எழுத்தாளர் பிஏ கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு

Original post written in siliconshelf website July 2012

[“கலங்கிய நதி” நாவல் பற்றிய ஒரு சிறிய உரை]

நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன்எழுதிய கலங்கிய நதிநாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில் வாசித்துவிடக்கூடிய எளிய நாவல். கதை நடக்கும் காலம் அதிகபட்சம் சில வருடங்கள், கதையின் களம் பெரும்பகுதி அஸ்ஸாம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். குணமடைந்து கொண்டிருக்கும் ஓய்வு நேரத்தில், தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘This street has no other side’ என்ற நாவலை எழுதுகிறார். ‘This street has no other side’ நாவல், அந்த நாவலில் சொல்லப்படாத நிகழ்வுகள் மற்றும் நாவலின் விமர்சனத்தை உள்ளடக்கியதே ‘கலங்கிய நதி’. இந்த நாவலுக்குள் நாவல் வடிவத்தில், எது புனைவு, எது நிஜம் என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். நாவலில் மூன்று சரடுகள் உள்ளன. (அவை)

  1. அஸ்ஸாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளரை மீட்கப் போராடும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன்
  2. Transmission tower கட்டுமானத்தில் நடைபெறும் நுண்மையான ஊழலை கண்டுபிடித்து ஆராயும் ரமேஷ் சந்திரன்
  3. ரமேஷ் சந்திரனுக்கும் அவர் மனைவி சுகன்யா, செக்ரட்டரி அனுபமா, திருமதி. கோஷ் உள்ளிட்ட மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவு

அரசு அதிகார வரைமுறைகளில் உள்ள அபத்தத்தை, தமிழ் நாவல்களிலேயே, இந்நாவல் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கும் வேறோரு நாவல் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அரசு அதிகாரிகளின் தோரனை, ஜூனியர் அதிகாரிகளை ஏவலர்களாக நடத்தும் மனப்பாங்கு போன்றவற்றை சித்தரிக்கும் பகுதிகள் சிறந்த நகைச்சுவை கதைகள் போல உள்ளன. இதில் உள்ள அங்கத அம்சத்திற்கு ஒரு உதாரணம்: உயர் அதிகாரியின் தேநீர் ஆறிப்போவதை அவருக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நினைவுபடுத்த அலாரம் நிறுவ பரிந்துரைக்கும் பகுதி. அதே சமயம், இந்தக் கூட்டம்தான் இந்தியாவை ஆள்கிறது என நினைக்கும்போது, comedy, dark comedyயாக மாறுகிறது.

நாவலின் ஒரு சரடான ஊழல் பற்றி பார்ப்போம். விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற சொல்லாட்சியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழலை இந்நாவலில் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான், Transmission tower கட்டுமான ஊழல் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்றே புரிகிறது. அஸ்ஸாமிய மின்பகிர்மான கம்பெனிக்காக, Transmission towerகள் கட்டுவதை குத்தகைக்கெடுத்த நிறுவனம், அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகிற்கு வரிவிலக்கு பெறுகிறது. ஆனால், வரிவிலக்கு பெற்ற தொகையை வரி கட்டியதாக கணக்குகாட்டி ஊழல் செய்கிறார்கள். ஊழலின் அளவு முப்பது கோடிதான். 2ஜி காலத்தில் இந்த ஊழல் ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மிக நுட்பமான முறையில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும், அந்த சிறிய தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலையும் நம்பகத்தன்மையோடு சித்தரித்திருக்கிறார். (இதுவும் ஒரு உண்மையில் நடைபெற்ற ஊழலின் புனைவு வடிவமே).

அடுத்ததாக தீவிரவாதப் பிரச்சனை. உல்ஃபா தீவிரவாதிகள், அஸ்ஸாமிய மின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் நியமிக்கப்படுகிறார். பிரச்சனை சூடாக இருக்கும் வரை ஊடங்களும், அரசும் மீட்பில் முனைப்பாக இருக்கின்றனர். பின்பு, ரமேஷைத் தவிர யாரும் வேறு யாரும் கண்டுகொள்விதில்லை. கடைசியில், யாரும் கண்டு கொள்ளாமல் போவதாலேயே, தீவிரவாதிகள் முதலில் கேட்ட பணயத் தொகையில் இருபது மடங்கு குறைவான தொகைக்கு விடுவிக்கின்றனர். இந்நாவலில், பகதத்தனின் கதை, ஜதிங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் கன்றுகள் என பல்வேறு விதமாக தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறை, லட்சியவாதம், சித்தாந்தம் என்றால் பூச்சிக்கொல்லிகளில் வீரியமான ரகங்கள் என்றே நினைக்கிறோம். சித்தாந்தத்தினாலோ, லட்சியத்தாலோ ஈர்க்கப்படுதல் என்றால் என்னவென்றே புரியவில்லை. சென்ற ஆண்டு கம்போடியா சென்று வந்தேன். மார்க்சிய சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பிழையின் வடுவாக, கம்போடியத் தலைநகர் ப்னோம்பென்னில் ஐந்து மாடி கட்டிட உயரத்திற்கு, மண்டையோடுகளால் ஆன ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. அதைப்பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கம்போடிய கொலைக்களங்கள், நாஜிக்களின் ஆஸ்விட்ச் கொலைமுகாம், இலங்கையில் நடைபெறும் அழிவுகள் போன்றவற்றை பார்க்கும்போது, எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டாலும், நாளடைவில் அழிவிற்கு இட்டுச்செல்லாத சித்தாந்தங்களே இல்லையோ என்று தோன்றுகிறது. விதிவிலக்காக காந்தி இருக்கிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் சேவைக்காக வந்த அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா சாயலில் அமைக்கப்பட்ட ராஜவன்ஷி, இந்நாவலில் உள்ள ஒளிமிக்க பாத்திரம். சரத் சந்திர சின்ஹா பற்றி, ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘ என்று காலச்சுவடில் கட்டுரை எழுதியிருக்கிறார் கிருஷ்ணன். சின்ஹாவை பற்றி படிக்கும்போது, இப்படி ஒருவர் இருந்தாரா என்று மனம் நம்ப மறுக்கிறது; அவ்வையின் ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ தான் நினைவிற்கு வருகிறது.

நாவலில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அடையும் வழியாக காந்தியம் குறிப்பிடப்படுகிறது. இந்திய மதப் பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும், தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி நம்பிக்கையோடு சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்த பின் நதி தெளிவாகிவிடும், முன்பை விட மிகத் தெளிவாக” என்று. கலங்கிய நதி தெளிவடையும் என்ற நம்பிக்கையோடு, திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

https://siliconshelf.wordpress.com/2012/06/14/சிலிக்கன்-ஷெல்ஃப்-மே-கூட/

திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00 – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.

பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக,  சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.

அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும்,  அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.

பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).

எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது.  சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.

நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின்  கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.

மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.

விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..)  இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.

பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.

ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.

தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.

தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).

புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும்  உரையாடினோம்.

ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.

%d bloggers like this: