Tag: கட்டுரை

  • இந்தியாவின் மாபெரும் சுங்க வேலி – The Great Hedge of India – புத்தக மதிப்புரை.

    காந்தி :  ‘இங்கிலாந்து பணக்கார நாடாக, இந்தியா தேவைப்பட்டது. இந்தியா இங்கிலாந்தைப் போல் ஆக, நாலைந்து உலகம் பத்தாது’.

    ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இரண்டு நாட்களுக்குமுன் உலகின் மிகப்பெரிய வேலி என்ற கட்டுரை வந்தது. ராய் மாக்சம் எழுதிய ‘The Great Hedge of India’ என்ற புத்தகத்தை பற்றியும், அதை ஒட்டிய தன் கருத்துகளையும் பதிவுசெய்திருந்தார். அருகிலிருந்த நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்துவந்து படித்தேன். அவரைவிட என்னால், சிறப்பாக சொல்ல முடியாவிட்டாலும், என் கருத்துகளை பதிவிடுகிறேன்.

    கேள்வி : 1850ஆம் ஆண்டு, வங்காள மாகானத்தில் பயன்படுத்தப் பட்ட உப்பில் 50% இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆம், சமயல் உப்புதான். இயந்திரங்களால் மலிவாக தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடைகள் இல்லை, வெறும் உப்பு. உங்களால் நம்ப முடிகிறதா ? இந்தியாவில் இல்லாத கடலா, உப்பளங்களா? பிறகு உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

    பதில் : லாபம். இந்தியாவில் (குஜராத்தில்) விளையும் உப்பிற்கு அநியாய வரிகள் போடப்பட்டு, இறக்குமதி உப்பு, உள்ளூர் உப்பைவிட குறைந்த விலைக்கு விற்கப்பட்டது !!.

    இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, கம்பெனி லாபம் அடைகிறது என்றால், இங்கே என்ன தான் நடக்கிறது? முகமது கஜினி, நாதிர் ஷா, தைமூர் எல்லாம் இந்தியாவை கொள்ளை அடித்தார்கள். அவை வழிப்பறி போன்றது. கையிலிருப்பது தான் களவாடப்படும், வங்கியிலிருப்பது அவர்களுக்கு தெரியாது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளை, திட்டமிட்டு சுரண்டப்பட்ட கொள்ளை. பணம் மட்டுமல்ல கட்டிய கோமணம், சிறுநீரகம் உட்பட சகலத்தையும் உருவிவிட்டார்கள்.  முகலாய அரசு வலுவிழக்க ஆரம்பித்த பின், கம்பெனி வணிகத்தை மட்டும் செய்யாமல், இந்திய அரசியலிலும் தலையிட ஆரம்பிக்கிறது. 1756இல், வங்காள நவாப், கம்பெனியை கல்கத்தாவிலிருந்து விரட்டுகிறார். அடுத்த வருடம், ராபர்ட் கிளைவ் தலைமையில், பிளாசிப் போரில் நவாப் தோற்கடிக்கப்படுகிறார். (போரெல்லாம் இல்லை.லஞ்சம் வாங்கிக்கொண்டு நவாப் படைகள் எதிரணிக்கு விலைபோய்விட்டன ). வென்ற கம்பெனி, வங்கத்தில், எல்லா ஊர்களிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட கடைகள் (பேக்டரி அவுட்லட்) திறக்கிறார்கள். உப்பு, புளி, சக்கரை, தானியம், புகையிலை, கஞ்சா என எல்லா பொருட்களுக்கும் கம்பெனி கடையில் வரியில்லை. விவசாயிகள், வியாபாரிகள் மூலப்பொருட்களை கம்பெனிக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கொஞ்ச நாளில், உள்ளூர் வியாபாரிகளின் கடைகள் படுத்துவிட்டது. பின்பு கிளைவ், கம்பெனியின் சில முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து ‘பிரத்தியேக சங்கம்’ (எக்ஸ்குலுசிவ் கிளப்) ஆரம்பித்து, புகையிலை, வெற்றிலை, உப்பு ஆகியவற்றை விற்கிறார். பிரத்தியேக சங்கத்தினால், கம்பெனி வருமானம் குறைகிறது. கம்பெனியின் ‘மற்ற’ பங்குதாரர்கள் இங்கிலாந்து பாராளுமன்றைத்தின் மூலம் சங்கத்தை கலைத்துவிட்டார்கள். இங்கிலாந்தில் ஊர், பேர் தெரியாது இருந்த கிளைவ், மிகச் சில வருடங்களில் ‘பிளாசி கோமான்’ ஆகிறார். மற்ற ‘கோமான்கள்’ கிளைவ் மீது, விசாரனை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கோருகிறார்கள். கமிஷன், விசாரனையின் முடிவில் ‘கிளைவ் ஒரு தியாகி. அவரையா குற்றம் சொன்னீர், இது அடுக்குமா?’ என்று தீர்ப்பு வழங்கியது. [பிரச்சனை, மிகக் குறுகிய காலத்தில் எப்படி இப்படி என்பதுதான். டாட்டா, நூறு வருடம் சேர்த்ததை, அம்பானி இருவது வருடத்தில் சேர்க்கவில்லையா ? பொறாமை பிடித்த உலகம்..சே..].கிளைவ் தற்கொலை செய்து கொண்ட பின், வாரன் ஹேஸ்டிங்ஸ் மதராஸ், பம்பாய், கல்கத்தா மூன்றையும் ஒன்றினைத்து வைசிராயகிறார். சுரண்டல் தொடர்கிறது.

    இங்கே, நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, கம்பெனிக்கு முன், இங்கே வரியே இல்லையா என்றால், இருந்தது. பஞ்ச காலத்தில், வரி குறைக்கப்பட்டது / வசூலிக்கப்படவில்லை. தொடர்ந்து சில ஆண்டுகள் நல்ல விளைச்சல் இருந்தால், அடுத்து பஞ்சம் வரும் என்று எல்லோருக்கும் தெரியும். தானியங்கள் கோயில்களில், மற்ற பொது இடங்களில் சேமிக்கப்படுகிறது; பஞ்ச காலத்தில் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கம்பெனி ஆட்சியில், பஞ்ச காலத்திலும் நில வரியும், மற்ற வரிகளும் கறாராக வசூலிக்கப்பட்டன. வரி கட்ட முடியாதவர்கள் நிலத்தை உழ அனுமதிக்கப்படவில்லை. நிலம் மீண்டும் காடாகியது. பஞ்சத்தின் போதும், தானிய ஏற்றுமதி நடைபெறுகிறது. வங்கத்தில், ஆங்கிலேய ஆட்சியின் காலகட்டத்தில் வந்த பஞ்சங்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்துவிட்டார்கள். (சுதந்திர இந்தியாவின் முதல் சாதனை, உலக நாடுகளிடம் பிச்சை எடுத்தாவது, நம் மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றியதுதான்.)

    வங்கக் கடலில், கங்கை, பிரம்மபுத்ரா நதிகளின்  நன்னீர் கலப்பதால், வங்கத்தில்  உப்பு மிக குறைவாக கிடைக்கிறது. குஜராத்தில் தான் பெரிய உப்பளங்கள் உள்ளன. (இன்றும், இந்தியாவின் மொத்த உப்பு உற்பத்தியில் 70% குஜராத்திலிருந்துதான்). மேற்கிலிருந்து உப்பு, வட இந்தியாவிற்கும், வங்க எல்லைக்கும் வரும்பொழுது, சுங்கச் சாவடிகளில் வரி வசூல் செய்யப்படுகிறது.  உப்பின் மீது விதிக்கப்படும் உள்நாட்டு வரிதான், கம்பெனியின் வருவாயில் முக்கிய பங்கு. (டாஸ்மாக் வருவாயைப்போல்). ஆனால், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உப்பு, பல்வேறு வகையில் கடத்தப்படுகிறது. எப்படி தடுக்கலாம் என்று எண்ணும்போதுதான், வேலி கட்டலாம் என்ற யோசனை தோன்றுகிறது. அப்போது, கம்பெனி, மேற்கில் மேலும் விரிவடைந்துவிட்டது.

    சுங்க வேலி .

