Blog

  • ஞானபீட அமைப்பிற்கு கடும் கண்டனங்கள்.

    திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு தமிழின் சார்பாக ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பதற்கு ஒரு தமிழ் இலக்கிய வாசகராக கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன். இந்திய மொழிகளில் ஞானபீட விருதே இலக்கியத்திற்கான உயரிய விருதாக கருதப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழின் சார்பாக அகிலன், ஜெயகாந்தன், வைரமுத்து மூவருக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. அகிலனும், வைரமுத்துவும் ஞானபீட விருதிற்கு முற்றிலும் தகுதியற்றவர்கள். இந்த விருதை வைரமுத்துவிற்கு வழங்கியதன் மூலம் ஞானபீட அமைப்பு தன்னையும், தமிழையும் சிறுமைப்படுத்தியிருக்கிறது. தமிழிற்கு இது ஒரு தீராத அவமானம்.

    I strongly condemn awarding Jnanpith to Tamil lyricist Vairamuthu. Jnanpith award was considered the highest literary award in India. Three Tamil writers were awarded Jnanpith so far. Akilan, Jeyakanthan and Vairamuthu. Akilan and Vairamuthu are totally unqualified for Jnanpith award. Now not only once, but twice Jnanpith committee has awarded two unqualified writers from Tamil. By awarding Jnanpith to Vairamuthu, Jnanpith committee not only insulted Tamil, but also destroyed it’s own reputation.

  • VLC Bay Area – March 2026 Monthly Meet

    விலாஸம் – பா.திருச்செந்தாழை

    [https://livingtamillitfest.org/– வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் தொடர்ந்து உரையாடுகிறோம். மார்ச் 14, 2026 இல் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் குறித்த என் ஏழு நிமிட உரையின் எழுத்து வடிவம். மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட் ]

    நண்பர்களுக்கு வணக்கம். 

    சீத்தலை சாத்தனாரை நமக்கு தெரியும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை எழுதியவர். இளங்கோவடிகளிடம் கண்ணகியின் கதையை சொல்லி சிலப்பதிகாரத்தை எழுதத்தூண்டியவர். சேரன் செங்குட்டுவன் கண்ணகி கோவிலை கட்டுவதற்கு தூண்டுதலாக இருந்தவர். சீத்தலை சாத்தனாரின் முழு பெயர் – மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தன். மதுரையில் கூலவாணிகம் செய்தவர். நெல்லரிசி, புல்லரிசி, வரகு, தினை, சாமை, சோளம் என எட்டுவகை தாணியங்களின் வணிகம்தான் கூலவாணிகம்.  தமிழ் விக்கியில் மேலும் படிக்கலாம்.   

    மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் வழியில் வந்த மதுரை நவதானிய வணிகர் பா.திருச்செந்தாழை எழுதிய விலாஸம் சிறுகதை குறித்த சிறிய உரை இது. திருச்செந்தாழை மதுரையில் நவதானிய வணிக நிறுவனம் நடத்துகிறார். 2008 இல் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. மீண்டும் கோவிட் காலத்தில்தான் (2021 இல்)  இணைய இதழ்களில் சிறந்த சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கோவிட் காலத்தில் எழுதிய கதைகள் “விலாஸம்” என்ற பெயரில் இரண்டாவது சிறுகதை தொகுப்பாக வெளிவந்தது. அந்த தொகுப்பின் முகப்பு கதை “விலாஸம்”.

    கதை என்ன ? 

    யானை உயர காம்பவுண்டுக்குள் சாரட் வண்டி வீடு என்று அழைக்கப்பட்ட ராமவிலாஸ் இருக்கிறது. தேக்கினாலும், மொசைக்கினாலும் கட்டப்பட்ட பங்களா. பெருங்காட்டில்  பாய்ந்தோடுகிற ஒற்றை பேராறைப்போல தேனியில் பணம் நுழைகின்ற எல்லாவழியிலும் ராமவிலாஸ் மட்டுமே இருந்தது. பொன்கொண்ட பெருமாள் என்ற பெரிய வணிகரின் வீடு அது. ஆனால் நாற்பது வருடங்களில் வணிகம் சுருங்கி ராமவிலாஸ் வெறும் ராமபவனம் ஆக தேய்கிறது. உடற்குறை கொண்ட ஒரு மகள் பிறந்ததால் மருமகன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். ராமவிலாஸ் குடும்பம் நடத்திய பள்ளிக்கூடத்தை ஜாதி சங்கம் எடுத்து நடத்துகிறது. இப்போது பள்ளிக்கூடத்தில் மகள் கல்யாணி சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். முழுமையான வீழ்ச்சி.

    அந்த பெரிய வணிகரின் எண்ணற்ற வணிகங்களின் ஒன்றில் ஒரு எடுபிடி சிறுவனாக நுழைந்து, அவர்கள் கீழே இருபது வருடங்கள் நசுங்கி வேலை செய்து, ஒரு சிறிய விதையை கைக்கொண்டு அந்த பேராற்றின் இழுவிசையை மீறி கடலை அடைந்த வலிய மீன் தன்ராஜ். பொன்கொண்ட பெருமாளிடம் வணிகத்தின் சூட்சமத்தை கற்றுக்கொண்டு வென்றவர். ராமவிலாஸில் இருந்து ஒரு சிறு நெருப்பை கையளவு வைக்கோலில் பற்றிக்கொண்டு வந்து ஒரு மலையையே பற்றவைத்த புதிய பணக்காரர் தன்ராஜ். 

    தன்ராஜின் விரிவடையும் வணிகத்தின் ஒரு பகுதியாக அவர் புதுதாக துவங்கிய ஒரு மில்லின் அழைப்பிதழுடன் வாழ்ந்து கெட்ட தன் முதலாளியை பார்க்க போகிறார்.  தன்ராஜுக்கும் பொன்கொண்ட பெருமாளுக்குமான உரையாடல், அதன்பின்னான நிகழ்வுகள், தன்ராஜின் வாழ்க்கை, புகழேந்தி, அய்யாவு போன்ற கடை சிப்பந்திகளின் வாழ்க்கை என  தன்ராஜின் மகனான கதைசொல்லியின் பார்வையில் விரியும் சிறுகதை. 

    கதையில் எனக்கு பிடித்தது:

    • கதையின் புதிய களம்: நவீன தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவுதான் பெரும்பாலான கதைகளின் பேசுபொருள். நம் குழுமத்தில் விவாதிக்கப்பட்ட சிறுகதைகளிலே பொரும்பாலும் இந்த பின்புலம்தான். எழுதாத களங்கள் நிறைய இருக்கிறது. வணிக பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த சிறுகதை ஒரு புதிய உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. 
    • சிறுகதையில் இருக்கும் இருக்கும் நுண்தகவல்களும், நிகர்வாழ்வும்: 
      • தன்ராஜ் போன்ற வெற்றிகரமான வியாபாரியை “எல்லாம் அங்க இருந்து திருடிட்டு வந்துட்டான்” என்றே பொதுவாக சொல்வார்கள். தன்ராஜின் கடுமையான உழைப்பு, மாறும் சூழல், அந்த மாறும் சூழலை பயன்படுத்தும் அவருடைய கூர்மையான அறிவு என விவரிக்கப்படுகிறது. இருபது வருடங்கள் முன்பு ஆரம்பத்தில் “முன்ன பின்ன தெரியாத உன்னை எப்படி நம்புவது?” என சம்சாரிகள் தன்ராஜை ஒரு தாசியை போல அவமானப்படுத்துகிறார்கள். பொறுமையாக இருக்கிறார். அப்போது சர்க்கரை நோய் இன்னும் பெரிதாக பரவவில்லை. வரகரிசி போன்ற சிறுதானியங்களுக்கு இன்னும் சந்தையில் விலை இல்லை. ஆனால் தன்ராஜ் சிறுதானியத்தின் மீது கவனம் செலுத்துகிறார். கழிவு என குப்பையில் கொட்டப்பட்ட தவிடில் இருந்து எண்ணை எடுக்கலாம், மறுசுழற்சி செய்து அந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம், அதை விற்று லாபம் பார்க்கலாம் என்பதை கண்டுகொள்கிறார் தன்ராஜ். தவிட்டு எண்ணெய் லாபத்தில் ஒரு பங்கை வைத்து, வடக்கு வியாபாரிகளைவிட குறைவான விலைக்கு சிறுதாணியங்களை விற்று, மொத்த சிறுதாணிய சந்தையையும் பிடிக்கிறார். சர்க்கரைநோய் பெருகி, ராமவிலாசில் இருந்து, பத்தோடு பதினொன்றாக “தாய்ப்பால் மறந்த சிறு குழந்தையை” போல இருந்த சிறுதாணிய வியாபாரத்தை பிடிங்கிக்கொண்டு வந்தவர், அதனை ஒரு யானையை போல வளர்த்தெடுக்கிறார்.    
    • சிறுகதையில் வெளிப்படும் தத்துவ பார்வை:
      • மகிழ்ச்சி என்பது என்ன ? நிறைவு என்பது என்ன ? என்ற கேள்வியை சிறுகதை முன்வைக்கிறது.
        • வணிகத்தின் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் தன்ராஜ் மகிழ்ச்சியாக இருக்கிறாரா ? வணிக வெற்றி என்பது சூதில் வெல்லும் ஒரு போதை. தன்ராஜ் துயரத்துடன் வரும்போதும் சரி, வெற்றியின் உச்சத்திலும் சரி,  வெறும் நீரையும் உணவையும் தரும் மனைவியிடம் ஒரு இணை-மனதை எதிர்பார்த்து ஏமாறும் தனிமையில் இருக்கிறார். ஒரு நொடியில் ஆறில் ஒரு பங்கு நேரத்திற்கும் மேலாக அவரால் சிரிக்கவே முடியவில்லை. 
        • முழுமையான வீழ்ச்சியை சந்தித்த பழைய முதலாளி “மாப்பா” பொன்கொண்ட பெருமாள் துயரத்தில் இருக்கிறாரா ? போலி பவ்யத்துடன், ஒரு சீண்டலை எதிர்பார்த்து தன் வீட்டிற்கு வந்திருக்கும் தன்ராஜிடம், வேட்டையின் வாசலுக்கே வராமால் கடந்து செல்லும் முதிய யானை போல இருக்கிறார். “எத்தனை பேர் காலை ஒடச்சிட்டு இவன் முன்னால ஓடுறான்” என தன்ராஜை வன்மத்துடன் புகழேந்தி சொல்லும்போதும், “வியாபாரம் என்பது போர்தான். போரில் தலையென்ன, காலென்ன ? பள்ளத்துக்கு அருகில்தான் மேடு உருவாகிறது” என்கிறார். அவரின் கடந்தகால துயரம் தரும் சோர்வு படர்ந்து, குழந்தைத்தனமான சிரிப்பு குறையும்போது வரும் உடற்குறை கொண்ட பேத்தி நங்கவல்லி அவரை மீண்டும் மகிழ்ச்சிக்கு கொண்டுவருகிறாள்.
        • “புத்தகத்தை அப்பப்ப மூடி வைச்சுகிட்டு, பொறுமையா மூணாறுல வாங்குன இலைகளை நுணுக்கிபோட்டு தானா சிரிச்சுகிட்டு  மொதலாளி ஒரு டீ போடுறீங்களே…பாத்துருக்கேன். சாய்ங்கால தூத்தல் மாதிரி முகம் குளுந்து நிக்கும்” என கதைசொல்லியிடம் சொல்கிறார் அய்யாவு. கலையும், இலக்கியமும், ரசனையும் தரும் இன்பம் அது. தேனி தமிழ்நாட்டின் அழகிய மாவட்டத்தில் ஒன்று. முழுக்க வணிகத்தில் இருப்பவர்களுக்கு குளிர்ந்த மழைச்சாரலே தீப்பற்றிக்கொண்டதை போல இருக்கிறது. மழையில் தினை காயவைக்கும் களம் குளிர்ந்துவிடக்கூடாது என தவிட்டை பரப்பி, தார்ப்பாய் போட்டு மூடுவதற்கு ஓடுகிறார்கள். அவர்களுக்கு மழையையும், முகில்களையும், மலையையும் நின்று ரசிப்பதெற்கெல்லாம் நேரமும் இல்லை. அதற்குரிய மனமும் இல்லை. ஆனால் கதைசொல்லி லௌகீக உலகத்தில் வெல்பவர்களை ஒரு மேட்டிமை மனநிலையில் நின்று இளக்காரமாக பார்க்கவில்லை. அவர்களின் லௌகீக உலகில் வெல்லும் திறனை  ஒருவித பயத்துடனும், வியப்புடனுமே பார்க்கிறார். ரசனையும், மகிழ்ச்சியையும் அனுபவியுங்களேன் என ஒருவித ஏக்கத்துடனேதான் சொல்கிறார். 
      • குரு-சீட உறவு: முந்தைய தலைமுறையை வென்றே அடுத்த தலைமுறை வளர்கிறது. ராமவிலாஸ் தன்னுடைய கிட்டங்கிகளை தன்ராஜுக்கு லீஸுக்கு தருவதில் தன்ராஜ் முழுமையாக ராமவிலாஸை வெல்கிறார். ஆனால் தன்ராஜ் அந்த வெற்றியை கொண்டாடவில்லை. பொன் கொண்ட பெருமாளுக்கும் – தன்ராஜுக்குமான உறவு, புகழேந்திக்கும் – தன்ராஜுக்குமான உறவு, அய்யாவு – கதைசொல்லுக்குமான உரையாடல் என இந்த குரு-சீட உறவு விவரிக்கபடுகிறது. 

    கதை எனக்கு மிகப்பிடித்திருந்தது. நன்றி.

  • இரு கடல் ஒரு நிலம் – முத்து பிரகாஷ் (ஜப்பான்) கடிதம்

    [ஜப்பானில் இருந்து நண்பர் முத்து பிரகாஷ் எழுதிய கடிதம். அவரது அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்.]

    அன்பு நண்பர் விசு,

    என் பெயர் முத்து. சென்னையில் பிறந்து பின் சாப்ட்வேர் இன்ஜினியராகி , ஜப்பானில் வேலை பார்க்க சென்றேன். 12 வருடங்களாகிறது ஜப்பான் வந்து . வெகுநாள் ஜெ வாசகன். 2015 இல் வெண்முரசு வாசித்து கொண்டிருக்கிறேன். 2019 இல் ஜெ ஜப்பான் வந்த போது நடந்த வாசகர் சந்திப்பில் ஜெ வை முதல் முறை சந்தித்தேன். பின்பு 2025 புத்தாண்டு அன்று நித்தியவனத்தில் ஜெ மற்றும் நண்பர்களோடு இரு நாள், பின்பு சென்னை புத்தக திருவிழாவில் மறுமுறை ஜெ யுடன் பேசும் சிறுவாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜெ விடம் “இரு கடல் ஒரு நிலம் வாங்கிருக்கேன் ஜெ , விசு உங்களை அமெரிக்கா முழுக்க அழைத்து சென்றது போல, முழு ஜப்பானிற்கும் உங்களை கூட்டி செல்ல வேண்டும் என்பது என் கனவு. அதற்காகவே இந்த நூலை வாங்கினேன். கையொப்பம் போட்டு தாங்க” என்றேன். ஜெ மகிழ்ச்சியுடன் கையொப்பமிட்டு தந்தார். ஜப்பானை பற்றி யோசிக்கிறேன் என்றார். 

    இந்தியாவில் இருந்து திரும்ப வந்த பிறகு வேலையில் மும்முரமாகி படிக்க நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். ஜூன் மாதம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு கான்பரன்ஸ் இருப்பதால், அமெரிக்க செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே எனது முதல் அமெரிக்க பயணம். டோக்கியோவில் இருந்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ், அங்கிருந்து பிலடெல்பியா என விமான சீட்டு பதிவு செய்தேன். பதிவு செய்தபின் முதல் வேலையாக உங்கள் நூலை எடுத்து பெட்டிக்குள் வைத்தேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் இல் இருந்து பிலடெல்பியா செல்லும் விமானத்தில் முழு நூலையும் படித்துவிட வேண்டும் என திட்டம். உங்கள் நூலின் வழியாக அமெரிக்காவை அறியப்போகிறேன் என்பது ஒரு கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது. 

    விமானம் புறப்படும் முன் முன்னுரை மற்றும் படங்களை மட்டும் ஒரு புரட்டு புரட்டினேன். இது போன்ற Travelogue நூல்களுக்கு படங்கள் முக்கியமானவை. படித்து நாம் அடைந்த கற்பனையை படங்களுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். முதல் பார்வையில் ஈர்த்தது இரண்டு படங்கள். ஒன்று Grand canyon. அப்படத்தில் தெரியும் சிவப்பும், வெள்ளையுமான குடைவு செய்யப்பட்டது போலான மலைகள் ஒரு பேரியற்கைச் சித்திரம். இயற்கையின் பெருவெளி தரிசனம். இவ்வளவும் கொலராடோ ஆறு அரித்து உருவானவை என படித்தபோது, அந்த ஆற்றின் வலிமை முன் மிக சிறிதாக உணர்ந்தேன் . மற்றோரு படம் கூகிள் மேப்பில் வரையப்பட்ட உங்கள் கிராஸ் கண்டரி பயணத்தின் வரை படம். அமெரிக்காவின் ஊடாக ஒரு கோடு. இந்த வரை படம் ஒன்றே பலதரப்பட்ட நிலக்காட்சிகளையும், பலதரப்பட்ட மக்களையும், கலாச்சாரங்களையும், மொழிகளையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. 

    அருணா அக்காவின்(என்னையும் இப்படி விளிக்க அனுமதிக்க வேணும்) முன்னுரை செறிவானது. ஆரம்பத்தில் அவர் சொல்லும் இமயமலை பொங்கல் வாழ்த்து அட்டை பற்றிய அனுபவமே இந்நூலுக்கு ஒரு முன்னோட்டத்தை கொடுத்து விடுகிறது. எங்கள் வீட்டில் சிங்கப்பூரின் சின்னமாகிய merlion சிம்மம் தண்ணீரை பயீச்சி அடிக்கும் படத்துடன் ஒரு காலண்டர் இருந்தது. சிறு வயதில் அக்காட்சி ஒரு அறை கூவலை போன்று தோன்றும். 2022 இல் சிங்கப்பூர் சென்று பார்த்த போது நினைத்துக்கொண்டேன் , Merlion நிஜமாகவே இவ்வுலகத்துக்கு சிங்கப்பூரின் அறை கூவல் தான் என. வெறும் ஐம்பது சொச்ச கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு நாடு, உலக வர்த்தகத்தின் ஒரு மையமாக வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது . இமயம் எதிர்பாராத ஒரு தருணத்தில் கண்முன்னே பல அடுக்காக விரிந்த போது கண்ணீர்வந்ததாக எழுதி இருந்தார். எனக்கும் ஜப்பானின் மவுண்ட் ஃபுஜியில் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. மலைகள் தங்கள் அசைவிண்மையால் நம்மில் ஒரு பெரும் நிலைக்குலைவை நிகழ்த்தி விடுகின்றன 

    பூண் முகாம் போன்ற ஒன்றை ஜெ அமெரிக்காவில் தொடங்குவது என்பது அதிதேவையான செயல். இந்தியர்கள் நாம் நன்கு படித்து கார்ப்பரே ட் உலகத்திற்கு ஏற்றவாறு வேலை செய்ய பழகி கொண்டோம். ஆனால் இந்த ஓட்டத்தின் பயன் என்ன என்ற கேள்வி நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது . அதற்கு விடையளிக்கும் தத்துவ பின்புலம் நமக்கோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ கிடையாது. சரி இவ்வளவு எல்லாம் யோசிக்காமல் செயல்தான் யோகமென எண்ணி, புதுசாக ஒரு கலையோ, தத்துவமோ, விளையாட்டோ கற்று கொண்டு எழலாம் என நினைத்தால், சுற்றி உள்ள மொண்ணை கூட்டம் அதற்கும் பெருங்கூச்சல் போடும். அவ்வளவு கேலியும் கிண்டலும் உண்டு. நாங்க சினிமா,சீரியல், அரசியல்னு பேசிட்டு இருப்பபோம், நீ மட்டும் எதோ தீவிரமா சுத்திட்டு இருக்கியே என்று சீண்டுவார்கள். அதை சமாளிப்பதற்கே அபாரமான மனவலிமை தேவைப்படும். இவற்றை சமாளிக்க ஆரம்பித்ததே ஜெ வின் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பிறகுதான். ஜப்பான் போன்ற நாடுகளில் புதிதாக ஒன்றை கற்று கொள்ள அவர்களுக்கான சமூக தடைகள் மிக குறைவு . குறைந்தபட்சம் யாரும் உங்களை கேலி செய்ய துணிவதில்லை . என்னுடன் வேலை செய்யும் நண்பர் தன் 60வது வயதில் தான் Scuba Diving ஆரம்பித்தார். 40 வயதிற்கு மேல் பேட்மிண்டன் ஆரம்பித்த பல நண்பர்களை அறிவேன். இந்திய சமயல்களை பற்றி ஜப்பானிய சமுகதிற்கு அறிமுகம் செய்யும் எழுத்தாளர், கேன்சர் நோய் இருந்தும் Badminton விளையாடும் 60 வயதுக்காரர் என செயலே யோகமென இந்த சமூகம் என்னை ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கிறது . அந்த வகையில் புலம்பெயர் நாடுகளில் ஜெ இது போன்ற ஒரு அறிவியக்க செயலை நடத்தி வருவது நமக்கு செயல் குறித்த விழிப்புணர்வை தரும். அரசியல், சினிமா என மேலோட்டமாக இயங்காமல் செய்யும் செயல்களின் ஆழத்தை நோக்கி நம்மை செலுத்தும். பூண் முகாமிற்க்கு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மக்கள் பயணித்து வந்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

    கிராஸ் கண்டரி பயணம் என்ற சொல்லே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜப்பானில் இது போன்ற நிறைய பயணங்கள் செய்து இருக்கிறேன். கிழக்கு எல்லையான டோக்கியோவில் இருந்து மேற்கு எல்லையான கணசவா வரை ஒரு பயணம் மேற்கொண்டேன். மொத்த பயண தூரமே ஆயிரம் கிமீதான் வரும். இதே போன்று கியுஷு மாகாணத்தை ஒரு சுற்று வருவது , ஹொக்கைடோவின் தெற்க்கு பகுதியை சுற்றி வருவது போன்ற பயணங்கள் சென்று இருக்கிறேன். அனைத்துமே ஆயிரம் கிமீக்குள் தான். ஆனால் நீங்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கே ஆயிரம் கிமீபயணம் செய்ய வேண்டுமென எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியம் அளித்தது. ஒரு நாளில் ஆயிரம் கிமீபயணிக்க முடியுமென்றால் அந்நாட்டின் சாலைகள் எவ்வளவு பெரியதாக, நேர்த்தியாக செய்யபட்டிருக்கவேண்டும், கார்கள் இந்த நெடிய பயனங்களுக்காகவே வடிவமைக்க பட்டிருக்கவேண்டும். கற்பனை செய்து பார்க்கவே பிரமாண்டமாக உள்ளது. விமானத்தில் நூலை படித்து கொண்டிருக்கும் போது அமெரிக்கா ஜப்பானை விட நூறு மடங்கு பெரியதாக இருக்கும் என கற்பனை செய்து கொண்டேன். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமானநிலயத்தில் இறங்கியதும் அதை உறுதி செய்து கொண்டேன். பன்னாட்டு முனையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்திற்கு நடக்கவே 45 நிமிடம் எடுத்தது. காபி கோப்பை ஜப்பானில் குடிப்பதை விட இரு மடங்கு பெரியது . ஒரு சாண்ட்விச்சை முழுசா கடிக்க ஒரு வாய் போதாது. நூலை படித்து முடித்த போது அமெரிக்காவின் அகண்ட தன்மை ஒரு நினைவாகவே தங்கிப்போனது. 

    மைக்ரோசாப்ட் கதை, வேகாஸ், நெடுஞ்சாலைகளின் விளம்பர பலகைகள், கான்யன்களின் வரலாற்று செய்திகள், கலிஃபோர்னியாவின் கோல்ட் ரஷ் என பொதுவான அமெரிக்க செய்திகளை உங்கள் சுவாரசியமான அவதானிப்புகள் மூலமாக கூர்மை படுத்தியிருக்கிறீர்கள். ஒரு இடம் செல்லும்போது அந்த இடத்தின் வரலாற்றை ஒன்று தொட்டு ஒன்றென விரித்து கொள்வது நுண்ணுணர்வு உள்ள எல்லோரும் செய்வது. ஒரு காட்சியின் தொடர்புடைய வரலாற்றை நீங்கள் எப்படி யோசிப்பீர்களோ அதே போலவே எழுத்திலும் வந்து இருப்பதாக எனக்கு பட்டது. 

    மெம்பிஸ் நகரத்துக்கு வந்த போது கறுப்பின மக்களின் சொந்த இசையான ஜாஸ் மற்றும் ராக் &ரோல் பற்றிய வரலாறும் கறுப்பின மக்களின் இசையை உலகறிய செய்ய எப்படி ஒரு வெள்ளையரின் துணை தேவைபட்டது என்பதும் சுவாரிசயமான தகவல்கள். பிலடெல்பியாவில் இருக்கும் போது அமெரிக்க சுதந்திர மியூசியம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஐரோப்பிய குடியேறிகளும், அடிமை படுத்தப்பட்ட கறுப்பின மக்களும் , இந்தியன்ஸ் என்று அழைக்கப்பட்ட பூர்வகுடி மக்களும் எவ்வாறு பிரிட்டிஷை எதிர்த்து போரிட்டு வென்றனர் என்பதை மிக உணர்வுபூர்வமாக விளக்கும் மியூசியம் அது. இந்நூலில் ராக் & ரோல் பற்றி படித்து விட்டு அந்த மியூசியம் சென்ற போது ஒன்று தோணியது. அடிமைகளாக இருந்தும் கறுப்பின மக்கள் தங்கள் பண்பாடு, இசை, உணவு, அரசியல் பிரதிநிதித்துவம் என சிலவற்றை போராடி தக்க வைத்து கொண்டுள்ளனர் எனப்பட்டது. ஆனால் பூர்வகுடிகளான இந்தியன்ஸின் நிலை அங்கு இப்பொழுது என்னவாக உள்ளது. அவர்களது இசையோ ,உணவு பண்பாடோ ஆவண படுத்த பட்டுள்ளதா ? 1800களில் Tear of trails என பூர்வகுடி மக்கள் கொத்து கொத்தாக மிஸிஸிபி ஆற்றின் மேற்க்கை நோக்கி இடம் பெயரவைக்க பட்டிருக்கின்றனர். Mt Rushmore எனப்படும் பூர்வகுடிகளின் புனிதமான பிளாக்ஹில்சை குடைந்து வெள்ளையின தலைவர்களின் முகங்களை செதுக்கி அதை ஒரு பிரபல சுற்றுலா தலமாக மாற்றி விட்டனர். நிறைய Cow Boy திரைப்படங்களில் பூர்வ குடிகளே வில்லன்களாக சித்தரிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். இவையெல்லாம் நான் வெறும் படித்து அறிந்தவை மட்டுமே . நீங்கள் பார்த்த வரையில் அங்குள்ள பூர்வகுடிகள் வாழ்வு எப்படி உள்ளது. அவர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவம் உண்டா ? குறைந்தபட்சம் ஒரு இசையோ, உணவோ பொது சமூகத்தின் புழக்கத்திற்கு வந்துள்ளதா ? 

    ஜப்பானிலும் இது போன்ற பொது வெளிக்கு வராமலே அழிந்துபோன பண்பாடுகள் உண்டு. வடக்கு தீவான ஹொக்கைடோவின் அய்னு இனமக்களை ஒற்றை ஜப்பானிய அடையாளத்தின் கீழ் கொண்டு வரும் பொருட்டு, தங்கள் மொழியை கைவிட்டு ஜப்பானிய மொழியை கட்டாயமாக படிக்கும்படி பணிக்கப்பட்டார்கள். அது போலவே தெற்கு தீவான ஒகினாவாவின் ரியூகியு இன மக்கள். அய்னுக்களுக்காவது 15 வருடங்களுக்கு முன்பு ஒரு மியூசியம் கட்டப்பட்டது, ரியூகியுக்களுக்கு அதுகூட கிடையாது.

    ஒவ்வொரு நகரத்திற்கு செல்லும் போதும் அந்நகரத்தின் நிலக்காட்சிகள் அழகாக வர்ணிக்க பட்டுள்ளது. நூலை படித்து முடித்த பின் அமெரிக்க நிலங்களின் நிறங்களை இப்படி கற்பனை செய்து கொண்டேன். நாஷ்வில்லில் இருக்கும் பச்சை, ஆஸ்டின் வரை சென்று அதன் பின் வைல்ட் வெஸ்டின் பாலை நிலங்கள் ஒருவித மஞ்சளாக மாறி, கன்யான்களின் நிலங்களில் ஆரஞ்சாக கண் நிறைத்து , வெஸ்ட் கரையோர மலைகளின் பிரவுனாக நிலை கொள்கிறது . வண்ணக்கடலில் இளநாகன் இந்திய நகரங்களில் வழியாக பயணம் செய்வதும் அவன் கண் வழியாக இந்திய நிலக்காட்சிகள் மாறுவதும் எழுதப்பட்டிருக்கும். நான் திரும்ப திரும்ப படிக்கும் வெண்முரசு அத்தியாயங்கள் அவை. ஜப்பானில் இது போன்ற நிலங்களின் நிறங்கள் மாறுவது அரிது. எங்கு சென்றாலும் பச்சை போர்த்திய மலைகள். மலைகளின் இடை வெளியில் உள்ள சமவெளிகளில் டோக்யோ, ஒசாகா, நகயோ போன்ற பெருநகரங்கள். பிலடெல்பியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் திரும்ப வரும் விமானப்பயணம் பகல் நேர பயணம் என்பதால் விமானத்தின் ஜன்னல் வழியாக நிலங்களின் நிறங்கள் மாறுவதை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தேன். புது அனுபவமாக இருந்தது. 

    மான்யுமண்ட் வேலியின் புகைப்படமே நான் கற்பனை செய்து வைத்திருந்த ஊரக அமெரிக்கா. பிரேக்கிங் பேட் போன்ற வெப் சீரிஸ்கள் வழியாக அமெரிக்காவை தெரிந்து கொண்டதால் இருக்கலாம். ஆள் அரவமற்ற அகண்ட சாலைகள், தூரத்தில் பெருமலைகள், எத்திசையில் காணினும் விரிவு. இம்மலைகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தை பற்றிய உங்கள் வர்ணனைகள் அந்த காட்சிகளுக்கே எனை கொண்டு சென்றது. மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தது கிராண்ட் கன்யான்களை பற்றிய அத்தியாயங்களுக்காகவே. திருஇடஞ்சுழி சரியான ஆரம்பம். ஸ்லாட் கன்யான்கள் விண்டோஸ் வால்பேப்பர்களாக புகழ் பெற்றவை. என்றாவது நேரில் சென்று பார்க்கும் அனுபவம் கிடைக்குமென நம்புகிறேன். கன்யான்களை பற்றி எழுதும் போது “பெரிய என்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குள் விரிவடையும் அளவிற்கு மிகப்பெரிதாக இருக்கிறது” என்று எழுதி இருந்தீர்கள். அந்த அனுபவத்தை ஒரு துளி சொல்லாக மாற்றியது போல இருந்தது. கிராண்ட் கன்யான்களை பிளம் கேக்குடன் ஒப்பிடுவது, சுடாமல் குளிர்ந்து நிற்பது, ஜூனிப்பர் மரங்களின் வயதை கன்யான்களின் வயதுடன் ஒப்பிட்டது என கூர்மையான அவதானிப்புகள். இருளில் மலைகளுக்கு அருகில் பயணிக்கும் போது உள்ள அழுத்த உணர்வு பற்றி எழுதியிருக்கிறீர்கள் , எனக்கும் அதே போல ஒரு அனுபவம் உண்டு. இருளில் ஏதோவொன்று கூடவே பயணிப்பது போல இருந்தது, காலையில் எழுந்து பார்த்தபோதே தெரிந்தது மிக அருகில் மலைகளென. இருளில் மலைகளின் நிழல்கள் பெருகிவிடும் போல. 

    இந்நூலில் மிக அதிகமான எழுதப்பட்ட சொல் சாண்ட்விச் ஆகவே இருக்குமென நினைக்கிறேன். நான் சென்ற போதும் அமேரிக்காவில் எங்கு காணினும் சாண்ட்விச்தான். விதவிதமான வகைகள். பிலடெல்பியாவில் பிரசித்தம் என சொல்லப்பட்ட Philly Cheese Steak சுவைத்து பார்க்கலாம் என வாங்கினேன். அந்த பிரட் எனது முழங்கை அளவானது . கிட்டத்தட்ட அரை கிலோ கறி இருந்திருக்கும் . இரு வேளைக்கு வைத்து சாப்பிட வேண்டியதாகியது. அமெரிக்கர்களின் சாண்ட்விச் மோகத்திற்கு ஏதோவொரு வரலாறு இருக்க வேண்டும். அவசர உலகில் செய்வதற்கு எளிமையாக இருப்பதாக இருக்கலாம். ஆனால் அதை விட ஆழமான வரலாறு ஒன்று இருந்திருக்கவேண்டும். ஐரோப்பிய குடியேறிகளும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் உணவு பண்பாடுகள் அதிக முரண்கள் இல்லாமல் சந்திக்கும் இடம் சாண்ட்விச் ஆக இருந்திருக்கலாம். 

    கலிபோர்னியாவின் கோல்டு ரஷை உங்கள் வாழ்வுடன் இணைத்த இடம் அருமை . “கணினி தந்த திரு”, சத்தியமான வார்த்தை . நானும் உங்களை போலவே, எலிவளை வாழ்வில் ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்தவன். தொழில்நுட்ப கல்லூரிகளும், கணினி துறையும் இப்படி பல பேரை வாழ வைத்து இருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம். ஆனால் ஜெ சொல்வது போல பண்பாட்டு அறிவோ, கலையறிவோ சிறிதும் அற்று ஒரு நுகர்வு அடிமை குழுமமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம் தலைமுறையில் இந்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகி அடுத்த தலைமுறையாவது வாசிப்பு, கலையறிவு என சிறந்து விளங்கும் என நம்புவோம். 

    ஜெ போன்ற ஒரு அறிவாளுமையுடன் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது செறிவான அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறன். அவருடன் பயனிப்பவர்கள் அர்த்தமுள்ள ஒரு செயலை நோக்கி செலுத்தப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அறிவியக்கமாக வளர்ந்து இருக்கிறார்கள். உங்கள் அலுவலக நண்பர் சொல்வது போல “ஓ … ஃபார் ஷியூர் கல்டிஷ் ”, ஆம் அறிவு தேடலுக்கான கல்ட் இது. 

    ஒரு நூல் வாசித்து முடித்த பின், பல வித உணர்வுகள் எழும். இந்நூல் எனக்குள் ஒரு அமெரிக்க சித்திரத்தை வரைவதற்கு மிக உதவியாக இருந்தது. நீங்கள் சொல்லும் ஒரு வரலாற்று செய்தி இன்னொரு வரலாற்றை பத்தி என்னை யோசிக்க வைத்தது. உதாரணமாக கறுப்பின இசையில் இருந்து பூர்வகுடிகளின் வாழ்வு வரை பயணிக்க முடிந்தது. கோல்டு ரஷ் படித்தபோது, லாஸ் ஏஞ்செல்ஸ் எவ்வாறு அமெரிக்க சினிமாவின் தலைநகரமாகியது என தேட ஆரம்பித்தேன். ஒட்டுமொத்தமாக அங்கங்கு வந்து செல்லும் நகைச்சுவை சிரிப்பு வரவைப்பைவையாகவும், சமகாலத்தவையாகவும் தோன்றியது. உங்களது சமூக அவதானிப்பும், மெல்லிய நகைச்சுவை கலந்த எழுத்தும் இன்னும் நிறைய படைப்புகளில் வருமென ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறேன். 

    நீங்கள் அவசியம் ஜப்பான் வர வேண்டும். நுண்ணுணர்வு உள்ளவர்களை கொண்டாடும் நாடு இது. ஜப்பானிய பயணக்கட்டுரையான “கீற்றோவியம்” நூலில் ஜெ ஜப்பானை பற்றி “நுண்மையில் விரிவு காணும் நாடு” என்று எழுதியிருப்பார். நூறு சதவிகிதம் பொருத்தமான சொல். அமெரிக்கா விரிவின் நாடு, சாலைகள், வியாபாரம் மட்டுமல்ல மக்கள் யோசிக்கும் விதம்கூட பெரும் விரிவு கொண்டவை. ஜப்பான் நுணுக்கங்களில் இருந்து விரிவை நோக்கி செல்லும் நாடு. ஓரிகாமி போல நுணுக்கமாக, கைக்கு அடக்கமாக ஒன்றை செய்து, தேவை வரும்போது மடிப்பு தெரியாமல் விரித்து எடுக்கும் கலை தெரிந்தவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது அவசியம் சந்திப்போம், இன்னும் உரையாடுவோம்.

    ##

    அன்புள்ள நண்பர் முத்து,

    உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது.  நீங்களும் ஜெ.வின் தீவிர வாசகர், வெண்முரசு வாசித்தவர், வெள்ளிமலைக்கு சென்றிருக்கிறீர்கள், ஜப்பானில் ஜெ.வுடன் ஒரு பெரிய பயண திட்டம், மென்பொருள் துறை என எல்லாவற்றிலும் ஒரு இணை மனதை கண்டு கொண்ட ஒரு பரவசம்.  

    உங்கள் தனிப்பட்ட ஜப்பான் பயணங்களை பற்றி அறிவதற்கும் மேலும் ஆர்வமாக இருக்கிறேன். மௌண்ட் ப்யூஜியில் உங்ககளுடைய அனுபவம், நீங்கள் ஜப்பானில் பார்த்த இடங்கள், ஜப்பானிய பண்பாடு, அய்னு, ரீயூகியு போன்ற பழங்குடிகள் என வாய்ப்பிருந்தால் விரிவாக (அல்லது கட்டுரைத்தொடராக எழுதவும்.)  நீங்கள் அமெரிக்க சாலைகளை பற்றி சொல்வதைப் போலவே எனக்கு ஜப்பானின் அதிவிரைவு ரயில்கள் மேல் பெரிய காதல் உண்டு.  

    இன்னும் சில வருடங்களில் கண்டிப்பாக ஜப்பான் வரும் திட்டம் இருக்கிறது.  நீங்களும் சான் பிரான்சிஸ்கோ வந்தால் தெரியப்படுத்தவும், கண்டிப்பாக நேரிலும் சந்திப்போம்.

    அன்புடன்,

    விசு

    இரு கடல் ஒரு நிலம் புத்தகம் வாங்க : https://vishnupurampublications.com/index.php?route=product/product&product_id=445

    கிண்டில் பதிப்பு வாங்க: https://a.co/d/00m5cpHa

  • VLC Bay Area – Feb 2026 Monthly Meet

    https://livingtamillitfest.org/ – வாழும்தமிழ் நியூயார்க் மாநாட்டிற்கு வருகை தரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பற்றி ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா’ மாதாந்திர கூடுகையில் உரையாடுகிறோம்.

    மட்டுறுத்துனர்: நண்பர் பிரசாத் வெங்கட்

    சிறுகதைகள் குறித்த என் வாசிப்பு:

    சிறுகதை : வைரம் – ம.நவீன்

    குமாரசாமியும் லட்சுமணனும் வகுப்பு தோழர்கள். குமாரசாமி பணக்காரன், நன்றாக படிக்கக்கூடியவன். ரப்பர் தோட்டத்தில் குமாரசாமியின் அப்பா பெரிய நிலம் வைத்திருந்தவர். லட்சுணண் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்தவரின் மகன். பள்ளி நாட்களில் லட்சுமணனை கோலிகுண்டு விளையாட அழைத்து, இருட்டில் ஒளிரும் அந்த குண்டின் மீது பொறாமைப்பட்டு, அந்த கோலிகுண்டு வைரமாகும் என ஒரு மரத்தடியில் புதைக்க சொல்கிறான் குமாரசாமி. ஐம்பது வருடங்கள் கழித்து, தன் மகன் திருமணத்திற்காக குமாரசாமிக்கு பத்திரிக்கை வைக்க வருகிறார் லட்சுமணன். லட்சுமணண் சொந்தமாக தையற்கடை வைத்திருக்கிறார். குமாரசாமி வக்கீலாகி, பெரிய பணக்கரனாக இருக்கிறார். பென்ஸ் கார் வைத்திருக்கிறார். லட்சுமணனை சீண்டுவதற்காக அந்த குண்டை தோண்டிப்பார்க்க விரும்புகிறார். லட்சுமணன் தோண்டும்போது வைரம் போல ஏதோ மின்னுகிறது. குண்டு வைரமாயிருப்பதை தாங்கமுடியாமல் அதன் மீது மண் அள்ளிப்போட்டு மூடுகிறார் குமாரசாமி.

    இந்த கதையில் அந்த வைரம் என்பது என்ன ? என் வாசிப்பில் அது லட்சுமணனின் வாழ்க்கை என்று தோன்றுகிறது. தையற்கலைஞராக எளிய வாழ்க்கையாக இருந்தாலும், அது சுதந்திரமான வாழ்க்கை. மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார். அந்த சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் குமாரசாமியால் தாளமுடியவில்லை என்று படுகிறது.

    சிறுகதை: அறைக்குள் புகுந்த தனிமை: சந்திரா தங்கராஜ்

    தனிமையிலும், வெறுமையிலும் இருக்கும் ஒரு பெண் தன் தோழியை சந்திக்க செல்கிறாள். தோழியும் தனிமையில்தான் இருக்கிறாள். இருவரும் கடற்கரைக்கு செல்கிறார்கள். ஆழமான விஷயத்தை பேசாமல் வேலை, சினிமா, இலக்கியம், வாழ்வின் இருப்பு என ஏதேதோ மேலோட்டமாக பேசிவிட்டு பிரிகிறார்கள். அவள் தன்னுடைய இருசக்கர வண்டியை எடுக்க வரும்போது வயதில் இளைய ஒரு “ரோமியோ”வை பார்க்கிறாள். ஒரு டீ கடையில் அவளை பின் தொடர்ந்து வந்து போலியாக அறிமுகப்படுத்திக்கொள்கிறான். அவன் போலித்தனம் அவளை எரிச்சலடைய வைக்கிறது. கல்லூரியில் படிப்பதாக சொல்கிறாள். சிறிது நேரத்திற்குபின் அவனை சீண்டும்விதமாக, தான் மாணவி இல்லை, “பிராஸ்டியூசன்” செய்கிறேன் என்கிறாள். அவன் தோனி மாறுகிறது. “நீங்கள்” என அதுவரை அழைத்தவன், “நீ” என அவளை அவமதிக்கும் நோக்கோடு “எவ்வளவு?” என்கிறான். அவளும் “இரண்டாயிரம் ரூபாய்” என்கிறாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்து, ஏமாற்றி ஒரு அறையில் பூட்டி வைக்கிறாள். அவன் இரவு முழுதும் அழுது, மிரண்டு, கதறி, காலையில் அரண்டு ஓடிவிடுகிறான். அவள் அறையில் தனிமையில் இருக்கிறாள்.

    சந்திரா தங்கராஜ் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை. எனக்கு பிடித்திருந்தது. “அவன்”, “அவள்” “தோழி” என யாருக்கும் பெயர் இல்லாத, வாழ்வின் இருப்பை, அதன் வெறுமையை ஆராயும் நவீனத்துவ பாணியிலான கதைகள் என்னுடைய விருப்பமான கதைகள் இல்லை. கதையின் முதல் சில பத்திகள் படித்தபோது, இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதை என நினைத்தேன். ஆனால் அந்த ஆண் வந்தவுடன் கதை விறுவிறுப்படைகிறது. “காதல்” என நாம் பொதுவாக சொல்லும் ஆண்-பெண் கற்பனாவாத லட்சிய உறவின் நேர் தலைகீழாக்கம் இந்த கதை. காமத்திற்காக அவன் ஆடும் நாடகம், அவனுடைய நாடகத்தை கலைப்பதற்காக அவள் சொல்லும் பொய், அந்த பொய் உருவாக்கும் சிறுமை உருவாக்கும் சிறுமையும் கசப்பும், அந்த பொய்யை நீட்டிப்பதில் உருவாகும் அபாயம், கடைசியில் வேட்டைக்காரன் வேட்டையாடப்படுகிறான். ஏன் அந்த பெண்களுக்குள் ஆழமான எதையும் பேசமுடியவில்லை ? அறைக்குள் புகுந்த தனிமை எது ? வெறுப்பும், கசப்பும், தனிமையும் உருவாகும் புள்ளி எது ? என நிறைய யோசிக்க வைக்கும் ஆற்புதமான கதை.

    அம்புப் படுக்கை : சுனில் கிருஷ்ணன்

    பர்மாவில் இருந்து பல்வேறு ஆபாயங்களில் மயிரிழையில் தப்பி வந்த ஆனாரூனா செட்டியார் மரணப்படுக்கையில் இருக்கிறார். அவர் தப்பி வந்ததாக சொல்லும் கதைகள் பெரும்பாலும் அவரே சொல்லும் புளுகுகள். செட்டியாரின் மரணத்தை எதிர்பார்த்து சுற்றமும் நட்பும் “சீக்கிரம் முடிஞ்சா வேறு வேலைய பார்ப்போம்” என்ற பாவனையில் காத்திருக்கிறது. ஆயுர்வேத மருத்துக்கல்லூரியில் படிக்கும் சுதர்ஷனை ஆனாரூனாவின் நாடி பார்க்க அழைத்து வருகிறார்கள். சுதர்ஷனின் தாத்தா ஆயுர்வேத வைத்தியர். ஆனாரூனாவின் புளுகுகளை ரசித்துக்கேட்டவர். நாடி பார்த்து யார் எப்போது மரணிப்பார்கள் என சரியாக கணித்த வைத்தியர் தாத்தா, முதுகுத்தண்டுவட டி.பி. வந்து அம்புப்படுக்கையில் படுத்தைப்போல கொடுரமான வலியில் இறக்கிறார். நாடி பார்ப்பது, ஆயுர்வேதமே கப்சா என நினைக்கும் பேரன் ஆனாரூனாவின் நாடியை பார்க்கிறார். நாடி பார்த்து என்ன சொன்னார் என்பதுதான் கதை.

    சுனில் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” தொகுப்பில் இருக்கும் தலைப்பு கதை. ஆயுர்வேதத்தை குடும்ப பாரம்பரியமாக கொண்ட ஒருவன், ஆனால் ஆயுர்வேதம் மேல் நம்பிக்கை இல்லாமல் இருப்பவன் அடையும் அறிதல்தான் கதை. மரணத்தருவாயில் இருக்கும் நோயாளியிடம் என்ன சொல்ல வேண்டும் ? நோயாளி நம்ப விரும்பும் கடைசி ஆசையா ? அல்லது “உண்மையா” ? ஆயுர்வேத நாடி வர்ணணைகள் பிரமாதமாக இருந்தது.

    சொல்ல முடிந்தது: சு.வேணுகோபால்

    ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ரகுராம் தன் அம்மா வரதம்மாளை வேற்றாளான தர்மராஜுடன் உறவில் இருக்கும்போது பார்த்துவிடுகிறான். அவள் தலைமுடியை பிடித்து இழுத்து, அடித்து ஊர் முன்பே அவமானப்படுத்துகிறான். தர்மராஜை கொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. சந்தர்ப்பம் அமையவில்லை. ரகுராம் ஊரை விட்டு ஓடி, எச்சில் தட்டு கழுவி, திரும்பிவந்து, மில் வேலைக்கு போகிறான். தர்மராஜ் வயதாகி இறக்கிறார். “ஏம்பா, அந்த எழவு வீட்டில் போய் ஒரு பாட்டம் அழுதிட்டு வந்திரட்டுமா?” என அவன் அம்மா ரகுராமிடம் கேட்க, அவன் திடுக்கிட்டு சரி என்கிறான்.

    பதின்பருவத்தில் இருக்கும் ஒரு சிறுவன் வயதானபின் உறவுகளை புரிந்து கொள்ளும் உணர்ச்சிகரமான கதை. தனியாக வருவான் என கறிக்குழம்பு வைத்து காத்திருந்த ரெஜினா அக்காள், சீக்கு வந்து சாவும் பெரியம்மாவின் மகள், உறவு மீறல்கள் வாழ்வின் ஒரு பகுதி என எடுத்துக்கொள்ளும் கண்ணம்மா கிழவி என பல பெண்களை பார்த்து ரகுராமன் அடையும் மாற்றம்தான் கதை.

  • 2025

    2025ஆம் ஆண்டு செயல் நிறைந்த ஆண்டாக இருந்தது. மகிழ்வான வருடம். 

    • விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உதவியுடன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் 2025 அமெரிக்க பயணத்தில் பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம். அவற்றை பற்றிய என் எண்ணங்களை கீழே தொகுத்திருக்கிறேன்.
    • வாசிப்பு குழுமம்: “வெண்முரசு” ஆவணப்படத்தை ஃப்ரீமாண்ட் நகரில் நண்பர் சுதர்ஷனுடன் இணைந்து 2021 கோவிட் காலகட்டத்தில் திரையிட்டேன். சாரதா, பிரசாத், சாரதி, சுதா, கண்ணப்பன், அண்ணாதுரை ஆகியோரை முதலில் அந்த திரையிடலில்தான் சந்தித்தேன். பழைய நண்பர்கள் ஆர்.வி.யும், பத்மநாபனும் வந்திருந்தார்கள். அதன்பிறகு பூன் முகாமில் விஜய் ரங்கராஜன், ஜெர்ரி லூயிஸ், அசோக் உள்ளிட்டோரை சந்தித்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கலிபோர்னிய நண்பர்கள் நேரில் சந்தித்தோம். சாரதாவும், பிரசாத்தும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தே பே ஏரியாவில் ஒரு வாசிப்பு குழுமம் தொடங்கலாம் என்றார்கள். உண்மையில் எனக்கு மிக தயக்கமாக இருந்தது. நேர மேலாண்மை, ஒருங்கிணைப்பு, வாசிப்பு பட்டியலை தயாரித்தல் என அதற்கு ஒரு தீவிரம் தேவையாகிறது. வாசிப்பு குழுமங்களின் “பயன் மதிப்பு” என்ன என்பது எனக்கு ஒரு கேள்வியாக இருந்தது. பத்து வருடங்கள் முன்பு வாசிப்பு குழுமங்களை ஒருங்கிணைத்து இருக்கிறேன். சில பழைய அனுபவங்களும் தயக்கத்திற்கான காரணம். ஆனால் அதேசமயம் எனக்கு தமிழ் / இந்திய இலக்கியத்திற்கான அறிமுகமும் அந்த குழுமத்தால்தான் சாத்தியமானது. வாசிப்பு குழுமத்தை மீண்டும் துவங்கலாம் என சாரதா ஆர்வமாக இருந்தார். சென்ற ஆண்டு ஜெ கலிஃபோர்னியா வந்தபோது அவருடைய ஆலோசனைகளை கேட்டோம். மாதம் ஒரு முறை சந்திக்கவேண்டும்; யார் வந்தாலும், வராவிட்டாலும் தொடர்ந்து நடத்துங்கள்; சரியான நேரத்திற்கு துவங்கி முடிக்கவேண்டும்; ஏழு நிமிட உரை வடிவம்; உரைகளை காணொளியாக பதிவு செய்து யூடியூப் தளத்தில் பதிவேற்றுங்கள் (உரையாற்றுபவர் அனுமதியுடன்), வாசிப்பு குழுமத்திற்கான வலைதளம் ஒன்று இருப்பது நல்லது; புதிதாக யாராவது வந்தால் அவர்களுக்கு இந்த குழுமம் எப்படி செயல்படுகிறது என்பது புரியும்; சிறுகதைகளுடன் துவங்குங்கள்; அவ்வப்போது ‘டிராமடிக் ரீடிங்’ (ஒரு சிறுகதையை எடுத்து வெவ்வேறு கதாப்பாத்திரங்களை வெவ்வேறு நபர்கள் உணர்ச்சியுடன் வாசிப்பது, பின்னனியை ஒருவர் வாசிப்பது), ஒப்பனையற்ற நாடகம் போன்றவற்றையும் முயற்சிக்கலாம் என்றார். சென்ற ஆண்டு ஜெ.வின் “கேள்வி பதில்” நிகழ்விற்கு வந்தவர்களை எங்கள் வாசிப்புக்கான வாட்ஸ்-ஆப் குழுமத்தில் சேர்த்துக்கொண்டு, 2024 நவம்பரில் வாசிப்பு குழுமத்தை துவங்கினோம்.  ஜெ.வின் சிறுகதை “விமர்சகன் பரிந்துரை” பட்டியலில் இருந்து கதைகளை பத்மநாபன் தேர்ந்தெடுக்கிறார். முதல் இரண்டு சந்திப்பிலே பிரசாத்தின் ஒருங்கிணைக்கும் திறனை கண்டு வியந்தேன். நேர மேலாண்மைக்கு பிரசாத்தான் சரியான ஆள் என்று தோன்றிவிட்டது. பேச்சுக்கலையை வளர்க்கும் “டோஸ்ட் மாஸ்டர்ஸ்” குழும அனுபவம் அவருக்கு உள்ளது. மூன்றாவது சந்திப்பிற்கு மௌனியின் கதைகளை(!) படித்து அதற்கு அடுத்த சந்திப்பிற்கும் வாசகர்கள் வந்தவுடனே, சரி நம் ஆட்கள் தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மாதம்தோறும் முதல் சனிக்கிழமை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை ப்ரீமாண்ட் நூலகத்தில் சந்திக்கிறோம். முதல் வருட முடிவில் பனிரெண்டாவது சந்திப்பில் அசோகமித்ரனின் கதைகளை வாசித்து, விவாதித்தோம். ஜெ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் சாரதி, சத்யாநாராயணன், பாலாஜி குருமூர்த்தி சிறப்பாக உரையாற்றினார்கள். குழுமத்திற்கான சில ஆலோசனைகளை ஜெ சொன்னார். முதன்மையாக குழுமம் என்பது நண்பர்கள் கூடிக்களித்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு இடம் (உவப்பத்தலைகூடி உள்ளப்பிரிதல்); இரண்டாவது குழுமம் “வாழும் குழுமம்” ஆக இருக்க வேண்டும். “Breathing” என்பது முக்கியம். புதிய நண்பர்களுக்கான வாசல் எப்போதும் திறந்து இருக்க வேண்டும், புதியவர்களை சேர்த்து குழுமம் வளர்ந்தபடியும் இருக்க வேண்டும்; ஓரளவிற்கு மேல் நெகட்டிவ்வாக தொடர்ந்து பங்களிப்பவர்களை குழுமத்தைவிட்டு விலக்கிவிடவும் சொன்னார். புத்தக குழுமத்தின் “பயன் மதிப்பு” தெளிவாக தெரிந்தது. நாவல் பட்டறைக்கான பங்கேற்பாளர்கள், புத்தக சந்திப்பிற்கு ஏற்பாடுகள் என குழுமத்தின் நண்பர்கள் உதவி இல்லாமல் நிகழ்ந்திருக்காது. நாங்கள் துவங்கிய அதே காலகட்டத்தில் டெக்சஸ் டலாஸ் நகரிலும் பிரதீப், மூர்த்தி ஒருங்கிணைப்பில் வாசிப்பு குழுமம் துவங்கி சிறப்பாக செயல்படுகிறது. புத்தகம் வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், எழுதுபவர்கள், இலக்கிய செயல்பாடுகளுக்கு நிதி அளிப்பவர்கள் என எவ்வகையிலும் நேர்மறையாக பங்களிப்பவர்களை குழுமத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
    • நாவல் பட்டறை: ஆகஸ்ட் மாதம் நடந்த க.நா.சு இணையவழி  கலந்துரையாடலில் மலேசிய எழுத்தாளர் ம.நவீன் பங்கேற்றார். சியமந்தகம் தொகுப்பில் நவீனுடைய “பெருங்களிறின் வருகை” கட்டுரையை வாசிக்குபோது, எப்படி பத்து-பதிணைந்து வருடங்களில் மலேசியாவில் ஒரு பல எழுத்தாளர்கள் உருவாகி நாவல்கள், சிறுகதைகள் என தரமான படைப்புகள் வெளிவந்திருக்கிறது என்பது புரிந்தது. 2016இல் ஜெ நடத்திய சிறுகதை பட்டறை, 2017இல் ஜெ.வும், நாஞ்சில் நாடனும் இணைந்து நடத்திய குறுநாவல் பட்டறை, நவீன் நடத்திவரும் வல்லினம் இலக்கிய இதழும் மலேசியாவின் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஆசிரியர்களின் வருகையை எப்படி சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் தெரிந்தது. கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் பூன் குன்றில் இலக்கிய முகாமும், தத்துவ முகாமும் நடைபெறுகிறது. அதன் நீட்சியாக இந்தமுறை  ஜெ வரும்போது எழுத்து பட்டறைகள் நடத்த வேண்டும் என்றும் தோன்றியது. சமீபத்தில் சென்னையில் மானசா பதிப்பகத்தின் நாவல் போட்டிக்காக பெண்களுக்கான ஒரு நாள் நாவல் பட்டறையை ஜெ நடத்தினார். அமெரிக்காவிலும் அதேபோல ஒரு நாவல் பட்டறையை நடத்த வேண்டும் என கலிஃபோர்னியா நண்பர்களிடம் கலந்துபேசி ஒரு சிறிய குழு திரண்ட உடனே, ஜெ.விடம் நாவல் பட்டறைக்கான ஒப்புதல் வாங்கினேன். மேற்குக்கரையின் பெருநகரங்கள் (சான் பிராண்சிஸ்கோ பே ஏரியா, சாக்ரமண்டோ, சியாட்டில், போர்ட்லாண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ) அனைத்தில் இருந்தும் முப்பது நண்பர்கள் கலந்துகொண்டார்கள். பழனி ஜோதியும், நிர்மலும் கிழக்குக்கரையிலும் ஒரு ‘நாவல் பட்டறை’யை அடுத்த சில வாரங்களில் ஒருங்கிணைத்தார்கள். அமெரிக்க தமிழ் எழுத்தாளார்களில் நல்ல சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியவர்கள் உண்டு. என் பார்வையில் அர்விந்த் எழுதிய “சீர்மை” மட்டுமே சிறப்பான குறுநாவல். அமெரிக்காவில் இருந்து தமிழில் நல்ல நாவல் என எதுவும் இதுவரை வந்ததில்லை. சிறுகதைகள், கட்டுரைகள் முக்கியமானவை என்றாலும் நாவல் எழுதும் வரை ஒருவர் உண்மையில் எழுத்தாளர் இல்லை. “நாவல் பட்டறை” அந்த வகையில் ஒரு முக்கியமான தொடக்கம். இனிவரும் காலங்களில் சிறுகதை பட்டறைகள், வாசிப்பு பட்டறைகள், முழுமையறிவு வகுப்புகளை அமெரிக்காவில் ஒருங்கிணைப்போம்.       
    • புக் டூர்”:  பிரமோதினி இரண்டு வாரத்திற்கு ஒரு ஆங்கில நாவல் என வாசித்து தள்ளுவாள். அவளுக்கு பிடித்த ஆலி ஹேசல்வுட் வீட்டிற்கு அருகே ஒரு ‘புக் டூரு’க்காக வந்தார். புத்தக கடைகள், நூலகங்கள் என அமெரிக்க எழுத்தாளர்கள் ‘புக் டூர்’ போகிறார்கள். ஜெ.வின் “ஸ்டோரீஸ் ஆஃப் தி ட்ரூ” (‘அறம்’ சிறுகதை தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு – பிரியம்வதா) இந்த வருடம் FSG பதிப்பகம் மூலமாக அமெரிக்காவில் வெளிவந்து இருக்கிறது. பதிப்பகம், விஷ்ணுபுர நண்பர்கள் உதவியுடன் ‘புக் டூரை” அமெரிக்கா முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் ஏற்பாடு செய்தோம். நாங்கள் நினைத்தைவிட சிறப்பாக நடந்தது. கலிஃபோர்னியாவில் புத்தக சந்திப்பை ஏற்பாடு செய்ய சில கடைகளை தொடர்புகொண்டு அவர்கள் ஏற்கனவே வேறு நிகழ்வுகளுக்கு முன்பதிவு செய்துவிட்டதால் சோர்வடைந்த போது, மாதாந்திர புத்தக சந்திப்பில் நண்பர்களிடம் உதவி கேட்டேன். இந்த பகுதியிலே பெரிய புத்தக கடைகளில் ஒன்றான சான் மாட்டேயோ பார்ன்ஸ் & நோபில் புத்தக கடையை பாலாஜி குருமூர்த்தி தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தார். அஞ்சலி பிரசாத் நிகழ்வை சிறப்பாக தொகுத்துவழங்கினார். எப்போதும் எதையாவது திட்டமிடும்போது பிளான் ஏ, பிளான் பி, பிளான் சி என்று போட்டு வைத்திருப்பேன். ஆனால் ‘கச்சிதமாக’ நடக்கவேண்டும் என்பதில்லை, சில பிழைகள் நிகழ்ந்தாலும் பரவாயில்லை, யோசனைகளை உரிய முறையில் சொன்னால் போதும், உதவிக்கு நண்பர்கள் வருவார்கள், நிகழ்வுகள் நன்றாக நடக்கும் என இந்தமுறை அனுபவபூர்வமாக கண்டுகொண்டேன். பிழைகளை குறித்துவைத்துக்கொண்டு அடுத்த முறை திருத்திவிடலாம். இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிதல் எனக்கு இதுதான்.      
    • “தத்துவ வகுப்புகள்”: ஜெ நடத்திய எமர்சன் பூன் முகாமின் இரண்டு தத்துவ வகுப்புகளிலும் நானும் பிரமோதினியும் கலந்துகொண்டோம். ‘இந்திய தத்துவ அறிமுகம்’, ‘வேதங்கள்’ என இரண்டு வகுப்புகள். ஏற்கனவே முதல் வகுப்பில் சென்ற ஆண்டு கலந்து கொண்டோம். ஒட்டுமொத்த இந்தியாவும் செயலின்மையில் சிக்கி வில்லை கீழே போட்ட தருணத்தில் கீதை சொல்லப்பட்டிருக்கும்; அதேபோல படையெடுப்பகளால் இந்திய ஆலயங்கள் இடிந்துகிடந்த போது “மகிழ்ச்சியாக இரு” என்ற தத்துவத்துடன் வல்லபரின் “புஷ்டி மார்க்கம்” தோன்றியது என பலவற்றை ஜெ சொன்னார். தத்துவ வகுப்பின் குறிப்புகளை வீட்டிற்கு வந்து மீண்டும் விரிவாக தட்டச்சு செய்து வைத்துக்கொண்டேன்.     
    • “இந்தியா பயணம்”: கோவிட், விசா சிக்கல்கள், சில காரணங்களால் ஆறு வருடங்களாக இந்தியாவிற்கு போக முடியவில்லை. இந்த வருடம் கோடையில் இரண்டு மாதங்கள் இந்தியாவில் இருந்தோம். அலுவலக வேலைக்காக மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் ஆறு வாரங்களும், தமிழ்நாட்டில் இரண்டு வாரங்களும் இருந்தேன். என் அப்பாவும், அம்மாவும் பூனே வந்து உடன் தங்கியிருந்ததும், சென்னை, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை என உறவினர்களை சந்தித்ததும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பல வருடங்கள் கழித்து வருவதால் கோயில்கள், குலதெய்வ வேண்டுதல்கள், உறவினர் சந்திப்புகள் என எல்லா நாட்களும் பயணங்கள்தான். விரிவாக பிறகு எழுதவேண்டும். யோகா குருஜி சௌந்தர், எழுத்தாளர் அஜிதன், ஜெ மூவரையும் சென்னையில் சந்தித்தோம். 2026இல் விஷ்ணுபுர நிகழ்வுகளுக்கு வரவேண்டும்.    
    • நிரல் போட்டி”: நான்கு வருடங்களாக கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் கணினி நிரல் போட்டியை நான், மகேந்திரராஜன், அருள்ராஜ் நடத்தியிருக்கிறோம். கல்லூரியில் மெஷின் லேர்னிங் சார்ந்து ஒரு ஓப்பன் சோர்ஸ் டீமை உருவாக்கவேண்டும் என்பது நோக்கம். 2023 ஆம் ஆண்டு இலங்கை மொரட்டுவா பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்றார்கள். திறன்வாய்ந்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை குறைவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு “சர்டிபிகேட்” வாங்கிக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் தொடர்ந்து ஆறு மாதம் செயலாற்றுவதில் இல்லை. பணம் பிரச்சனையே இல்லை. ஆனால் உண்மையான ஆர்வம் இருக்கிறதா? நாங்கள் செலவிடும் நேரம் மதிப்புடையதாக இருக்கிறதா? என்பதே கேள்வி. எனக்கு நேரமும் குறைவாக இருக்கிறது.  ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு பிறகு நிரல் போட்டிகளை நடத்துவதும் சிக்கல். ஏ.ஐ எழுதிய நிரலா என்றும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வருடம் ஒரு பிராஜக்ட் செய்யலாம் என கல்லூரியில் கேட்டுக்கொண்டதால், டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு யோசனையை தெரிவித்து இருக்கிறேன். சில மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்திருக்கிறார்கள்.
    • தினமும் ஒரு மணி நேரம் எழுதும் குழுமம்”: எழுத்தாளர்கள் தினமும் எழுத வேண்டும் என ஜெ சொன்னார். ஒரு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம் தேர்வு செய்து, தினமும் எழுதினால் அந்த இடத்தில் போய் அமர்ந்தால் எழுதும் மனநிலை அமையும் என்றார். மராத்தான் ஓடுவதற்கு தினமும் பயிற்சி எடுப்பதுபோல. பூன் முகாமிற்கு பின்பு, தினமும் ஒரு மணி நேரமாவது எழுதும் குழுமம் ஒன்றை சில நண்பர்களுடன் பரிட்சார்த்த முறையில் வாட்ஸ்-ஆப்பில் தொடங்கியிருக்கிறோம். என்ன வேண்டுமாலும் எழுதலாம். தினமும் எவ்வளவு நேரம் எழுதியிருக்கிறீர்கள், எத்தனை வார்த்தைகள் எழுதியிருக்கிறீர்கள் என்பதை மட்டும் பதிவிட்டால் போதும். எழுதியதை பகிரவேண்டும் என்று அவசியம் இல்லை. எழுத்துக்கு மட்டும் இல்லை, இசை உள்ளிட்ட கலைகளுக்கும் இது பொருந்தும் என்ற இசையமைப்பாளர் ராலே ராஜன் “மலைமேலெ ஒரு பாறையை உருட்டிப்போவது” என்ற உவமையை சொன்னார். ஒரு நாள் பயிற்சி செய்யவில்லை என்றாலும், திரும்பிப்போனால் பாறை விட்ட இடத்தில் இருக்காது, கீழே போயிருக்கும், மீண்டும் கீழே இருந்து மேலே தள்ள வேண்டும் என்றார். யோகா குருஜி சௌந்தர் ஒரு செயலை 90 நாட்கள் இடைவிடாமல் செய்தால் மனம் அதை இயல்பாக செய்யத்துவங்கும் என்கிறார். குழுமம் துவங்கியதில் இருந்து 60 நாட்களும் தினமும் ஒரு மணி நேரம் தமிழில் எழுதியிருக்கிறேன்.  2026க்கான  இலக்குகளில் ஒன்று 365 நாளும் எழுத வேண்டும் என்பது. 

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • எழுத்தாளர் அ.முத்துலிங்கம் – அறிமுக உரை

    விஷ்ணுபுர இலக்கிய வட்டம் – பே ஏரியா கிளையின் மாதாந்திர சந்திப்பில் (நவம்பர் 2025 – பதிமூன்றாவது கூட்டம்) எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை பற்றி ஆற்றிய அறிமுக உரையின் கட்டுரை வடிவம்.

    நண்பர்களுக்கு வணக்கம்.

    குங்ஃபு பாண்டா படத்தில் ஒரு ஆமை வரும். மாஸ்டர் ஊகுவே. மூத்த மடாதிபதி. எனக்கு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களை நினைக்கும்போதெல்லாம் மாஸ்டர் ஊகுவேதான் நினைவிற்கு வருவார்.  

    எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பங்களிப்பு என்பது முன்று வகைகளில் முக்கியமானது.

    1. முதல் பங்களிப்பு என்பது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஆப்ரிக்க, அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட தமிழில் எழுதப்படாத வெவ்வேறு நிலப்பகுதிகளையும், அந்த பண்பாட்டின் பின்புலத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளும் கட்டுரைகளும் தான். இரண்டு பண்பாடுகள் சந்திக்கும் போது, ஒன்றுடன் ஒன்று மேற்கொள்ளும் உரையாடல்களும், மதிப்பீடுகளும் நம்மை நாமே பார்த்துக்கொள்ள உதவுபவை. உதாரணமாக:
      • ஆப்ரிக்காவில் வைர சுரங்களில் வேலை செய்யும் பெண்களை புகைப்படம் எடுக்க விரும்புகிறார். அவர்கள் மிகவும் வெட்கப்படுகிறார்கள். அவர்கள் பொதுவாக வெட்கப்படமாட்டார்கள். பிறகு ஒரு மரத்திற்கு பின்பு சென்று டி.ஷர்ட்டை கழட்டிவிட்டு பிறந்த மேனியாக வந்து சிரித்தபடி போஸ் தருகிறார்கள். அசிங்கமான டிஷர்ட் போட்டிருப்பதற்காக வெட்கப்பட்டிருக்கிறார்கள். (நாம் தொப்பியை கழட்டி, கலைந்த தலைமுடியை கைகளால் அழகுபடித்திக்கொண்டு போஸ் தருகிறோம் இல்லையா?). அப்படியென்றால் “வெட்கம்”, “அழகு” என்றால் என்ன? 
      • இந்தியர்கள் இறந்தவர்களை எரிக்கிறோம் என்பதை தெரிந்து “அட கொடூரர்களா” என்று ஆப்ரிக்கர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். ஆப்ரிக்க சடங்குகளில் இறந்தவர்களின் சிறிய பகுதியை அறுத்து உண்கிறார்கள். இறந்தவர்கள் நம் உடலின் பகுதியாக ஆகி என்றென்றும் நம்மோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை அது. இயேசு கிறித்துவின் உடலாக அப்பமும், அவர் ரத்தமாக வைனும் பருகும் சடங்கின் மூல வடிவம் அல்லவா?
      • ஏற்கனவே பிள்ளை பெற்ற பெண்களை திருமணம் செய்வதற்கு போட்டி நிலவுகிறது. ‘கற்பை காப்பாற்றிக்கொள்ளும் பெண்’ என்ற நம் தமிழ் சினிமாக்கள் அவர்களுக்கு மிக அந்நியமாக இருக்கிறது. சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் அ.முத்துலிங்கம் தமிழின் “முதல் உலக எழுத்தாளர்”.  
    2. இரண்டாவது பங்களிப்பு என்பது அவருடைய அமைப்புச்செயல்பாடுகள். எழுத்தாளர்களில் இருவகை உண்டு. எழுத்து மட்டுமே வாழ்க்கை என இருப்பவர்கள் ஒருவகை. எழுத்தும், எழுத்து சார்ந்த பண்பாட்டு அமைப்புகளையும் உருவாக்கியர்கள் இரண்டாம் வகை.
      • கனடா இலக்கிய தோட்டம் என்னும் அமைப்பை உருவாக்கி “இயல்” விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது), கவிதை, கணிமை, சிறந்த புனைவு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்குகிறார். “கனடா இலக்கிய தோட்டம்” இருபது வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தமிழில் ஒரு தலைமுறைக்காலம் செயல்பட்டு வரும் பண்பாட்டு அமைப்புகள் குறைவு. தமிழில் விஷ்ணுபுரம் விருதிற்கு அடுத்து இயல் விருது முக்கியமானது.
      • ஹார்வேர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை, டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பாற்றியவர். இந்த இருக்கைகள் எட்டு மில்லியன் டாலர் நன்கொடைகள் மூலம் உருவாக்கப்பட்டவை. செல்வந்தர்கள், அரசாங்கம், $50 நன்கொடை தருபவர் என எல்லா தரப்பிடம் இருந்தும் திரட்டப்பட்ட நன்கொடை. ஏழு பேரிடம் கேளுங்கள் ஒருவர் தருவார் என்கிறார். கேட்டுக்கொண்டே இருங்கள் கிடைக்கும் என்பார். தமிழ் சூழலில் கோயில், மதம் சாராத நன்கொடை திரட்டல்களில் இந்த நன்கொடையே பெரியது என்று நினைக்கிறேன். எதிர்கால நன்கொடை திரட்டல்களுக்கு இது ஒரு முன்னுதாரணம். 
    3. மற்ற இரண்டு பங்களிப்பளவிற்கு இல்லையென்றாலும், மூன்றாவது பங்களிப்பு என்பது வெவ்வேறு ஆங்கில எழுத்தாளர்கள், அறிஞர்களை சந்தித்து இவர் எடுத்த நேர்காணல்கள். “வியத்தலும் இலமே” என கட்டுரை தொகுப்பாக வந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ போன்றவர்களை சந்திப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. நிறைய “எழுத்தாளர் சந்திப்பு”களில் இவர் மட்டுமே பழுப்பு நிறத்தவர். எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதினால், முகவர்களை தொடர்புகொண்டால் பதில் வராது.  எழுத்தாளர்களின் மனைவிகளை சந்திப்பதன் மூலம் எழுத்தாளர்களை நெருங்கமுடியும் என்கிறார். பண்பாட்டு உரையாடல் என்ற அளவில் இது முக்கியமானது. நம் பண்பாட்டு சூழலை சாராத அறிவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சாதனையாளர்களை சந்தித்து நேர்காணல் எடுக்கவிரும்புவர்களுக்கு இவருடைய அணுகுமுறை உதவிகரமானது. 

    “6:30 மணிக்கு உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னார் என்றால் 6:25 க்கு போனாலும் அவர் வீட்டு கதவு திறக்காது. 6:35க்கு போனால் கதவு மூடிவிடும்” என அவருடன் தொடர்ந்து பல வருடங்களாக பணியாற்றும் கனடா “தமிழ் இலக்கிய தோட்டம்” அமைப்பாளர் ஒருவர் என்னிடம் சொன்னார். யோசித்துப்பார்த்தால் அப்படி ஒரு நேர மேலாண்மை இருந்தால் மட்டுமே அவர் ஆற்றியிருக்கும் செயல்களை செய்ய முடியும். 

    சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், மொழிபெயர்ப்பு, இலக்கிய அமைப்பு உருவாக்கம், நிதி திரட்டல் அமைப்பு என அயல்நிலத்தில் உள்ள ஒரு தமிழ் எழுத்தாளர் ஒருவர் என்னவெல்லாம் செய்யமுடிமோ அத்தனையையும் செயலாக்கிய முன்னோடி. என்னுடைய முதல் நூலை [இரு கடல் ஒரு நிலம்] அ.முத்துலிங்கம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

    [விஷ்ணுபுர வாசக வட்டத்தினர் – பே ஏரியா கிளை. 26 பேர் வந்திருந்தார்கள். வழக்கம்போல பிரசாத் வெங்கட் மட்டுறுத்துனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை ஃப்ரீமாண்ட் நூலகத்தில் காலை 10:00 – 12:00 வரை சந்தித்து உரையாடுகிறோம்.

    கூட்டத்தின் வடிவம்: எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் “சிறுகதை திறனாய்வாளன் பட்டியிலில்” இருந்து ஒரு மாதம் முன்பே எழுத்தாளரையும், கதைகளையும் தேர்வு செய்து, பேச்சாளார்களையும் முடிவு செய்துவிடுவோம். மூன்று பேச்சாளர்கள். ஒருவருக்கு ஏழு நிமிடம். அதன்பின் கதை குறித்த சிறிய உரையாடல். உரைகள் https://www.youtube.com/@VLCBayArea பதிவுசெய்யப்படும். பேச்சாளர்களிலும், கருத்துப்பகிர்விலும் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.]

    கலந்துகொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் – vishnupurambayarea@gmail.com இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.]

  • பேதை – கி ராஜநாராயணன்

    [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – கலிஃபோர்னியா மாதாந்திர கூடுகையில் ஆகஸ்ட், 2 – 2025 அன்று எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சிறுகதைகள் குறித்து உரையாடினோம். அந்த கூட்டத்தில் கி.ரா.வின்  “பேதை” சிறுகதை குறித்த என் உரையின் எழுத்து வடிவம். நன்றி: கூடுகை மட்டுறுத்துனர் நண்பர் பிரசாத் வெங்கட், போஸ்டர் உதவி மற்றும் ஃப்ரீமாண்ட் நூலக முன்பதிவு: ரவி]

    பேதை:  

    நண்பர்களுக்கு வணக்கம். எழுத்தாளர் ஜெயமோகன் தன் “இலக்கிய முன்னோடிகள் வரிசை” விமர்சன கட்டுரைகளில், அவருடைய காலகட்டத்திற்கு முன்பு எழுதப்பட்ட சிறுகதைகளில், தமிழ் மொழியின் சாதனைகள் என எட்டு சிறுகதைகளை பட்டியிலிடுகிறார்:

    • கயிற்றரவு – புதுமைப்பித்தன்
    • கபாடபுரம் – புதுமைப்பித்தன்
    • தாய் – ந. பிச்சமூர்த்தி
    • பரதேசி வந்தான் – தி. ஜானகிராமன்
    • பாற்கடல் – லா. சா. ராமாமிர்தம்
    • ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி
    • விழுதுகள் – ஜெயகாந்தன்
    • பேதை – கி.ரா

    “பேதை” சிறுகதையை இந்தப்பட்டியலில் வருவதால் பேசுவதற்கு தேர்ந்தெடுத்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இப்போது இருமுறை மறுவாசிப்பு செய்தேன். 

    #

    கதைச்சுருக்கம்:

    “பேதை” – ஒரு கரிசல் கிராமத்தில் பருத்தி வெடிக்கும் காலத்தில், பருத்தி பறிப்பதற்கு விவசாய கூலித்தொழிலாளர்கள்  வலசை வருகிறார்கள். அந்த கூட்டத்தில் நாம் பொதுவாக கோட்டி / கிறுக்கு / பைத்தியம் என சொல்லக்கூடிய ஒரு பெண்ணும் வருகிறாள். ஒரு கோயிலின் முற்றத்தில் இரவு நிலா வெளிச்சத்தில் படுத்து பேச்சி ஒரு இன்பமான கனவு காண்கிறாள். அந்த கனவில் ஒரு குழந்தை ஒரு கதவை திறந்து மூடி விளையாடுகிறது. கனவில் குழந்தைக்கு முத்தங்கள் தருகிறாள். கனவின் முடிவில் யாரோ அவளை அழுத்துவது போலவும், அந்த குழந்தை மிக கனமாக ஆனது போலவும் தோன்ற கனவு கலைந்து எழுந்து பார்க்கிறாள். யாரோ ஒரு ஆண் தூரத்தில் ஓடுகிறான். சில மாதங்களில் அவள் கர்ப்பமாகிறாள். அவள் முகத்தில் பைத்தியக்கார களை மறையத்துவங்கி, ஒருவித அழகு குடிகொள்கிறது. ஆனால், “யாராக இருக்கும்” என ஊரெல்லாம் புரளி பரவுகிறது. “யார்ன்னு சொல்லு” என அவள் குடும்பத்தினர் வந்து அடித்து கேட்டும் அவள் சொல்லவில்லை. அவளுக்கு உண்மையிலே தெரியவும் இல்லை. பின்பு ஊர் பேறுகால உதவி செய்ய, முத்துக்குட்டி போல ஒரு மகனை பெற்றெடுக்கிறாள். கோயில் சிலைகளில் உள்ள ஸ்தனங்களை விட அழகான அவளுடைய மார்பில் பால் சுரந்து கொட்டி வழிகிறது. அவள் முகத்தில் முற்றிலும் பைத்தியக்கார களை மறைந்துவிடுகிறது.

    யார் கண் பட்டதோ, திடீரென குழந்தை டிப்தீரியா கண்டு இறந்துவிடுகிறது. அவள் இறந்த குழந்தையை தர மறுக்கிறாள். அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து குழந்தையை புதைத்துவிடுகிறார்கள். அவளுக்கு திரும்ப கோட்டி வந்துவிடுகிறது. அவளை அவளுடைய ஊருக்கி அழைத்துப்போய்விடுகிறார்கள். அவள் சில நாட்களில், ஓட்டை பிரித்துக்கொண்டு ஓடி வந்து, சுடுகாட்டில் இருக்கும் தன் குழந்தையின் பிணத்தை தோண்டி எடுத்து மார்போடு அணைத்துக்கொள்கிறாள். திடீரென தாளமுடியாத பசி எடுக்க, சீனிக்கிழங்கை பிய்த்து சாப்பிடுவதுபோல அங்கே  சுடுகாட்டில் எரியும் சடலத்தை பிய்த்து தின்கிறாள். ஊரெல்லாம் துர்நாற்றம் வீசுகிறது. உறக்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் மயிர் கூச்செரியும்படியாக குலவை சத்தம் கேட்கிறது. நடுராத்தியிரில் ஒரு சிறு எலும்பு கோர்வையை மாரோடு அனைத்தபடி அவள் தட் தட் என நடந்துவருகிறாள். உடங்காட்டில் பாம்புப்புற்றின் நடுவேதான் அவள் வாழ்கிறாள். 

    காத்தாடி காலம்போய், மழைக்காலம் போய், பனிக்காலமும் போய், வேனில் காலம் வந்துபோது, அந்த ஊருக்கு விருந்தாடி வந்த இளவட்டம் ஒருவன் வேப்பமர நிழலில் அயர்ந்து தூங்குகிறான். பேச்சி அவனை நெருங்கிறாள். மீண்டும் கனவில் ஒரு குழந்தை வருகிறது. பல மாதங்கள் கழித்து பிறந்த மேனியாக, நிறைமாத கர்ப்பினியாய், பூமி அதிர திட்திட் என நடந்து போகிறாள்.

    #  

    இந்த கதையில் எனக்கு மிக முக்கியமாகப்பட்டவை:

    1. ஒரு பண்பாட்டின் மையமாக இருக்கும் படிமம்:  

    என் அம்மாவின் ஊர் உளுந்தூர்பேட்டை. உளுந்தூரிலே இரண்டு அங்காளம்மன் கோயில் இருக்கிறது. பாளையப்பட்டு அங்காளம்மன் ஜனம் பெருத்தது. செட்டித்தெரு அங்காளம்மன் பணம் பெருத்தது. இரண்டும் அக்கா தங்கைகள். நாட்டார் (மீனவர்), நயினார், வன்னியர், பறையர் என எல்லா ஜாதிகளுக்கும் குலதெய்வமாக இருக்கும் அங்காளம்மனுக்கு முக்கியமான திருவிழா “மயான கொள்ளை”தான். கோயில் பூசாரியாக இருந்த ஆதி நாட்டார் அங்காளிக்கு பாடும் ஒரு பாடல் 

    “கனுக்காலு எலும்பையெல்லாம்

    நீ கரும்பெனவே தின்னவளே

    முழங்காலு எலும்பையெல்லாம்

    நீ முறுக்கனவே தின்னவளே

    பச்சப்பொணத்தெயெல்லாம்

    பால்வடிய தின்னவளே

    சுட்டப்பொணத்தையெல்லாம்

    சுடுகாட்டில் தின்னவளே”

    இதில் ஒரு மையப்படிமம் இருக்கிறதில்லையா? இதைப்போலவே பேய்ச்சியம்மன், சாமுண்டி என பல பெண் தெய்வங்கள் நம் நாட்டார் மரபில் உண்டு. “பிணம் தின்னும் அங்காளி” என்ற படிமத்தை வைத்து கி.ரா எழுதியிருக்கும் கதை பேதை. கற்பு என்னும் விழுமியத்தைவிட தாய்மை என்ற விழுமியம் நம் பண்பாட்டில் மேலும் அடிப்படையான ஒரு கருதுகோள். “ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஆதாரமான விழைவு என்பது குழந்தை” அல்லது இன்னும் விரிந்த பொருளில் “ஒரு பெண்ணிற்கு இருக்கும் ஆதாரமான விழைவு தாய்மை” என்ற பார்வையில் அந்த பெண் ஒரு பைத்தியமாக இருந்தால்? பேயாக இருந்தால்? என்ற கேள்வியை “பேதை” கதை ஆராய்கிறது. [அந்த பெண் தாசியாக இருந்தால்? துறவியாக இருந்தால்? என்ற கேள்வியே கொற்றவை நாவலில் வரும் சிலப்பதிகார மாதவியும், மணிமேகலையும்.]  

    1. வர்ணணை / விவரிப்பு (narration) மற்றும் உரையாடல் (dialogue).

    2023 பூன் முகாமில் ஜெ விடம் ஒரு நண்பர் கேள்வி கேட்டார். ஒரு கதையில் எத்தனை சதவீதம் விவரிப்பையும், எத்தனை சதவீதம் உரையாடலையும் பயன்படுத்துவது? ஜெ.வின் பதில்: பொதுவான விதி என எதுவும் இல்லை. காட்சிகளை உருவாக்குவதற்கு (படிமங்கள் / Poetic Images) விவரிப்பும், கதைமாந்தருடைய குணாதிசியங்களை (personality / psyche) காட்டுவதற்கு உரையாடல்களையும் சிறப்பாக பயண்படுத்த முடியும் என்றார். இந்த கதை அதற்கு சிறந்த உதாரணம்.

    பேச்சி கர்ப்பமானதை குறித்து ஊரில் பேசிக்கொள்பவர்களில்: “எனக்கும் இவ்வளவு வயசாச்சி; இப்படி ஒரு வங்கொடுமைய நடந்து இந்தக் கண்ணால நான் பார்த்தில்லை தாயே” என உணர்ச்சிவசப்பட்டு கண்களில் பொங்கிய கண்ணீரை துடைக்காமல் வைத்துக்கொண்டே பளீரென சிரித்து “ஆமம்ம, அப்பவும் ஒரு பொம்பளைக்கு ‘இது’ கூடவா தெரியாமலா போய்விட்டது” என கேட்டு மேலும் சிரித்தாள். – குடிமகள் காளி. ஊர்வம்பின் ஊற்றுமுகம்.

    1. புராண யதார்த்தவாதம்:

    நவீன இலக்கியத்தின் நீண்ட காலம் இருந்த கதை சொல்லும் முறை “யதார்த்தவாதம்” (realism) என்பதுதான். நடந்தை நடந்தது போல சொல்வது. ஆசிரியரின் கற்பனைக்கான இடம் என்பது நிகழ்வுகளை தொகுக்கும் முறைக்கு மட்டுமே பயன்படும். யதார்த்தவாதம் கொஞ்சம் “போர்” அடிக்கவே, அதற்கு அடுத்து வந்த அலை மாய-யதார்த்தவாதம். மாயமும் யதார்த்தமும் பின்னிப்பினைந்தது. இங்கே மாயம் என்பது வேறொன்றை குறிக்கிறது. மாய-யதார்த்த அலை மேற்கில் நீண்ட காலம் இருந்தது. “அவள் தன்னுடைய போர்வையால் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு இறந்தாள்” என்பது யதார்த்தவாதம். “போர்வையை உதறி சட்டனெ வானில் பறந்துபோய்விட்டாள். அதற்குப்பின் அவளை யாரும் பார்க்கவில்லை” என்பது மாய-யதார்த்தவாதம் (ரெமெதியஸ் தி பியூட்டி – நூற்றாண்டு கால தனிமை நாவல் – காப்ரியேல் கார்சியா மார்குவெஸ் – 1967). 

    இந்திய/தமிழ் பண்பாட்டின் கூறுமுறையே மாய-யதார்த்தவாதம் தான். அல்லது புராண யதார்த்தவாதம். நமது புராணங்கள் எல்லாமே இப்படி மாயத்தையும், யதார்த்தத்தையும் கலந்து சொல்லும் முறைதான். இந்த புராணங்கள் தோன்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அடைந்த உருமாற்றத்தில் யதார்த்தம் குறைந்து, மறைந்து மாயம் ஓங்கி நிற்கிறது. (உதாரணம்: வானரர்கள் என்பவர்கள் குரங்கு-மனிதர்கள் இல்லை குரங்குக்கொடி உடைய மனிதர்கள். புலிக்கொடி உடையை படையை விடுதலைப்புலிகள் என்று சொல்வதைப்போல.)

    தமிழ் நவீன இலக்கியத்தில் புதுமைப்பித்தன் “கபாடபுரம்” போன்ற கதை எழுதியிருந்தாலும், இந்த புராண-யதார்த்தவாத கதை சொல்லும்முறையை விரிவாக பயண்படுத்தியவர் கி.ரா. மைய படிமான பேச்சி மட்டுமல்ல, இந்த புராண கதை சொல்லும் முறைக்கு கதையில் நிறைய உதாரணங்கள் உள்ளன. 

    • “வரிசையாகக்‌ கூடார’வண்டிகள்‌ சாலையில்‌, வண்டியின்‌ அடியில்‌ லைட்டைக்‌ கட்டிக்கொண்டு போவது கொள்ளிவாய்ப்‌ பிசாசுகள்‌ நீளமாகப்‌ போகிறதுபோல்‌ இருந்தது”
    • மேற்குக்‌ கருமலையில்‌ ஒரு பெரிய கணவாய்‌ இருக்கிறது. அதில்‌ யார்‌ கண்ணுக்கும்‌ தெரியாத ஒரு பிரமாண்டமான ராக்ஷ்ச மதகுப்‌ பலகையால்‌ அடைக்கப்பட்டிருக்‌கிறது. சித்திரை மாசம்‌ பத்தாம்‌ தேதி அதை யாரோ திறந்து விடுகிறார்‌கள்‌! கடல்‌ மடை திறந்ததுபோல்‌ உடனே காற்று ஒஹோ என்று கொந்தளித்துக்கொண்டு ஒரு நதி ஓட்டமாக அந்தக்‌ குறிப்பிட்ட பிரதேசத்தைக்‌ கடந்துகொண்டு ஓடி வருகிறது.

    மைய படிமம், புராண யதார்த்தவாத கூறுகள், காட்சி விவரிப்பு ஆகியவற்றால் பேதை எனக்கு பிடித்த சிறுகதையாகிறது. 

    நன்றி.

    [“பேதை”க்கு ஒரு இரண்டாம் பாகம் இருக்கும் என்றால், பேச்சியின் இரண்டாவது குழந்தை வளர்ந்து, பேச்சிக்கும் அந்த குழந்தைக்குமான உறவு என யோசித்தால் எனக்கு “நூறு நாற்காலிகள்” கதை நினைவிற்கு வருகிறது.]

  • வயதாகாத நூல் – அ.முத்துலிங்கம் அவர்கள் கடிதம்

    [எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் எனக்கு ஒரு ஆசிர்வாதம்.]

    ##

    Buy Hardcopy

    Buy Ebook

    ஒரு புத்தகம் என்னிடம் வந்தது. ‘இரு கடல், ஒரு நிலம்’ என்ற தலைப்பு. தலைப்பே வித்தியாசமாக ஆர்வத்தை தூண்டியது. எழுதியவர் பெயர் விஸ்வநாதன். ஆனால் அது பயண நூல். நான் பயண நூல்கள் படிப்பதில்லை. ’இங்கே போனோம், இவரிடம் சாப்பிட்டோம். இன்று இதைப் பார்த்தோம். இன்னது சாப்பிட்டோம்’ என்று போய்க்கொண்டே இருக்கும். வாசிக்கத் தொடங்கும்போதே அலுப்பைக் கொடுக்கும். ஏ.கே செட்டியாரின் பயண நூல்கள் அத்தனையும் படித்திருக்கிறேன். அவை ஆயிரம் பக்கங்களுக்கு மேலே வரும் சுவையான எழுத்து; சுவாரஸ்யமான தகவல்கள். அப்படி ஒருவரும் இப்போவெல்லாம் எழுதுவதில்லை.

    புத்தகத்தை அசட்டையாகப் புரட்டிப் பார்த்தேன். அமர்ந்த இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரே அமர்வில் படித்து முடித்த புத்தகம். என்ன எழுத்து, என்ன நடை, என்ன வாக்கிய அமைப்பு, எத்தனை விதவிதமான சம்பவங்கள். புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.

    அமெரிக்காவின் கிழக்கு கிரையிலிருந்து மேற்கு கடற்கரை வரைக்கும் பயணம். அதாவது அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரம் வரை. மே மாதம் 2022ல் தொடங்கி 15 நாட்கள் பயணம், 13 மாகாணங்கள், 4000 க்கும் அதிகமான மைல்கள். அட்டகாசமான இந்தப் பயணத்தை ஆறு பேர் ஒரு காரில் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

    முதன் முதலில் கிழக்கில் இருந்து நிலப்பாதை வழியாக மேற்கு எல்லைக்கு பயணம் செய்தது 1804ல். அதற்கு Lewis and Clark பயணம் என்று பேர். 45 பேர் 12 குதிரைகளுடன் புறப்பட்டார்கள். பாதை இல்லை ஆகையால் பாதைகளை உண்டாக்கித்தான் பயணம் செய்ய வேண்டும். 18 மாதங்களில் அந்தப்  பயணம் வெற்றிகரமான முடிவுக்கு வந்தது.

    200 வருடங்கள் கழித்து இப்போது எத்தனை முன்னேற்றங்கள் வந்திருந்தாலும் 4000 மைல்கள் பயணம் இலகுவானது இல்லை. தினம் ஏதாவது எதிர்பாராதது நடக்கும். முன்னர் போயிருக்காத பாதை, பார்த்திராத மனிதர்கள், புதுவிதமான உணவுகள், கால நிலை மாற்றம், நேர வித்தியாசம் என பலவிதமான இடைஞ்சல்கள். எத்தனை நேர்த்தியாக திட்டமிட்டாலும் அடுத்து என்ன நடக்கும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இப்படியான பயணங்களைச் சுவையாக்குவது திட்டத்தில் இல்லாத ஏதோ ஒன்று நடந்து அதைக் குழப்புவது; பயணத்தை சுவாரஸ்யம் ஆக்குவதும் அதுதான்.

    ஒரு கட்டத்தில் பயணக் குழுவின் ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. இவர்கள் கார் பிழையான திசையில் ஓடியது. பின்னர் அதைக் கண்டு பிடித்து சரிசெய்தார்கள். நான் படித்த கதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. இரண்டு நண்பர்கள் அமெரிக்காவில் ஒரு மாகாணத்திலிருந்து மற்ற மாகாணத்துக்கு தெற்குப் பக்கமாகப் பயணம் செய்தார்கள். ஒருவர் ஓட்ட, நண்பர் பக்கத்தில் அமர்ந்து வரைபடத்தைப் பார்த்து வழி சொல்லிக்கொண்டே வந்தார். ஓர் இடம் வந்ததும் ‘ஐயோ, இது என்ன? கனடா வந்துவிட்டது’ என்று அலறினார். காரை ஓட்டியவர் நண்பர் பக்கம் பார்த்துவிட்டு ’இடியட், நீ வரைபடத்தை தலைகீழாக அல்லவோ பிடித்திருக்கிறாய்’ என்றார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து சிரிப்பை வரவழைத்தது.

    கார் விபத்திலே போலீசிடம் மாட்டினாலோ, லைசென்ஸ் காலாவதியாகி பிடிபட்டாலோ அவமானம். ஆனால் வேக வரம்பை தாண்டி ஓட்டி போலீசிடம் பிடிபட்டால் அது பெருமையானது. பிற நண்பர்களிடம் சொல்லலாம். அது உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பிரகடனப்படுத்தும். இரண்டு தரம் வேகத்தடையை மீறி ஓட்டி போலீசிடம் பிடிபட்டு தண்டக் கட்டணமும் கட்டவேண்டி வந்தது. இந்தப் பயணத்தில் நேர்ந்த ஒரே வீர சாகச நிகழ்ச்சி இதுதான்.

    புத்தகத்தில் நான் விரும்பும் தகவல்கள் இருந்தன. வாய்விட்டுச் சிரிக்கும் இடங்களுக்கு குறைவில்லை. பழைய தமிழ் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் அங்கங்கே காணப்பட்டன. ஆங்கில எழுத்தாளர்கள் பற்றியும், அவர்கள் புத்தகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தன. அமெரிக்காவின் மாறுபட்ட நில அமைப்புகள், நேர வித்தியாசங்கள், கால நிலை மாற்றம் ஆகியவை அரிய தகவல்களாக கிடைத்தன, புத்தகத்தில் அடிக்கோடிட்டு, அடிக்கோடிட்டு புத்தகமே கிழிந்துவிட்டது.

    காரில் பயணம் செய்தவர்கள் ஜெமோ, அருண்மொழி நங்கை, ஸ்ரீராம், ராஜன், ஆசிரியர் விஸ்வநாதன், அவர் மனைவி பிரமோதினி. பயணம் முழுக்க மனைவி குறிப்பெடுக்க அதை புத்தகமாக எழுதியவர் விஸ்வநாதன். இந்த நூலை அவர் எழுதிவிட்டு மனைவியிடம் காட்டியிருக்கிறார். இது என்ன ’வள வள’ என்று ஓர் அன்பான வார்த்தையை சொல்லிவிட்டு முழு நூலையும் அழித்து மறுபடி எழுத வைத்தார். ஒரு முறை அல்ல இரண்டு தரம். அதுதான் பிரமோதினி.

    இந்த நூலுக்கு அருண்மொழி நங்கை முன்னுரை எழுதியிருக்கிறார். ஒரு முன்னுரை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக அது இருக்கிறது. ’பயணத்தில் புற உலகம் விரிகிறது என்பது நம் அக உலகம் விரிகிறது என்பதுதான்’ என்கிறார். ஆசிரியருக்கு பிரத்தியேகமான எழுத்து வடிவமும் மொழிநடையும் வாய்த்திருக்கிறது என்று கூறுகிறார். மிகச் சரியான கணிப்பு.

    பயணக் குழுவில் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இருந்தது பெரும் அதிர்ஷ்டம். பயணம் முழுக்க அவ்வப்போது இசை நுட்பங்கள் பற்றி அவர் பேசினார். மொழி தொடமுடியாத இடங்களை இசை தொடும் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. கருப்பர்களின் ரொக் அண்ட் ரோல் இசையை பிரபலமடைய வைக்க எல்விஸ் பிரஸ்லி போன்ற ஒரு வெள்ளைக்கார முகம் தேவைப்பட்டிருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

    புத்தகத்தில் வரும் ஒரு சம்பவத்தை ஜெமோ மொழியில் சொல்லியே ஆகவேண்டும். ஒரு விடுதியின் வெளியே ஜெமோ சந்தோஷ் சிவனுடன் நின்றிருந்தார். ’சிவன் கிழிந்த பேண்ட் அணிந்திருந்தார். ஒரு இளம் தம்பதி வந்து சிவனிடம் மொபைலைத் தந்து புகைப்படம் எடுக்கச் சொன்னார்கள். அவர்களுக்கு சிவன் ஒரு புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் என்பது தெரியாது. சிவன் அந்த மொபைலை வாங்கிப் பார்த்தார். தன் மணிக்கட்டைத் திருப்பி தோலில் எவ்வளவு சூரிய ஒளி விழுகிறது என்று பார்த்தார். போஸ் தரவேண்டாம் சும்மா பேசுங்கள் என்று சொல்லி புகைப்படங்கள் எடுத்து தந்தார். வாங்கி சென்றுவிட்டார்கள். சிறிது நேரம் கழித்து என்னிடம் வந்து ‘சார் யார்?’ என்று பரவசத்துடன் கேட்டார்கள். அந்தப் பெண் இதுவரை யாரும் இவ்வளவு அழகாக தன்னை புகைப்படம் எடுத்ததில்லை என்றாள். அந்தப் படம் பின்பு குங்குமத்தில் அட்டைப் படமாக வந்தது. இன்னொரு புகைப்படக் கலைஞர் அழைத்து இது சந்தோஷ் சிவன் எடுத்த படமா என்று விசாரித்திருக்கிறார்.’ கலைஞர்களின் கையொப்பம் அவர்கள் கைவைக்கும் எல்லாவற்றிலும் எப்படியோ தெரிந்துவிடும்.

    ஆசிரியர்  விவரித்த இன்னொரு சம்பவத்தை நான் ஒரு முறையல்ல, பல முறை படித்தேன். மணமுடித்து அமெரிக்கா வந்த புதிதில் இவருடைய மனைவி ஒரு கேள்வி கேட்டார். ‘டெயிலர் ஸ்விஃப்ட் யார்ன்னு தெரியாதா? அமெரிக்கால தான் ஆறு வருஷம் இருந்த?’ இவருக்கு அவமானமாகப் போய்விட்டது. டெயிலர் ஸ்விஃப்ட் உலகின் நம்பர் ஒன் பாடகி. இவர் அமெரிக்காவுக்கு படிக்க வந்த காலத்தில் அமெரிக்கா பெரும் பொருளியல் வீழ்ச்சியில் இருந்தது. சாப்பாட்டில் பறந்துவிழும் கரப்பான் பூச்சிகளைத் தள்ளிவைத்து சாப்பிட வேண்டும். வெளியே பெய்த பனி உருகி ஊறி தரையில் உள்ள படுக்கை விரிப்பை  நனைத்துவிடும். சப்பாத்து பிய்ந்து நடக்கும்போது டக் டக் என்று வினோதமான ஒலி எழுப்பும். இப்படியான அவல வாழ்க்கையில் டெயிலர் ஸ்விஃப்டாவது, மயிலர் ஸ்விஃப்டாவது என்று அவருடைய மனம் அங்கலாய்த்தது. இந்த இடத்தை நூலில் படித்தபோது நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன்.

    ஆசிரியருடைய எழுத்தில் அருமையான உவமைகள் அடிக்கடி வந்து விழும்.. ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘ஜெ உடனடியாக சூழலைக் கவனிக்கக் கூடியவர். தீவிரமான உரையாடல்கள் சபையிலே சென்று சேராது என்று தெரிந்தால் உடனே தீவிரத்தை குறைத்துக் கொள்வார். சச்சின் டெண்டுல்கரை சிறப்பு விருந்தினராக அழைத்து ஒரு தெரு முனையில் கிரிக்கெட்  ஆடுவதுபோல இருக்கும்.

    வேறு ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார். ‘பள்ளியில் ஷூவைக் கழட்டிவிட்டு செல்லும் இன்னொரு இடம் கணினிக்கூடம்.. இருபது கணினிகள் இருக்கும். அப்போது (1995) விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில்கூட 20 கணினிகள் இருந்திருக்குமா தெரியாது. கோயில் யானையிடம் ஒரு ரூபா தந்து ஆசி வாங்குவதுபோல அந்த கணினிகளில் LT40, RT90  என தட்டுவோம்.

    இவருடை எழுத்து நடை என்னைக் கவர்ந்தது என்று சொல்லவே தேவையில்லை. நியூ மெக்சிகோ மணல் குன்றுகளை வரை மருள் நெடுமணல் என்று வர்ணிக்கிறார். அமெரிக்காவில் அவர் வாழ்ந்த ஆரம்பகாலத்தை விருந்துண்ணும் பெருஞ்செம்மல் வாழ்க்கையை கனவு காணும் இரந்துண்ணும் இள மாணாக்கன் வாழ்க்கை என்று சொல்கிறார். நண்பனின் குறட்டையை ‘நள்ளென யாமம் முழுதும் ஒலித்தது’ என்கிறார். இன்னோர் இடத்தில் ‘கடைசித் துளி ஒளியையும் இருள் விழுங்கியபோது பேஜ் நகருக்குள் நுழைந்து விட்டோம்’ என்று எழுதுகிறார்.

    இவருடைய எழுத்தில் நகைச்சுவை வந்தபடியே இருக்கும். பயணத்தின்போது கண்ணால் பார்த்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். அதை அவருடைய வார்த்தைகளில் சொன்னால்தான் சுவை முழுமையாக வெளிப்படும். ‘அருகில் ஒரு ஆசிய ஜோடி இருந்தார்கள். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அந்தப் பெண் கையடக்க சிறிய கண்ணாடியில் பார்த்து, காற்றில் கலைந்த மேக்கப்பை சரிசெய்துகொண்டாள். நாங்கள் அங்கு அரை மணிநேரம் இருந்திருப்போம். அவர்கள் நகரவே இல்லை. ஷூட்டிங் தொடர்ந்தபடியே இருந்தது. இத்தனைக்கும் பெரிய கேமராவெல்லாம் இல்லை. எல்லாமே வெறும் மொபைலில்தான். சமூக வலைத்தள லைக்குகளை அள்ளப்போகும் ஒரு இன்ஸ்டா போட்டோ வரும்வரை அவள் ஓயப் போவதில்லை. அதல பாதாள விளிம்பில் அவள் அமர்ந்திருந்தாள். ‘வாழ்வின் விளிம்பிற்கே சென்றாலும் மேக்கப் போடுவதை விடமாட்டாள்’ என்றார் ஜெ.’

    புத்தகத்திலே ஒரு சுவாரஸ்யமான புதிர் வருகிறது. ‘புதிதாக ஒரு பழம் அறிமுகமாகிறது. அந்தப் பழத்தை சாப்பிட்டால் இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஆயிரம் வருடங்கள் கழித்து பழத்தை சாப்பிட்ட அனைவரின் சந்ததிகளையும் அந்தப் பழம் அழித்துவிடும் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இந்தப் பழத்தை இப்போது சாப்பிடலாமா வேண்டாமா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?’ இதுதான் புதிர். இதற்கு விடை தெரிய வேண்டுமானால் நீங்கள் புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.

    இந்த நீண்ட பயணத்தில் ஜெமோவின் தினசரி பணிகளில் ஒரு குறையும் ஏற்படவில்லை. கடிதங்களுக்கு பதில் எழுதினார். கட்டுரைகள் வரைந்தார். காத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு திரைக்கதை முன்வரைவுகள் எழுதி அனுப்பினார். எப்படியோ அந்த இடத்து கடவுச்சொல்லை பெற்று ஒரு நாள்கூட தவறாமல் தமிழ் விக்கி பதிவுகளை எழுதி அனுப்பிவிடுவார்.

    அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை நல்ல தேநீர் தயாரிப்பது. ஜெமோ தேநீர் தயாரிப்பதற்கு அவராகவே கண்டுபிடித்த ஒரு செய்முறையை வைத்திருந்தார். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளரின் ரகஸ்யக் கண்டுபிடிப்பு. பாதி பால், பாதி தண்ணீர். இதில் மூன்று தேநீர் பைகளைப் போட்டு இரண்டு நிமிடம் மைக்ரோவேவில் கொதிக்க விடவேண்டும். அவ்வளவுதான், தேநீர் தயார். நானும் மனைவியும் இந்த முறையில் வீட்டில் தேநீர் தயாரித்து அருந்தினோம். மனைவி இரண்டு நாட்களாக என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

    இந்த நூலில் பல இடங்களில் ஆசிரியரின் வாழ்க்கையின் சில கூறுகளையும் படிக்க முடிகிறது. கல்வியின் மேன்மை பற்றிக் கூறும் உருக்கமான பகுதியும் உண்டு. அமெரிக்காவில் அவர் அனுபவித்த கஷ்டமான வாழ்க்கை பற்றி பதிவு செய்கிறார். பளபளப்பான முகங்கள் கொண்ட அமெரிக்க மாணவர்களுடன் இவர் படிக்கிறார். அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை. திடீரென்று வங்கி திவால் ஆனால் என்ன செய்வது என்ற கவலை  மட்டும் கிடையாது. ஏனென்றால் இவர்தான் வங்கிக்கு 20 டொலர் கடனை திருப்பித் தரவேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து தங்கப் புதையல் எடுக்கும் கனவு இவருக்கு அடிக்கடி வருகிறது. ஒருநாள் வேலை கிடைக்கிறது. முகத்தில் பளபளப்பு ஏறுகிறது. மூன்று மாதத்தில் வீட்டுக்கு பத்தாயிரம் டொலர் அனுப்பி கல்விக் கடனை முற்றிலுமாக அழிக்கிறார். கல்வியின் அவசியத்தை, மேன்மையை இதனிலும் சிறப்பாக எப்படி சொல்லமுடியும்?

    ஆயிரக் கணக்கான பக்கங்கள் கொண்ட பயண நூல்கள் எழுதிய ஏ.கே செட்டியார் ’பயண நூல்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம், அவை காலாவதியாகிவிடும்’ என்று சொல்வார்.  அது முற்றிலும் தவறு. வயது கூடக்கூட சுவை அதிகரிக்கும் வைன்போல பயண நூல்களின் சுவாரஸ்யம் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கும். அவருடைய நூலிலேயே சான்று உள்ளது. ஏ.கே செட்டியார் கனடாவில் பயணம் செய்த  சமயம் ஒரு சம்பவம் நடந்தது. அவர் விக்டோரியா ஸ்டேசனுக்கு  ரயில் டிக்கட் வாங்கினார். பயணச் சீட்டையும் மீதிப் பணத்தையும் கொடுத்த டிக்கட் கிளார்க் எழுந்து நின்று ‘உங்களுக்கு மிக்க வந்தனம்’ என்றார். ரயில் டிக்கட் வாங்கியதற்கு தனக்கு வந்தனம் இதுவரை யாரும் செலுத்தியதில்லை என்று செட்டியார் வியப்புடன் எழுதுகிறார்.. கனடாவில் வசிக்கும் எனக்கு இந்தச் சம்பவம் இன்றும் அளவில்லாத ஆச்சரியத்தை தந்தது.

    அ.முத்துலிங்கம்

    விசு என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஸ்வநாதன் எழுதிய ‘இரு கடல், ஒரு நிலம்’ பயண நூலை ஐம்பது வருடத்திற்கு பின்னர்  படிக்கும் ஒருவருடைய உணர்வு நிலை எப்படி இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். படிப்பவருக்கு அது எத்தனை ஆச்சரியத்தையும், சுவாரஸ்யத்தையும், தகவலையும் கடத்தும்.

    ஆசிரியருடைய முதல் புத்தகம் இது. சிலர் ஏணிப்படிகளில் முதல் படி, இரண்டாம் படி என்று ஏறுவதில்லை. ஆரம்பத்திலேயே எட்டி நாலாம் படியில் கால் வைத்து விடுவார்கள். விஸ்வநாதன் அப்படித்தான் செய்திருக்கிறார். ஜெயமோகனின் ’புறப்பாடு’ நாவலை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அது விரைவில் வெளிவர இருக்கிறது. இப்பொழுது இவருடைய பயண நூலும் வெளிவந்துவிட்டது. இன்னும் பல நூல்களை ஆசிரியரிடம் எதிர்பார்க்கலாம். அவருக்கு என் வாழ்த்துகள்.

    அ.முத்துலிங்கம்

    ——————

    அ.முத்துலிங்கம் அவர்களின் கடிதம் ஜெ தளத்தில் வெளியான கடந்த இரு நாட்களாக புத்தகம் அமேசான் தளத்தில் பயண கட்டுரைகள் பிரிவில் மீண்டும் “பெஸ்ட் செல்லர்” ஆகியுள்ளது 🙂

    Buy Hardcopy

    Buy Ebook

  • 2024

    • Attended a two day philosophy camp and a two day Emerson literary camp, both organized by VLC at Boone, NC in October, 2024. During the literary camp, I spoke in the science fiction session on “Terminal Man” by Michael Crichton.
    • Along with my friends Sharada and Prasad, I hosted Je during his Bay Area visit in September 2024. We organized a “Meet the Author” Q&A session at Walnut Creek, CA with the help of Sarathy Venkataraman, Jerry Louis, Padmanaba Pillai, Sathyanarayanan, Asok Shanmugam, Shrikanth Dakshinamurthy, Guhan and Arun Ranganathan. We recently started a book club and held two in-person meetings so far.
    • Attended Jaipur Literary Festival, Day 1 at Raleigh, NC. Got a signed copy of “An Era of Darkness – The British Empire in India” from Dr.Sashi Tharoor.
    • During the summer, I camped at Emerald bay state park in Lake Tahoe & Camp4 campground Yosemite National Park. Visited Pinnacle national park recently.

    Happy New Year Everyone.

  • இரு கடல், ஒரு நிலம் – அருண்மொழி நங்கை அவர்கள் முன்னுரை

    [Smoky Mountain National Park, Tennessee, May 2022]

    [White Sands National Park, New Mexico May 2022]

    [Canyon Lands National Park, Utah, May 2022]

    [Antelope Canyon, Arizona, May 2022]

    [Elvis Presley Sun Studio, Memphis, May 2022]

    Buy Hardcopy 

    Buy Ebook

  • மூச்சே நறுமணமானால்

    நவம்பர் 2024 நீலி இதழ் கவிஞர், எழுத்தாளர் பெருந்தேவியின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

    செப்டம்பர் 14, 2024 விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் பெருந்தேவி அவர்களுடன் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்த்தினோம். க.நா.சு கலந்துரையாடல் நிகழ்வு குறித்த குறிப்பும், பெருந்தேவியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “மூச்சே நறுமணமானால்” கவிதை தொகுப்பின் மொழிபெயர்ப்பு குறித்த ஒரு பார்வையும், நிகழ்வில் பேசிய நண்பர் ஜெயஶ்ரீயின் உரையும் நீலி இதழில் ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது : https://neeli.co.in/4331/

    12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட வீரசைவ மரபை சேர்ந்த அக்கா மகாதேவியின் வசனகவிதைகளின் மொழிபெயர்ப்பு “மூச்சே நறுமணமானால்”.

    தமிழ் பக்தி இயக்கத்தின் விளைநிலம். இந்த தொகுப்பை படிப்பதற்கு முன்பு நமக்குத்தான் ஏற்கனவே ஆழ்வார்கள், நாயன்மார்கள், தேவாரம், திருவாசகம் என திகட்ட திகட்ட இருக்கிறதே என தோன்றியது. பாசுபதாஸ்திரத்தை வேண்டி அர்ஜுனன் தவம் இருக்கிறான். வேடனின் வடிவில் வந்து சிவன் அவனை வம்புக்கிழுக்கிறார். சிவனை நோக்கி அர்ஜுனன் எறியும் கூரிய அம்புகளை மென்மல்லிகைச்சரமாக மாற்றுகிறாள் தேவி. சென்னமல்லிகார்ச்சுனனை  (அழகிய மல்லிகார்ச்சுனன்) கவிமுத்திரையாக கொண்ட அக்கா மகாதேவியின் வசனகவிதைகள் இவை. இந்த வசனகவிதைகள் நம் தர்க்க மனதை அம்புகளின் வன்மையோடு பிளந்து மென்மல்லிகையாக ஆன்மாவுடன் உரையாடும் வசனங்கள் இவை என உணர்ந்தேன்.

    இந்திய கலையின் சாரம்சமான செயல்பாடே இறையை யாவர்க்கும் விளங்கவைப்பதுதான் என்கிறார் ஆனந்த குமாரசாமி. கலை என்பது ஒரு தனிநபரின் வெளிப்பாடு இல்லை, அது அந்த பண்பாட்டின் சாரம்சமான வெளிப்பாடு என்கிறார். [இந்திய கலையின் நோக்கங்கள் – தமிழில்: தாமரைக்கண்ணன் அவிநாசி].

    என் அப்பா வடகர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் ஒரு சர்க்கரை ஆலையில் வேலை செய்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தாண்டு விடுமுறையில் அருகே இருந்த சாளுக்கிய மன்னர்கள் கட்டிய பட்டடக்கல் கைலாசநாதர் கோயில், பாதாமி (வாதாபி) செம்பாறை குகைவரை கோயில்களை பார்த்துவிட்டு கிருஷ்ணா நதியும் மல்லபிரபா நதியும் இணையும் இடத்தில் இருக்கும் “கூடல சங்கமேஸ்வரர்” கோயிலுக்கு போனோம். கடல் போன்று இருந்த நதிக்கரையில் மண்ணுக்கு கீழே இருந்தது அந்த கோயில். அங்குதான் முதன்முறையாக அந்த பளிங்கு சிலையை பார்த்தேன். ஆடைகள் இல்லாத இளம் பெண். சிரித்த முகம். தீத்தழல் போன்ற கூந்தல் உடலை மறைத்திருந்தது. அன்று அக்கமகாதேவியை பற்றி கண்ணப்ப நாயனார் போல ஒரு அதிதீவிர சிவபக்தர் என்றே நினைத்தேன். அன்று கிடைக்காத அக்கா மகாதேவியின் தரிசனம் பெருந்தேவியின் மொழியில், கவிதை தேர்வில் இன்று கிடைக்கும் பேறு பெற்றேன்.

    மூச்சே நறுமணமானால் மின்னூல் வாங்க

    [பெருந்தேவி]

    கோலின் நுனியில் குரங்காக 

    நூலின் அந்தத்தில் பாவையாக

    ஆடினேன் ஐயா நீ ஆட்டுவித்தபடி

    பேசினேன் ஐயா நீ பேசுவித்தபடி

    இருந்தேன் ஐயா நீ இருத்தியபடி

    உலகத்தின் எந்திரக்காரன் சென்னமல்லிகார்ச்சுனன்

    போதும் போதுமென்றவரை.

    [அக்கா மகாதேவியின் வசனகவிதைகளின் மொழிபெயர்ப்புகள் குறித்த பார்வை https://neeli.co.in/4331/ இதழில் இடம் பெற்றுள்ளது. We are working to fix minor formatting errors in AK Ramanujan’s poems. WordPress removed the indents & spaces.]

  • இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு

    இரு கடல் ஒரு நிலம் – நூல் வெளியீடு

    “இரு கடல் ஒரு நிலம்” நூல் கடந்த வாரம் [Oct-19-2024] எழுத்தாளர்கள் ஜெயமோகன், அருண்மொழி நங்கை அவர்களால் நியூஜெர்சி நகரில் வெளியிடப்பட்டது.

    “Iru-Kadal-Oru-Nilam” – My first book, a travelogue about our cross-country trip with writer Jeyamohan, was released recently. Book release photos from New Jersey.

    [Books shipped from Vishnupuram Publications . புத்தகத்தை பதிப்பித்த விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும், மீனாம்பிகை அவர்களுக்கும் நன்றி]

    Writer Jeyamohan, Writer Arunmozhi Nangai & my friend Pazhani releasing the book at an event in New Jersey.

    நிகழ்வை ஒருங்கிணைத்த நண்பர் பழனிஜோதி, ஒவியர் மகேஸ்வரி, புகைப்பட கலைஞர் பிரேம்மாயாவிற்கு நன்றிகள்.

    Link to buy a copy of the book [India]: https://www.vishnupurampublications.com/product/irukadalorunilam/

    Kindle E-book Link: https://www.amazon.com/dp/B0DKJNGPRJ

    ###

    கலிஃபோர்னியா லிவர்மோர் நகரில் நண்பர் சாரதா இல்லத்தில் நவம்பர் 2, 2024 அன்று விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் சந்திப்பு நடந்தது. நண்பர் கண்ணப்பன் நூல் குறித்த ஒரு சிறிய அறிமுக உரை ஆற்றினார்.

    The book was a trending #HotNewRelease on Amazon in Travel, Tamil eBooks, and All Other Foreign Languages. All credits to the visibility generated through Je’s website – https://www.jeyamohan.in/207430/ 🙂

    #இருகடல்ஒருநிலம் #IruKadalOruNilam

  • இரு கடல் ஒரு நிலம்

    இரு கடல் ஒரு நிலம் நூல்

    இரு கடல் ஒரு நிலம் மின்னூல்

    நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட இந்த நூல் எனக்குப் புதிய அனுபவம். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முதல் மேற்குக் கடற்கரை வரை நாங்கள் நடத்திய ஒரு நீண்ட பயணத்தின் பதிவு இது. பயணக்கதை என்பது பண்பாட்டு விவரிப்பாகவும், நுண்ணிய அனுபவச் சித்தரிப்பாகவும் ஒரே சமயம் திகழ்கையிலேயே அது இலக்கியத்தகுதி கொள்கிறது. இந்நூல் நம் பயண இலக்கியங்களில் என்றும் அழியாத ஓர் இடத்தை வகிக்கவிருப்பது


    — ஜெயமோகன்

  • அகதி சிறுகதை தொகுப்பு – ஒரு பார்வை:

    சா.ராம்குமார் மேகாலயா மாநிலத்தில் இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். “அகதி” அவர் எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு.

    அகதி தொகுப்பில் மொத்தம் பத்து சிறுகதைகள் இருக்கிறது. 

    கருவி: அலுவலகத்திலும் வீட்டிலும் வெறும் கருவியாக இருக்கும் முதியவர் பூபாலன் தன்னை காரியகர்த்தா என நினைத்துக்கொள்வதால் வாழ்க்கை அவருக்கு கசக்கிறது. உணரச்சிகள் நன்றாக வந்துள்ளது. 

    கசப்பு: ஒரு அரசாங்க உத்யோகஸ்தரின் மகனுக்கு அவரை மிகப்பிடிக்கிறது. மகன் ஐ.ஏ.எஸ் ஆகிறான். வெள்ளை உடை அணியும் அப்பா வாட்ச்மேன் என்று தெரியும்போது ஒரு கசப்பு உருவாகிறது. அந்த அமைப்பை வென்று அதன் உச்சியில் ஏறிய ஐ.ஏ.எஸ் ஆன பின்பும், அதன் நடைமுறைகளை மீற முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை.

    சமரசம்: திமுக உருவான காலத்தில் திமுக ஆதரவு மாணவன் பள்ளியில் கையேடு விற்கும் ஆசிரியரை எதிர்க்கிறான். ஆசிரியர் மாற்றல் வாங்கி சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்கு பிறகு அந்த மாணவனின் மகள் இதே ஆசிரியரிடம் காசு கொடுத்து கையேடு வாங்கிக்கொள்கிறாள். அவன் வயது, ஸ்டேஷனரி கடை வைத்து வியாபாரம் செய்யும் அனுபவம் ஒரு “சமரசத்திற்கு” அவனை வரச்செய்துவிட்டது. 

    லெனின்: லெனின் என்ற குமாஸ்தா நேர்மையாக இருந்தவரை ஐ.ஏ.எஸ் அதிகாரியை “சார்” என்று கூப்பிடுவதில்லை. முதல்முறையாக பஞ்சப்படியில் ஒரு சிறு கோல்மால் செய்கிறார். உபயோகப்படுத்தாத பயணப்படியை பெற்றுக்கொள்கிறார். அன்று முதல் நிமிர்வு குறைகிறது. “சார்” என அழைக்கிறார். உயர பறக்கும் பட்டத்தின் கயிரை சிறுவர்கள் பிடித்திருக்கிறார்கள். ஒரு குதிரையை “உடைத்து” சொல்லும் வேலையை செய்ய வைக்கப்படுகிறது.

    பெருச்சாளி: ஒரே வயதுடைய ஏழை மாமனும் பணக்கார மச்சானும் ஒன்றாக வளர்கிறார்கள். ஒரு சண்டையில் பிரிகிறார்கள். பண வசூலின்போது கறாராக இல்லாமல், கொஞ்சம் விட்டுகுடுத்ததால், வீட்டோடு வேலைக்கு வந்த ஏழை மாமனை விரட்டிவிடுகிறார்கள். அவன் கோவை சென்று நன்றாக சம்பாதித்து வாழ்கிறான். ஊரில் வியாபாரம் தேக்கம் அடைகிறது. நீண்ட நாள் கழித்து உதவி தேடி மச்சான் கோவை வருகிறார். பெருச்சாளி போன்ற ஒரு வியாபாரியிடம் முடங்கிய பணத்தை வசூல்செய்து தருகிறார் மாமன். ஒரு சிரிப்பை வரவழைக்கும் நேர்நிலை முடிவு. 

    அகதி: இரண்டு அகதிகளை மாற்றிக்கொள்கிறார்கள். எதிரி நாட்டு அகதியும் தன் சகோதரன் என்று உணரும் கதை. தன்னைப்போல அவனையும் அடித்திருக்கிறார்களா என்று பார்க்கிறான் கதைசொல்லி. 

    கான்கிரீட் நிழல்கள்: கதைசொல்லி ஐ.டி கம்பெனியில் வேலை பார்கிறான். போட்டி நிறைந்த உலகம், ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி முந்தும் உலகம். 

    பொன்னகரம்: பிரமோஷனுக்காக மேனேஜருடன் சல்லாபம் செய்வதை பற்றிய கதை. 

    ரோஜா: ரோஜாபூவில் மயங்கும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. பள்ளியில் அவளுக்கு மிக பிடித்த ரோஜாவை திருடி தின்னும் சுப்பையா அவளை மணந்து கொள்ள போகிறான். அவன் தட்டு சின்னத்திற்கு ஓட்டு போட சொல்கிறான், அவள் திருட்டுத்தனமாக ரோஜாவிற்கு போட்டுவிடுகிறாள். எல்லோருமே தட்டை தேர்ந்தெடுக்கும்போது கோதை ரோஜாவை தேர்ந்தெடுக்கிறாள். சூடிக்கொடுத்த சுடர்கொடி. 

    பதக்கம்: ராணுவம், தீவிரவாதிகள், போலீஸ் – மூன்று குழுக்களிடையே சிக்கியிருக்கும் அசாம்/வட கிழக்கு மக்களின் கதை. 

    ##

    இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அசோகமித்ரனின் தாக்கம் உள்ளவை. யதார்த்தவாத கதைகள். “அகதி” விவரணை மட்டுமேயான கதை. மனவோட்டத்தையும், “காலத்தை”யும் நீட்டித்திருக்கிறார். “சமரசம்” கதையும், “லெனின்” கதையும் ஒன்றுதான். “சமரசம்” கதை லட்சியவாதத்தின் வீழ்ச்சி என்று தோன்றினாலும் “சமரசம்” என்ற தலைப்பே அது வீழ்ச்சியா என்றும் யோசிக்க வைக்கிறது. “கசப்பு” கதையை உணர்வதற்கு அப்பா வாட்ச்மேனாக இருக்க வேண்டும் என்பதில்லை. அப்பாவைவிட பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் “சார்…” என்று பதறும் அப்பா சூப்பர்மேன் இல்லை என்று முதலில் உணரும் பிள்ளைகளுக்கு தோன்றும் கசப்பு அது. 

    இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள முக்கியமான கதை “பதக்கம்”. மற்ற கதைகள் ஏற்கனவே நமக்கு பழகிய சூழலில் நடப்பதால் அவை தரும் உணர்வுகள் “தெரிந்தவை”யாக இருக்கின்றன. பதக்கம் கதையின் கரு ஒரு நாவலாக விரித்து எழுதும் அளவிற்கு பெரியது. நூலின் ஆசிரியர் வடகிழக்கில் ஆட்சிப்பணியில் இருப்பதால் இந்த கதை உருவாக்கும் சித்திரம் மிகுந்த நம்பத்தகுந்ததாக இருக்கிறது. இன்னொருவர் எளிதில் எழுதிவிட முடியாது. 

    பதக்கம்:

    “பதக்கம்” கதையின் களம் அசாம். சோஹன் என்ற தீவிரவாதி பிரியா என்ற பெண்ணை கொன்றுவிடுகிறான். பிரியா தன் குழுவை சேர்ந்த உத்பலை ராணுவத்திடம் சிக்க வைத்தாள் என்ற சந்தேகம்தான் கொலைக்கு சொல்லப்படும் காரணம். பிரியா சோஹனை நிராகரித்து உத்பலை காதலித்தவள்.  ராணுவமும், போலீசும் உள்ளூர் மக்களை தூண்டிலாக பயன்படுத்தி தீவிரவாதிகளை நெருங்க முயற்சிக்கிறார்கள். உத்பலை ராணுவம் கொண்டுசென்று அவன் திரும்பவில்லை. உத்பலை என்ன ஆனான் ? தெரியவில்லை. ஆனால் உத்பலை அங்கே / இங்கே பார்த்ததாக கதைகள் இருக்கின்றன. 

    உத்பல் படித்தவன். பிரியா அந்த நிலம். அது தீவிரவாதத்தை வெறுத்து மிதவாதத்தை, கல்வியை விரும்புகிறது. ஆனால் தீவிரவாதம் அந்த நிலத்தை விடவில்லை. ராணுவத்தினர் தங்கள் பதவி உயர்வுக்காக ஆட்களை கொன்று கணக்குகாட்டி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பதக்கம் பெறவே முயல்கிறார்கள்.

    இந்த கதையை படிக்கும் வரை ஒரு சிக்கலை தீர்ப்பதில் போலீசிற்கும் ராணுவத்திற்கும் இருக்கும் வேறுபாடு எனக்கு புரிந்ததில்லை. இரண்டுமே அரசின் ஆயுதம் ஏந்திய கரங்கள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அரசு அதிகாரத்தின் அடுக்களிலும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் உள்ளூர் தரப்பிற்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதேபோல தீவிரவாதிகள் தரப்பில் இருக்கும் உத்கல் போன்ற மக்கள் தொடர்பாளர்கள்தான் வளர்ந்து அரசியல்வாதிகள் ஆகிறார்கள். 

    “எல்லாருக்கும் ஒரு சின்ன கனவு உலகம் இருக்கும் சார். அத அவனுக்கு காட்டிக்கொடுத்துட்டா, என்னத்துக்கு இந்த கஷ்டம் எல்லாம். காட்டுல வாழ்றத ஏதோ பெரிய சாகசம்னு வெளிய இருக்கிறவங்க நினைப்பாங்க. எங்க கூட இருந்தா தெரியும். மலேரியா, காலரான்னு உங்க துப்பாக்கியைவிட அதுவே அதிகமா கொன்னுடும்”  – என சரணடையும் தீவிரவாதிகளின் மனநிலையை பற்றி அவர்களுடைய செய்தி தொடர்பாளர் உத்பல் சொல்கிறான்.

    எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி எனக்கு பிடித்த நாவல். அசாம் மாநிலத்தின் பின்புலத்தில் “This street has no other side” என்ற நாவலை எழுதும் அரசு அதிகாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஒரு ஊழியரை மீட்கப்போராடுகிறார், அவர் கண்டுபிடிக்கும் தொலைதொடர்புத்துறை சார்ந்த ஊழல், அவருடைய தனிவாழ்க்கை என மூன்று சரடுகள். இந்த மூன்றும் அஸ்ஸாமின் இருந்த தீவிரவாதத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும். “This street has no other side” என்பது தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மட்டுமல்ல மொத்த வடகிழக்கை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. பி.ஏ.கிருஷ்ணன் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இந்த நாவலின் காலகட்டம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தோராயமாக முப்பது-நாற்பது வருடங்களுக்கு முன்பு நடப்பதாக சொல்லலாம். அன்று வடகிழக்கில் பெரிய அளவில் உட்கட்டமைப்பு இல்லை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் இந்திய அரசு வடகிழக்கில் சாலை, பாலம் என உட்கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். சாலையால் சந்தை உருவாகிறது. மணிப்பூர் தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது. 

    வடகிழக்கில் இனக்குழு சண்டைகள் தீர்வதற்கும், அந்த பகுதி வளர்வதற்கும் உட்கட்டமைப்பு மட்டும் போதுமா என்று தெரியவில்லை. ஆனால் “பதக்கம்” போன்ற கதைகள் “This street has other side” என்று தோன்றவைக்கின்றன.  

    அகதி நூலை – கிண்டிலில் வாங்க – https://www.amazon.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-Agathi-Tamil-Ramkumar-S-ebook/dp/B084FJFF4R 

  • பீட்டர்மாரிட்ஸ்பர்க் – சிறுகதை

    பீட்டர்மாரிட்ஸ்பர்க் – சிறுகதை

    [Delighted to share that my short story “Pietermaritzburg” has been published in the January 2024 issue, the 60th edition of Kaalam magazine – a literary publication from Canada, founded by Kaalam Selvam. கனடாவில் இருந்து வெளிவரும் காலம் 60ஆவது இதழில் வந்த என்னுடைய சிறுகதை.]

    “டேய்…நீயே 2005ல தான காலேஜ் முடிச்ச…வேலைக்கு சேந்து ஒரு வருஷம் கூட ஆகல…உனக்கு என்ன தெரியும்னு சிஸ்கோ சிஸ்டம்ஸ்ல உன்ன இத்தாலிக்கு அனுப்புறாங்க?” கப்பலில் ஃபோர்த் இஞ்ஜினியராக இருக்கும் என் அண்ணன் கேட்டான். கப்பல்துறையில் ஒவ்வொரு பதவி உயர்விற்கும் சில வருடங்கள் கப்பலில் பணியாற்றியபின்,பதவி உயர்வுக்கான தேர்வுக்கு ஆறு மாதங்கள் படித்து, எழுத்துத்தேர்விலும், நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற  வேண்டும்.  “போறவன்வெல்லாம் தெரிஞ்சா போறான்? போய் தெரிஞ்சுக்கறதுதான்…சீனியருக்கு குழந்தை பொறக்கப்போகுது. அதனால அவரால போக முடியலை…இதெல்லாம் டப்பா மெயிண்டனஸ் பிராஜக்ட்ன்னு யாருமே கிட்ட வரலை…யாராவது பண்ணனுமில்ல…வீக்எண்ட்ல எடுத்து ஆறு மாசமா நோண்டிட்டு இருந்தேன்…” 

    “போய் தெரிந்துகொள்ளும்” திராணி உள்ள அனைத்து உயிரினங்களையும் உண்டிவில்லில் வைத்து வெளிநாடுகள் நோக்கி ஏவிக்கொண்டிருந்தன பெங்களூரின் மென்பொருள் நிறுவனங்கள். முதல் விமானப்பயணம். முதல் நட்சத்திர விடுதி. முதல் முதல்கள்.  இத்தாலியின் மிலான் நகரம். ஃபேஷன் டிவியில் பார்த்த பெயர். மூன்று வாரப் பயணம். நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.   

    மிலானில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் மிலான் டூமோ என்றது கூகிள். ஐரோப்பாவின் மிகப்பெரிய கத்தீட்ரல். கோதிக் பாணி தேவாலயம். அறுநூறு வருடங்களானதாம் கட்டி முடிக்க. நாற்பதாயிரம் பேர் கூடலாமாம். “இப்படித்தான் லூவ்ர ம்யூசியத்தை பத்தியும் ஆ..வூ..ன்னாங்க…பாக்கறதுக்கு ஒரு வாரம் போதாதாமே… இரண்டு மணி நேரத்துல பாத்தாச்சு…எல்லாம் ஒரே அம்மணக்குண்டியா வரஞ்சு வைச்சுருக்கானுங்க…ஒன்ன பாத்தா எல்லாம் அதேதான்…” எனக்கு முன்பே பிரான்ஸுக்குச் சென்று திரும்பிய கல்லூரி நண்பன் ராஜா சொன்னான். 

    “ச்சாவ். வெல்கம் டு மிலான். என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் அழைக்கவும் – ஸ்டெஃபனோ.” இத்தாலி அணியின் மேலாளர் இமெயில் அனுப்பியிருந்தார். டிசம்பரின் கடைசி வாரத்தில், அந்தக்கால அரசு பள்ளிக்கூடம் போன்று இருந்த பெங்களூர் விமானநிலையத்தில் ஏறி எதிர்கால விண்வெளி நிலையம் போன்று இருந்த மிலான் விமானநிலையத்தில் இறங்கினேன். மிலான் நகரின் பிரேலி சிஸ்டம்ஸ் என்ற ஃபைபர் ஆப்ட்டிகல் நெட்வொர்க்கிங் நிறுவனத்தை நான் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தது. இணையப் பயன்பாடு பல்கிப்பெருகும் என்ற எதிர்பார்ப்பு 2000த்தில் பொய்த்தது. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் வேலைகள் மெல்ல இந்தியாவிற்கு மாறத்துவங்கின.  குளத்தில் எறியப்பட்ட கல்போல இந்திய அலுவலகத்தில் இருந்து மிலான் அலுவலகத்திற்கு வந்த முதல் நபர் நான். முதல்நாள் அலுவலகத்தில் ஆர்வம், குறுகுறுப்பு, உற்சாகம் என அலையலையாக அறிமுகங்கள். ஆர்குட் வலைதளத்தில் வாழும் நகரத்தை “மிலான்” என அப்டேட் செய்துகொண்டேன். 

    “பெங்களூரில் மீட்டிங் எல்லாம் ஆங்கிலமாமே…இந்தியனில் இல்லையா?” என்று கேட்டாள் சின்ஜியா. நூறு ரூபாய் நோட்டை எடுத்து பதினைந்து இந்திய மொழிகளின் வரிவடிவங்களை காட்டினேன். “அ” வை தமிழில், இந்தியில், கன்னடத்தில் எழுதினேன். சட்டென இந்தியா அவர்களுக்கு முப்பரிமாணத்தில் தெரிந்தது.  காந்தியை எல்லோருமே அடையாளம் கண்டது எனக்கு ஆச்சரியம். உணவு இடைவேளையில் உலகப்போர், ரோமப்பேரரசு, இந்தியா, இந்து மதம், காந்தி, சோனியா காந்தி என உரையாடல்கள் நீண்டன. மதிய உணவிற்குப்பின் எல்லோருமே கருப்பு காபி குடித்தார்கள். நான் பால் கலந்து டீ குடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி  அடைந்தார்கள். “வெண்டிடுவே” என என் வயதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி. “வார இறுதியில் நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்றார் நாற்பது வயது மரியோ. பருமனானவர்களே அலுவலகத்தில் இல்லை. காலையில் ஒன்பது மணிக்கு வந்து ஆறு மணிக்குக் கிளம்பினார்கள். நேர்த்தியும் ஒழுங்கும் என வேலையை மிகப்பொறுப்பாக செய்தார்கள். 

    இங்கே டாக்ஸியே பி.எம்.டபுள்யு, ஆடி, பென்ஸ் கார்கள்தான். டாக்ஸி எல்லாம் கட்டுப்படியே ஆகாது. செல்போன் ரோமிங் கட்டணமும் மிக அதிகம். சர்வீஸஸ் கம்பெனிகளில் வெளிநாட்டில் தனி சம்பளம் தருவார்கள். பிராடக்ட் கம்பெனிகளில் உணவு, போக்குவரத்து என தினப்படிகளோடு சரி. “இந்தியாவிலிருந்தே ஒரு மாசத்துக்கான சாப்பாட்ட எடுத்துட்டு வந்துட்டு, இங்க ஹோட்டல்ல, கிராசரி ஸ்டோர்ல கீழே கிடக்குற ரிசீப்டெல்லாம் பொறுக்கி டெய்லி பேட்டா வாங்குறான்டா என் லீட்” என்றான் ஜெர்மனியில் இருந்த அருண்பரத். “இந்த காச நீ தருவியான்னு கேக்குறான்.”  “வெளிநாட்டில் போய் பக்கி மாதிரி நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் உங்களுக்கு இங்கேயே ஸ்டார் ஹோட்டல் மாதிரி அறைகள். ஹாட் ஷவர். வெஸ்டர்ன் டாய்லட். தினமும் உங்கள் அறைகளை சுத்தப்படுத்துகிறோம். புல் ஹேண்ட் ஷர்ட், டை, ஷூ…” முன்பு வேலை செய்த மைசூர் பயிற்சி மையத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் சொன்னார். பட்டொளி வீசி பறக்குது பாரீர்…

    “நாளை நீ கண்டிப்பாக டூமோவிற்கு போகவேண்டும். என்ன பிரம்மாண்டம்! என்ன அழகு!” வெள்ளிக்கிழமை மதியம் சொன்னாள் சின்ஜியா. “ஆம். ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறேன்” என்றேன் உற்சாகமாக. விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. அல்லது உறங்கவே இல்லை. ஜெட்லாக் இன்னும் இருந்தது. வெந்நீர் தொட்டியின் கதகதப்பையும் வெம்மையையும் விட்டு எழுந்துவர மனமே இல்லை. எப்படியும் முதல் பேருந்து ஐந்து மணிக்குத்தான். Z321. கடைசி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து டூமோவிற்கு மெட்ரோ ரயில். விடுதி வரவேற்பாளர் உடைந்த ஆங்கிலத்தில் சொல்லியிருந்தான். சிவப்புநிற சிட்டி டூர் பஸ் டூமோ, நகர்சதுக்கம், கோட்டை எல்லாவற்றிற்கும் போகும். 

    கம்பளி கையுறை, முட்டி நீளமுள்ள அங்கி எல்லாம் அணிந்துகொண்டு அதிகாலை நான்கே முக்கால் மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பினேன். தெரு விளக்கொளியின் மங்கிய வெளிச்சம். இருள்.  விடுதியின் பளீர் ஒளியில் இருந்து கண்கள் பழக சில நிமிடங்கள் எடுத்தது. வலது சுண்டு விரல் குளிரை உணர்ந்தது. கைகளை பாக்கெட்டிற்குள் விட்டுக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன். 

    Z321 என மஞ்சள் எழுத்துக்கள் மின்ன பேருந்து வந்தது. ஏறினேன். “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். ம்ம்? கிரெடிட் கார்டை நீட்டினேன்.  இல்லை என தலையசைத்தார். “கோயிங் டூ மெட்ரோ ஸ்டேஷன்?” என்று கேட்டேன். “நோ இங்லீஸ்” என்றார். ஏதோ முணுமுணுத்தபடி வண்டியை எடுத்தார். உயிரற்ற கண்களுடன் ஒரு பாட்டி அமர்ந்திருந்தாள். “டிரெயின் ஸ்டேஷன்?” என கைகளால் ரயில் ஓடுவதைப்போல செய்கை செய்தேன். பொக்கை வாய் திறந்தது. பதில் எதுவும் வரவில்லை. சிலர் கண்களை மூடி தலை சாய்த்திருந்தனர். 

    ஏதோ சரியில்லை என்று தோன்றியபடி இருந்தது. அதை உணர்ந்தவர் போல ஒரு நடுத்தர வயதுக்காரர் விழித்துக்கொண்டார். அவருடன் பேசி தவறான திசையில் ஏறிவிட்டேன் என புரிவதற்கு மேலும் இருபது நிமிடங்கள் ஆகிவிட்டது. ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுப் போய்விட்டார்கள். 

    கருஞ்சாம்பல் நிற வானம். தொலைவில் இலைகள் இல்லாத மரங்கள் காற்றில் வேகமாக அசைந்தன. ஒரு குளிர் காற்று முகத்தில் படீரென அறைந்தது. மூக்கு எரிந்து கண்களில் நீர் கொட்டியது. அப்போதுதான் சட்டென ஒன்றை உணர்ந்தேன். இந்த ஒரு வாரமாக அலுவலகம், டாக்ஸி, விடுதி என வெம்மையில் மட்டுமே இருந்திருக்கிறேன். குளிரை அறியவே இல்லை. “ஜன்னல் ஓரத்துல உக்காராத…குளிரும்” என்று அம்மா சொல்லும் “குளிரிற்கும்” இந்த “குளிரிற்கும்” உள்ள தூரம், நான் வேலை செய்துகொண்டிருந்த பெங்களூரிற்கும் இப்போது ஒரு மாத வேலைக்காக வந்திருக்கும் மிலான் நகரத்திற்கும் உள்ள தூரத்தை விடப் பல ஆயிரம் மடங்கு. 

    உடல் வெடவெடக்க துவங்கியது. பற்கள் தன்னிச்சையாக தடதடத்தது. அப்படியே தரையில் உட்கார்ந்து உடலை இறுக்கி தலையை கால்களின் இடையே குறுக்கிக்கொண்டேன். ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென பாதாளத்தில் உருண்டதுபோல அந்த பேருந்து நிலையத்தில் அதிகாலையில் மாட்டிக்கொண்டேன். அது எந்த இடம் என்றே தெரியவில்லை. கடைகள் எதுவும் திறக்கவில்லை. டாக்சியும் எதுவும் இல்லை.  செல்போனும் ரோமிங்கில் “நோ சர்வீஸ்” என்று காட்டியது.

    பெருங்குளிரை அறியும் முதல் அனுபவத்தை ஒரு தமிழ் உடல் என்றுமே மறக்காது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைதான் நம் இலக்கணமே. பனியும் பனிசார்ந்த இடமும் அதில் இல்லையே. தமிழ் என ஒரு மொழியே உருவாகாத கடைசி பனியுகக்காலத்தில்தான் குளிரை அறிந்திருப்போம். “புடிச்சானுங்க பாரு நம்ம ஆளுங்க புளியங்கொம்புமாதிரி பூமில ஒரு இடத்த…கட்டின கோமணத்தோட காலம்பூரா கட்டையா நீட்டிட்டு கிடக்கலாம்.” என்னென்னவோ எண்ணங்கள். கூடவே தனியாக ஒரு எண்ணம் “தம்பி தமிழ்நாடு…அந்த பெருமையெல்லாம் இருக்கட்டும்…இங்கிருந்து எப்படி போவ?” 

    உதடுகளை நாக்கால் தடவியபோது வெடிப்புகள் இடையே உப்புச்சுவை. மூக்கின் நுனியில் எந்த உணர்வும் இருப்பதுபோல தெரியவில்லை. முகமே மரத்திருந்தது. சுண்டு விரலில் ஊசியால் குத்துவது போல இருந்தது. விரல்களை பார்த்தேன். கம்பளி கையுறையில் நூல் பிரிந்து ஒரு ஓட்டை. எனக்கு முன்பே ஐரோப்பாவிற்கு ஆன்சைட் வந்த அருண்பரத் தோல்கையுறை வாங்கச்சொன்னான். நான்தான் விலைகுறைவு என கம்பளிகையுறை வாங்கினேன். கைவிரல்களை விரித்து மடக்கி, முகத்தை தொட்டுப்பார்த்தேன். யாரோ தொடுவது போல இருந்தது. 

    தலையை தூக்கி பார்த்தபோது சிறிது தொலைவில் ஒரு இத்தாலிய பெண் நின்று கொண்டிருந்தாள். தோல் கையுறை. முட்டி வரை வரும் தோல் சப்பாத்து. நேர்த்தியான குதிரைவால் சடை. வாயில் சிகரட். எழுந்து சென்று “எக்ஸ்கியூஸ் மீ…” என அழைத்தேன். கவனிக்கவில்லை. மீண்டும் சத்தமாக அழைத்தேன். அவள் தலையை இடம் வலமாக அசைத்து, திரும்பி சிகரட் புகையை ஊதினாள். யாரோ பின்னந்தலையில் அடித்தது போல ஒன்றை உணர்ந்தேன். மிலான் நகரத்தில் வெள்ளை இல்லாத எல்லா நிறமுமே – கருப்பு, பழுப்பு, மஞ்சள் – தெருவில்தான் இருந்தன. பிச்சை எடுத்தன. ரோட்டோரத்தில் கடை விரித்திருந்தன. இந்திய முகங்கள் இருந்தன. திருட்டுப்படகில் வரும் பங்களாதேசிகள் என்று படித்திருக்கிறேன். பரதேசிகள். நான் கிளம்புவதற்குமுன் பேசிய ஒருவர்கூட இத்தாலிக்கு ஆன்சைட் சென்றதில்லை.

    “நான் அந்த பஞ்சப்பரதேசிகளில் ஒருவன் இல்லை…படித்தவன். சாப்ட்வேர் இஞ்ஜினியர்”. அவளிடம் எப்படி சொல்வது? ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் யாருமற்ற பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறாள் என்றால் ஏதோ ஷிஃப்ட் வேலை செய்கிறாள். விடுதி, மருத்துவமனை, எதுவோ. இத்தாலியில் எண்பது சதவீதம் பேரிடம் கார் உள்ளது. அவளிடம் இல்லையா? போடி பிச்சக்காரி…உன்னைவிட படித்தவன் நான். ஆத்திரமான மூன்றாவது “எக்ஸ்கியூஸ் மீ”க்கும் பதில் இல்லை. 

    ஒரு மணிநேரம் முன்புதான் இதமான வெந்நீர் குளியல் என்பதை நம்பவே முடியவில்லை. இங்கிருந்து எப்படியாவது போனால் போதும். கால் விரல்களும் மரக்கத்துவங்கின. “இந்த குளிரிலா உலகை வென்று இவ்வளவு உச்சங்களை உருவாக்கியிருக்கிறது மேற்கத்திய பண்பாடு?” கெஞ்சும் மெல்லிய குரல் “எக்ஸ்க்யூஸ் மீ…”, நடப்பது நடக்கட்டும் போ என்ற தீனமான “எக்ஸ்க்யூஸ் மீ…” எதற்கும் பதில் இல்லை. அவளுடைய சிகரட் தீர்ந்திருந்தது. கவிழ்த்துப்போடப்பட்ட கரப்பான் பூச்சி போல அந்த பேருந்து நிலையத்தில் ஓய்ந்திருந்தேன். என் விரல் நுனிகளில் தோலுரிந்து ரத்தம் வந்தது. நகக்கண்களில் விண்வினண்  என்ற வலி.

    எல்லாவிதமான வேண்டுதல்களும் முடிந்திருந்தன.  கால்களில் முழுதாகவே உணர்ச்சிகள் இல்லாமல் கட்டை என தோன்றிய போது  ஒரு பேருந்து வந்தது. அவள் ஏறினாள். நானும் தடுமாறி நொண்டிச்சென்று ஏறினேன். கீழே இருக்கவே முடியாத குளிர். பேருந்து எங்கே போனால் என்ன?  “பிக்லெட்டி…பிக்லெட்டி” என்றார் ஓட்டுநர். அவரை பார்த்தேன். எதிரே மூடியிருந்த கியோஸ்க் ஒன்றை காட்டி “பிக்லெட்டி” என்றார். “எக்ஸ்க்யூஸ் மீ”, “பிக்லெட்டி” என்ற இரண்டே வார்த்தைகளில் மொத்த உரையாடல்களும் அடங்கியது. யூரோ நோட்டுகள், காயின்கள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட், கம்பெனி ஐடி கார்ட், காந்தி சிரிக்கும் ரூபாய் நோட்டுகள் என ஒவ்வொன்றாக காட்டினேன். “பிக்லெட்டி” என்றார் தீர்க்கமாக. பொருளற்ற வெற்று காகிதங்கள். கீழே இறங்கினேன். பேருந்து புறப்பட்டுவிட்டது. அட பிக்லெட்டிகளா!

    ஒரு குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன். “நீ இலங்கையா?” என்னை நோக்கி வந்த அந்த கரிய மனிதர் ஆங்கிலத்தில் கேட்டார். ஆங்கிலம்! ஆங்கிலம்! கெட்டியாக பிடித்துக்கொள். இந்திய முகச்சாயல். சராசரி உயரம். மீசை. 

    “இல்லை. இந்தியா.” என்றேன். ஆனால் இவர் யார்? சிங்களரா? ஈழத்தமிழரா? புலியா?  பாஸ்போர்ட்டையும், பணத்தையும் என் கை அநிச்சையாக கெட்டியாக பிடித்துக்கொண்டது. 

    “இந்தியாவில் எங்கே?” பயில்வானுக்குரிய உடல். கையுறைகள். சப்பாத்துகள். பெரிய அங்கி. தெளிவான குரல். ஐம்பது வயது இருக்கும். குளிர் அவரை எதுவும் செய்யவில்லை.  

    “தமிழ்நாடு” என தொண்டை வரை வந்த சொல், அவர் கண்களைப்  பார்த்து சில நொடிகள் தயங்கியபின்  “பெங்களூர்” என்று மாறியது. வாய் நடுங்கி குளறியது. நடுக்கத்தையும் மீறிய எச்சரிக்கை உணர்வு. 

    “நீயும் வாட்ச்மேனா?” 

    என்னது? வாட்ச்மேனா? “இல்லை…இல்லை…சாப்ட்வேர் இஞ்ஜினியர்.” பற்கள் தடதடத்தன. நான் சொன்னது அவருக்கு புரியவில்லை என அவர் கண்கள் காட்டியது. “கம்ப்யூட்டர்” என்று சொல்லி கைகளால் டைப் அடித்து காட்டினேன். சாப்ட்வேர் என்பது தொட்டு உணரக்கூடிய ஒரு பொருள் இல்லை. வரலாற்றில் இதற்கு முன்பு கண்ணால் பார்க்கக்கூடிய ஒரு பொருளை உருவாக்காத துறை ஒன்று இருந்திருக்கிறதா? எப்படி விளக்குவது?

    மெல்ல தலையை அசைத்து புன்னகையுடன் ஆமோதித்தார். எந்த தயக்கமும் இல்லாமல் அவரை பற்றி சொன்னார். இங்கே ஒரு வங்கியில் காவலாளியாக பணிபுரிகிறார். இரவு ஷிஃப்ட் முடிந்து தன்னுடைய அறைக்கு திரும்புகிறார். மெல்ல நான் தமிழ்நாடு என்று சொன்னேன். இரண்டு தெரு தள்ளி ஒரு கடைக்கு அழைத்து சென்று, சரளமாக இத்தாலியன் பேசி எனக்கு பிக்லெட்டி வாங்கி தந்தார். பயணச்சீட்டு. பேருந்தில் ஏறியபின் பயணச்சீட்டு வாங்கமுடியாதாம். பெட்டிகடைகளில் முன்பே வாங்க வேண்டுமாம். அடுத்த பேருந்தில் ஏறினோம். கதகதப்பாக இருந்தது. 

    அவர் பேசிக்கொண்டே வந்தார். அவர் இலங்கை. காலி கடற்கரையில் ஒரு கடை வைத்திருந்தார். 2004 சுனாமியில் கடை அழிந்துவிட்டது. அவர் அம்மாவும் சுனாமியில் இறந்துவிட்டார். பின்பு ஒரு வருடம் இத்தாலி மொழி கற்று, தேர்வு எழுதி, மிலான் நகரத்திற்கு வந்தார்.

    பேருந்தில் இறங்கி டூமோவிற்கான மெட்ரோ ரயிலில் ஏறினோம். 

    “புலிகளால் எங்களுக்கு நிறைய பிரச்சனைகள்” என்று முகம் சுளித்தபடி சொன்னார்.

    “இந்தியாவில் நாங்கள் பற்பல மொழி பேசி ஒன்றாக இருக்கிறோமே?” என்றேன்.

    “நீங்கள் பெரிய நாடு. நாங்கள் கையளவு. இரண்டாக எப்படி பிரிய முடியும்?” என்று கேட்டார்.

    உரையாடல் தொடர்ந்தது. வாதம். எதிர்வாதம். அனல்வாதம். புனல்வாதம். வெம்மையும். கதகதப்பும் கூடியபடி வந்தது. 

    பூமியின் அடியில் இருந்த மெட்ரோ ரெயிலில் இருந்து மேலே ஏறி வந்தோம். சூரிய ஒளியில் நகரம் துல்லியமாக தெரிந்தது. அருகே ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றார். ஒரு க்ரொஸாந்தும் காபியும் வாங்கினேன். என் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன், உணவிற்கு அவரே பணம் தந்தார். என் கையில் ஒரு இருபது யூரோ நோட்டை திணித்தார். தொலைபேசி எண் தந்து அழைப்பதற்கு தயங்காதே என்றார். பார்ப்போம் என சொல்லி பிரிந்தோம். 

    நமக்கெல்லாம் பல வருடங்கள் முன்பு தென்ஆப்ரிக்காவிற்கு ஆன்சைட் போன லண்டன் எஜுக்கேட்டட் வக்கீலிடம் கேட்க தோன்றியது, “மோகன்தாஸ், டர்பனில் அந்த முதல் வகுப்பு டிரெயின் டிக்கட்டை எடுக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றியது?” 

    ஒரு புன்னகையுடன் எதிரே தெரிந்த பிரம்மாண்டமான கத்தீட்ரலை நோக்கி நடந்ததேன்.