Tag: காந்தி

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 5

    உஷ்மாலிலிருந்து கிளம்பி கம்பச்சே சென்றோம். யுகாட்டனிலேயே வளம்மிக்க ஊராக கம்பச்சே இருக்கிறது. 1700களில் கரீபிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கம்பச்சேவை தாக்கி சூரையாடியுள்ளார்கள். ஊருக்கு வெளியே கண்கானிப்பு

    கம்பச்சே கரகாட்டம்

    கோபுரம் கட்டப்பட்ட பின் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். நாட்டுப்புர நடனம் ஒன்றை பார்த்துவிட்டு, குரங்கு விடுதி (தங்குபவர்கள் குரங்கா ? நடத்துபவர் குரங்கா ?)  என்ற மாணவர் விடுதியில் இரவு தங்கினோம். அங்கு கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த சக பயணி ஒருவனை சந்தித்தோம். வட அமெரிக்காவின் வடகோடியான அலாஸ்காவில் தொடங்கி, தென் அமெரிக்காவின் தென் கோடி வரை, ஆறு மாதங்களில் பயணம் செல்வது அவன் திட்டமாம். (நினைச்சாலே மூச்சு முட்டுது…யாருடா நீங்கெல்லாம் ?)  ‘பத்திரமா போய்ட்டு வா ராசா’ என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு செட்டுமால் நோக்கி புறப்பட்டோம்.

    கம்பச்சே – செட்டுமால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவு. காலையில் கிளம்பி, இரவில் செட்டுமால் செல்வதுதான் அன்றைய திட்டம். கார் ஓட்டப்போவது அருண், அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. வழியில் எந்த ஊரையும் பார்க்கும் திட்டம் இல்லை. கலக்மூல் காடுகள் வழியில் உள்ளன. இந்தக் காடுகள் மெக்ஸிக்கோவின் கம்பச்சே மாகானத்தில் தொடங்கி, குவாத்தமாலா நாட்டின் பீட்டன் மாகானம்வரை பரவியுள்ளது. கலக்மூல் மாயாக்களின் சங்க காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) சேர்ந்த ஊர். சங்க கால சோழ – பாண்டியர்களைப் போல, கலக்மூலுக்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் (தற்போது, குவாத்தமாலா நாட்டிலுள்ள) திக்காலுக்கும் எப்போழுதும் தீராப் பகை. கலக்மூல் எங்கள் பயண திட்டத்தில் இல்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், போய் பார்ப்போம் என்று சென்றோம். மதிய வேளையிலே, சுற்றியிருந்த அடர் காடுகளால், இருட்டத் துவங்கிவிட்டது. மாயா பிரமிடுகளிலே உயரமான (145 அடி உயரம்) பிரமிட் கலக்மூல் பிரமிட். ஆறாம் நூறாண்டில் கட்டப்பட்டது. அதிக நேரம் செலவிடவில்லை. (காடு ஒரு பீதியை உண்டுபன்னத்தான் செய்கிறது). செட்டுமாலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

    கலக்மூல் பிரமிடுகள்

    மெக்ஸிக்கோ விசா வாங்கச் செல்லும் போது, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மெக்ஸிக்கோவின் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று விசா கொடுத்த அம்மாள் அறிவுருத்தினாள். கலக்மூல் காடுகள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அவள் சொல்லியதன் தீவிரம் அப்போது எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் சென்று வந்த சில மாதங்களில், கலக்மூல் காடுகள் வழியாக, இருநூறு பேர் கொண்ட ஒரு போதை மருந்து கடத்தல் கும்பல் (லாஸ் ஜீட்டாஸ்), குவாத்தமாலாவின் பீட்டனுக்கு சென்று, போதை மருந்து கடத்தலுக்கு உடன்படாத முப்பது விவசாயிகளை கொடூரமாக கொன்றுவிட்டது. மெக்ஸிக்கோவின் தற்போதைய பெரிய பிரச்சனை போதை மருந்து குழுக்களிடையே நடைபெறும் அதிகாரச் போர்கள் (Gang Wars). இவற்றை சமாளிக்க முடியாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ராணுவங்கள் திணறுகின்றன.  வருடந்தோறும், ஆயிரக்கணக்கில் மக்கள் இச்சண்டைகளில் மடிகிறார்கள்.

    அமெரிக்காதான் உலகிலேயே பெரிய போதை மருந்து கன்ஸ்யூமர் மார்கட். அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்துவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. கரீபிய தீவுகள் வழியாக, கடல் மார்கமாக கடத்துவது ஒரு வழி. மெக்ஸிகோ – அமெரிக்கா எல்லை வழியாகக் கடத்துவது இன்னோரு வழி. கரீபியத் தீவின் போதை மருந்து குழுக்களை அமெரிக்கா அழித்துவிட்டது. மிச்சம் இருப்பது மெக்ஸிக்கோ தான். மெக்ஸிக்கோவின் போதை மருந்து குழுக்கள் தங்களுக்கென தனி ஆயுதப்படைகள் வைத்திருக்கின்றன (இதில் பலர் முன்னாள் ராணுவ சிறப்புப் படையை சேர்ந்தவர்கள்). மெக்ஸிக்கோவின் ராணுவத்தை எதிர்க்குமளவிற்கு அவை ஆயுத / பண பலம் பொருந்தியவை. இவை தவிர காசு கொடுத்தால், அவர்களுடன் இனைந்து போரிடும் கூலிப்படைகளும் உள்ளன. மெக்ஸிக்கோ அரசு, போதை குழுக்களை அழிக்க, அமெரிக்கா தன படையை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சுகிறது. (அமெரிக்காவில் சட்டப்படி கஞ்சா, பாப்பி செடிகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது). நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் எங்கள் காரை நிறுத்தி சோதனையிட்டார்கள். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் போன்ற விவரங்களை கேட்பார்கள். சொல்வோம். அதற்குமேல் கேட்டால், ஸ்பானிய மொழி தெரியாததால் முழிப்போம். ‘போங்க’ என்று அனுப்பிவிடுவார்கள்.

    நான் அமெரிக்காவில் மூன்று வருடமாக இருக்கிறேன். இதற்கு முன் இத்தாலியில் ஒரு மாதம் வேலை நிமித்தமாக, தங்கியிருந்தேன். இந்த இரண்டு நாடுகளிலும், அங்குள்ளவர்கள் நிறைய இந்தியர்களை பார்த்திருக்கிறார்கள். நான், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுடன் நிறைய இந்தியாவைப் பற்றி பேசியிருக்கிறேன் என்றாலும், அறிமுகம் இல்லாதவர்கள், பொதுவாக என்னை கண்டுகொண்டதில்லை. தெருவில் பார்ப்பவர்கள், பல சமயம் புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார்கள். (இத்தாலியில் எதிர்மறை அனுபவம் உண்டு). ஆனால், மெக்ஸிக்கோவில் கிடைத்த வரவேற்பு இதற்குமுன் நான் கண்டதில்லை.  மெக்ஸிக்கோவில் இந்தியர்களை மிகக் குறைவாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால், நிறைய இடங்களில் எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சில இடங்களில் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டார்கள். (தற்காலிக) பச்சை குத்திக்கொள்ள, அவர்கள் பெயரை தமிழில் எழுதித் தந்தேன். சீனாவிலும் நிறைய பேர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என்று நன்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உலகில், இந்தியர்கள் அதிக அளவில் போகாத இடம் குறைவு. அங்கேல்லாம் சிறப்பு வரவேற்பு/ விருந்தோம்பல் மிச்சம் இருக்கிறது. [அது கண்டிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில் இல்லை].

    அருணுடைய ரசிகர் பட்டாளம்.

    லால்துன் குகை முன்பு, ஒரு பெண்மணி, ஒரு கருப்பு துண்டை என்னிடம் நீட்டினார். நான், ஏதோ விற்க வருகிறார் என்று நினைத்து, எனக்கு வேண்டாம் என்றேன். மீண்டும், இரண்டு முறை வந்தார். அவருக்கு, தலைப்பாகை கட்டிவிடச் சொல்கிறார் என்று புரிந்தது. இந்தியர்கள் என்றால் தலைப்பாகை கட்டியிருப்பார்கள் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை. (மன்மோகன் சிங்கை செய்திகளில் பார்த்திருக்கலாம்). கையில் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து, இந்தியாவைப் பற்றி விளக்குவதை ஒரு கலையாகவே கற்றுக்கொண்டேன். நம் ருபாய் நோட்டில் உள்ள பல்வேறு மொழிகளின் வரி வடிவங்களே, இந்தியா ஒரு பன்மைச் சமூகம் என்றுணர்த்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வரி வடிவங்களில், தமிழைக் காட்டி, இது, என் மொழி என்று சொல்வதில், எனக்கு ஒரு தனி பெருமை. [ஆர்வமாக கேட்பது போல தோன்றினால் ‘கல்தோன்றி மண்தோன்றா’ பெருமைகளை விளக்காமல் விடமாட்டேன்). இந்திய ரூபாய் நோட்டை பார்த்தவுடன் காந்தி தாத்தாவை எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டார்கள். (உஷ்மாலில், ஒரு பதின்பருவ குழு, எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, ‘காந்தீ’, ‘இந்தியா’ என்று கத்தியது). பயணத்தின் போது, செட்டுமால் என்ற ஊரில் தங்கினோம்.  ‘ஹீரோஸ் அவென்யூ’ (Heroes Avenue) என்ற தெருதான் அவ்வூரின் முக்கியத் தெரு. அதில் பிரிந்த பத்து குட்டித் தெருக்களுக்கு பல்வேறு உலகத் தலைவர்களின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அதில், ‘காந்தி’ தெருவும் ஒன்று. உலகத் தலைவர்கள் பெயரை வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியிருக்கிறதே..அதிலும் , காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே… இத்தனைக்கும் செட்டுமால் என்ற ஊர், சுற்றுலா நகரம் இல்லை. மிகச் சின்ன ஊர். காந்தி, உலகத்தின் மூலையில், ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரின், மக்கள் மனதில் வாழ்கிறார் என்று உணர்ந்த போது, காந்தியையும், செட்டுமாலையும் நினைத்து பெருமைப்பட்டேன். (ஒப்புனோக்க, நம் ஊரில், இந்தியத் தலைவர்கள் பெயர்களைத் தவிர உலகத் தலைவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உள்ளூர் கவுன்சிலர் மறைந்தவுடன் அவர் பெயர் சூட்டப்பட்டுவிடும் ).

    காந்தி தெரு – செட்டுமால்

    செட்டுமாலுக்கு அருகிலிருந்த மஹவால் என்ற கடற்கரைக்குச் சென்றோம். நீல நிற கரீபியக்கடல். பவழப் பாறைகளையும், பல வண்ண மீன்களையும் பார்க்க ஸ்கூபா டைவிங் (ஆழ்கடல் நீச்சல்) செய்தோம். முதல் முறையாதலால் பயம் எனக்கு. கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கட்டிக்கொண்டு குதித்தது வித்தியாசமாக இருந்தது. குதிக்கும்போதே அருணுடைய முகமூடியை தட்டிவிட்டுவிட்டேன். கண்ணாடி போடாததால், தொலைவில் இருந்தது ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.

    துலும் தீம் பார்க்

    துலும் என்ற கடற்கரை ஊர் மாயர்களின் முக்கிய துறைமுக நகரம். துலும் சென்று பார்த்தால், தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து அம்சங்களுடன், ஏதோ கிஷ்கிந்தாவுக்கோ, மாயாஜாலுக்கோ போனது போல இருந்தது. அங்கிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து, துலும் பிரமிடை பார்க்காமலே கிளம்பிவிட்டோம்.  துலுமிலிருந்து கேன்கூன் கடற்கரை வரை மாயா ரீவேரா என்று அழைக்கப்படுகிறது. நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள மிக அழகான நீல நிற கடற்கரை. ஆனால், முழுக்க முழுக்க தனியார் வணிக சுற்றுலா நிறுவனங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகளுக்குள் நுழையாமல், கடற்கரைக்கு போகவே முடியாது. தொலைவிலிருந்தே வேடிக்கை பார்த்துவிட்டு, விடுதிக்கு திரும்பினோம். மறுநாள் காலையில் கேன்கூனிலிருந்து கிளம்பி அட்லாண்டவிற்கு வந்து சேர்ந்தோம்.

    நாங்கள் இதுவரை பார்த்த ஊர்களில்,

    கலக்மூல் – சங்க காலம்

    சிச்சன் இட்சா, உஷ்மால் – பிந்தைய சங்க காலம்

    மெரிடா, கம்பச்சே, செட்டுமால் – ஸ்பானிய ஆக்ரமிப்பு கால கட்டம் / தற்காலம்

    கேன்கூன் –  தற்காலம்.

    ஒரு கலாசாரத்தை உள்வாங்க பத்து நாள் போதாதுதான் என்றாலும், எனக்கு மிக நிறைவான பயணமாக அமைந்தது. என்றோ ஒருநாள், மாயாக்களை அவர்களுக்கு உண்டான உரிய மரியாதையுடன், முறையான ஆராய்ச்சியில் , அவர்களின் ஞானத்தை, தத்துவத்தின் ஆழத்தை, கலாச்சாரத்தை உலகம் உணர்ந்துகொள்ளும். [ இதை மேலை நாட்டினர் செய்ய முடியாது. செவ்விந்தியர்களாலோ,  கீழை சிந்தனையாளர்களாலோதான் செய்ய முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை].

  • இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.

    காந்தி :  ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’.

    ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன்.

    கேள்வி : 1850ஆம் ஆண்டு, வங்காள மாகானத்தில் பயன்படுத்தப் பட்ட உப்பில் 50% இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சமயல் உப்புதான். இயந்திரங்களால் மலிவாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள் இல்லை, வெறும் உப்பு. உங்களால் நம்ப முடிகிறதா ? இந்தியாவில் இல்லாத கடலா, உப்பளங்களா? பிறகு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

    பதில் : லாபம். இந்தியாவில் (குஜராத்தில்) விளையும் உப்பிற்கு அநியாய வரிகள் போடப்பட்டு, இறக்குமதி உப்பு, உள்ளூர் உப்பைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டது !!.

    இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, கம்பெனி லாபம் அடைகிறது என்றால், இங்கே என்ன தான் நடக்கிறது? முகமது கஜினி, நாதிர் ஷா, தைமூர் எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். அவை வழிப்பறி போன்றது. கையிலிருப்பது தான் களவாடப்படும், வங்கியிலிருப்பது அவர்களுக்கு தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை, திட்டமிட்டு சுரண்டப்பட்ட கொள்ளை. பணம் மட்டுமல்ல கட்டிய கோமணம், சிறுநீரகம் உட்பட சகலத்தையும் உருவிவிட்டார்கள்.  முகலாய அரசு வலுவிழக்க ஆரம்பித்த பின், கம்பெனி வணிகத்தை மட்டும் செய்யாமல், இந்திய அரசியலிலும் தலையிட ஆரம்பிக்கிறது. 1756இல், வங்காள நவாப், கம்பெனியை கல்கத்தாவிலிருந்து விரட்டுகிறார். அடுத்த வருடம், ராபர்ட் கிளைவ் தலைமையில், பிளாசிப் போரில் நவாப் தோற்கடிக்கப்படுகிறார். (போரெல்லாம் இல்லை.லஞ்சம் வாங்கிக்கொண்டு நவாப் படைகள் எதிரணிக்கு விலைபோய்விட்டன ). வென்ற கம்பெனி, வங்கத்தில், எல்லா ஊர்களிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் (பேக்டரி அவுட்லட்) திறக்கிறார்கள். உப்பு, புளி, சக்கரை, தானியம், புகையிலை, கஞ்சா என எல்லா பொருட்களுக்கும் கம்பெனி கடையில் வரியில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மூலப்பொருட்களை கம்பெனிக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் வியாபாரிகளின் கடைகள் படுத்துவிட்டது. பின்பு கிளைவ், கம்பெனியின் சில முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து ‘பிரத்தியேக சங்கம்’ (எக்ஸ்குலுசிவ் கிளப்) ஆரம்பித்து, புகையிலை, வெற்றிலை, உப்பு ஆகியவற்றை விற்கிறார். பிரத்தியேக சங்கத்தினால், கம்பெனி வருமானம் குறைகிறது. கம்பெனியின் ‘மற்ற’ பங்குதாரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றைத்தின் மூலம் சங்கத்தை கலைத்துவிட்டார்கள். இங்கிலாந்தில் ஊர், பேர் தெரியாது இருந்த கிளைவ், மிகச் சில வருடங்களில் ‘பிளாசி கோமான்’ ஆகிறார். மற்ற ‘கோமான்கள்’ கிளைவ் மீது, விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோருகிறார்கள். கமிஷன், விசாரனையின் முடிவில் ‘கிளைவ் ஒரு தியாகி. அவரையா குற்றம் சொன்னீர், இது அடுக்குமா?’ என்று தீர்ப்பு வழங்கியது. [பிரச்சனை, மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி என்பதுதான். டாட்டா, நூறு வருடம் சேர்த்ததை, அம்பானி இருவது வருடத்தில் சேர்க்கவில்லையா ? பொறாமை பிடித்த உலகம்..சே..].கிளைவ் தற்கொலை செய்து கொண்ட பின், வாரன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ், பம்பாய், கல்கத்தா மூன்றையும் ஒன்றினைத்து வைசிராயகிறார். சுரண்டல் தொடர்கிறது.

    இங்கே, நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கம்பெனிக்கு முன், இங்கே வரியே இல்லையா என்றால், இருந்தது. பஞ்ச காலத்தில், வரி குறைக்கப்பட்டது / வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து சில ஆண்டுகள் நல்ல விளைச்சல் இருந்தால், அடுத்து பஞ்சம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். தானியங்கள் கோயில்களில், மற்ற பொது இடங்களில் சேமிக்கப்படுகிறது; பஞ்ச காலத்தில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கம்பெனி ஆட்சியில், பஞ்ச காலத்திலும் நில வரியும், மற்ற வரிகளும் கறாராக வசூலிக்கப்பட்டன. வரி கட்ட முடியாதவர்கள் நிலத்தை உழ அனுமதிக்கப்படவில்லை. நிலம் மீண்டும் காடாகியது. பஞ்சத்தின் போதும், தானிய ஏற்றுமதி நடைபெறுகிறது. வங்கத்தில், ஆங்கிலேய ஆட்சியின் காலகட்டத்தில் வந்த பஞ்சங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துவிட்டார்கள். (சுதந்திர இந்தியாவின் முதல் சாதனை, உலக நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது, நம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதுதான்.)

    வங்கக் கடலில், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின்  நன்னீர் கலப்பதால், வங்கத்தில்  உப்பு மிக குறைவாக கிடைக்கிறது. குஜராத்தில் தான் பெரிய உப்பளங்கள் உள்ளன. (இன்றும், இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% குஜராத்திலிருந்துதான்). மேற்கிலிருந்து உப்பு, வட இந்தியாவிற்கும், வங்க எல்லைக்கும் வரும்பொழுது, சுங்கச் சாவடிகளில் வரி வசூல் செய்யப்படுகிறது.  உப்பின் மீது விதிக்கப்படும் உள்நாட்டு வரிதான், கம்பெனியின் வருவாயில் முக்கிய பங்கு. (டாஸ்மாக் வருவாயைப்போல்). ஆனால், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உப்பு, பல்வேறு வகையில் கடத்தப்படுகிறது. எப்படி தடுக்கலாம் என்று எண்ணும்போதுதான், வேலி கட்டலாம் என்ற யோசனை தோன்றுகிறது. அப்போது, கம்பெனி, மேற்கில் மேலும் விரிவடைந்துவிட்டது.

    சுங்க வேலி .

    வட மேற்கு எல்லை பிராந்தியத்தில் ஆரம்பித்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா என்று 2500 மைல் நீள வேலி அமைக்கப்படுகிறது. முதலில் கழிகளால் அமைக்கப்பட்ட வேலி, பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி, பின்பு மரக்கன்றுகளால் அமைக்கப்படுகிறது. ( வளமான மன் இல்லாத இடங்களில் கற்களாலும், சப்பாத்தி கள்ளியாலும் வேலி கட்டப்படுகிறது). வேலியை காவல் காக்க ஒரு காவல் படை அமைக்கப்படுகிறது. 1870இல் 14000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். கடை நிலை ஊழியருக்கு சம்பளம் மிக குறைவு. லஞ்சம், கடத்தலுக்கு உடந்தை, பொய் கேஸ் ஆகியவற்றின் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகள் வீட்டில், உப்பு மூட்டையை இவர்களே போட்டுவிட்டு, “நீ, உப்பை, சட்டத்தை மீறி பதுக்கினாய்” என்று குற்றம்சாட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். (நம்ம போலீஸ், கஞ்சா கேஸ் போடுவதுபோல. அவங்க தான இவங்களோட முன்னோடி). அப்படியும், மக்கள் தலைச்சுமையில் உப்பு கடத்துகிறார்கள் (கடத்துகிறார்கள் – சரியான வார்த்தையா?). 1873இல் மட்டும் 6700 பேர், தலையில் உப்பு மூட்டைகள் கடத்தி பிடிபட்டுள்ளார்கள்.

    கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்தியா வெள்ளையர்களிடம் வந்த பின், இந்த வேலி, உள்னாட்டு வணிகத்துக்கு பெரிய தடையாக மாறுகிறது. வேலி வேண்டாம், ஆனால் உப்பின் சுங்க வரி வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, தயாரிக்கும் இடத்திலேயே வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியும், அரசின் ஏகபோக (மொனொபாலி) உரிமையாகிறது. ராஜஸ்தான் சாம்பா ஏரி மற்றொரு உப்பு கிடைக்குமிடம். ஜோத்பூர் மன்னரிடம் இருந்து மிரட்டி குத்தகைக்கு வாங்குகிறார்கள். பின்பு வேலி தேவைப்படவில்லை, கைவிடப்படுகிறது.

    மக்கள் உப்பு பயன்படுத்துவதை குறைக்கிறார்கள். உப்பு சத்தில்லாமல், பல்வேறு நோய் தாக்கி, பலர் உயிரிழக்கிறார்கள். 1930 இல், உப்பு வரி பல மடங்கு குறைந்துவிட்டாலும், மக்கள் ஆழ்மனதில் நீங்கா வடு ஏற்படுத்திவிட்டது. காந்தி அதை கண்டுகொள்கிறார். நேருவும், மற்றவர்களும் நில வரியை எதிர்த்து போராடலாம் என்கிறார்கள். காந்தி உப்பையே தேர்ந்தெடுக்கிறார். உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறார். அது, மக்களுக்கு ஆங்கிலேய சுரண்டலை ஒரு எளிய போராட்டம் மூலம் உணர்த்துகிறது. 1946இல் நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றவுடன், உப்பு வரி முழுமையாக நீக்கப்படுகிறது.

    லண்டன் நூலகத்தில் வேலை செய்யும் ராய், வேலியைப் பற்றி ஏதோ ஒரு சிறு குறிப்பை காண்கிறார். யாரிடம் கேட்டாலும் அது பற்றி தெரியவில்லை. சில வருடங்கள் தீவிர அராய்ச்சிக்குபின், மூன்று முறை இந்தியா வந்து, கடைசியில் சம்பல் பள்ளத்தாக்கில் அதன் எச்சங்களை கண்டு பிடிக்கிறார். (தற்போது, வேலியின் மேல் சாலை அமைத்துவிட்டார்கள்.)

    ராய் மாக்ஸ்காம் எழுதிய ‘The Great Hedge of India’ புத்தகம் கண்டிப்பாய் படியுங்கள். இந்தப் புத்தகம் வரும் வரை, இப்படி ஒரு வேலி இருந்தது பற்றிய செய்தியே தெரியவில்லை. நம்மிடம் எதிர்வினையே உருவாகவில்லை. இந்திய வரலாற்று ‘ஆய்’வாளர்களே, நீங்கள் என்னதான் செய்கிறீர் ? இது மாதிரி எத்தனை வேலிகளும், வலைகளும் இருந்தனவோ தெரியவில்லை. [ஜெயமோகன் எழுதும்வரை, இப்படி ஒரு புத்தகம் வந்ததும் எனக்கு தெரியவில்லை 😦 ].

    உப்பு சத்தியாகிரகம்

    இனி நான், ஒவ்வொரு முறை உப்பை பயன்படுத்தும் போது, நம் மக்கள் மனதில் கட்டப்பட்ட வேலியை நினைவு கூறுவேன். அதை உடைத்த தாத்தாவை நினைவு கூறுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவேன். காந்திஜி கீ ஜெய். [இன்று காந்தியின் பிறந்த நாள்.]

    http://www.roymoxham.com/page4.htm

    http://en.wikipedia.org/wiki/Inland_Customs_Line

  • India after Gandhi – (நவீன இந்தியாவின் வரலாறு) – புத்தக விமர்சனம்

    கேள்வி :  ‘இந்தியா ஏன் ஒரே நாடாக உள்ளது?’, ‘எவ்வளவு நாள் ஒரே நாடாக இருக்கும்?’, ‘இந்தியாவிற்கு ஜனநாயகம் ஒத்துவருமா?’

    பதில்: ‘காந்திக்குப் பின் இந்தியா’, ராமச்சந்திர குகா அவர்கள் 2007 ஆம் ஆண்டு எழுதிய முக்கியமான நூல். நவின இந்தியாவின் வரலாறை 900 பக்கங்களில், மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, விரிவான விடையாக எழுதியுள்ளார்.

    ********

    இந்தியா – பாக் பிரிவினையை உருவகிக்கும் ‘டைம்’ பத்திரிக்கையின் அட்டைப் படம்.

    “இந்தியாவிற்கு மக்களாட்சி ஒத்துவராது, கம்யூனிசமோ அல்லது ராணுவ ஆட்சியோ தான் சரிப்படும்”, “ஐரோப்பாகூட ஒரு நாள், ஒரே நாடாகலாம், இந்தியா கண்டிப்பாக ஆகமுடியாது”, “மதராசிக்கும் பஞ்ஞாபிக்கும் இருக்கும் இடைவெளி ஐரிஷ்க்கும் ஸ்பானியர்களுக்கும் உள்ள இடைவெளியை விட அதிகம். அவர்களாவது ஒரே நாடாவாவது, நடப்பதை பேசுங்கள்” என்று அன்றைய அறிவுஜிவிகள் (வேற யார், அமெரிக்க/ஐரோப்பியர்கள் தான்) மீண்டும் மீண்டும் கவலைப் படுகிறார்கள். “இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் நீங்கினால், பிராமன ஆதிக்கம் ஒங்கி, இந்தியாவை ஒரு 500 வருடம் பின்நோக்கி கொண்டுசெல்வார்கள், நீதிமன்றம், ரயில்வே உட்பட ஆங்கிலேயருடைய சாதனைகளை அழித்துவிடுவார்கள். தேவைப்பட்டால்,  ஜெர்மானியர்களின் துனைகொண்டு இந்தக் கூட்டத்தை அடக்க வேண்டும்” என்று வின்ச்டன் சர்ச்சில் ஒரு படி மேலே போய் ஆதங்கப்படுகிறார்.

    டைம், நியுயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக அவநம்பிக்கை எழுதிக்குவிக்கப்படுகிறது. இந்தியா சுதந்திரம் அடையும் போது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பிரதமர் இறக்கும் போதும், கலவரங்களின் போதும் இந்த அச்சங்கள், அவநம்பிக்கைகள் மீண்டும் உயிர்கொள்கின்றன. ஒவ்வொரு தச ஆண்டின் முடிவிலும், இந்தியா சந்தித்த மோசமான தச ஆண்டு இதுதான் என்றும், இந்தியாவின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி என்றும் எழுதப்படுகிறது. இவற்றை எல்லாம் மீறி இந்தியா எழுந்து நின்றதின் கதை இந்தப் புத்தகம்.

    குகா, இந்நூலில் தன் கருத்துக்களை, மிகக்குறைந்த இடங்களில் மட்டுமே நேரிடையாகக் கூறுகிறார். பெரும்பாலான இடங்களில் அன்றைய சூழ்நிலையில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகள், தலைவர்களின் பேட்டிகள், அறிஞர்களின் கருத்துக்கள் அகியவற்றை தொகுத்து அளிப்பதின் மூலம், தன் கருத்துகளை முன்வைக்கிறார். ஊகங்களின் மேல் இல்லாமல், உறுதிபடுத்தப்படக்கூடிய தகவல்களின் மேல் மட்டுமே  நூலைக் கட்டமைத்துள்ளதால், நூலின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. நூலில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை மிக அழகாக கோர்த்துக்காட்டியதே குகாவின் சாதனை.

    *****——-*****

    காந்தியின் கரங்களில் இந்தியா

    நூலை ஐந்து பிரிவாகப் பிரித்துள்ளார். முதல் பிரிவில்,  சுதந்திரம் முதல் 1950 வரையிலான மிக முக்கியமான காலகட்டத்தை விவரிக்கிறார். “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துள்ளது, காங்கிரஸ்க்கு அல்ல” என்ற காந்தியின் அறிவுரையின் பேரில், நேரு, எதிர்கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் தருகிறார். அவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர். நேரு, படேல், அம்பேத்கர் மூவரையும் “இந்தியாவின் மும்மூர்த்திகள்” என்று வர்னிக்கிறார். காந்தி நட்ட செடியை, வாடாமல் காத்த மும்மூர்த்திகளின் செயல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்த 500 குறுநில மன்னர்களை வழிக்கு கொண்டுவந்தது, இந்தியா-பாக் பிரிவினையின்போது, எற்பட்ட கலவரத்தை அடக்க ரானுவத்தை பயன்படுத்தாமல், வெள்ளையர்களின் குடியிருப்புகளைக் காக்க பயன்படுத்தியது (அப்போது, இந்தியாவிலேயே பாதுகாப்பானவர்கள் வெள்ளையர்கள்தான் என்கிறார் குகா)., மவுண்ட்பேட்டன் இந்தியாவிலிருந்து சென்றவுடன், கூலிக்கு ஆட்களை அமர்த்தி, தன் கோனத்தில் இந்தியாவைப் பற்றியும், தன்னைப்பற்றியும் பல்வேறு புத்தகங்களை எழுதுக்கொள்வது பொன்ற நகைச்சுவை (dark humor) காட்சிகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. காஷ்மீர், நாகலாந்து பிரச்சனைகளைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். (இவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன்).

    இரண்டாவது பிரிவில், 1952 இல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்து நேருவின் மறைவு வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவிக்கு “நேருவின் இந்தியா” என்று சரியாக பெயரிட்டுள்ளார். “உலக வரலாறின் மிகப் பெரிய சூதாட்டம்” என்று இந்தியாவின் முதல் தேர்தல் வர்னிக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டியை பர்க்காவிற்குள் மறைத்து எடுத்துச்சென்ற பெண், பனிக்காலம் வந்துவிடும் என்பதால், ஆறு மாதத்திற்கு முன்பே ஓட்டுப் போட்ட ஊர், என்பது போல பல்வேறு குட்டித் தகவல்களின் மூலம் தேர்தலை சுவாரஸ்யமாக கூறிச்செல்கிறார். மதச்சார்பின்மை, ஜனநாயகம், அணி சேராமை, கருத்துச் சுதந்திரம் ஆகிவற்றின் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் நேரு. மொழி வாரியாக மாநிலங்கள் அமைத்தல், பல்வெறு சிறு சட்டங்களாக நிறைவேற்றப்பட்ட இந்து சிவில் சட்டம், நேரு / மஹானுலொபிஸ் கூட்டணியின் ஐந்து ஆண்டுத்திட்டங்கள் ஆகிவை இதில் இடம்பெறுகின்றன. படேல் மறைவிற்குபின், நேருவின் கருத்துக்களை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை, இருப்பினும் நேரு சர்வாதிகாரியாக நடந்துகொள்ளவில்லை என்கிறார் குகா.1957 இல், உலகிலேயே முதன்முதலாக கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிச அரசு பதவியேற்கிறது. நேரு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற எண்ணம், அவர் கேரள அரசை டிஸ்மிஸ் செய்யும் பொழுது சிதைகிறது. சீனா-இந்தியப் போரால் நேருவுடைய வெளியுறக்கொள்கைக்கும், அவருடைய ஆளுமைக்கும், பெருத்த அடி விழுகிறது.

    நேருவின் மறைவிற்கு பின், சாஸ்திரி பிரதமராகிறார். இந்தியா உனவு உற்பத்தியில் தன்நிறைவு அடைவது, இந்தி திணிப்பை திரும்பப்பெறுவது ஆகியவை  இளம் இந்தியாவின் மெல் உள்ள நம்பிக்கையை துளிர்க்கச்செய்யும் அம்சங்கள். மற்றபடி மூன்றாம் பிரிவிலும் இந்தியா சந்தித்த சவால்கள் ஏராளம்.

    நான்கவது பிரிவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், நேருவின் இந்தியாவை அசைத்துப்பார்த்த இந்திரா காந்தியின்

    காலியாக விடப்பட்ட இந்தியன் எக்ஸ்ஃப்ரஸ் தலையங்கம் – எமெர்ஜென்ஸி காலகட்டம்

    செயல்களின் தொகுப்பு எனலாம். குகா தொகுத்திருக்கும் நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, காந்தி மற்றும் நேரு இந்தியாவிற்கு கிடைத்தது, இந்தியாவின் நல்லூழ் என்பதைத்தவிர வேறு என்ன சொல்வது ?. இந்திரா காந்தி காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரம், முழுமையாக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசுகள் கலைக்கப்படுகிறது. உச்சகட்டமாக அவசரநிலை கொண்டுவரப்படுகிறது, காங்கிரஸின் உட்கட்சி ஜனநாயகம் அடியோடு அழிக்கப்படுகிறது. கொள்கைகளின் மேல் நடத்தப்பட்ட ஆட்சி மாறி தனி நபர் துதி பாடும் அமைப்பாக ஆட்சி மாறுகிறது. 1971 போரில் தெளிவாக முடிவெடுத்தது மட்டுமெ இந்திராவின் சாதனையாக குகா குறிப்பிடுகிறார். இவருடைய காலத்தில் நான் ஆரம்பத்தில் கூறிய அவநம்பிக்கைகள் மேற்குலக அறிவுஜீவிகளிடம் மட்டுமின்றி இந்தியர்களிடமும் பரவுகிறது. ஒரு சோக நாவலைப் படிக்கும் உணர்வுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    கடைசி பிரிவு 1990 – தற்சமயம் வறை கால அடிப்படையில் (chronological order) இல்லாமல் , முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. மண்டல் கமிஷன், ஊழல், தாராளமயமாக்கல், நவீன இந்தியாவின் எழுச்சி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறார்.

    மதக்கலவரம் எங்கே யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும், கடைசியில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முஸ்லீம்களே என்பதை தகவல்களின் மூலம் நிறுவுகிறார். சுதந்திர இந்தியாவில், தலித்துகளுக்கு ஒரு அம்பேத்கர் கிடைத்தைப்போல், முஸ்லீம்களுக்கு ஒரு தலைவர் இல்லாததின் விளைவையும் கோடிட்டு காட்டுகிறார். இந்துக்களை, ஒரு சின்ன நிலப் பிரச்சனையால் பா.ஜ.க. எவ்வாறு ஒருங்கினைத்து அரசியல் ஆதாயம் அடைந்தது என்பதையும் விளக்குகிறார்.  இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததிக்கு பிறகு தலித்துகளின் மேல், வன்முறை அதிகரிப்பதையும், பின் தங்கிய வகுப்புகளுக்கு அதிகாரம் கிடைத்தபின், அது மேலும் அதிகரிப்பதையும் குறிப்பிடுகிறார். தலித்துக்கள் புதிய எழுச்சியுடன் போராட ஆரம்பித்ததன் விளைவுகளே அவர்களின் மேல் ஏற்படும் வன்முறை என்பதை தெளிவுபடுத்துகிறார்.

    புத்தகம் முழுவதும் ஊடுபாவாக இந்திய அயலுறவுக்கொள்கை விவாதிக்கப்படுகிறது. கடைசியில் சினிமா, க்ரிக்கட் போன்றவற்றின் பங்களிப்பையும் குறிப்பிடத்தவறவில்லை.

    அவநம்பிக்கைகளின் பதில்.

    **** —– ****

    இந்தப் புத்தகத்தை படித்தபின், “இந்தியாவிற்கு ஜனநாயகம் காந்தியின் கொடை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது எவ்வகை மிகைப்படுத்துத்துதலும் இல்லை என்றே எனக்குப்படுகிறது. ஜனநாயகத்தின் மூலமே இந்தியா தான் சந்தித்த சவால்களை வென்று வீறு நடை போடுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக இதை விட எழுத முடியுமா என்று தெரியவில்லை. வரலாறின் மேல் காதல் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.