இலக்கியத்திலும், கலைகளிலும் ஈடுபடும் ஆளுமைகளுடன் வாரம் ஒரு நேர்முகம் என திட்டமிட்டு, மூன்று நேர்முகங்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறேன். வாசகர் மதுநிகா சுரேஷ், இளம் எழுத்தாளர் விஜய் ரெங்கராஜன் மற்றும் எழுத்தாளர் ஜெகதீஷ் குமார்.
ஜெகதீஷின் நேர்முகத்தில் ஏ.ஐ பயன்பாடு குறித்த அவருடைய பதில் மொழிபெயர்ப்பாளர்கள் இடையே கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா எனக்கு எழுதிய மறுப்பை என் தளத்தில் பிரசுரித்திருக்கிறேன். எழுத்தாளர் சுசித்ரா ஒரு கடும் கண்டனத்தை அவர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். முகநூலில் மேலும் கடுமையான கண்டனங்கள் பதிவாகி இருக்கின்றன.
“நான் தெரிவித்த கருத்துக்கள் இப்படி மொழிபெயர்ப்பாளர்கள் மாண்பைக் குலைக்கும் வண்ணம் அமைந்து விட்டதை எண்ணி வருந்துகிறேன். அவர்கள் அனைவரிடமும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்கிறேன்” – என ஜெகதீஷ் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் அவர் வேண்டுகோளை ஏற்று நேர்முகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. மேலதிக விளக்கங்களுக்கு அவரை தொடர்புகொள்ளலாம்.
ஏ.ஐ குறித்து என் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி விடுகிறேன். என் தொழில்நுட்ப வேலையில் ஏ.ஐ விரிவாக பயன்படுத்துகிறேன். தகவல் திரட்டுவதற்காக கூகிள் தேடுபொறிக்கு பதில் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். தமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழி ஆவணங்களை படிப்பதற்கும் ஏ.ஐ பயன்படுத்துகிறேன். உதாரணம்: டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்கள் இணையத்தில் உள்ளன.
ஆனால் நான் புனைவு, அபுனை எழுதுவதற்கு ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. மொழியாக்கங்களுக்கும் ஏ.ஐ பயன்படுத்துவது இல்லை. நான் இதுவரை மிகக்குறைவாகவே எழுதி இருக்கிறேன். இரண்டு சிறுகதைகள், சில கட்டுரைகள் மற்றும் ஒரு பயன நூல். தொழில்நுட்பத்துறை சார்ந்து ஆங்கிலத்தில் இருந்து இரண்டு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இவை எதிலும் கூகிள் டிரான்ஸ்லேட் உட்பட எந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை.
கடந்த எட்டு மாதங்களாக பெரும்பாலான நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் எழுதுகிறேன். தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருந்தாலும், எழுதுவதில் ஒட்டுமொத்தமாக ஒரு இன்பம் இருக்கிறது. அதற்காகத்தான் எழுதுகிறேன். அந்த இன்பத்தை ஏ.ஐ உடன் பகிர்ந்துகொள்வதில் உடன்பாடில்லை.
ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி கதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டால், மொழிபெயர்ப்பு செய்யப்பட்டால் எழுத்தாளர்கள் அதை குறிப்பிட வேண்டும். அந்த படைப்புகளை பிரசுரிக்க வேண்டுமா என்பதை பதிப்பகங்களும், படிக்க வேண்டுமா என்பதை வாசகர்களும் முடிவு செய்ய வேண்டும்.
ப்ரியம்வதா தன்னுடைய கடிதத்தில் சில சாரமான கேள்விகளை கேட்டிருக்கிறார். அவற்றை குறித்து ஒரு முறையான உரையாடல் வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய பங்களிப்பாக ஏ.ஐ தொழில்நுட்பம், அதன் பரிணாமம், அது எப்படி செயல்படுகிறது என ஒரு தொடர் எழுத இருக்கிறேன். குறைந்தபட்சம் ஏ.ஐ குறித்த புரிதலை விரிவாக்கும் என நினைக்கிறேன்.