ற’ பங்குதாரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றைத்தின் மூலம் சங்கத்தை கலைத்துவிட்டார்கள். இங்கிலாந்தில் ஊர், பேர் தெரியாது இருந்த கிளைவ், மிகச் சில வருடங்களில் ‘பிளாசி கோமான்’ ஆகிறார். மற்ற ‘கோமான்கள்’ கிளைவ் மீது, விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோருகிறார்கள். கமிஷன், விசாரனையின் முடிவில் ‘கிளைவ் ஒரு தியாகி. அவரையா குற்றம் சொன்னீர், இது அடுக்குமா?’ என்று தீர்ப்பு வழங்கியது. [பிரச்சனை, மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி என்பதுதான். டாட்டா, நூறு வருடம் சேர்த்ததை, அம்பானி இருவது வருடத்தில் சேர்க்கவில்லையா ? பொறாமை பிடித்த உலகம்..சே..].கிளைவ் தற்கொலை செய்து கொண்ட பின், வாரன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ், பம்பாய், கல்கத்தா மூன்றையும் ஒன்றினைத்து வைசிராயகிறார். சுரண்டல் தொடர்கிறது.

    இங்கே, நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கம்பெனிக்கு முன், இங்கே வரியே இல்லையா என்றால், இருந்தது. பஞ்ச காலத்தில், வரி குறைக்கப்பட்டது / வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து சில ஆண்டுகள் நல்ல விளைச்சல் இருந்தால், அடுத்து பஞ்சம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். தானியங்கள் கோயில்களில், மற்ற பொது இடங்களில் சேமிக்கப்படுகிறது; பஞ்ச காலத்தில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கம்பெனி ஆட்சியில், பஞ்ச காலத்திலும் நில வரியும், மற்ற வரிகளும் கறாராக வசூலிக்கப்பட்டன. வரி கட்ட முடியாதவர்கள் நிலத்தை உழ அனுமதிக்கப்படவில்லை. நிலம் மீண்டும் காடாகியது. பஞ்சத்தின் போதும், தானிய ஏற்றுமதி நடைபெறுகிறது. வங்கத்தில், ஆங்கிலேய ஆட்சியின் காலகட்டத்தில் வந்த பஞ்சங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துவிட்டார்கள். (சுதந்திர இந்தியாவின் முதல் சாதனை, உலக நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது, நம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதுதான்.)

    வங்கக் கடலில், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின்  நன்னீர் கலப்பதால், வங்கத்தில்  உப்பு மிக குறைவாக கிடைக்கிறது. குஜராத்தில் தான் பெரிய உப்பளங்கள் உள்ளன. (இன்றும், இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% குஜராத்திலிருந்துதான்). மேற்கிலிருந்து உப்பு, வட இந்தியாவிற்கும், வங்க எல்லைக்கும் வரும்பொழுது, சுங்கச் சாவடிகளில் வரி வசூல் செய்யப்படுகிறது.  உப்பின் மீது விதிக்கப்படும் உள்நாட்டு வரிதான், கம்பெனியின் வருவாயில் முக்கிய பங்கு. (டாஸ்மாக் வருவாயைப்போல்). ஆனால், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உப்பு, பல்வேறு வகையில் கடத்தப்படுகிறது. எப்படி தடுக்கலாம் என்று எண்ணும்போதுதான், வேலி கட்டலாம் என்ற யோசனை தோன்றுகிறது. அப்போது, கம்பெனி, மேற்கில் மேலும் விரிவடைந்துவிட்டது.

    சுங்க வேலி .

    வட மேற்கு எல்லை பிராந்தியத்தில் ஆரம்பித்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா என்று 2500 மைல் நீள வேலி அமைக்கப்படுகிறது. முதலில் கழிகளால் அமைக்கப்பட்ட வேலி, பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி, பின்பு மரக்கன்றுகளால் அமைக்கப்படுகிறது. ( வளமான மன் இல்லாத இடங்களில் கற்களாலும், சப்பாத்தி கள்ளியாலும் வேலி கட்டப்படுகிறது). வேலியை காவல் காக்க ஒரு காவல் படை அமைக்கப்படுகிறது. 1870இல் 14000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். கடை நிலை ஊழியருக்கு சம்பளம் மிக குறைவு. லஞ்சம், கடத்தலுக்கு உடந்தை, பொய் கேஸ் ஆகியவற்றின் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகள் வீட்டில், உப்பு மூட்டையை இவர்களே போட்டுவிட்டு, “நீ, உப்பை, சட்டத்தை மீறி பதுக்கினாய்” என்று குற்றம்சாட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். (நம்ம போலீஸ், கஞ்சா கேஸ் போடுவதுபோல. அவங்க தான இவங்களோட முன்னோடி). அப்படியும், மக்கள் தலைச்சுமையில் உப்பு கடத்துகிறார்கள் (கடத்துகிறார்கள் – சரியான வார்த்தையா?). 1873இல் மட்டும் 6700 பேர், தலையில் உப்பு மூட்டைகள் கடத்தி பிடிபட்டுள்ளார்கள்.

    கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்தியா வெள்ளையர்களிடம் வந்த பின், இந்த வேலி, உள்னாட்டு வணிகத்துக்கு பெரிய தடையாக மாறுகிறது. வேலி வேண்டாம், ஆனால் உப்பின் சுங்க வரி வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, தயாரிக்கும் இடத்திலேயே வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியும், அரசின் ஏகபோக (மொனொபாலி) உரிமையாகிறது. ராஜஸ்தான் சாம்பா ஏரி மற்றொரு உப்பு கிடைக்குமிடம். ஜோத்பூர் மன்னரிடம் இருந்து மிரட்டி குத்தகைக்கு வாங்குகிறார்கள். பின்பு வேலி தேவைப்படவில்லை, கைவிடப்படுகிறது.

    மக்கள் உப்பு பயன்படுத்துவதை குறைக்கிறார்கள். உப்பு சத்தில்லாமல், பல்வேறு நோய் தாக்கி, பலர் உயிரிழக்கிறார்கள். 1930 இல், உப்பு வரி பல மடங்கு குறைந்துவிட்டாலும், மக்கள் ஆழ்மனதில் நீங்கா வடு ஏற்படுத்திவிட்டது. காந்தி அதை கண்டுகொள்கிறார். நேருவும், மற்றவர்களும் நில வரியை எதிர்த்து போராடலாம் என்கிறார்கள். காந்தி உப்பையே தேர்ந்தெடுக்கிறார். உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறார். அது, மக்களுக்கு ஆங்கிலேய சுரண்டலை ஒரு எளிய போராட்டம் மூலம் உணர்த்துகிறது. 1946இல் நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றவுடன், உப்பு வரி முழுமையாக நீக்கப்படுகிறது.

    லண்டன் நூலகத்தில் வேலை செய்யும் ராய், வேலியைப் பற்றி ஏதோ ஒரு சிறு குறிப்பை காண்கிறார். யாரிடம் கேட்டாலும் அது பற்றி தெரியவில்லை. சில வருடங்கள் தீவிர அராய்ச்சிக்குபின், மூன்று முறை இந்தியா வந்து, கடைசியில் சம்பல் பள்ளத்தாக்கில் அதன் எச்சங்களை கண்டு பிடிக்கிறார். (தற்போது, வேலியின் மேல் சாலை அமைத்துவிட்டார்கள்.)

    ராய் மாக்ஸ்காம் எழுதிய ‘The Great Hedge of India’ புத்தகம் கண்டிப்பாய் படியுங்கள். இந்தப் புத்தகம் வரும் வரை, இப்படி ஒரு வேலி இருந்தது பற்றிய செய்தியே தெரியவில்லை. நம்மிடம் எதிர்வினையே உருவாகவில்லை. இந்திய வரலாற்று ‘ஆய்’வாளர்களே, நீங்கள் என்னதான் செய்கிறீர் ? இது மாதிரி எத்தனை வேலிகளும், வலைகளும் இருந்தனவோ தெரியவில்லை. [ஜெயமோகன் எழுதும்வரை, இப்படி ஒரு புத்தகம் வந்ததும் எனக்கு தெரியவில்லை 🙁 ].

