எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கடிதங்களும், அவருடைய தளத்தில் வந்த பதில்களும்.

தெய்வத்தின் முகங்கள்
தெய்வத்தின் முகங்கள்
April 10, 2012
அன்புள்ள ஜெ,
நலமா ?
உங்கள் ‘திருமுகப்பில்’ கதையை ஒருமுறை படித்திருக்கிறேன். அப்போது, எனக்கு அது சரியாகப் புரியவில்லை.
என் நண்பன் ஜோசப், பல சமயங்களில் தன்னை, ‘மூன்றாம் உலகக் கிறித்தவன்’ என்று சொல்லிக்கொள்வான். அவனுடன், எட்டு வருடங்களுக்குமுன், தலைக்காவேரி அருகே உள்ள பைலாகூப்பேவிலுள்ள திபேத்திய மடாலயத்திற்கு சென்றிருந்தேன்.
சீன முகமுடைய புத்தரைப்பற்றி அவன் பேசியபோது, “புத்தருக்கு எப்படி சீன முகம் இருக்கலாம்? இந்திய முகந்தான் இருக்கணும்” என்று நான் சொல்ல, அவன் சிறிது நேரம் பார்த்துவிட்டு, ஒன்றும் சொல்லவில்லை.
சில மாதங்களுக்குமுன் ஜோசப்புடன் அங்கோர்வாட் சென்றிருந்தேன். கடைசிநாள், அங்குள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றபோது, ஒரு கூடத்தில், கட்டைவிரலளவு முதல் ஆளுயர புத்தர்கள் என ஆயிரம் புத்தர் சிலைகள் இருந்தன.
கிரேக்கச் சாயல் கொண்ட காந்தார புத்தர், இடுங்கிய கண்களுடைய சீன புத்தர், தடித்த உதடுகளுடைய கம்போடிய புத்தர், பெரிய கண்களுடைய இந்திய புத்தர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை.
அந்தச் சிலைகளை பார்த்துக்கொண்டிருந்த போது, ஏதோ ஒரு கணத்தில், சட்டென்று, உங்கள் ‘திருமுகப்பில்’ புரிந்தது. உங்கள் கதையையும், பைலாகூப்பேவையும் அவனுக்கு நினைவூட்டியபோது, ஆயிரம் புத்தர்களுடன் சேர்ந்து அவனும் புன்னகைத்தான்.
ஏசுபிரான் சிலைகளில் ஏன் மங்கோலிய ஏசுவோ, காப்பிரி ஏசுவோ இல்லை என்று நீண்டநேரம் பேசிக் கொண்டே வந்தோம்.
நீங்கள் கண்டிப்பாக கம்போடியா செல்லவேண்டும் சார். நிச்சயம் ரசிப்பீர்கள்.
நன்றி,
விசு.
அன்புள்ள விசு,
ஒரு தெய்வம் எப்படி முகம் மாறும் என்பதற்கு புத்தர்தான் உதாரணம். காந்தார புத்தர் கிரேக்க சாயல் கொண்டவர். தென்னக புத்தர் தெற்கத்திய முகம் கொண்டவர். திபெத்திய புத்தரின் கண் இடுங்கலானது. ஆனால் பர்மியபுத்தரின் கண் அப்படி இல்லை.
என் மகனின் கல்லூரி நண்பர்கள் பலர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது விரல்களால் கண்களை விரித்துக் கொட்டைவிழி போல ஆக்கிக் காட்டி நம்மைக் கிண்டலடிப்பார்களாம். அவர்களுக்குப் பெரிய கண் என்பது ராட்சதத்தன்மை கொண்டது. சிறிய இடுங்கிய கண் அழகானது, தெய்வீகமானது.
கடவுளைப் பெருமாள் என்பதுண்டு. விஷ்ணு, முருகன் எல்லாமே பெருமாள்கள். பெரும் ஆள். நாம் சிறிய ஆட்கள். குறையானவர்கள். நம்மைப்போன்ற, ஆனால் முழுமையான, வடிவம் கொண்டவரே நம் தெய்வம். நாம் தேடும் முழுமையின் சின்னம்.
இன்று நாம் காணும் ஏசு இத்தாலிய ஏசு. அவரது யூத முகம் வேறாக இருந்திருக்கலாம். அதுவும் அன்று அபிசீனியாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஜுடாயாவின் யூதர்கள் இந்தியர்களைப்போல மாநிறமாக, பெரிய கண்களுடன் இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்,
இந்தியாவிலேயே வட இந்தியர்களுக்குக் கன்னங்கருமையாக இருக்கும் நம்முடைய தெய்வங்கள் பீதியைத்தான் கிளப்புகின்றன. வெண்சலவைக்கல் சிலைகளே அவர்களுக்கு தெய்வ உருவமாகப் படுகின்றன. நமக்கு வெண்சிலைகள் ஏதோ பொம்மைகளாகத் தோன்றுகின்றன.
சமணப்பயணத்தில் ஒரு விஷயத்தை கவனித்தேன். பல ஊர்களில் புராதனமான சமண தீர்த்தங்கரர் சிலைகள் கரியவை. அவை ஓரமாக சிறு அறைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டபின் கடந்த முந்நூறாண்டுகளில் வெண்சலவைக்கல் சிலைகள் கருவறையில் அமர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, ராஜஸ்தானின் தில்வாராவில் சலவைக்கல் சிற்பங்கள் மண்டிய கோயிலில் பூட்டப்பட்ட பழைய கருவறை ஒன்றின் இருளுக்குள் இருந்த ஆறடி உயரமான கன்னங்கரிய தீர்த்தங்கரர் சிலை நம் ஆழ்மனத்தில் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது.
புத்தரின் உடம்பு தர்மகாயம் என்று சொல்லப்படுகிறது. பிரபஞ்சத்தை இயக்கும் மகாதர்மத்தை ஓர் உடம்பாகக் காண்பதே அது. ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் ஒரு சரியான துளி நம் உடல். பிரபஞ்ச விசையே இதையும் இயக்குகிறது. ஆகவே இதுவும் தர்மத்தின் தோற்றமே.
அதையே விசுவரூபம் என்கிறோம். விசுவம் என்றால் பிரபஞ்சம். உடலின் பிரபஞ்சத்தோற்றம் மட்டுமல்ல பிரபஞ்சத்தின் உடல்தோற்றமும் முடிவற்றதே.
எல்லா இறையுருவங்களும் நம் உடம்பை நாமே காண்பதுதான்.
ஜெ
—

பெயர்ந்தோர்
பெயர்ந்தோர்
April 25, 2013
அன்புள்ள ஜெ,
உங்கள் வாழும் தமிழ் பதிவு, http://www.jeyamohan.in/?p=29570, மனதை நெகிழவைத்தது.
இந்த வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு. ( பிரஞ்சு – கரீபியத் தீவுகளில் உள்ள தமிழர்களை / இந்தியர்களைப் பற்றிய ஆவணம்).
https://www.youtube.com/watch?v=CZ11YjOMp4o
https://www.youtube.com/watch?v=ZR1zisa_N-o&feature=relmfu
பாண்டிச்சேரியிலிருந்தும், காரைக்காலிலிருந்தும் கொத்தடிமைகளாக சென்றவர்களின் வம்சாவளியினர் பற்றிய ஆவணம்.
இவர்களுக்குத் தமிழ் மறந்துவிட்டது. ஆனால் மாரியம்மனும், மதுரைவீரனும் மறக்கவில்லை.
பிரெஞ்ச் பேசிக்கொண்டு, இலைபோட்டு சாப்பிடும் இவர்களைக் காணும்போது, உங்கள் கொற்றவை நினைவிற்கு வருகிறது.
இவர்கள், ஆழி அடித்துச்சென்ற கன்னியன்னையின் மெட்டி தானே.
தொடர்பான கட்டுரை :
http://independent.academia.edu/SureshPillai/Papers/392416/Hindu_Indian_cultural_Diaspora_in_French_Caribbean_islands_of_Guadeloupe_and_Martinique
ஹென்ரி சிதம்பரம் என்பவரை குவாதலூப்பின் காந்தி என்கிறார்கள். இவரைபற்றி அதிகம் தெரியவில்லை.
கரீபிய, பிஜி தீவுகளுக்கு கொத்தடிமைகளாக சென்றவர்களைப்பற்றித் தமிழிலோ, இந்திய மொழிகளிலோ ஆவணமோ/ நூலோ வந்துள்ளதா ?
ஆப்ரிக்க அடிமைகளைப்பற்றியும், யூத படுகொலைகளைப்பற்றியும் ஆயிரக்கணக்கில் நூல்கள் உள்ளன.
இந்திய பஞ்சங்களையும், கொத்தடிமைகளையும் பற்றி ஐம்பது புத்தகங்கள் வந்திருக்குமா ஜெ ?
விசு
அன்புள்ள விசு
மிகவும் பேராசைப்படுகிறீர்கள்
எனக்குத்தெரிந்து ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றவர்களைப்பற்றி அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. எந்த ஆராய்ச்சியும் நடத்தப்பட்டதில்லை. அதற்காக ஒரு பைசாகூட செலவழிக்கப்பட்டதில்லை.
ஓரளவேனும் பதிவுகள் உள்ளது இலக்கியத்தில். குறிப்பாக இலங்கை மலையகத் தமிழர்களைப்பற்றியும் மலேசியத்தோட்டத்தொழிலாளர்கள் பற்றியும் ஒரு சில ஆக்கங்கள். தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு முதலிய சில இலங்கை எழுத்தாளர்களை குறிப்பாகச் சொல்லலாம்
ஜெ
—-

https://www.jeyamohan.in/21403/ – முதல் வாசகர் கடிதம்
கடிதங்கள்
October 21, 2011
அன்புள்ள ஜெமோ,
நலமா ? நீங்கள், “நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்” நூலில் கூறிய, “ஆங்கில வழி கல்விகற்று, இன்டர்நெட் மூலம், இலக்கியத்தைக் கண்டடயும் நான்காவது வகையை”ச்சார்ந்த ஒரு
இளைய வாசகன். நண்பர் ஒருவர் உங்களுடைய “கன்னி நிலம்” கதையை அனுப்பினார். காதலை இவ்வளவு தீவிரத்துடன் இதற்குமுன் நான் படித்ததில்லை. உங்கள் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு உங்கள் வலைத்தளத்தை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.
“நான் ஒரு அறிவாளி, ஒருவர் எழுதி எனக்குப் புரியாதா?” என்ற அகந்தை எனக்கு இருந்தது. நீங்கள் எழுதிய விஷ்ணுபுரம், இந்து மரபின் ஆறு தரிசனம், பின் தொடரும்
நிழலின் குரல், நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கொடும்பாளூர் கண்ணகி ஆகியவற்றை வாங்கினேன். [ நான் அமெரிக்காவில் வேலை செய்கிறேன். சமீபத்தில் விடுமுறைக்கு
சென்னை வந்தேன். ஹிக்கின் பாதம்ஸ் சென்று உங்கள் புத்தகங்களைக் கேட்டால் “அவருதுலாம் இங்க இல்லைங்க” என்றார் ஒருவர்.]
விஷ்ணுபுரத்தை ஒருமுறை படித்துவிட்டு ஒரு பெரும் அயர்ச்சி ஏற்பட்டது. [தர்க்க விவாதப் பகுதிகள், கவிதைகள், ஆகிவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என் வாசிப்பு அனுபவம் இல்லை என்ற ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன்]. மேலும், நான் சிறு வயதில் இருந்து நம்பிய பல விஷயங்களில் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது.யோசித்து, யோசித்து, எனக்கு மூளை குழம்ப ஆரம்பித்தது. seriously, I was confused. [இப்ப கொஞ்சம் பரவாயில்லை :-)].
உங்கள் மூலமாக நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாகி உள்ளது. இதற்குமுன் விகடன், சுஜாதா என்ற அளவுக்கு தமிழில் இருந்த என் வாசிப்பு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருகிறது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நன்றி,
விசு.
அன்புள்ள விசு
ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.
தொடர்ந்து விவாதிப்போம்
ஜெ