    வட மேற்கு எல்லை பிராந்தியத்தில் ஆரம்பித்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகராஷ்டிரா என்று 2500 மைல் நீள வேலி அமைக்கப்படுகிறது. முதலில் கழிகளால் அமைக்கப்பட்ட வேலி, பராமரிப்பு செலவுகளை காரணம் காட்டி, பின்பு மரக்கன்றுகளால் அமைக்கப்படுகிறது. ( வளமான மன் இல்லாத இடங்களில் கற்களாலும், சப்பாத்தி கள்ளியாலும் வேலி கட்டப்படுகிறது). வேலியை காவல் காக்க ஒரு காவல் படை அமைக்கப்படுகிறது. 1870இல் 14000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். கடை நிலை ஊழியருக்கு சம்பளம் மிக குறைவு. லஞ்சம், கடத்தலுக்கு உடந்தை, பொய் கேஸ் ஆகியவற்றின் மூலமே அவர்கள் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகள் வீட்டில், உப்பு மூட்டையை இவர்களே போட்டுவிட்டு, “நீ, உப்பை, சட்டத்தை மீறி பதுக்கினாய்” என்று குற்றம்சாட்டி லஞ்சம் வாங்குகிறார்கள். (நம்ம போலீஸ், கஞ்சா கேஸ் போடுவதுபோல. அவங்க தான இவங்களோட முன்னோடி). அப்படியும், மக்கள் தலைச்சுமையில் உப்பு கடத்துகிறார்கள் (கடத்துகிறார்கள் – சரியான வார்த்தையா?). 1873இல் மட்டும் 6700 பேர், தலையில் உப்பு மூட்டைகள் கடத்தி பிடிபட்டுள்ளார்கள்.

    கிட்டத்தட்ட பாதிக்கு மேல் இந்தியா வெள்ளையர்களிடம் வந்த பின், இந்த வேலி, உள்னாட்டு வணிகத்துக்கு பெரிய தடையாக மாறுகிறது. வேலி வேண்டாம், ஆனால் உப்பின் சுங்க வரி வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, தயாரிக்கும் இடத்திலேயே வரி வசூல் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த உப்பு உற்பத்தியும், அரசின் ஏகபோக (மொனொபாலி) உரிமையாகிறது. ராஜஸ்தான் சாம்பா ஏரி மற்றொரு உப்பு கிடைக்குமிடம். ஜோத்பூர் மன்னரிடம் இருந்து மிரட்டி குத்தகைக்கு வாங்குகிறார்கள். பின்பு வேலி தேவைப்படவில்லை, கைவிடப்படுகிறது.

    மக்கள் உப்பு பயன்படுத்துவதை குறைக்கிறார்கள். உப்பு சத்தில்லாமல், பல்வேறு நோய் தாக்கி, பலர் உயிரிழக்கிறார்கள். 1930 இல், உப்பு வரி பல மடங்கு குறைந்துவிட்டாலும், மக்கள் ஆழ்மனதில் நீங்கா வடு ஏற்படுத்திவிட்டது. காந்தி அதை கண்டுகொள்கிறார். நேருவும், மற்றவர்களும் நில வரியை எதிர்த்து போராடலாம் என்கிறார்கள். காந்தி உப்பையே தேர்ந்தெடுக்கிறார். உப்பு சத்தியாகிரகம் தொடங்குகிறார். அது, மக்களுக்கு ஆங்கிலேய சுரண்டலை ஒரு எளிய போராட்டம் மூலம் உணர்த்துகிறது. 1946இல் நேருவின் இடைக்கால அரசு பதவியேற்றவுடன், உப்பு வரி முழுமையாக நீக்கப்படுகிறது.

    லண்டன் நூலகத்தில் வேலை செய்யும் ராய், வேலியைப் பற்றி ஏதோ ஒரு சிறு குறிப்பை காண்கிறார். யாரிடம் கேட்டாலும் அது பற்றி தெரியவில்லை. சில வருடங்கள் தீவிர அராய்ச்சிக்குபின், மூன்று முறை இந்தியா வந்து, கடைசியில் சம்பல் பள்ளத்தாக்கில் அதன் எச்சங்களை கண்டு பிடிக்கிறார். (தற்போது, வேலியின் மேல் சாலை அமைத்துவிட்டார்கள்.)

    ராய் மாக்ஸ்காம் எழுதிய ‘The Great Hedge of India’ புத்தகம் கண்டிப்பாய் படியுங்கள். இந்தப் புத்தகம் வரும் வரை, இப்படி ஒரு வேலி இருந்தது பற்றிய செய்தியே தெரியவில்லை. நம்மிடம் எதிர்வினையே உருவாகவில்லை. இந்திய வரலாற்று ‘ஆய்’வாளர்களே, நீங்கள் என்னதான் செய்கிறீர் ? இது மாதிரி எத்தனை வேலிகளும், வலைகளும் இருந்தனவோ தெரியவில்லை. [ஜெயமோகன் எழுதும்வரை, இப்படி ஒரு புத்தகம் வந்ததும் எனக்கு தெரியவில்லை 😦 ].

    உப்பு சத்தியாகிரகம்

    இனி நான், ஒவ்வொரு முறை உப்பை பயன்படுத்தும் போது, நம் மக்கள் மனதில் கட்டப்பட்ட வேலியை நினைவு கூறுவேன். அதை உடைத்த தாத்தாவை நினைவு கூறுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவேன். காந்திஜி கீ ஜெய். [இன்று காந்தியின் பிறந்த நாள்.]

    http://www.roymoxham.com/page4.htm

    http://en.wikipedia.org/wiki/Inland_Customs_Line

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 2

    கேன்கூன் கடந்த இரு தச ஆண்டில் உருவான ஒரு சுற்றுலா நகரம். அது தற்போதைய நுகர்ச்சிக் கலாச்சாரத்தின் அடையாளம். ஊரின் முக்கியத் தொழிலே சுற்றுலா தான். ஒப்புநோக்க அதை மெக்சிகோவின் கோவா என்று அழைக்கலாம்.

    யுகாட்டன் தீபகற்பத்தில் பெரிய நகரம் மெரிடா. ஸ்பானியர்கள் யுகாட்டனில் வந்து இறங்கி மாயர்களை வென்று, இந்தப் பகுதியின் தலைநகராக மெரிடாவை  கட்டமைத்தார்கள். கேன்கூனிலிருந்து மெரிடா செல்லும் வழியில் அமைந்துள்ளது சிச்சன் இட்சா.

    இன்றைய திட்டம் சிச்சன் இட்சா செல்வது. கேன்கூனிலிருந்து சிச்சன் இட்சா செல்வதற்கு இரு வழிகள் உன்டென அறிந்தோம். ஒன்று சுங்கச் சாலை, மற்றொன்று பொது. சுற்றுலாப் பயணிகளை நம்பி சுங்கச் சாலை அமைத்துள்ளார்கள்.  பொது வழியாகச் சென்றால், கிராமப்புறங்களை காணலாம் என்பதால், அவ்வழியில் செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.  பயனம் முழுமைக்கும் கார் ஓட்டியது அருண். மனுஷனுக்கு கார் ஓட்டுவது அலுப்பே தட்டாத ஒன்று.

    ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் ‘மெரிடா’ என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் ‘மெரிடா’,’லிப்ரே’ என்றும், மற்றொன்றில் ‘மெரிடா’,’சிச்சன் இட்சா’,’கோட’ என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து ‘லிப்ரே’ என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் ‘சிச்சன் இட்சா’ என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றி பேசிக்கொண்டே சென்றோம். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் கதையை இடைமறித்து சுங்க வழி, சுங்கமிலா வழி பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மைப் போல சுற்றுலாப் பயணிகளைத் தவிர அனைவரும் சுங்கச் சாலையில் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. ‘ஹி ஹி ‘ என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு ‘லிப்ரே’ என்றால் ‘இலவசம்’ என்றும் ‘கோட’ என்றால் ‘காசு’ என்றும் புரிந்தது.

    சிச்சன் இட்சாவுக்கு மதியம் போய்ச்சேர்ந்தோம். தங்கும் விடுதியில் (குறைந்த செலவில், அருமையான அறைகள். உணவும் நன்றாக இருந்தது) சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பிரமிடுகளையும், கட்டடங்களையும் பார்க்கச் சென்றோம். விடுதியில் இருந்து இலவச சேவையாக எங்களை தொல்பொருள் கட்டடங்களின் அருகில், காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். அங்கே பார்த்த இடங்கள், மிகச் சிறிதாக இருந்தன. நான் போட்டோவில் பார்த்த இடங்களின் மாதிரி வடிவம் போல இருந்தது. ஒரு மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தோம். வேறு எந்த கட்டிடமும் இருப்பது போலத் தெரியவில்லை.

    “தல ஏமாத்திட்டானுங்க.. இத பாக்கவா இவ்வளவு தூரம் வந்தோம் ?”

    “டேய், நீ தானடா, அப்பிடி இருக்கும், இப்பிடி இருக்கும்னு பில்டப் குடுத்த..”

    “பெருசாத்தான இருந்துச்சு… ஒரு வேள, கேமரா டிரிக்கா..சரி, வந்தது வந்தாச்சு, நான் இங்க உக்கார்ரேன்… உங்க கேமராவுல, இதெல்லாம், பெருசாத் தெரியர மாதிரி எடுங்க…நின்னுகிட்டே எடுத்தா, சின்னதா தெரியும். ஊர்ல போய் காட்டினா சிரிப்பானுங்க ..”

    மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில், ஒரு வெள்ளைக்கார கூட்டம், ஒரு சந்தில் இருந்து வந்தது. அங்கே சென்று பார்த்தால், ஒரு நகரமே கண்முன் விரிந்தது. ஒரு பெரிய பிரமிட், ஆய்வுக்கூடம், ஆயிரம் தூண் அடங்கிய கோவில், சுற்றிலும் மதில் சுவர் அடங்கிய ஒரு விளையாட்டு மைதானம், நிறைய மேடைகள் என்று அந்த இடமே பிரம்மாண்டமாக இருந்தது.  (எங்களை இறக்கிவிட்டவன், தொல்பொருள் கட்டடங்களின் பெருவாசலில் இறக்காமல், கடைக்கோடி வாசலில் இறக்கிவிட்டுள்ளான். அதனால், இடக் குழப்பம்.)

    முதலில், அங்கே இருந்த வானவியல் ஆய்வுக்கூடத்தை (எல் கராகோல்) பார்த்தோம். 902 கி.பி. இல் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம். மாயா கேலண்டருக்கு அளித்த முக்கியத்துவம், அதில் அவர்களுக்கு இருந்த தேர்ச்சி நாம் அறிந்ததே.

    மாயா கடவுள்களில், முக்கியமான கடவுள் ‘சாக்’ எனப்படும் மழைக்கடவுள். மாயா குடுக்கும் பலிகளில் முக்கால்வாசி அவருக்குத்தான். காரணம், மாயா நிலப்பகுதியில் நிலத்தின் மேல் ஓடும் ஆறு எதுவும் இல்லை. நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகள் உண்டு. நிரந்தர தண்ணீர் பஞ்சம். ஆங்காங்கே, நிலத்துக்கடியில் ஓடும் ஆறுகளை இணைக்கும், இயற்கையாக உருவான கினறுகள் உள்ளன. அவை ‘சினோட்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கும் ஒரு புனிதக்குளம் இருந்தது. ‘ஜாக்குவார்’ மிருகம் மாயர்களுக்கு புனிதமான மிருகம். வீரமரணம் அடையும் வீரர்கள் ஜாக்குவார் ஆகிவிடுவார்கள் என்பது அவர்களுடைய புராதான நம்பிக்கை. அங்கே ஒரு ஜாக்குவார் ஆசனம் (சிம்மாசனம்?) இருந்தது. (ஆமா, நம்ம ஜாக்குவார் தங்கத்துக்கு யாருங்க ‘ஜாக்குவார்’னு பேர் வச்சா?”) . குக்குலுக்கான் என்ற இறக்கை வைத்த நாக தேவதையும் முக்கியமான தேவதை. இவர் மத்திய மெக்ஸிக்கோவைச் சேர்ந்த ஆஸ்டெக்குகளின் தேவதை, இங்கே வணிகர்களால் இறக்குமதி செய்யப்பட்டார் என்று விக்கிப்பீடியா சொல்கிறது. பின்னர் ஒரு ஊரில், ஆண் குறி சிலைகளை (லிங்கம்) கண்டோம். நல்ல இந்திய ஆராய்ச்சியாளர் யாராவது, மாயார்களின் கடவுளையும், நம் கடவுள்களையும் பற்றி ஆராய்ந்தால், பழங்குடி மனம் செயல்படும் விதம் பற்றி மேலும் சில புரிதல்களைக் கண்டடையலாம்.பழங்குடிகளின் மனம் ஒன்று போல இயங்குமோ என்னவோ?. [கேரளாவில் யாரோ ஒரு ‘ஆராய்ச்சியாளர்’ இந்துக்களுடைய ‘பாதாள லொகம்’ மெக்ஸிகொ என்றிருக்கிறார். இங்கே வந்து இரண்டு மாதம் தங்கினாராம். அதன் மூலம் கண்டுபிடித்தாராம். மகாபாரதத்தில் மயாசபை கட்டிய மயன் தான், இங்கே வந்து மாயா நாகரிகம் தோன்றக் காரணம் என்றிருக்கிறார். அவருக்கு பாராட்டுவிழா எல்லாம் எடுத்திருக்கிறார்கள். மயன் எப்படி இங்கே வந்தார் என்றால் ‘லெமூரியாக் கண்டம்’ மூலமாம். புரிந்துவிட்டது.)

    சாக் மூல் கோயில்.

    நிறைய மாயா சிறுவர்கள் நிறைய குட்டி சிலை, ஊசிமணி, பாசிமணிகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை. மகாபலிபுரம் நியாபகம் வந்தது. மாயாக்கள் உருவத்தில் சிறியவர்கள். பெண்கள் நான்கரை அடி, ஆண்கள் ஐந்து அடி. மாயா நகரங்களுக்கு இடையே நடந்த சகோதர யுத்தத்தில், சிச்சன் இத்சா அழிந்தது என்றார்கள். நீண்ட நாள் வறட்சியும் ஒரு காரணமாக இருக்கலாம். (மாயா நகரங்களைப் பற்றி, அடுத்த பகுதிகளில் பார்ப்போம்).

    ஆயிரம் கால் மண்டபம் முன் கைகுட்டை விற்கும் ஒரு மாயா பாட்டி

    பிறகு, புகழ் பெற்ற ‘எல் காஸ்டிலோ’ பிரமிடை பார்த்தோம். (குக்குலுக்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது). சம இரவு நாளன்று, (equinox) குக்குலுக்கான் படிகளில் இறங்கி வருவது போல் தெரியும் என்றார்கள். அன்று இரவு நடை பெற்ற ஒலி ஒளிக் காட்சியில், ஒளியில் ஒரு பாம்பு, இறங்கி வருவது போல் காட்டினார்கள். (அந்த ஒலிஒளிக் காட்சியில், ஒரு வித அங்கதத்துடனே மாயர்களை காட்டியது போல எனக்குத் தோன்றியது. மொத்தம் ஒரு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில், பத்து நிமிடம் அவர்களைப் பற்றி சிறப்பாகச் சொல்லியிருந்தால் அதிகம். அன்றைய காலகட்டத்தை இன்றைய நியாய / அநியாய நோக்கில் விளக்கியது போலவும் இருந்தது. “பூசாரிகள் தான் மன்னர்களை ஆட்டிவைத்தார்கள். நாட்டில் நடக்கும் குழப்பங்களுக்கெல்லாம், கடவுளின் கோபம் தான் காரணம். குறி சொல்லிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்றால், சினோட்டில் சிறுமிகளை தள்ளிவிடுவார்களாம். அதில் பிழைத்து வருபவர்களை ‘ஆரக்கிள்’ என்று அறிவித்து, தெய்வமாக்கிவிடுவார்களாம். ஆதாரமாக சினோட்டில் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன என்றார்கள். மழை பெய்யவில்லையென்றால், ஆயிரக்கணக்கில் நரபலி கொடுக்கப்படும் என்றார்கள். மாயா கூடைப்பந்தாட்டத்தில் தோற்றால், பலிதான். “சரியான காட்டாண்கள்.. நாம வந்து இதுங்கள காப்பாத்தினோம்… இல்லன்னா..” என்கிற தோரனைதான். அவற்றில் சில உண்மைகள் இருந்தாலும், வெளி உலக தொடர்பே இல்லாமல், எவ்வாறு வானவியலில் சிறந்து விளங்கினார்கள், பெரிய கட்டிடங்களை கட்டினார்கள் என்று ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.

    மாயா எழுத்துரு ‘வரைபட எழுத்துரு’  (heiroglypyic) வகையைச் சார்ந்தது. இப்பொழுது, மாயா மொழி பேச்சு வழக்கில் இருந்தாலும், எழுத்து வழக்கில் இல்லை. லத்தீன் எழுத்துக்கள் தான் உபயோகத்தில் உள்ளது. பின்னர் ஒரு ஊரில், எங்களிடம் நன்றாகப் பேசிய ஒரு மாயனிடம், என் பெயரை மாயனில் எழுதித் தரும்படிக்கேட்டேன். அவன் ஆங்கிலத்திலேயெ எழுதினான். இரண்டு, மூன்று முறை கேட்டபின்னும் அவன் எந்தப் படமும் வரையவில்லை. ஒரிஜினல் மாய எழுத்துருவில், அவனுக்குத் தெரிந்த எந்த மாயருக்கும் வரையத் தெரியாது, அதெல்லாம், அமெரிக்கப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் யாராவது கொஞ்சப் பேருக்குத் தெரியலாம் என்றான். மாயாக்களிடமே இருந்து யாராவது ஒருவர் வந்து அவர்கள் குலப்பாடல்கள், கிராமியக் கதைகள், தொன்மங்கள் போன்றவற்றை வைத்து ஆராய்ந்தால், நமக்கு அவர்களை பற்றி இன்னும் நிறைய தெரியலாம். (‘லேமூரியாக் கண்டம், ‘கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே’ போன்ற வகையில் இல்லாமல் இருக்க, குக்குலுக்கானிடம் பிரார்த்திப்போம்).

    மதியம் வரும்பொழுது, விடுதியைச் சேர்ந்தவர்கள் எங்களை காரில் இறக்கிவிட்டு சென்றார்கள். ஒலி ஒளிக்காட்சி முடியும் பொழுது, நன்றாகவே இருட்டிவிட்டது. இருட்டிலேயே, டார்ச் உதவியுடன் நாலு மைல் நடந்து வந்தோம். அங்கே சாப்பிட்ட பொரித்த கோழி நன்றாகச் செரித்திவிட்டது. வந்து படுத்தது தெரியவில்லை, மறுநாள் அருண் எழுப்பி விட்டு கிளம்பு தம்பி, போவொம் என்றார். அடுத்த இடம், மெரிடா.

  • மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 1

    இரண்டு வருடங்களுக்கு முன் மெக்சிகோ சென்று வந்தேன். அப்பொழுதே அதைப் பற்றி விரிவான ஒரு பயணக் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், நேரமில்லை. இப்பொழுது கூட எழுதாவிட்டால் மறந்துவிடும். அதனால், இந்தப் பதிவு.

    எனக்கு மாயன் நாகரிகத்தை சென்று பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அதுவும் அப்போகலிப்டோ படம் பார்த்த பிறகு மேலும் அதிகமாகியது. நான், அமெரிக்காவின் அட்லான்டா நகரில் உள்ள ஜார்ஜியா டெக்கில் முதுநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்தேன். மெக்சிகோ செல்லலாமா என்று கேட்டாலே, நண்பர்கள் அலறினார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தினம் செய்திகளில் மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களிடையே நடக்கும் கலவரம், அதில் பலியானோர் எண்ணிக்கை, இன்ன பிற மோசமான செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. அது, எல்லோருடைய மனதிலும் ஒரு பய உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நண்பர் அருண் (அருண்குமார் இளங்கோவன்) வருவதாகச் சொன்னார். விடுமுறையில் சில நண்பர்கள் இந்தியா சென்றுவிட்டனர். வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல், குடி, கேளிக்கையில் மட்டுமே ஈடுபடும் மற்றவர்களை அழைக்க மனமில்லை.

    மாயன் பகுதிகள்

    நானும், அருணும்  சேர்ந்து பயணத்திட்டம் வகுத்தோம். மாயா நாகரிகத்தை, தோற்றம், சங்க காலம், சங்கம் மருவிய காலம், ஸ்பானிய ஆக்ரமிப்பு, நிகழ்காலம் என்று விரிவாகப் பிரிக்கலாம். சில ஊர்கள் சில காலகட்டங்களுக்கு உரியவை. அடுத்த காலகட்டத்தில், அது பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டிருக்கும். மாயா நாகரிகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அறிய வேண்டும் என்ற விருப்பத்தால், எல்லா கால கட்டங்களுக்கும் உரிய ஒரு ஊரையாவது பார்க்க முடிவு செய்தோம். முடிந்த வரை சுற்றுலாப் பயணிகள் செல்லாத சிறிய ஊர்களுக்கும் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். எனக்கு செமஸ்டர், டிசம்பர் முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டது. டிசம்பர் 10 – 20 வரை சென்று வந்தால் விமான செலவுகள், தங்கும் விடுதி வாடகை, இதர செலவுகள் குறையும் என்றேன். (கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணம் செய்தால், எல்லாவற்றுக்கும்  விலை அதிகம்.) அருணுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சரி, டிசம்பர் கடைசி வாரமே போய் வருவோம் என்று முடிவு செய்தோம். மாயா நாகரிகம், மெக்சிகோவின் யுகாட்டன் தீபகற்பத்தை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. கேன்கூன் நகரம் தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா நகரம். அங்கே விமானத்தில் சென்று, பிற பகுதிகளுக்கு காரில் செல்லலாம் என்று திட்டம். கல்லூரி நூலகத்திலிருந்து மாயா நாகரிகத்தை பற்றிய சில நூல்கள், ஸ்பானிய – ஆங்கில அகராதி, வரைபடம், பயணத்துக்கு தேவையான பொருட்களுடன் எல்லாம் தயார்.

    டிசம்பர் 22, அட்லாண்டாவில் கிளம்பி கேன்கூனுக்கு சென்றோம். விமானத்தில் என் அருகில் ‘பேரிளம் பெண்’ ஒருவர் வந்தார். பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த லோன்லி பிளானட் புத்தகம் பேச தூண்டியது. இத்தாலியர், கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், போன்ற விவரங்கள் அறிந்த பின்னர், இன்று / நாளை என்ன திட்டம் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் திட்டமிட்டிருந்த எனக்கு ஆச்சிரியம். அருண், இவள் கேன்கூன் கடற்கரையில் விடுமுறை முழுதும் குடித்துவிட்டு கவிழப்போகிறாள், அதற்கு ஒரு திட்டமும் தேவையில்லை என்றார். அவள் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். கேன்கூனில் இறங்கி வாடகை கார் எடுக்கும் இடம் சென்றோம். முதல் அதிர்ச்சி காத்திருந்ததது. ஆட்டொமெட்டிக் கார் பதிவு செய்திருந்தோம். மானுவல் தான் உள்ளது, வேண்டுமானால், காலையில் வா, மாற்றித்தருகிறேன் என்றான். வேறு வழியில்லை. இருப்பதைக் குடு என்றோம். மெக்சிக்கோ, இந்தியாவைப் போலவே இருந்தது. கொஞ்சம் தட்டுத்தடுமாறி ஓட்டி விடுதி போய் சேர்ந்தோம்.

    கேன்கூன் (cancun) என்ற கடற்கரை நகரம் உல்லாச பேர்விழிகளுக்காகவே கட்டப்பட்ட ஒரு நகரம். ஊரே, ஒரு பெரிய கேளிக்கை விடுதி போல இருந்தது. இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் இருவது நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன்.

    மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் அவளிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.