    உப்பு சத்தியாகிரகம்

    இனி நான், ஒவ்வொரு முறை உப்பை பயன்படுத்தும் போது, நம் மக்கள் மனதில் கட்டப்பட்ட வேலியை நினைவு கூறுவேன். அதை உடைத்த தாத்தாவை நினைவு கூறுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவேன். காந்திஜி கீ ஜெய். [இன்று காந்தியின் பிறந்த நாள்.]

    http://www.roymoxham.com/page4.htm

    http://en.wikipedia.org/wiki/Inland_Customs_Line

  • India after Gandhi – (நவீன இந்தியாவின் வரலாறு) – புத்தக விமர்சனம்

    கேள்வி :  ‘இந்தியா ஏன் ஒரே நாடாக உள்ளது?’, ‘எவ்வளவு நாள் ஒரே நாடாக இருக்கும்?’, ‘இந்தியாவிற்கு ஜனநாயகம் ஒத்துவருமா?’

    பதில்: ‘காந்திக்குப் பின் இந்தியா’, ராமச்சந்திர குகா அவர்கள் 2007 ஆம் ஆண்டு எழுதிய முக்கியமான நூல். நவின இந்தியாவின் வரலாறை 900 பக்கங்களில், மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, விரிவான விடையாக எழுதியுள்ளார்.

    ********

    இந்தியா – பாக் பிரிவினையை உருவகிக்கும் ‘டைம்’ பத்திரிக்கையின் அட்டைப் படம்.

    “இந்தியாவிற்கு மக்களாட்சி ஒத்துவராது, கம்யூனிசமோ அல்லது ராணுவ ஆட்சியோ தான் சரிப்படும்”, “ஐரோப்பாகூட ஒரு நாள், ஒரே நாடாகலாம், இந்தியா கண்டிப்பாக ஆகமுடியாது”, “மதராசிக்கும் பஞ்ஞாபிக்கும் இருக்கும் இடைவெளி ஐரிஷ்க்கும் ஸ்பானியர்களுக்கும் உள்ள இடைவெளியை விட அதிகம். அவர்களாவது ஒரே நாடாவாவது, நடப்பதை பேசுங்கள்” என்று அன்றைய அறிவுஜிவிகள் (வேற யார், அமெரிக்க/ஐரோப்பியர்கள் தான்) மீண்டும் மீண்டும் கவலைப் படுகிறார்கள். “இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் நீங்கினால், பிராமன ஆதிக்கம் ஒங்கி, இந்தியாவை ஒரு 500 வருடம் பின்நோக்கி கொண்டுசெல்வார்கள், நீதிமன்றம், ரயில்வே உட்பட ஆங்கிலேயருடைய சாதனைகளை அழித்துவிடுவார்கள். தேவைப்பட்டால்,  ஜெர்மானியர்களின் துனைகொண்டு இந்தக் கூட்டத்தை அடக்க வேண்டும்” என்று வின்ச்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் ஆதங்கப்படுகிறார்.

    டைம், நியுயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக அவநம்பிக்கை எழுதிக்குவிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடையும் போது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமர் இறக்கும் போதும், கலவரங்களின் போதும் இந்த அச்சங்கள், அவநம்பிக்கைகள் மீண்டும் உயிர்கொள்கின்றன. ஒவ்வொரு தச ஆண்டின் முடிவிலும், இந்தியா சந்தித்த மோசமான தச ஆண்டு இதுதான் என்றும், இந்தியாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி என்றும் எழுதப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி இந்தியா எழுந்து நின்றதின் கதை இந்தப் புத்தகம்.

    குகா, இந்நூலில் தன் கருத்துக்களை, மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே நேரிடையாகக் கூறுகிறார். பெரும்பாலான இடங்களில் அன்றைய சூழ்நிலையில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகள், தலைவர்களின் பேட்டிகள், அறிஞர்களின் கருத்துக்கள் அகியவற்றை தொகுத்து அளிப்பதின் மூலம், தன் கருத்துகளை முன்வைக்கிறார். ஊகங்களின் மேல் இல்லாமல், உறுதிபடுத்தப்படக்கூடிய தகவல்களின் மேல் மட்டுமே  நூலைக் கட்டமைத்துள்ளதால், நூலின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மிக அழகாக கோர்த்துக்காட்டியதே குகாவின் சாதனை.

    *****——-*****

    காந்தியின் கரங்களில் இந்தியா

    நூலை ஐந்து பிரிவாகப் பிரித்துள்ளார். முதல் பிரிவில்,  சுதந்திரம் முதல் 1950 வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தை விவரிக்கிறார். “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, காங்கிரஸ்க்கு அல்ல” என்ற காந்தியின் அறிவுரையின் பேரில், நேரு, எதிர்கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தருகிறார். அவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். நேரு, படேல், அம்பேத்கர் மூவரையும் “இந்தியாவின் மும்மூர்த்திகள்” என்று வர்னிக்கிறார். காந்தி நட்ட செடியை, வாடாமல் காத்த மும்மூர்த்திகளின் செயல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்த 500 குறுநில மன்னர்களை வழிக்கு கொண்டுவந்தது, இந்தியா-பாக் பிரிவினையின்போது, எற்பட்ட கலவரத்தை அடக்க ரானுவத்தை பயன்படுத்தாமல், வெள்ளையர்களின் குடியிருப்புகளைக் காக்க பயன்படுத்தியது (அப்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பானவர்கள் வெள்ளையர்கள்தான் என்கிறார் குகா)., மவுண்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து சென்றவுடன், கூலிக்கு ஆட்களை அமர்த்தி, தன் கோனத்தில் இந்தியாவைப் பற்றியும், தன்னைப்பற்றியும் பல்வேறு புத்தகங்களை எழுதுக்கொள்வது பொன்ற நகைச்சுவை (dark humor) காட்சிகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீர், நாகலாந்து பிரச்சனைகளைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். (இவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன்).

    இரண்டாவது பிரிவில், 1952 இல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து நேருவின் மறைவு வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவிக்கு “நேருவின் இந்தியா” என்று சரியாக பெயரிட்டுள்ளார். “உலக வரலாறின் மிகப் பெரிய சூதாட்டம்” என்று இந்தியாவின் முதல் தேர்தல் வர்னிக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டியை பர்க்காவிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற பெண், பனிக்காலம் வந்துவிடும் என்பதால், ஆறு மாதத்திற்கு முன்பே ஓட்டுப் போட்ட ஊர், என்பது போல பல்வேறு குட்டித் தகவல்களின் மூலம் தேர்தலை சுவாரஸ்யமாக கூறிச்செல்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அணி சேராமை, கருத்துச் சுதந்திரம் ஆகிவற்றின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் நேரு. மொழி வாரியாக மாநிலங்கள் அமைத்தல், பல்வெறு சிறு சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்து சிவில் சட்டம், நேரு / மஹானுலொபிஸ் கூட்டணியின் ஐந்து ஆண்டுத்திட்டங்கள் ஆகிவை இதில் இடம்பெறுகின்றன. படேல் மறைவிற்குபின், நேருவின் கருத்துக்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை, இருப்பினும் நேரு சர்வாதிகாரியாக நடந்துகொள்ளவில்லை என்கிறார் குகா.1957 இல், உலகிலேயே முதன்முதலாக கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு பதவியேற்கிறது. நேரு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற எண்ணம், அவர் கேரள அரசை டிஸ்மிஸ் செய்யும் பொழுது சிதைகிறது. சீனா-இந்தியப் போரால் நேருவுடைய வெளியுறக்கொள்கைக்கும், அவருடைய ஆளுமைக்கும், பெருத்த அடி விழுகிறது.

    நேருவின் மறைவிற்கு பின், சாஸ்திரி பிரதமராகிறார். இந்தியா உனவு உற்பத்தியில் தன்நிறைவு அடைவது, இந்தி திணிப்பை திரும்பப்பெறுவது ஆகியவை  இளம் இந்தியாவின் மெல் உள்ள நம்பிக்கையை துளிர்க்கச்செய்யும் அம்சங்கள். மற்றபடி மூன்றாம் பிரிவிலும் இந்தியா சந்தித்த சவால்கள் ஏராளம்.

    நான்கவது பிரிவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், நேருவின் இந்தியாவை அசைத்துப்பார்த்த இந்திரா காந்தியின்

    காலியாக விடப்பட்ட இந்தியன் எக்ஸ்ஃப்ரஸ் தலையங்கம் – எமெர்ஜென்ஸி காலகட்டம்

    செயல்களின் தொகுப்பு எனலாம். குகா தொகுத்திருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, காந்தி மற்றும் நேரு இந்தியாவிற்கு கிடைத்தது, இந்தியாவின் நல்லூழ் என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது ?. இந்திரா காந்தி காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம், முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசுகள் கலைக்கப்படுகிறது. உச்சகட்டமாக அவசரநிலை கொண்டுவரப்படுகிறது, காங்கிரஸின் உட்கட்சி ஜனநாயகம் அடியோடு அழிக்கப்படுகிறது. கொள்கைகளின் மேல் நடத்தப்பட்ட ஆட்சி மாறி தனி நபர் துதி பாடும் அமைப்பாக ஆட்சி மாறுகிறது. 1971 போரில் தெளிவாக முடிவெடுத்தது மட்டுமெ இந்திராவின் சாதனையாக குகா குறிப்பிடுகிறார். இவருடைய காலத்தில் நான் ஆரம்பத்தில் கூறிய அவநம்பிக்கைகள் மேற்குலக அறிவுஜீவிகளிடம் மட்டுமின்றி இந்தியர்களிடமும் பரவுகிறது. ஒரு சோக நாவலைப் படிக்கும் உணர்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    கடைசி பிரிவு 1990 – தற்சமயம் வறை கால அடிப்படையில் (chronological order) இல்லாமல் , முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன், ஊழல், தாராளமயமாக்கல், நவீன இந்தியாவின் எழுச்சி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறார்.

    மதக்கலவரம் எங்கே யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும், கடைசியில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முஸ்லீம்களே என்பதை தகவல்களின் மூலம் நிறுவுகிறார். சுதந்திர இந்தியாவில், தலித்துகளுக்கு ஒரு அம்பேத்கர் கிடைத்தைப்போல், முஸ்லீம்களுக்கு ஒரு தலைவர் இல்லாததின் விளைவையும் கோடிட்டு காட்டுகிறார். இந்துக்களை, ஒரு சின்ன நிலப் பிரச்சனையால் பா.ஜ.க. எவ்வாறு ஒருங்கினைத்து அரசியல் ஆதாயம் அடைந்தது என்பதையும் விளக்குகிறார்.  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததிக்கு பிறகு தலித்துகளின் மேல், வன்முறை அதிகரிப்பதையும், பின் தங்கிய வகுப்புகளுக்கு அதிகாரம் கிடைத்தபின், அது மேலும் அதிகரிப்பதையும் குறிப்பிடுகிறார். தலித்துக்கள் புதிய எழுச்சியுடன் போராட ஆரம்பித்ததன் விளைவுகளே அவர்களின் மேல் ஏற்படும் வன்முறை என்பதை தெளிவுபடுத்துகிறார்.

    புத்தகம் முழுவதும் ஊடுபாவாக இந்திய அயலுறவுக்கொள்கை விவாதிக்கப்படுகிறது. கடைசியில் சினிமா, க்ரிக்கட் போன்றவற்றின் பங்களிப்பையும் குறிப்பிடத்தவறவில்லை.

    அவநம்பிக்கைகளின் பதில்.

    **** —– ****

    இந்தப் புத்தகத்தை படித்தபின், “இந்தியாவிற்கு ஜனநாயகம் காந்தியின் கொடை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது எவ்வகை மிகைப்படுத்துத்துதலும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஜனநாயகத்தின் மூலமே இந்தியா தான் சந்தித்த சவால்களை வென்று வீறு நடை போடுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக இதை விட எழுத முடியுமா என்று தெரியவில்லை. வரலாறின் மேல் காதல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.