நேர்முகம் 5: பாலாஜி ராஜு

பாலாஜி ராஜு அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் வசிக்கிறார். கவிஞர். எழுத்தாளர். சொல்வனம், ஆவநாழி, கவிதைகள் இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். எமர்சன் இலக்கிய முகாம், பூன் (2022) இல் பாலாஜியை முதலில் சந்தித்தேன். வலைதளம்: https://balajirajuwrites.blogspot.com/

உங்கள் ஊர், படிப்பு, குடும்பம், வேலையை பற்றி ?

பள்ளிப் படிப்பை கரூரில் எங்கள் கிராமமான புலியூர் காளிபாளையத்தின் அருகில், செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்குச் சொந்தமான தனியார் பள்ளியில் முடித்தேன். எல்.கே.ஜி. முதல் பன்னிரண்டு வரை ஒரே பள்ளிதான். பத்தாம் வகுப்பு வரை தென்னைமரங்கள் அணிவகுக்கும் பாதை வழியாக பள்ளிக்கு நடந்தே செல்வேன், பிறகு சைக்கிளில் செல்லத் தொடங்கினேன். கரூர் மாவட்டத்தில் பல காளிபாளையங்கள் உண்டு. கரூர் திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த ஊர் எங்களுடையது. திருச்சியில் தனியார் கல்லூரியில் இளங்கலையும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகலையும் முடித்தேன். 

முதுகலை முடித்து கரூரில் ஒரு தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏழு வருடம் பணியாற்றினேன். 2010ம் ஆண்டு சென்னை சிறுசேரியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராகச் சேர்ந்தேன். நான்கு வருடம் சென்னை வாசம், பிறகு அமெரிக்கா வந்துவிட்டேன். தற்போது கொலம்பஸ் நகரில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை செய்கிறேன். மனைவி, மகன், மகளுடன் கொலம்பஸை ஒட்டிய புறநகரில் வசிக்கிறேன்.

பெற்றோர் தம்பி குடும்பத்துடன் கரூரில் எங்கள் கிராமத்திலேயே வசிக்கிறார்கள். தம்பி கரிகாலியில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் கிளை நிறுவனத்தில் வேலை செய்கிறான்.

முப்பது வயது வரை எங்கள் ஊரிலேயே இருக்கும் அரிய வாழ்வு எனக்கு அமைந்தது. போகன் சங்கரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது, ‘நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை’. எனக்கும் சென்னை நகரம் குறித்த இதே சித்திரம்தான் எழுகிறது. வார இறுதியில் சென்னை மங்களூர் விரைவு இரயிலில் கரூர் வந்துவிடுவேன். சென்னையில் வசித்த நான்கு வருடங்களும் இதையே வழக்கமாக வைத்திருந்தேன். 

இந்த இரயில் பயணங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிப்பேன், பெரும்பாலும் வண்ணதாசன் கவிதைகள். அவர் கவிதைகள் வாயிலாகவே நவீனக் கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது.

என்னுடைய கதைகளின் மாந்தர்கள் எல்லோரும் எங்கள் கிராமத்தில் வீட்டைச் சுற்றித்தான் வாழ்கிறார்கள். இந்த வருடம் ஊரில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். ‘ஐஸ்கிரீம்’ கதையின் ‘வெள்ளையம்மா’, ‘இருபது ரூபாய்’ கதையின் ‘குணசேகரன்’, ‘உறம்பரையான்’ கதையின் ‘முத்துசாமி தாத்தா’ என எல்லோருடனும் உரையாடினேன்.

முத்துசாமி தாத்தா’ ஒவ்வொரு வருடம் என்னைச் சந்திக்கையிலும் “அங்கையெல்லாம் நல்ல மழையா?” என்றுதான் உரையாடலைத் தொடங்குவார். இந்த முறையும் தவறாமல் அப்படியே நிகழ்ந்தது. இந்த முறை எல்லோரையும் போலவே தற்போதைய அமெரிக்க அதிபர் குறித்த வியப்பும் அவருக்கு இருந்தது 

இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள சிற்றூர்களில் இலக்கில்லாமல் மதிய வெயிலில் உலவுவது என் பழக்கம். மனதுக்குள் கதைக் கருக்களின் தருணங்களை அசைபோட்டவாறு, மிதமான வேகத்தில் விட்டேத்தியாக அலைவது அலாதியான ஒரு அனுபவம்.

கோடைக்காலங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தங்கியதே இல்லை. கிணற்றில் நீந்துவது, வயல் வெளிகளில் அலைவது, மீன் பிடிப்பது, மைதானத்தில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது என்றே என்னுடைய பால்யத்தைக் கழித்திருக்கிறேன். என்னுடைய பால்யத்தையும் இளமையையும் ஒளிரும் வெயிலும், இளையராஜாவின் கிராமிய திரைப்பாடல்களும் முயங்கிய ஒரு வெளியாக அடையாளம் காணலாம்.

அமெரிக்காவிலும் கோடைக்காலங்களின் பெரும்பகுதியை கிரிக்கெட் மைதானங்களில்தான் செலவிடுகிறேன். விரிந்த வானின் கீழ், பச்சைப் புல்வெளிகளால் சூழப்பட்ட பல்வேறு மைதானங்களில் இருப்பது எனக்குள் உள்ள சிறுவனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது. என்ன, அந்தச் சிறுவன் குடும்பத்துக்கும், இலக்கியத்துக்கும் அளிக்கவேண்டிய நேரத்தை எடுத்து ஒளித்துவைத்துவிடுகிறான். குளிர்காலங்களில்தான் ஒளித்துவைத்த இடத்தை என்னிடம் காட்டுகிறான். அவனுடன் போராடிக்கொண்டேதான் இருக்கிறேன், பெரும்பாலும் என்னை வென்றுவிடுகிறான்.

இலக்கிய அறிமுகம் எப்படி நிகழ்ந்தது ? 

என்னுடைய பெற்றோர் இருவருமே வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை துவக்கத்திலேயே கைவிட்டவர்கள். ஆனாலும் எதையாவது வாசிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. என்னுடைய அம்மா பழைய வார இதழ்களில் உள்ள கதைகளை வாசிப்பார். அவர் மூலமாகவே எனக்கும் வாசிப்புப் பழக்கம் உருவானது.

இளம் வயதிலேயே காமிக்ஸ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருந்தது; அம்புலிமாமாவும் நிறைய வாசித்திருக்கிறேன். முத்து மற்றும் லயன் காமிக்ஸ் வாயிலாக அமெரிக்க வன்மேற்கு நிலத்தின் கதைகளும், வேதாளன், இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், லக்கி லூக், வேட்டைக்கார வேலு போன்ற மனதில் அகலாமல் நிலைத்திருக்கும் மாந்தர்களும் அறிமுகமானார்கள். காமிக்ஸ் புத்தகங்கள் வாயிலாக கற்பனையான உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அமெரிக்காவில் காமிக்ஸ் புத்தகக் கடைகள் தென்பட்டால் உள்ளே சென்று ஒரு நோட்டம் விடுவது உண்டு. 

ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரின் பாக்கெட் நாவல்களை வாசித்திருக்கிறேன். இருபதுகளின் தொடக்கத்தில் முழுமையாக சுஜாதாவின் படைப்புகளில் மூழ்கியிருந்தேன். அவர் மூலமாக ‘சுந்தர ராமசாமி’ எனும் பெயர் அறிமுகமானது. ‘ஒரு புளியமரத்தின் கதை’ நான் வாசித்த முதல் இலக்கியப் படைப்பு. பிறகு என்னுடைய இருபதுகளின் இறுதியில் சாரு நிவேதிதாவின் வலைத்தளம் எப்படியோ என் வாழ்வில் குறுக்கிட்டது. சாருவின் வாயிலாக ஜெயமோகனின் வலைத்தளத்தை வந்தடைந்தேன். இன்று வரை அவர்கள் இருவருடைய தளங்களையும் வாசிக்காமல் என்னுடைய ஒரு நாள் கூட நகர்ந்தது கிடையாது. சுஜாதா வாயிலாகவே வண்ணதாசனும் அறிமுகமானார்.

உங்களுக்கு பிடித்த தமிழ், பிறமொழி எழுத்தாளர்கள், கவிஞர்கள் யார் ?

தமிழில் ஜெயமோகன், சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், அ.முத்துலிங்கம் ஆகியோருடைய எழுத்து எனக்கு நெருக்கமானது. திருச்செந்தாழையின் கதைகள் பிரமிப்பை அளிக்கின்றன; அவருடைய சிறுகதைகளை பலமுறை மறுவாசிப்பு செய்திருக்கிறேன். உறங்கும் முன் ஜெயமோகனின் ஏதாவது ஒரு சிறுகதையை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். சொற்களோடு உறங்கச் சென்று சொற்களோடு எழுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.

இலக்கிய ஆதர்சங்கள் என ஜெயமோகனையும், சாரு நிவேதிதாவையுமே குறிப்பிடுவேன்.

அபி, மதார், போகன் சங்கர் என ஆதர்ச கவிஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் மதாரின் பரிந்துரையில் தேவதச்சனின் ‘தேதியற்ற மத்தியானம்’ தொகுப்பை வாசித்தேன். அபாரமான கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. அவரையும் இந்த ஆதர்சப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அன்றாட வாழ்வின் எளிய தருணங்களை உயர்ந்த கவிதைகளுக்கே உரிய மாயமான தளங்களுக்கு நகர்த்திச் செல்கிறார். வாசித்த பிறகும் கவிதைகளின் தாக்கம் நீங்காமல் எஞ்சுகிறது. தேவதச்சனின் கவிதைகளுக்குள் இயங்கும் அவருடைய மனநிலை குறித்த பிரமிப்பு எனக்கு உண்டு. இவர்கள் எல்லோரிடம் இருந்தும் கவிதைகள் இயங்கும் தன்மை குறித்து நிறைய கற்றுக்கொள்கிறேன். 

ஆங்கிலத்தில் சார்லஸ் புக்கோவ்ஸ்கி, வால்ட் விட்மன், எமிலி டிக்கின்சன், மேரி ஆலிவர் ஆகியோருடைய கவிதைகளை வாசித்திருக்கிறேன். மேரி ஆலிவரை நண்பர் விவேக் சுப்ரமணியன் பரிந்துரைத்தார். மேரி ஆலிவருடைய கவிதைகள் வாசித்தவுடன் மனதுக்குள் அமர்ந்துகொள்கின்றன. 

பெரும்பாலான அயல்மொழிக் கவிதைகளை தமிழ் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே வாசிக்கிறேன். க. மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘நீரின் திறவுகோல்’ உலகலாவிய கவிஞர்களின் சிறந்த கவிதைகள் அடங்கியது. மொழிபெயர்ப்புக்கான கவிதைகளின் தேர்வும், அவருடைய மொழியாக்கமும் இணைந்து எழுச்சி மிகுந்த வாசிப்பனுபவத்தை அளிக்கிறது.

தல்ஸ்தோய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், ரேமண்ட் கார்வெர், ஆல்பர்ட் காம்யூ, எர்னஸ்ட் ஹெமிங்வே, ஒர்ஹான் பாமுக், நிகோஸ் கசந்த்சாகிஸ், குர்அதுல்ஐன் ஹைதர், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். பஷீரின் ‘மதிலுகள்’, தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’, ஒர்ஹான் பாமுக்கின் ‘பனி’ ஆகிய நாவல்கள் பிடித்தமானவை.

பஷீர் குறுநாவல்களில் அங்கதம் மின்னும் நடையில், நேரடியான கூறுமுறையில், எழுச்சி தரும் தருணங்களை அளிக்கிறார். தல்ஸ்தோய் பிரம்மாண்டமான ஒரு உலகைப் படைத்து அதில் கவித்துவமான பல தளங்களை எழுப்புகிறார். தற்போது ‘Lonesome Dove’ என்றொரு அமெரிக்க மேற்கு நிலத்தை களமாகக் கொண்ட நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரசியமான நாவல், புலிட்சர் பரிசு வாங்கியிருக்கிறது. இந்த நாவலை யதேச்சையாக நான் சந்தித்த ஒரு அமெரிக்கர் பரிந்துரைத்தார். அவர் அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியப் பின்புலத்தைச் சார்ந்தவர்.

உங்கள் முதல் கவிதை எப்போது வெளியானது ?

முதல் கவிதை ‘சொல்வனம்’ இதழில்தான் வெளியானது. 2018 ல் இருந்து கவிதைகள் எழுதுகிறேன். தொடக்கத்தில் ‘வனம்’ இதழுக்கு சில கவிதைகளை அனுப்பினேன், அவர்கள் நிராகரித்தார்கள். பிறகு நிறைய எண்ணிக்கையில் எழுதிய பிறகே கவிதைகளை அனுப்பவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்குள் இருக்கும் கவிதை வாசகனையும் தொடக்கத்தில் எழுதிய கவிதைகள் திருப்திப்படுத்தவில்லை. என்னுடைய சுபாவம் காரணமாகவும் கவிதைகளை பிரசுரத்துக்கு அனுப்பத் தயங்கினேன். 

நூறு கவிதைகளை நெருங்குகிறேன். தற்போது எழுதும் கவிதைகள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இனி அவ்வப்போது கவிதைகளையும் பிரசுரத்துக்கு அனுப்பலாம் என்று தோன்றுகிறது.

முதல் சிறுகதை எப்போது வெளியானது ? 

முதல் சிறுகதை ‘ஐஸ்கிரீம்’ சொல்வனம் இதழில் வெளியானது. 2024 ம் ஆண்டு இறுதியில் கரூர் பயணம் முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பியவுடன் எழுதிய சிறுகதை. ஒரு உருவகக் கதையாக எழுத உத்தேசித்தேன். அமெரிக்க விஷ்ணுபுரம் குழுவின் நண்பர்களால் பரவலாக வாசிப்புக்கு உட்பட்ட கதை. இன்றும் நண்பர்கள் சிலர் அந்தக் கதையை அவ்வப்போது பெருமனதோடு குறிப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என் நன்றி. 

எழுத்து வாழ்வின் தொடக்கத்தில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பெரிய வாசலைத் திறந்து வைத்திருக்கும் சொல்வனம் இதழுக்கு எப்போதும் என் மனதில் ஒரு இடம் உண்டு.

கவிதை, சிறுகதை என இரண்டு வடிவங்களிலும் எழுதுகிறீர்கள்.  கவிதை அல்லது சிறுகதை என ஒரு படைப்பிற்கான வடிவத்தை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

கவிதைகள் எழுதும் செயல் தர்க்கத்தை உதறி, முழுக்க கற்பனையின் துணைகொண்டும், உள்ளுணர்வினாலும் நிகழ்கிறது. கவிதைக்கான தருணங்களை அடையாளம் காண்பதை ஒரு விழிப்புணர்வு நிலை என்றும் கருதலாம். தொடர்ச்சியாக கவிதைகளை வாசிக்கையில், எழுதிக்கொண்டிருக்கையில் காணும் காட்சிகள் அனைத்திலும் ஏதேனும்  படிமங்களும், கவிதைக்கான கருக்களும் தென்பட்டு மனம் மயங்கி நிற்கும் இனிய நிலை அமைகிறது.

பல தருணங்களில் எழுதிய கவிதைகள் அர்த்தமற்ற உளறல்களாகவும், அரற்றல்களாகவும் இருப்பது உண்டு. ஆனால் கவிதைக்கான எல்லாக் குரல்களுக்கும் செவிசாய்த்தல் அவசியமானது என்று நம்புகிறேன். இனி வரும் கவிதைகளுக்கான உரமாகவும் இத்தகைய கவிதைகள் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அபூர்வமாக முழுக் கவிதையும் உதித்தவுடன் துல்லியமான சொற்களுடன், எந்த மாற்றமும் தேவைப்படாமல் அமைவதும் உண்டு. 

அலுவலகத்தின் பரபரப்பான சூழல்களுக்கு இடையிலும் கவிதைக்கான கருக்கள் இடைமறிப்பது உண்டு. தோன்றும் கருக்கள் அருவமாக, கனவின் ஒரு துளி போல பிரக்ஞையில் இருந்து முழுமையாகக் கரைந்து போவதும் உண்டு.

கவிதைக்கான கரு உதித்தவுடன் அதற்கே உரிய வார்த்தைகளும், கட்டுமானமும் வந்து அமர்ந்துகொள்கிறது. அப்போது மனம் ஒருவகை தானியங்கித்தன்மையுடன் முதல் வரைவை எழுதிவிடுகிறது. உடனடியாக திறன்பேசியில் தோன்றியவற்றை எழுதி வைக்கிறேன்.

எழுதிய முதல் வரைவை திறன்பேசியிலிருந்து கணிப்பொறிக்கு மாற்றி செழுமைப்படுத்துவேன். சரியாக வருபவற்றை தனிக் கவிதைகளாக எழுதி வைத்திருக்கிறேன், அவ்வப்போது என்னுடைய வலைத்தளத்திலும் வெளியிடுகிறேன். இன்னும் முதல் வரைவாகவே நிற்கும் கவிதைகள் அதிகமான எண்ணிக்கையில் என்னுடைய கூகிள் கோப்பில் கிடக்கின்றன. 

மாறாக சிறுகதைகள் ஒரு காட்சி, சந்தித்த மனிதர்கள், பல்வேறு நிலக் காட்சிகள், பிற சிறுகதைகள் வாயிலாக நமக்குள் உதிக்கும் வெளிச்சம் ஆகியவை மூலம் எழுகின்றன. கதைக்கான கரு தோன்றியவுடன் மனம் அதை அசைபோடத் தொடங்குகிறது. கதை மாந்தர்கள், சந்தர்ப்பங்கள், உரையாடல்கள், தோராயமான முடிவு என பல கோணங்களில் கதைகளை மனம் நிகழ்த்திப் பார்க்கிறது. உடனடியாக எழுதத் தொடங்கியவை, பல மாதங்களாக மனதுக்குள் இருந்துகொண்டு நெளிபவை, சில பத்திகள் மட்டும் எழுதி வளராமல் நிற்பவை என கலவையாக கதைகள் நிகழ்கின்றன.

கவிதைகள் எழுதுவது சிறுகதைகளுக்கான வடிவ போதத்தை எனக்கு அளிக்கிறது என்று எண்ணுகிறேன். சிறுகதையா, கவிதையா எனும் தேர்வு கருக்கள் உதித்தவுடன் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிடுகிறது; அதில் தர்க்கரீதியான என்னுடைய தலையீடு மிகவும் குறைவு என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது.

கரூர் மண் சார்ந்த யதார்த்த படைப்புகள், அமெரிக்க பின்புலத்தில் சிறுகதைகள் எழுதி இருக்கிறீர்கள். எழுத்து சார்ந்த எதிர்கால திட்டங்கள் என்ன ? 

அமெரிக்காவுக்கு குடியேறி பன்னிரண்டு வருடங்களை நெருங்குகிறேன். பல்வேறு நிலப்பரப்புகள், பனி, குளிர், வெயில், வானோங்கிய மரங்கள் என இயற்கையின் மாபெரும் திகழ்மேடையாக விளங்கும் இந்த மண்ணில் விரிவாக பயணங்கள் செய்திருக்கிறேன். ஒரு வந்தேறியாக, அந்நியனாக அமெரிக்காவைக் களமாகக் கொண்ட கதைகளை எனக்கே உரிய பார்வையில் தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்று எண்ணுகிறேன்.

கரூர் முப்பது ஆண்டுகளாக நான் வாழ்ந்த நிலம். ஒவ்வொரு ஆண்டும் பிரியத்தோடு அங்கு திரும்பிச் செல்கிறேன். கரூர் பயணம் முடிந்து அமெரிக்கா திரும்புகையில் ஒவ்வொரு முறையும் சில துளிகள் கண்ணீரை அந்த நிலம் என்னிடம் இருந்து பெற்றுக்கொள்கிறது. 

பிறந்து வளர்ந்த நிலம் நமக்குள் அருவமாக சிலவற்றை விதைக்கிறது. கரூரின் வெயிலை குறிப்பாகச் சொல்லலாம். நான் கதைகளைத் தரிக்கையில் வெயில் அங்கு பின்னணியில் இயங்குகிறது. விவரணைகளில் நேரடியாக அது இல்லாமல் போகலாம், ஆனால் அது நிகழ்கிறது. அமெரிக்காவில் கடுங்குளிர் சூழலில் இத்தனை ஆண்டுகளாக வாழ்கிறேன், வெயில் ஒரு பெரும் ஏக்கமாகவே எனக்குள் படிந்துகிடக்கிறது.

கரூரில் நான் எதிர்கொண்ட மனிதர்கள் அயராத உழைப்பு, கருணை, மூர்க்கமான நம்பிக்கைகள், பெருமிதங்கள், வன்முறை என எல்லாமுமாக என் கண்முன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். அவர்களை அந்த நிலத்தின் பின்புலத்தில் வைத்து புனைவாக எழுதுகையில் உணர்வுரீதியான ஒரு விலகல் நிகழ்கிறது; எனக்குள் இருக்கும் நினைவேக்கம் மெல்ல அகல்வதை உணர்கிறேன், அது என்னை ஆற்றுப்படுத்துகிறது.

எனக்கும் ஊருக்குமான பாலமாக என்னுடைய அம்மா இருக்கிறார். அன்றாடம் எங்களுக்குள் நிகழும் உரையாடலில் ஊரின் நிகழ்வுகள் வராமல் இருந்ததில்லை. திருமணமோ, இறப்போ, திருவிழாக்களோ, புதிதாக வருகை தரும் குருவியின் நிறமோ, இரவில் எங்கள் வீட்டை காவல் காக்கும் தெருநாயோ அவர் மூலமாகவே என்னை வந்தடைகின்றன. 

“ஒரு வயசான காக்கா தெனம் சாப்பிட வரும், கொஞ்ச நாளாக் காணோம்” என்றோ, “நம்ம செடி அவரக்கா அவ்ளோ ருசி” என்றோ, “அட மெசின்காரமூட்டு ரவி இருக்காருல்ல,” என்றோ, “நம்ம கோழிய நாய் தூக்கீட்டு போயிருச்சு. எங்காலுக்குள்ளயே சுத்திக்கிட்டு கெடக்கும், பாவம்!” என்றோ, “குமிட்டிக் கீர கடஞ்சிருக்கேன். அல்சருக்கு நல்லது” என்றோ அவர் சொல்பவற்றை கூர்மையாக அவதானிக்கிறேன். என்னை ஆட்கொள்ளும் நினைவேக்கம் அவற்றை பெரு விருப்போடு பற்றிக்கொள்கிறது. 

இவை மிகச் சாதாரண நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால், இதன் மூலம் ஒவ்வொரு நாளும் நான் எனக்குள் சிறிது தூரம் பயணிக்கிறேன். என்னுடைய சில கதைகளையும் அம்மா வாசித்திருக்கிறார். அந்திமழையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற ‘உறம்பரையான்’ சிறுகதை, அச்சு இதழில் என்னுடைய புகைப்படத்துடன் வெளிவந்திருந்தது. அதன் ஒரு பிரதியை எனக்காக பத்திரப்படுத்தி  வைத்திருந்தார். அவரையும் இப்போது நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.

“எதற்காக எழுதுகிறேன்?” என்றால் உங்கள் பதில் என்ன ?

எழுதுவது ஆழந்த அமைதியை அளிக்கிறது. எதையாவது எழுதுகையில் உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன், மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இந்த வாழ்விற்கு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன். நாமே ஒரு உலகத்தை உருவாக்கி, அதற்கே உரிய தர்க்கத்தை அளித்து, அந்தக் கதைகளுக்குள் பயணிப்பது பெரும் உவகை அளிக்கிறது. எழுதுவதைப் போன்ற வசீகரமான, நிறைவை அளிக்கும் செயலை நான் வேறு எதிலும் உணர்ந்ததில்லை.

இத்தனை வருடங்கள் அமெரிக்காவில் இருந்தாலும், இந்த நிலத்தில் முழுமனதாக என்னால் ஒன்ற முடியவில்லை; உணர்வுரீதியாக அந்நியனாக இருப்பதன் பதைப்பு எப்போதுமே எனக்குள் இருக்கிறது. எளிய தத்துவார்த்த சிக்கலாக இது தோற்றமளித்தாலும், என்னால் இந்த பதைப்பைக் கையாள முடியவில்லை. என்றாவது ஒரு நாள் இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன். இங்குதான் இலக்கியத்தையும், எழுத்தையும், ஏன் கிரிக்கெட் விளையாடுவதையுமே கூட உறுதியாகப் பற்றிக்கொள்கிறேன்.

மேலும், இலக்கியம் அளிக்கும் வரையறைகளுக்கு அப்பால், படைப்புகளுக்குள் இருக்கும் கதைகளையே என் மனம் நாடுகிறது. ஒரு கதைசொல்லியாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

எழுதும் அனைத்தும் பிரபஞ்சத்தில் எங்கோ சென்று சேகரமாகின்றன. நம் அறிவுத்தொகைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு நோக்கமும் அதற்கு இருக்கிறது என்று நம்புகிறேன். இதை என்னால் தர்க்கரீதியாக விளக்கமுடியவில்லை, ஆனால் உணர்கிறேன்.

உங்களுடைய எழுதும் முறை என்ன ? (இடம், நேரம், ஒரே அமர்வில் சிறுகதை எழுதிவிடுவீர்களா?)

சிறுகதைகளை கணிப்பொறியில்தான் எழுதுகிறேன். வார இறுதி நாட்களில், காலையில் எழுந்து கதைகளை எழுதுகிறேன். விடிகாலையில் படுக்கையில் இருக்கும் போதே மனதுக்குள் இருக்கும் கதை விசை கூடி, சொற்களின் எடையுடன் எழுந்துகொள்கிறேன். நான் எழுதிய கதைகள் அனைத்தும் இப்படி அமைந்தவைதான்.

இதுவரை இருபத்து ஐந்து சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். ஏழு கதைகளை பிரசுரத்துக்கு அனுப்பினேன், ஒரு கதை நிராகரிக்கப்பட்டு ஆறு கதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம் இதழில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த ‘எழுகை’ கதையை மட்டுமே ஒரே அமர்வில், இரண்டு மணிநேரத்தில் எழுதி முடித்தேன். பிற கதைகள் அனைத்தும் நாட்கள், வாரங்கள், மாதங்களாக வளர்ந்தவைதான். புனைவுகளை எழுத கணிப்பொறி முன் அமர்வதுதான் முக்கியமானது, அதற்குப் பின் கதைகள் தானாகவே வளர்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறேன்.

எழுதிய கதைகளை ஆறவைத்து, எதிர்பாராத தருணங்களில் வாசித்துப் பார்ப்பதை ஒரு முறையாகவே பின்பற்றுகிறேன். அலுவலகத்தின் வேலைகளுக்கு இடையில், கூகிள் கோப்பில் இருக்கும் கதைகளை வாசித்துப் பார்ப்பது என்னுடைய வழக்கம். அப்போது கதைகளில் புதிய தருணங்களோ, இயற்கை வர்ணனையோ, உரையாடல்களோ, ஒட்டுமொத்தமாக கதையின் பார்வையில் இருக்கும் இடைவெளியோ தென்படும்.

வார நாட்களில் மாலை நேரம் மட்டுமே எதைவாயது எழுதுகிறேன். குறைந்தது அரைமணி நேரமாவது எழுத முயல்கிறேன். மாலை நேரம் புனைவுகள் எழவில்லையென்றால் நாட்குறிப்பும், நண்பர்களின் படைப்புகளுக்கான எதிர்வினைகளையும் எழுதுகிறேன். 

வேலை நாட்களில் என்னுடைய படைப்புகள் உறைநிலைக்குச் செல்கின்றன. எழுத்து எனும் செயலுடன் தொடர்பில் இருப்பதையும், வாசிப்பின் மூலம் மொழியால் மனதை மீட்டிக்கொள்வதையும் தவறாமல் செய்கிறேன். அலுவலகம், மகனின் பள்ளிக்கு என ஒரு நாளில் இரண்டு மணிநேரம் காரில் பயணிக்கிறேன். அப்போது படைப்புகளை மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பது பிடித்திருக்கிறது.

என்னுடைய படுக்கை அறையில் ஒரு மெத்தை நாற்காலி இருக்கிறது. அதன் மீது அமர்ந்து, கணிணியை அதற்கே உரிய பலகையின் மீது வைத்து எழுதுகிறேன். எனக்கு எதிரில் மூன்று பெரிய கண்ணாடிச் சாளரங்கள் உள்ளன. அதன் வழியாகத் தெரியும் புல்வெளியையும், மரங்களையும், தொலைதூர வீடுகளையும் பார்த்துக்கொண்டே எழுதுகிறேன்.

எழுதும் அறையில் படுக்கை, எழுதும் நாற்காலி, ஒரு புத்தக அலமாரா, சில ஓவியங்கள், புகைப்படங்கள், ஒரு கடிகாரம், இரவு விளக்கு தவிர வேறு எதையும் குவிக்காமல் பார்த்துக்கொள்கிறேன். நிர்வாணமான, எடையற்ற விரிந்த அறை ஏன் எனக்குப் பிடிக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை; எல்லா வகையான லௌதீகமான பொருட்களும் நம் மீது எதோ ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனும் நம்பிக்கை காரணமாக இருக்கலாம். 

என் மனைவியிடம் மிகக் கறாராக இந்த அறையில் வேறு எதையும் கொண்டுவரக்கூடாது என்றும் சொல்லிவைத்திருக்கிறேன். அவளுக்கு அறை என்றால் அதை லௌதீகமான அலங்காரப் பொருட்களால் நிரப்பவேண்டும் எனும் எளிய நம்பிக்கை உண்டு.

இன்னொன்று, படுக்கை அறையில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஹவாய் தீவுகள் பயணத்தின்போது ஒரு கனடா நாட்டு தெரு ஓவியன் வரைந்த என்னுடைய கோட்டுச் சித்திரமும் இருக்கிறது. நான் எழுதுகையில் அந்தக் கோட்டுச் சித்திரம் என்னைக் கண்டு புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. கோட்டுச் சித்திரம் குறித்து ஒரு கவிதையும் எழுதியிருக்கிறேன்,

“கித்தானில்

தூரிகை உராயும்

மயக்கொலி

காதுகளில்,

எவனோ 

ஒரு ஓவியன்

தீட்டுகிறான்

வரைந்து தீராததோர்

கோட்டுச் சித்திரத்தை”

உங்களுடைய படைப்புகளில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உண்டா ?  

நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவன் என்றாலும், மிகச் சமீபத்தில்தான் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் துவங்கினேன். இது எனக்கு நானே விதித்துக்கொண்ட பத்திய நிலைப்பாடு.

கதைகளுக்கான தரவுகளுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறேன். சில குறிப்பிட்ட சொற்களின் அர்த்தங்களுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை நாடுகிறேன். முன்பு கூகிளில் தேடிக்கொண்டிருந்தேன். ஏ.ஐ. தொழில்நுட்பம் உரையாடும் தன்மையுடன் தகவல்களை சரளமாக அளிக்கிறது. உரையாடும் தன்மை இருப்பதாலேயே நம் மீது ஆதிக்கமும் செலுத்துகிறது. 

ஒட்டுமொத்தமாக எழுதிய படைப்புகளின் மொழியைச் சீரமைக்கவோ, பிழை திருத்தவோ கூட நான் எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதில்லை. படைப்புகளில் எல்லாத் தளங்களிலும் மனிதக் கைத்தடம் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. கூகிளின் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்துகிறேன்.

நாவல் எழுதும் திட்டம் உண்டா ? களம் என்ன ?

குறுநாவல் எழுதும் எண்ணம் உண்டு. அது கரூர் பிண்ணனியில் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு கதைக்களம் புகைமூட்டமாக மனதில் ஓடுகிறது, சற்று கனிந்து வரட்டும் என்று எண்ணுகிறேன். நிறைய சிறுகதைகளை எழுதவேண்டும், பெருநாவல்களை வாசிக்கவேண்டும். பிரபஞ்ச சக்தி என்மீது கருணையுடன் இருக்க வேண்டுகிறேன்.

Discover more from Viswanathan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading