விஷ்ணுபுரம் நாவல் – ஒரு பார்வை

நான் கண்ட விஷ்ணுபுரம்

Post originally written in March 2012 in siliconshelf site

https://vishnupuram.com/tag/விசு/

இந்த பதிவை மார்ச் 2012 இல் எழுதினேன். அப்பொழுது இணையத்தில் விஷ்ணுபுரம் நாவல் குறித்த பதிவுகள் மிகக்குறைவு. எழுத்தாளர் கடலூர் சீனு ஜெ. தளத்தில் விஷ்ணுபுரம் வாசிப்பை குறித்த அருமையான கடிதங்களை எழுதியிருந்தார். அந்த கடிதங்களை தவிர்த்தால் நேர்மறையான பதிவுகள் மிக குறைவாக இருந்தன. நாவலை வாசிக்காமலே எழுதப்பட்ட பதிவுகள், காழ்ப்புகளே மிகுதி. நண்பர் சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் விஷ்ணுபுரத்திற்கான வாசிப்பரங்கை மேலும் சில மாதங்கள் கழித்து ஒருங்கினைத்தார். என்னுடைய பதிவையெல்லாம் விட மிகத்தீவிரமான வாசிப்பனுபங்களை கொண்ட கட்டுரைகளை நண்பர்கள் அந்த கருத்தரங்கில் வாசித்தார்கள். https://vishnupuram.com/category/காரைக்குடி-கருத்தரங்கு/. விஷ்ணுபுரம் நான்காம் பதிப்பு முன்னுரையில் ஜெ. இப்படி எழுதியிருந்தார்:

சென்ற பதினைந்து வருடங்களில் அனேகமாக எல்லா மாதங்களிலும் ஒரு விமர்சனமாவது விஷ்ணுபுரத்துக்கு வெளியாகியிருக்கிறது. பல விமர்சனங்கள் கூர்மையானவைதான். ஆனால், என் கருத்தில் விஷ்ணுபுரத்துக்கு மிக முக்கியமான விமர்சனங்கள், அந்நாவலை மிகநெருங்கிச்சென்று ஆன்மாவைத் தீண்டிப்பார்க்கும் விமர்சனங்கள் இந்த 2012ல் தான் வெளிவந்துள்ளன. அவை எனக்கு ஆழமான நம்பிக்கையை அளிக்கின்றன. பதினைந்தாண்டுகளுக்கு முன்னர் விஷ்ணுபுரம் வெளிவந்த போது அன்றைய சிற்றிதழ்ச் சூழலில் ஒரு விசித்திரமான சலசலப்பு மட்டுமே உருவாகியது. அன்றைய இலக்கிய மதிப்பீடுகளை அது மீறிச்சென்றது. அதன்மீது வழக்கமான அன்றாட அரசியல் சார்ந்த வாசிப்பு ஒன்றும், நவீனத்துவ வடிவப்பிரக்ஞை சார்ந்த வாசிப்பு ஒன்றும் மட்டுமே நிகழ்ந்தன. அன்று அந்த ஆரம்பநாட்களில் நாவலின் கைப்பிரதியை வாசித்து அது ஒரு செவ்வியல் ஆக்கம் என்ற வரியை என்னிடம் சொன்னவர் சி.மோகன். அது வெளிவரவும் அவர் காரணமாக இருந்தார். அந்த இளம்வயதில் அச்சொற்கள் அளித்த ஊக்கம் அளப்பரியது. இப்போது அவரை மீண்டும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். விஷ்ணுபுரம் பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் அதைப் புரிந்துகொள்வதற்குரிய பிற தகவல்களும் தொகுக்கப்பட்டு vishnupuram.com என்ற இணையதளம் நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதில் இந்நாவல் விவாதிக்கப்பட்டபடி இருக்கிறது. அதில் எழுதிவரும் பலரும் இந்நாவல் எழுதப்பட்ட போது சிறுவர்களாக இருந்தவர்கள். உலக இலக்கியத்தில் ஆழ்ந்த வாசிப்புடன் தமிழுக்குள் நுழைந்தவர்கள். அவர்கள் வாசிக்கும் விஷ்ணுபுரம் அதிநவீனத் தொழில்நுட்ப யுகத்துக்காகத் தன்னைப் புதியதாக உருவாக்கிக்கொண்ட ஒன்றாக இருப்பதைக் காண்கிறேன்.

——————————————————————-

2015 ஆம் ஆண்டிற்கு பிறகு மேலும் சிறந்த வாசகர் கடிதங்கள் வெளிவந்துள்ளன. ஒரு வகையில் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்கள் மேலும் சிறப்பாகவே விஷ்ணுபுரம் நாவலை வாசிக்கிறார்கள்.

—–

நான் கண்ட விஷ்ணுபுரம் – வாசகர் பார்வை:

“யுகத்துக்கு ஒருமுறை விஷ்ணு புரண்டு படுப்பார். ஒரு யுகமென்றால், எத்தனை கோடி கனவுகள், எத்தனை கோடி சிந்தனைகள். நான் கவிஞன். காலத்தை சொல்லால் அளப்பவன். எனது காவியம் ஒரு யுகத்தை பிரதிபலித்துக்காட்டும். ” – சங்கர்ஷணன்.

************

விஷ்ணுபுரத்தை, முதல்முறை படிக்கும்பொழுது, முதல் ஐம்பது பக்கங்கள் கடினமாக இருந்தது. மொழியும், நடையும் பழகியபின் திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் விஷ்ணுபுரத்தில் தொலைந்து போய்விட்டேன். கதையின் ஓட்டத்தை தெரிந்துகொள்வதற்காக, அவசர, அவசரமாகப் படித்தேன். கவிதைகள், தர்க்க விவாதங்கள் (இரண்டாம் பகுதி), பல பக்கங்களுக்கு நீளும் எண்ண ஓட்டங்கள் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். படித்துமுடித்த பின், ஒன்று தெரிந்தது. நான் படித்த மற்ற தமிழ் நாவல்கள் போல இது இல்லை. (கண்டிப்பாக, டைம் பாஸ் நாவல் இல்லை).  குழப்பமும் பிரமிப்பும் அடைந்தேன். (குழப்பம் ஏனென்றால், நாவல் எனக்கு புனைவு என்பதைத்தாண்டி, உண்மை என்று தோன்றியதால்.) பத்துவரிகளில், ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  (http://www.jeyamohan.in/?p=21403). சில மாதங்கள் கழித்து பதில் எழுதினார். 

“ஒரு புதிய கலைவடிவுக்குள் ஒரு புதிய அறிவுத்துறைக்குள் நுழையும்போது உருவாகும் ஆரம்ப அயர்ச்சியும் பிரமிப்பும் ஆச்சரியமும்தான் இவை. மெல்ல இவை விலகி உங்களுக்கான ரசனையும் உங்களுக்கான தேர்வுகளும் உருவாகிவிடும். அதிகபட்சம் ஒருவருடம்.விஷ்ணுபுரம் எடுத்துக்கொண்டபொருள் அதைக் கொஞ்சம் கடினமாக்குகிறது.அதைவிட அது போடக்கூடிய விரிவான கோலம். முன்னும்பின்னும் கதை பின்னிச்செல்லும் விதம். சற்று கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு வாசித்தால் பெரியவிஷயம் அல்ல.”

கடந்த ஒன்றரை வருடத்தில் அவர் எழுதிய பலநூல்களை ஒருமுறை படித்திருக்கிறேன். மீண்டும் பலமுறை படிக்கவேண்டும். விஷ்ணுபுரத்தை இரண்டாம்முறை படித்துவிட்டு, அதைப் பற்றி ஒரு விரிவான பதிவு எழுதி ஆர்.விக்கு அனுப்புகிறேன் என்று சொல்லியிருந்தேன். இந்தப் பதிவு நாவலின் விமர்சனம் இல்லை. நாவலை மேலும் புரிந்துகொள்ள ஒரு முயற்சி. [இந்தப் பதிவை பல நாட்களாக, பல மனநிலைகளில் எழுதியதால், கட்டுரையின் நடை திடீரென்று தாவினால், சற்று பொறுத்தருள்க.]

நாவலை, இரண்டாவது முறை படிக்கும்பொழுது, பரபரப்பில்லாமல் பொறுமையாகப் படித்தேன். உணர்ச்சிகரத் தருணங்களை தவிர்த்துவிட்டேன் (லலிதாங்கி – வல்லாளன்), பல இடங்களில் குறிப்பெடுத்துக்கொண்டது, மிக வசதியாக இருந்தது. வழக்கமான பானியில், ‘கதை என்னனா ?’ , ‘அதாவது இவரு இன்னா சொல்ராருன்னா ‘ என்று மட்டும் ஆராயாமல்,  நாவலின் பல பரிணாமங்களை, எனக்குத் தெரிந்த அளவு, தொட்டுக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதன்படி விஷ்ணுபுரத்தை, கீழ்கண்ட பிரிவுகளில் வகைப்படுத்துகிறேன். 

விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

விஷ்ணுபுரம் – வரலாறு

விஷ்ணுபுரம் – தத்துவம்

விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

விஷ்ணுபுரம் – மொழி

விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள் 

விஷ்ணுபுரம் – கதைக்களம் – கம்போடியா – ஓர் ஒப்பீடு

விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்

*******************************

விஷ்ணுபுரம் – கதைச்சுருக்கம்

——————————————–

விஷ்ணுபுரத்தின் ‘கதை’ பற்றி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், சிறுகுறிப்பு வரைக, என்று பரிட்சையில் கேள்விகேட்டால், கீழ்கண்டவாறு எழுதுவேன். (விஷ்ணுபுர நாவல் மூன்று பகுதிகளாக ஆனது.). 

விஷ்ணு யுகத்திற்கு ஒருமுறை புரண்டு படுப்பார் என்பது ஐதீகம். தென்னாட்டின் தென்கோடியில் உள்ள ஊர் விஷ்ணுபுரம். காலாகாலமாக, விஷ்ணுபுரத்தை  நோக்கி தாந்திரீகர், வைதீகர், சமணர், பௌத்தர், காளாமுகர், வேதாந்திகள் என எல்லா மரபினரும் ஞானத்தைத் தேடி வந்தவன்னம் உள்ளனர். பல நூற்றாண்டுகளுக்குமுன் தென்னாட்டில் நடந்த ஞான விவாத சபையில், மற்ற மரபுகளை வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக வைதீக மரபை நிலைநாட்டியவர், வடநாட்டினரான அக்னிதத்தர். நான்காம் நூற்றாண்டில், அக்னிதத்தரின் வழித்தோன்றலான பவதத்தரை வாதத்தில் வென்று விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்தத்தை நிலைநாட்டியவர் அஜிதர். பௌத்தத்திலிருந்து சமணம். பின்பு மீண்டும் வைதீகம். விஷ்ணுபுரத்தின் சொல் எதுவோ, அதற்குக் கட்டுப்பட்டது, மதுரையை ஆளும் பாண்டியனின் கோல்.     

நாவலுடைய முதல் பகுதியின் காலம், பக்திமரபு ஓங்கியிருந்த பத்தாம் நூற்றாண்டு. கதைக்களம், விஷ்ணுபுரத்தில் பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஶ்ரீபாத திருவிழா. பத்தாம் நூற்றாண்டில், விஷ்ணுபுரத்தின் சொல்லாக இருக்கும் வைதீக மரபின் காவலராக இருப்பவர் சூர்யதத்தர். திருவிழாவின் ஒரு பகுதியாக கூடும் தர்க்க விவாத சபையில், தான் இயற்றிய காவியத்தை அரங்கேற்றி, பெறும் பரிசில் மூலம், தன் வறுமை நீங்கும் என்ற கனவோடு,  தன் மனைவி, மக்களுடன் வரும் சங்கர்ஷணன், சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்டு, காவியக் கனவு கலைந்து, ஒரு விபத்தில் மகனைப் பறிகொடுத்து, கணிகையர் வீதியில், பத்மாட்சி எனும் கணிகையிடம், சென்று சேர்கிறான். விஷ்ணுபுரத்தில் உள்ள வைதீக குருகுலத்தைச் சேர்ந்த பிங்கலன் என்ற இளம் சீடன், வைதீகத்திலும், தன் குருகுலத்திலும் நம்பிக்கை இழந்து, குருகுலத்தை விட்டு வெளியேறி, சாருகேசி எனும் கணிகையிடம் தஞ்சமடைந்து, போகத்தின் எல்லைக்கும், ஞானத்தேடலின் எல்லைக்கும் இடையே முடிவின்றி அலைகழிக்கபடுகிறான். சங்கர்ஷனனின் மனைவியான லட்சுமி, மகனை இழந்த துக்கதிலிருந்து மீள, ஒரு பஜனைகோஷ்டியில் சேர்ந்து, பின்பு பிங்கலனில் தன் மகனை ‘கண்டடைந்து’, துக்கத்திலிருந்து மீள்கிறாள். சூர்யதத்தரால் அவமதிக்கப்பட்ட சங்கர்ஷணன், அதிகார பகடையாட்டத்தின் ஒரு பகுதியாக, சூர்யதத்தராலேயே ஞான சபையில் காவியம் அரங்கேற்ற அழைக்கப்படுகிறான். ஞான சபையை அவமதிக்க, பத்மாட்சி இல்லாமல் காவியம் அரங்கேறாது என்கிறான் சங்கர்ஷணன். கணிகையான அவளின் தூய்மையை சோதிக்க நடக்கும் அக்னிப்பரிட்சையில் ‘வெல்லும்’ பத்மாட்சியை காவிய தேவதையாக்கி, சிலை வைக்க உத்தரவிடுகிறார், விஷ்ணுபுரத்தில் ‘புதிதாக எதுவும் நிகழ்ந்துவிடாமல்’ பார்த்துக்கொள்ளும் சூர்யதத்தர். தன் காவியத்தை அரங்கேற்றியபின், லட்சுமியுடன் மீண்டும் இனைந்து, விஷ்ணுபுரத்தில் நடக்கும் கேலிக்கூத்துகளால் மனம் வெறுத்து, விஷ்ணுபுரத்தை விட்டுச் செல்கிறான் சங்கர்ஷணன்.  

கணிகையர் குலத்தில் பிறந்த லலிதாங்கியிடம் காதல் வயப்படும் வாத்தியக்காரனான திருவடி, கணிகையர் வீதியில் அவளுக்காக காத்திருந்து, காத்திருந்து, பித்தேறி, தன்னிலை இழந்த நிலையில், திருவிழாவில் பங்கேற்க வந்த கிழ ஆழ்வார், குதிரைமீதேறி ‘வைகுந்தம்’ போய்ச்சேர்ந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, அவன் உறவினர்களால், திருவடி ஆழ்வாராக ஆக்கப்பட்டு, விஷ்ணுபுரத்தில் கைவிடப்பட்ட கடையனிலும் கடையர்களுக்கு ரட்சகனாகிறான்.  ஹரிதுங்கா மலையிலுள்ள செங்கழல் கொற்றவையின் ரூபமான, விஷ்ணுபுரத்தின் பத்தினித்தெய்வத்திடம் ‘உன் குலக் கொழுந்தாவாய்’ என்று ஆசிபெற்ற சித்திரை எனும் பதின்பருவச் சிறுமி, ஒரு மாயத் தருணத்தில், தீயினால் உண்ணப்பட்டு, தன் குலத்தின் தெய்வமாகிறாள். விஷ்ணுபுரத்தின் தலைமை அதிகாரியான நரசிங்கரிடம் இருந்து, சதி மூலம், பாண்டிய மன்னன் ஆதரவுடன், தலைமைப் பொறுப்பை அடைகிறான் காவலாலியான வில்லாளன். விஷ்ணுபுரத்தின் அடையாளமான விஷ்ணு கோவிலின் தலைமைச்சிற்பியான பிரசேனர், காளாமுகர்களால் உந்தப்பட்டு, விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிட எண்ணி, ராஜகோபுரத்தின் மீது ஏறி, மனம் பேதலித்து, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்.  

பத்தாம் நூற்றாண்டிலிருந்து, கதை நான்காம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. (நாவலின் இரண்டாம் பகுதி) அப்போது, விஷ்ணுபுரத்தின் சொல்லாக, வைதீக மரபின் காவலராக இருப்பவர் பவதத்தர். இளம் பௌத்த பிக்குவான அஜிதனின் வாதத்திற்கான அறைகூவலை ஏற்று, பவதத்தர் விஷ்ணுபுர ஞான சபையை கூட்டுகிறார். பவதத்தர் தன் வாதத் திறமையால், சமணர்களையும், சைவர்களையும், திபேத்திய பௌத்தர்களையும் வெல்கிறார். பவதத்தரின் மருமகனாகிய விஷ்ணுதத்தன் என்ற பண்டிதன், தான் கற்ற ஞானமனைத்தையும் துறந்து, உடலெங்கும் சாம்பல் பூசி, பெருச்சாளித் தோலில் செய்த கௌபீனம் அனிந்து, சுடுகாட்டுச் சித்தனாகி விஷ்ணுபுர வீதிகளில் கூத்தாடுகிறான். சித்தனும் அவன் சீடனும் விவாதத்தில் பங்கேற்காமல், வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள். பவதத்தர், வேதத்தை மூல நூலாக ஏற்க மறுக்கும் அஜிதனிடன் தோல்வியுறுகிறார். அதிகாரத்தை விட மனமில்லாதவர்கள், பௌத்த மரபை விஷ்ணுபுரத்தின் சொல்லாக ஏற்க மறுத்து கலகம் செய்கிறார்கள். தாந்ரீக பௌத்தர்களின் துனையுடன், சந்திரகீர்த்தி எனும் வணிகன், கலகத்தை அடக்குகிறான். விஷ்ணுபுரத்தின் அதிகாரம் வைதீகர்களிடமிருந்து, வணிகர்களின் கைகளுக்குப் போகிறது. வாதத்தில் வென்றபின் அதிகாரத்திற்கான போட்டியை நினைத்தும், சித்தனை நினைத்தும் அஜிதன் துணுக்குறுகிறான். விஷ்ணுபுரத்தின் சொல்லாக பௌத்த மரபு மாறியதே தவிர, வேறொன்றும் மாறவில்லை. தன் குருவின் சொல்லை ஏற்று, பௌத்தமரபைக் கற்க,  நரோபா என்ற திபேத்திய பௌத்தன், அஜிதனின் கடைசிக் காலத்தில், விஷ்ணுபுரத்திற்கு வருகிறான். நரோபா, அஜிதரின் அறையில் நுழையும்போது, அவர் தனிமையில் மரணமடைகிறார். அஜிதரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்ற சங்ககீர்த்தியின் ஆனையை அறிந்து, பதறி, மனம் வெறுத்து, நரோபா விஷ்ணுபுரத்தை விட்டு விலகி ஓடுகிறான்.  

நாவலின் கடைசிப்பகுதி, கிட்டத்தட்ட பதிமூன்றாம் நூற்றாண்டில் நடைபெறுகிறது. விஷ்ணுபுரத்தின் கோவில் இடிந்து, கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. நரோபாவின் திபேத்திய நூலிலிருந்து, விஷ்ணுபுரத்தை பற்றி அறிந்து, அதைத்தேடி வருகிறார் காசியைச்சேர்ந்த யோகவிரதர். பத்மாட்சி யட்சியும், கொன்றைவனத்தம்மனும் (சித்திரை), மகாபத்மபுராணமும் விஷ்ணுபுர மக்களின் வாழ்வில் கலந்துவிட்டிருக்கின்றன. எந்தப் புராணத்தை யார் இயற்றினார்கள் என்று பண்டிதர்கள் முரண்பட்டுக்கொள்கிறார்கள். வைதீக மரபின் காவலராக இருக்கும் ஆரியதத்தர் இறந்தபின் அவருடைய பைத்தியக்கார மகனைக்கு பட்டம் சூட்டுவதன்மூலம், விஷ்ணுபுர சர்வக்ஞப் பதவி ஒரு பைத்தியத்திடம் சென்று சேருகிறது. திருவடி மடத்தின் குருமகா சன்னிதானம், தன் சீடனுடன் மதுரைக்குப் போய்விடுகிறார். சில நூற்றாண்டுகளுக்குமுன் விஷ்ணுபுரத்தின்மீது படையெடுத்து வந்த முகமதியர்களுடன் சேர்ந்து, விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த சூத்திரர்களின் ஒரு பிரிவினரும், ஹரிதுங்கா மலையிலுள்ள பழங்குடியினரும் விஷ்ணுபுரக் கோவிலை இடித்துவிடுகிறார்கள். ததாதகராகவும், விஷ்ணுவாகவும் அறியப்படும் விஷ்ணுபுரத்தின் மூலவிக்ரகம், தங்களுடைய பெருமூப்பனின் சிலை என்று நம்புகிறார்கள் பசுங்குன்றத்திலுள்ள (ஹரிதுங்கா) பழங்குடிகள். நாட்கள் செல்ல செல்ல, பிரளயத்துக்கான அறிகுறிகள் தென்படுகிறது. விஷ்ணுபுரத்தின் கோயிலைச் சுற்றி ஓடும் சோனா நதியில் மீன்கள் செத்துமிதக்கின்றன; எங்கிருந்தோ பறவைகள் வந்து கோவிலில் முட்டிச் சாகின்றன. பழங்குடிகளில் சிலர் மட்டும், குறத்தியான நீலி வழிகாட்ட, பிழைக்கிறார்கள். குறத்தியான நீலி பேருருவம் கொண்டு சோனாவில் பெருவெள்ளமாக மாறி விஷ்ணுபுரத்தை அழிக்கிறாள். பெருமூப்பன் புரண்டு படுக்கிறார்.  

யுகம் முடிவுக்கு வந்தது. அடுத்த யுகம் தோன்றும்போது, விஷ்ணு மீண்டும் குழந்தையாக ஆலிலையில் மிதக்கிறார் என்று விஷ்ணுபுரக் கதையை சொல்லும் பாணன் பாடுகிறான். 

**********************

**********************

விஷ்ணுபுரம் – வரலாறு

——————————

“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

நம்மை ஆண்டுகொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள்.  சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத்  துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால் ? நினைத்தாலே சிரிப்பாக இல்லை?.. சரி, இதே லாஜிக்கின்படி, நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் யோசித்தால் ?..ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது.     (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ] 

இந்தியா, புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myth) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளைகொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளைகொண்டார்கள்.  புராணங்கள் கடவுளால் அருளப்பட்டது, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை. (அதுவே ஒரு தனி காவியம்). இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டிடி கோசம்பி, மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. ( youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது..தற்போது காணவில்லை). ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள், சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்கமுடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. (கபாடபுரம் – http://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D ). அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில், இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக்காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறுயாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன். 

யுகத்துக்கு ஒருமுறை விஷ்ணு புரண்டுபடுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில், யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால், முடிவு, பதிநாண்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர் ? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு ? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்கவேண்டும். என் யூகம், (*) இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். (*) சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு (*) தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும்,  “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு ; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன்.  நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக்காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ?  (இல்லை புரண்டு படித்துவிட்டாரா?)

விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப்பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இதுபோலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால், தமிழக வாசகர் மனதில், தமிழ் மன்னர்கள், சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம், ஜெயமோகன், கருவறை புகுந்து, சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப்போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான்.இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலபிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான்,  இருந்தாலும், நல்ல குரு அமையாத மன்னர்கள், கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ்.. 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே… தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்..தமிழ் வேறு பாண்டியன் வேறா ?..இதை எழுதியதற்கு, எப்படி அடிவாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை :-)..அது சரி, இது புனைவுதானே :-). ]. 

நாவலில், நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூலநூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில், யோகவிரதர், நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும், தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டுசென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை, அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலுன் பல திறப்புகள் கிடைக்கலாம். 

விஷ்ணுபுரம் – தத்துவம் –  [இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு..தெரிந்தவரை எழுதுகிறேன்].

——————————

“நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை”  – விஷ்ணுபுரத்தில் யாரோ.

 மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது. 1. “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக்கொள்ளும்”, 2. தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது, 3. காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது, 4.”உள்ளூர் பண்டிதர்கள் , ஞானம் என்றால் வைகைக் கரை நானல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்”.. தன் இனையதளத்தில் விரிவாகவே இதைப் பற்றி எழுதியுள்ளார் ஆசிரியர். இந்துமதம் போன்ற தொன்மையான மதங்களை ஆய்வதற்கு நம்மிடையே இருக்கும் சிறந்த கருவி மார்க்ஸிய முரணியக்கம் என்கிறார்.  ஒரே நேரத்தில் விஷ்ணுபுரத்தை ஹிந்துத்துவ நூல் என்றும், மார்க்ஸிய நூல் என்றும் சொல்கிறார்கள். (அரவிந்தன் நீலகண்டன், விஷ்ணுபுரத்தில் சேவைசாதிப்பது, விஷ்ணுவோ, ததாதகரோ, பெருமூப்பனோ இல்லை, அது மார்க்ஸ் என்கிறார் 🙂 ). ஆனால், நாவலின் மையம் தாந்திர சமுச்சையம் சொல்லும் ‘செய்தி’ அல்ல. ஒரு முனையில், எல்லாம் வல்ல பரம்பொருளோ, அறியவேமுடியாத இருள்சூழ்ந்த சூன்யமோ, ஏதோ ஒன்று இருக்கிறது. மறுமுனையிலிருந்து அதை அறிவதற்கு விட்டில் பூச்சிகள் போல, மனிதர்கள் கிளம்பி வந்துகொண்டே இருக்கிறார்கள். யுக யுகமாக தொடரும் இந்தப் பயணத்தை அள்ள முயலும் நாவலே விஷ்ணுபுரம். 

விஷ்ணுபுரம் ஒரு தத்துவ நூலும் கூட. முதல் பகுதியில் வரும் பிங்கலன் – சிரவணமகாபிரபு , பிங்கலன் – சாருகேசி, சங்கர்ஷணன் – பத்மாட்சி உரையாடல்களும், நாவலின் இரண்டாம் பகுதியும் தத்துவச்செறிவு நிறைந்தவை. விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் சாமானியர்களின் கண்களுக்கு முப்பது அடுக்குகளுக்கு மேல் தெரிவதில்லை. ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர்கள் யாரும் திரும்பி வருவதில்லை. விஷ்ணுபுரத்திலே, சுடுகாட்டுச்சித்தன் மட்டும்தான் ராஜகோபுரம் மேல் ஏறி இறங்கியவன். விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரத்தை மனிதன் கண்டடைந்த ஞானம் என்று உருவகித்தால், கோபுரத்தின் பின்னால் உள்ள ஹரிதுங்கா மலையை ஞானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக உருவகிக்கலாம். ஒருவேளை, சித்தன் ராஜகோபுரத்தின் மீதேறி, ஹரிதுங்காவைக் கண்டதால்தான், கோபுரத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஞானநூல்களை எரித்துவிட்டானோ ?  

வைதீக மரபை உயர்த்தியோ, பௌத்தத்தை உயர்த்தியோ நாவல் பேசவில்லை. மொத்த நாவலில், சித்தனும், நீலியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள். அனைத்தையும் கற்று, அனைத்தையும் உதறி, சூன்யத்தை உணர்ந்தவன் சித்தனென்றால், செங்கழல்கொற்றவையின் பேருருவம் கொள்பவள் நீலி. ஜெயமோகனின் கதைப்புலத்தில் நீலிக்கும் சித்தனுக்கும் தனி இடமுண்டு. காடு, விஷ்ணுபுரம், கொற்றவை, என்னற்ற சிறுகதைகளில் வரும் பெண் தெய்வமாக நீலியும், ஏழாம் உலகம் மற்றும் விஷ்ணுபுரத்தில் சித்தனும் அவர் நாவல்களைப் பினைக்கும் சங்கிலி என மீளமீள வருகிறார்கள். (நான் காந்தியை பித்தனாகக் கருதுவதால் சித்தன் வரிசையில் இன்றைய காந்தியையும் சேர்த்துக்கொள்வேன்). 

இன்னொன்றையும் கவனித்தேன்..விஷ்ணுபுரத்தில் வரும் சில வரிகளைக்கூட சாராம்சமாகக் கொண்டு தன் தளத்தில் விரிவான கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ஒரு வகையில் அவர் மீளமீள விஷ்ணுபுரத்தைத்தான் தன் கட்டுரைகளில், கதைகளில் வேவ்வேறு வடிவங்களில் எழுதுகிறார். பேரிலக்கியவாதிகளும் அதைத்தான் செய்தார்களா ?. என்னால், தர்க்கத்தை விடவும் முடியவில்லை, அதேசமயம் தர்க்கத்தை தாண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்றும் அகம் இடைவிடாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இருவது வயதில் எல்லோரும் தேடுகிறார்கள், நாற்பது வயதில் கண்டடைகிறார்கள் என்று இந்நாவலில் ஒரு வரிவேறு வருகிறது!! ). (ஆர்.வி, தத்துவ விவாதெமெல்லாம் தியரிடிக்கல் எக்ஸைஸ் என்கிறார் :-)).  

அறிய முடியாமை (சூன்யம்) என்பதை எப்படி பதிலாக ஏற்க முடியும் ? அடுத்தவேளை உணவில்லையென்றால் ஞானத்தை பற்றியெல்லாம் யோசிப்போமா? என்றெல்லாம் யோசித்தாலும், இதுவரை பொருளாதார ரீதியாக அடைந்தவற்றில் சிறிதைக்கூட துறக்கத் தயாரில்லாமல் ‘அறிவது’ என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கே எந்தத் தகுதியும் இல்லை என்று உணர்ந்து என் மனம் சிறுமைகொள்கிறது. இலக்கியம், அறிதல் என்றெல்லாம் பேசினாலும், ஆழ்மனதில், என் ஊழ், பொருள் ஈட்டுவதுதான் என்று அறிந்தே இருக்கிறேன். நாளை, ஒருவேளை பெரும் பணம் ஈட்டினால், புண்ணியம் / மறுபிறவி என்றெல்லாம் யோசித்து, எந்த மடத்திற்கோ, மடாதிபதிக்கோ, கோவிலுக்கோ ஒரு பைசா கொடுக்கப்போவதில்லை. ஏனோ, விஷ்ணுபுரம், இந்தக் கருத்தை என்னுள் வலுப்படுத்துகிறது.

விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

———————————————-

“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்.

சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுர நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

“…..

ஓய்வெனும் மரணம்

இரவெனும் இடைவெளி

ஒருநூறு பாதங்கள் ஊன்றி

வானாகிக் கவிழ்ந்து

வெளியில் தலைதூக்கி

எண்ணற்ற முலைநுனிகளால்

அமுதூட்டும் கருணை.  

…….”   

தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன. 

*******

இந்திய காவிய மரபின் வளமைகள் அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் ஆசிரியர். இந்திய காவிய மரபைப் பற்றியெல்லாம் எனக்கு இப்போதைக்கு ஒன்றும் தெரியாது. அதனால் இந்தப் பகுதி ‘skip’.

விஷ்ணுபுரம் – மாயா யதார்த்தவாதம்

————————————————–

நவீன இலக்கியத்தில், யதார்த்தவாத கதை சொல்லும் முறைக்கு மாற்றாக, மாயா யதார்த்தவாதத்தை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தியதாக அறியபடுகிறார்கள். காப்ரியேல் கார்ஸிய மார்குயஸ் எழுதிய ‘One Hundred Years of Solitude’ அதில் புகழ் பெற்றது. ஆனால், லத்தீன் அமெரிக்காவில் மாயா யதார்த்தவாதம் அறிமுகம் ஆவதற்கு கால் நூற்றாண்டு முன்னரே, வங்க எழுத்தாளர் அதீன் பந்த்யோபாத்யாய, தன் ‘நீலகண்ட பறவையைத் தேடி’ நாவலில் அந்த உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் ஜெயமோகன். (கண்ணீரைப் பின்தொடர்தல் – http://www.jeyamohan.in/?p=185 ). அதிலிருந்து, 

“காட்சி சார்ந்த நுட்பம் மூலம் மாயத்தை நிஜமாக்குவது மாய யதார்த்த ஆசிரியர்களின் பாணி. அதீன் அதை திறம்படச்செய்கிறார். பைத்தியக்கார பாபு கடைசியில் நாணல்பூக்கள் வெண்பனி போல கொட்டும் நிலப்பரப்பை அடைகிறார். அங்கு வருகிறது மதம் கொண்ட யானை. அதன் மீது நாணல்மலர்கள் கொட்டி அது இந்திரனின் வெண்ணிற யானை போல இருக்கிறது. பைத்தியக்கார பாபு அதன் மீது ஆரோகணித்துக் கொள்கிறார். ” Still still to hear her tender-taken breath and to live ever or else swoon to death ! death ! death !” மரணம் மரணம் என்று சொன்னபடியே வெள்ளையானை மீதேறிய தேவன் காட்டுக்குள் சென்று மறைகிறார். மீண்டுவரவேயில்லை.”

ஹெர்மான் ஹெஸ்ஸி எழுதிய சித்தார்த்தா ‘மானுடத் தேடல்’ என்ற கருவில் எழுதப்பட்ட யதார்த்தவாதபானிக் கதை. யதார்த்தவாத பானியினாலேயே, என்னால் அக்கதையில் ஒன்ற முடியவில்லை. இரண்டாவது முறை படிக்க முயற்சி செய்து, மூடி வைத்துவிட்டேன். ( ஜெயமோகனை படித்ததால் எனக்கு இருக்கும் இன்னோரு பிரச்சனை, யதார்த்தவாத கதைகளில் நுழைய முடியாமை. கோபல்ல கிராமம், பதினெட்டாம் அட்சக்கோடு போன்றவற்றை ஏன் சிறந்த நாவல் என்று சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. எனக்கு இந்நாவல்கள் பின்பு எப்போதாவது திறக்கலாம்.)  

விஷ்ணுபுரம் போன்ற, யுகயுகமாக முடிவின்றி ஓயாது சுழன்றலையும் மானுடத் தேடலை அள்ள முயலும் நாவலை, யதார்த்தவாத பாணியில் எழுதியிருந்தால் சொதப்பியிருக்கும். நாவலில் வரும் மாயா யதார்த்தவாத கூறுகள் வாசகனை நாவலில் ஒன்றச்செய்கின்றன; வாசிப்பு அனுபவத்தை பலமடங்கு உயர்த்துகின்றன.  நாவலில் வரும் மா.யதா.திற்கு  சில உதாரணங்கள் : ஞானத் தேடலின் அதிதேவதையாக வரும் பச்சை நிற பார்வை கொண்ட மிருகநயனி, மரணத்தின் குறீயீடாக வரும் கரிய நாய், ஞான சபை விவாதத்தின் போது, ஞானஸ்தம்பத்தில் ஒவ்வொன்றாக எரியும் சுடர், வெற்றியை அறிவிக்க வரும் கிருஷ்னப் பருந்து, சித்திரைக்கு பத்தினித்தெய்வம் கொடுக்கும் செஞ்சுடர்..சொல்லிக்கொண்டே போகலாம்.

அதேசமயம் பத்மாட்சி அக்னிப்பரிட்சையில் ‘வெல்வதை’ யதார்த்தவாதமாக (தந்திரமாக) சித்தரிக்கும் ஆசிரியர், அஜிதன் ஞானவிவாதங்களில் வெல்வதை மாய யதார்த்தவாதமாக சித்தரிப்பது நாம் வாசிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 

கார்ஸியாவின் நூறாண்டுகாலத் தனிமைக்கும், விஷ்ணுபுரத்திற்கும் மேலோட்டமாக சில ஒற்றுமைகள் உள்ளது. அந்த நாவலிலும், ஒரு ஊர் (மாசாண்டோ) தோன்றி அழிவதின் சித்திரம் உள்ளது. மாசாண்டோவின் கதை, பூயந்தியா என்ற கொலம்பியக் குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் கதை. மேலும் கார்ஸியாவின் நாவலில், மாசாண்டோவின் அழிவைப் பற்றி கடைசியில் மெல்சியாடஸ் எழுதி வைத்த சமஸ்கிருத குறிப்பை (ஜோசியம் ?) படிக்கும் போதுதான் தெரிகிறது.  மீண்டும் மாசாண்டோவோ, புயந்தியாக்களோ பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், நூறாண்டுகளை தனிமையில் கழித்தவர்களுக்கு மண்ணில் வாழ மீண்டுமொரு வாய்ப்பில்லை.. கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்கிறார் கார்ஸியா. இது ஓரளவு கிறித்தவ விழுமியம் சார்ந்த நோக்கு. விஷ்ணுபுரத்தில் பிரளயத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. பலமுறை விஷ்ணுபுரம் தோன்றி அழிந்துள்ளதாக கதைகள், காவியங்கள் கூறுகின்றன. விஷ்ணுபுரம் கீழை மரபின் தரிசனங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது.  வடிவ ஒப்புமையில் ‘நூற்றாண்டுகாலத் தனிமை’, தமிழ் நாவல்களில் பி.ஏ.கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’யுடன் தான் பெரிதும் ஒத்திருக்கிறது. (அதுவும் வடிவத்தில் மட்டும்தான்.. உள்ளடக்கத்திலோ, பேசு பொருளிலோ இல்லை).

விஷ்ணுபுரம் – மொழி

—————————-

உண்மையில் இந்த நாவலை பெரும்பகுதி சமஸ்கிருதத்திலும், மீதி தமிழிலும் எழுதியிருக்க வேண்டும். பெயர்கள்கூட கதை நிகழும் இடங்களுக்கு ஏற்ப சமஸ்கிருதத்திலும், தமிழிலும் மாறிமாறி வருகிறது.  (உதாரணம் : விஷ்ணுபுரம் – அகல்வள நாடு ; ஹரிதுங்கா – பசுங்குன்றம் ; பிரியதாரா – முத்தாறு; அக்னிதத்தன் – செந்தலைப் பட்டன் ; வராகபிருஷ்டம் – பன்றிமலை; கஜபிருஷ்டம் – ஆனைக்கண்டி).

எல்லா காலத்திலும் விஷ்ணுபுரத்தின் அதிகார மொழியாக இருப்பது சம்ஸ்கிருதமே. ஞான விவாத சபையில் நரோபா உட்பட சமஸ்கிருதம்தான் பேசுகிறார்கள்.  விஷ்ணுபுரத்தின் மறவர் குடிகளும், காணியக்காரர்களும் தமிழ் பெயருள்ளவர்கள், மற்றவர்கள் சமஸ்கிருதப்பெயருள்ளவர்கள். பழங்குடிகள் தமிழ் பேசுகிறார்கள். 

அக்னிதத்தன் வட தேசத்தில் எங்கிருந்தோ வந்தவன் என்று விஷ்ணுபுரம் சொல்கிறது. கிட்டத்தட்ட நாவலிலே விஷ்ணுபுரத்தைப் பற்றிய நான்கு தோற்றக்கதைகள் வருகின்றது..நான்கிலுமே, அக்னிதத்தன் வடதேசமென்றும், பாண்டியன் தென்னவன் என்றும் சொல்கிறார்கள்..தோற்றக் கதைகள் வெறும் கதைகள் மட்டுமல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியரி. ( “தென்னவன் தன் அதிகாரத்திற்காக அக்னிதத்தனை உபயோகித்துக்கொண்டான்” – சிற்பி , “செந்தலையன் பூசைகள் போட்டு பெருமூப்பனை கட்டிவைத்துள்ளான்” – மூப்பன், “பாண்டியன் மிலேச்சன். அவன் ஷத்திரியனானது யமஸ்மிருதி மூலம்” – பட்டர், “சமணக் குடும்பங்களிலிருந்து வைணவத்திற்கு மாறியவர்கள், வடமொழிக்கு உடன்பட மறுத்துவிட்டார்களாம். தனி கோயில் கட்டிக்கொண்டார்களாம்..ஏன் நமக்கு அந்த கலை வராதோ ?” – பீதாம்பரம் ).. இதுபற்றி, நாவலில் மேலும் படித்து தெரிந்துகொள்க..இங்கே எழுத இடம் போதாது. நாவலில் ஆரிய – திராவிட இனங்கள் , மொழிகள் பற்றி நிறைய புனைவு உண்மைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். அவை உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ( அதாவது, ஆரிய – திராவிட என இரு இனங்கள் கலந்தனவேதவிர .. ஆரிய – திராவிட ஆக்ரமிப்பெல்லாம் இல்லை..ஒன்றோடொன்று உரையாடுகிறது..அதிகாரத் தேவைகளுக்காக ஒன்றை ஒன்று ஏற்கிறது..கொண்டும் கொடுத்தும் வளர்கிறது..)

இங்கேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன்..நாவல், சமஸ்கிருதத்தையோ, தமிழையோ உயர்த்திப்பேசவில்லை..எல்லாமும் வெறும் அதிகார ஆட்டமாகிப்போகிறது. உதாரணம் :  சூர்யதத்தரை அவமதிக்க, பாண்டியனின் அவைப்புலவரும், தமிழ் புலவருமான ஆலாலசுந்தரர் கோபிலபட்டரின் சமஸ்கிருதக்காப்பியத்தை அரங்கேற்ற உதவுகிறார்.

விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள் 

——————————————

விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். ஒவ்வொருவரும், அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி ? ). அதுபோலவே காட்சிகளும் ஒரு திரைப்படம் போல மிக விரிவாக சித்தரிக்கட்டிருக்கின்றன. ( * பதின்ம வயதுடைய சித்திரை தண்ணீரில் இறங்கும் பொழுது அவளுக்கு சிலிர்க்கிறது, புல்லரிக்கிறது. ஆனால், அவள் தாத்தா நிதானமாக நீர் அருகே வந்து இறங்குகிறார். * கதையில் வரும் கண்டாமணி, முதல் பகுதியின் ஆரம்பத்தில் ஓங்காரமிடுகிறது, அதன் இறுதியில் டங்காரமிடுகிறது..கடைசி பகுதியில் விளிம்புகள் உடந்து சுரீலென்கிறது..)

முதல் பகுதியில் வரும் கதைமாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…) ; இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள். (அஜிதன்) ; கவனமாகப் படித்தாலன்றி, இவைகளை நாம் தொடரமுடியாது. கதைமாந்தர்கள் மட்டுமல்ல நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலின் முதல் பகுதியில், தத்துவத் தளத்திற்கு நிகராகவே காமமும் நிறைந்திருக்கிறது. பெரும் அலைக்கழிப்பிற்கும் , ஏமாற்றத்திற்கும் உள்ளானவர்கள் கணிகையரிடமே தஞ்சமடைகிறார்கள். திருவிழா முடிந்தபின் தெருவெங்கும் காமம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இரண்டாம் பகுதியில் ஏன் பெண் கதாப்பாத்திரங்கள் யாரும் வருவதில்லை ?

அடுத்தமுறை விஷ்ணுபுரத்தை படிக்கும்போது, கதை மாந்தர்களை ஒட்டி வாசிக்கவேண்டும். வெகு சிலரைப்பற்றி மட்டும் சொல்கிறேன் .சங்கர்ஷணன் சில இடங்களில் ஆசிரியரின் குரலாகவே ஒலிக்கிறான். (தான் ஏன் காவியம் படைக்க வந்தேன்..என்று அவன் விளக்கும் இடங்கள்.)  லட்சுமி தன் மகன் அனிருத்தன் இறந்தபின் அடையும் வெறுமைகளையும், சங்கர்ஷணனின் மேல் அடையும் வெறுப்பையும், பின் பிங்கலனில் அனிருத்தனைக் கண்டடையும் தருணத்தையும் உளவியல் ரீதியாக ஆராயவேண்டும் என நினைக்கிறேன். (ஃபிராய்டிய நெடி ? இல்லை யோகமரபு சொல்லும் ஆழ்மனதின் காரிருள்?). ஏழாம் உலகம் நாவலின் முடிவில்வரும் ‘ஒத்த விரலு’ காட்சியையும், காடு நாவலில், கிரிதரனின் தாய் அவன் வளர்ந்துவிட்டான் என்று உணர்த்தும் தருணமும், லட்சுமி – பிங்கலனோடு ஒப்பிடத்தக்கது..ஆனால், மற்ற இரண்டு நாவல்களின் தருணங்களையும்விட இது மிகத் தீவிரமானது.  

இந்நாவலில் வரும் ஜாதிகள் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். “சூர்யதத்தரோட சித்தரிப்பு..ஞான விவாதங்களில் பங்கேற்கும் அளவிற்கு அறிவுவிருக்கறவங்கள, சோத்துக்கு அடிச்சிக்கறது போல சித்தரிப்பது..” போன்றவற்றை காரணம் காட்டி, விஷ்ணுபுரம் அய்யர்களை கிண்டலடிக்கிறது என்றார் என் நண்பர். (அவர் பாலக்காடு ஐய்யர்). திட்டிக்கொண்டே, நாவலை படித்துமுடித்துவிட்டார். இவராவது நாவலை படித்துவிட்டு திட்டினார். இன்னொருவர், நாவலை படிக்கவேயில்லை..நான் சொன்ன கதைகளை வைத்தே, ‘ஒரு ‘வந்தேறி’ எப்படி தமிழர்களக் கேவலப்படுத்தலாம்னு கேக்காம, இதுமாதிரி  ‘புல்லுருவிகள்’ தலைல தூக்கிவச்சி ஆடுதுங்க.”.. என்று எனக்கும் வசை விழுந்தது. ஆமாம், பிராமணர்களை மட்டுமல்ல, ஆழ்வார்கள், மறக்குலம், பௌத்தர்கள், வணிக குலங்கள், பழங்குடிகள் என்று ஒருவரும் ஜெயமோகனின் அங்கதத்திலிருந்து தப்பவில்லை. (சுஜாதா, திருவடியின் சித்தரிப்பை படித்துவிட்டு, மேலும் நாவலை படிக்க மறுத்துவிட்டார் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியதாக ஞாபகம்.) இதை எழுதத்தேவையில்லை, இருந்தாலும் சொல்கிறேன். நான் பிராமணனோ, ‘வந்தேறி’யோ இல்லை. ‘அசல்’ தமிழன்தான் :-). இப்போதய தேவை, குல, ஜாதி அடிப்படையிலெல்லாம் பார்க்காமல், ‘பொதிகைமலை பெருமை’ யெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நம் வரலாறை கறாரான பார்வையுடன் ஆய்ந்துவிட்டு கடந்துசெல்லவேண்டும். விஷ்ணுபுரம், புனைவு என்ற பெயரில் இருக்கும் ஒரு வரலாற்று நூல். ( பிராமண காழ்ப்பு, வெள்ளையர்களின் ஆரிய-திராவிட ஆக்ரமிப்பு தியரி போன்றவை காலாவதியாகிவிட்டது.  தமிழின் சிறந்த படைப்பாளியை ‘வந்தேறி’ என்று சொல்லும் மனநிலையை என்ன சொல்ல ?. இருவரும் என் நண்பர்கள்தான். என்றாவது புரியும் என்று நம்புகிறேன்.)

விஷ்ணுபுரம் – கதைக்களம் – தாய்லாந்து / கம்போடியா – ஓர் ஒப்பீடு

—————————————————————————————– 

 விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா?  ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா?.. பதில் எல்லாமுந்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து / பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப்பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நன்பர்களுடன் கம்போடியாவிற்கு பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் : https://picasaweb.google.com/102323202491074157394/Cambodia_Thailand?authkey=Gv1sRgCP6k6pLp0MyrVA# . அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டதுபோல இருந்தது.). கம்போடியா பயணம் பற்றி, நேரம் கிடைக்கும்போது விரிவான பயணக் கட்டுரையாக  எழுதிகிறேன். 

கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் இந்து மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. கம்போடியாவில் அரச அதிகாரத்தின் / மதத்தின் / தத்துவத்தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர்.  இந்து மதம் எப்படி அங்கே வந்தது ? (ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள்).  கம்போடியர்களின் தொன்மத்தின்படி, நாக வம்சத்தைச் சேர்ந்த சோமா என்ற இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜதேசத்தை சேர்ந்தவர்கள். ( விஷ்ணுபுரத்தில் செம்பி- அக்னிதத்தன் கதை). அதுபோலவே, பாண்டியனுக்குப் பதில் குமெர் மன்னர்களைப் பொருத்திப்பார்த்தாலும், கதை சரியாகவே வருகிறது. 

பாங்காக் அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு ஓவியத்தில், விஷ்ணு புத்தரை வணங்குகிறார். (பார்க்க படம் – picasa – 67 ). தாய்லாந்திலும், கம்போடியாவிலும் ராமர் புத்தரின் அவதாரம். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ஒன்பதாம் ராமர்) ராமர் பரம்பரையைச் சேர்ந்தவர். (உண்மையிலேயே அப்படித்தான் சொன்னார்கள்). அவர்களின் முந்தைய தலைநகரம் பாங்க்காக்கிற்கு 80 கி.மீ தொலைவிலுள்ள அயுத்தாயா (அயோத்யா). அதேசமயம், இந்தியாவின் சில இடங்களில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இங்கு கேள்வி விஷ்ணுவா ? புத்தரா ? என்பதில்லை.. நாம் கவனிக்கவேண்டியது ஒரு மரபு ஓங்கும்பொழுது, இன்னொன்றை அழிக்கமுற்படவில்லை..தன்னுள் இழுத்துக்கொள்ளவே முற்படுகிறது. (விஷ்ணுவின் சிலைகளோ, புத்தரின் சிலைகளோ உடைக்கப்படவில்லை..அவதரமாக மாற்றிக்கொள்ளப்படுகிறது). இந்த ‘இழுத்துக்கொள்ளல்’ எவ்வாறு நடைபெறுகிறது, என்று விஷ்ணுபுரம் தெளிவாகவே விளக்குகிறது. 

இதேபோல சோட்டா நாக்பூர் மன்னர், தங்களை நாக வம்ச ராஜபுத்திரர்கள் என்கிறார். தொன்மங்களில் நாகங்களின் அரசனான கார்கோடகனுக்கும், காசியைச் சேர்ந்த பிராமன பெண்ணுக்கும் பிறந்து, மக்களால், அரச வம்சமாக கருதப்பட்டவர்கள் அவர்கள்.  எல்லா இடங்களிலும் கதை ஒன்றுதான். மன்னர் ஷத்திரியராகி தர்மபரிபாலனம்பன்ன யமஸ்மிருதியோ, நாரதஸ்மிருதியோ இயற்றப்படுகிறது..பதிலுக்கு மன்னர் ஸ்மிருதி இயற்றிய அக்னிதத்தரையோ, ஆர்யதத்தரையோ, கௌடின்யரையோ குலகுருவாக ஏற்று கோயில் கட்டுகிறார். இதன்மூலம் பெரிய அளவில் வன்முறையின்றி குலங்கள் தொகுப்பட்டு பேரரசாகின்றன. 

ஒருவகையில் “சிறுகுடிகளை ஒன்றினைத்து, பேரரசுகள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் தத்துவத்தின் அங்கீகாரம்; பின்பு அடைந்த அதிகாரத்தை தக்க வைக்க ஆடுப்படும் பகடையாட்டம்; இதற்கிடையில் மரணத்திற்கு பிறகென்ன ? வாழ்க்கையின் பொருளென்ன ?  என்ற கேள்வியோடு ஓயாமல் தேடுபவர்கள் கண்டடைவதென்ன ?”   என்பதே விஷ்ணுபுரத்தின் மையக்கரு.  

முடிவுரை:

————-

“அனுபவ வட்டத்திற்குள் கொண்டுவந்து யோசி”  — விஷ்ணுபுரம்

இந்நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாமல் இருப்பது படைப்பாளிகளுக்கு பொருளியல் ரீதியாகயும், அங்கீகார ரீதியாகவும் இழப்புதான்..மொழி பெயர்த்தாலும் புரியாது போகவே வாய்ப்பு அதிகம்.. ஆனால் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்..கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் கண்டிப்பாக  புரியும். மொழி பெயர்ப்பது இருக்கட்டும்..நம்மிடையே சிறந்தவற்றை நாம் முதலில் படிக்க வேண்டும். இந்த நாவலை ஒரு ஐந்தாயிரம் பேர் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை..இனையத்திலும் மிகச் சிலரே விரிவாக எழுதியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் இது..சந்தேகமில்லாமல் உரக்கச் சொல்வேன்..இந்திய இலக்கியத்தில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த நாவல்களில் விஷ்ணுபுரமும் ஒன்று. (நான் படித்தவைகளில் முதன்மையானது).

மீண்டும் ஒருமுறை விஷ்ணுபுரத்தை – அக்னி நதியோடும் (இன்னும் படிக்கவில்லை) , போரும் அமைதியோடும் (ஒருமுறை படித்திருக்கிறேன்) ஒப்பிட்டு எப்போதாவது எழுதவேண்டும்.

*********************

நான் படித்த பொறியியல் கல்லூரியில், நண்பர்களுக்கிடையே புத்தகங்கள் பரிமாறிக்கொள்வோம். பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்கள் தான். (ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டனில் துவங்கி அயண் ராண்ட், சிக்மண்ட் ப்ராய்டு வரை) [டால்ஸ்டாய், தஸ்த்தயேவ்ஸ்கி எல்லாம் தெரியாது]. தமிழைப் பொறுத்தவரை நாவல் என்றால் பொன்னியின் செல்வன் தான். தமிழ் இலக்கியவாதிகள் யார் என்றால் கல்கி, சுஜாதா, வைரமுத்து. சிற்றிதழ்கள் என்று ஒன்று இருக்கிறதென்றே தெரியாது. கிடைப்பதையெல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், தமிழில் சிறந்தவை எது என்று தெரியாது. ‘modern literature ல தமிழ்ல ஒன்னும் பெருசா இல்லைபோல’ என்று நம்பிக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களுக்குமுன், நண்பர் அருண் பரத், ஜெயமோகனின் இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து அவர் தளத்தை படித்ததின் மூலம், மற்ற எழுத்தாளர்கள், பிற மொழிகளில் உள்ள சிறந்த இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. ஜெயமோகன் போன்றவர்கள் இனையத்தில் எழுத ஆரம்பித்தது, எழுத்தாளர் – வாசகர் உறவில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல்; தமிழ் இலக்கியத்தின் நல்லூழ். அதுவும் என்னைப்போன்ற வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, மோட்டு வளையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்கு தவமின்றி கிடைத்த வரம். ஜெயமோகனுக்கு என் நன்றிகள்.

ஜெயமோகனின் சொல்புதிது குழுமம் மூலமாக, சிலிக்கான் ஷெல்ஃப் வட்டத்தினர் அறிமுகமானார்கள். (ராஜன், ஆர்.வி, பக்ஸ், பாலாஜி, அருணகிரி, நித்யா, அருணா, காவேரி). இவர்களிடம்  உள்ள தமிழ் நாவல்களை வைத்தே ஒரு சிறந்த நூலகத்தை உருவாக்கலாம். ஐந்நூறு புத்தகங்களாவது வைத்திருப்பார்கள். இவர்களுடன் உரையாடுவதின் மூலம் தமிழின் சிறந்த நாவல்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நண்பர்களுக்கும் என் நன்றி. 

நண்பர் ஒருவர் பொன்னியின் செல்வன் வகையறாவைத் தவிர, வேறு இலக்கியங்கள் படித்ததில்லை. நான் விஷ்ணுபுரம் படித்த பிரமிப்பில், அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பிவிட்டேன். திக்கித் திணறி, அழுதுகொண்டே படித்து முடித்தார். (இதுமாதிரிதான் இலக்கியம் இருக்குமென்றால், இலக்கியமே வேண்டாம் என்று ஓடிவிட்டார் :-). இப்போதுதான், நான் கொற்றவையை படித்துக்கொண்டிருக்கிறேன். (அடுத்து கொற்றவையைப் பற்றி எழுதுகிறேன்.) ஆனால், ஜெயமோகனின் கதைப்புலம், மொழி போன்றவற்றில் பரிச்சயம் இல்லாமல் கொற்றவையை படிப்பது கடினம் என்று தோன்றுகிறது. அவருக்கு கொற்றவையை வாங்கி அனுப்பியது என் தவறு.) இன்னொருவர் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் எதுவும் படித்ததில்லை. அவர் காடு நாவலை ரசித்துப் படித்தார். என் வாசிப்பு அனுபவத்தில், ஜெயமோகனின் நாவல்களை வாசிக்க கீழ்கண்ட வரிசையை சிபாரிசு செய்வேன். (நான் படித்ததில்..)

புனைவு – காடு, ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை.

சிறுகதைத் தொகுப்புகளை எந்த வரிசையிலும் படிக்கலாம். அபுனைவும் அப்படித்தான், இருந்தாலும் எனக்குப் பிடித்த வரிசையிது.

அபுனைவு – இன்றைய காந்தி, நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம், கண்ணீரைப் பின்தொடர்தல், இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்.

————–

[1] மார்க்ஸிய முரணியக்கம் – Marxist Dialectics.

%d bloggers like this: