மாயன் நாகரிகம் – பயணக் கட்டுரை – பாகம் – 5

உஷ்மாலிலிருந்து கிளம்பி கம்பச்சே சென்றோம். யுகாட்டனிலேயே வளம்மிக்க ஊராக கம்பச்சே இருக்கிறது. 1700களில் கரீபிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி கம்பச்சேவை தாக்கி சூரையாடியுள்ளார்கள். ஊருக்கு வெளியே கண்கானிப்பு

கம்பச்சே கரகாட்டம்

கோபுரம் கட்டப்பட்ட பின் கடற்கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டார்கள். நாட்டுப்புர நடனம் ஒன்றை பார்த்துவிட்டு, குரங்கு விடுதி (தங்குபவர்கள் குரங்கா ? நடத்துபவர் குரங்கா ?)  என்ற மாணவர் விடுதியில் இரவு தங்கினோம். அங்கு கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த சக பயணி ஒருவனை சந்தித்தோம். வட அமெரிக்காவின் வடகோடியான அலாஸ்காவில் தொடங்கி, தென் அமெரிக்காவின் தென் கோடி வரை, ஆறு மாதங்களில் பயணம் செல்வது அவன் திட்டமாம். (நினைச்சாலே மூச்சு முட்டுது…யாருடா நீங்கெல்லாம் ?)  ‘பத்திரமா போய்ட்டு வா ராசா’ என்று அவனுக்கு விடை கொடுத்துவிட்டு செட்டுமால் நோக்கி புறப்பட்டோம்.

கம்பச்சே – செட்டுமால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவு. காலையில் கிளம்பி, இரவில் செட்டுமால் செல்வதுதான் அன்றைய திட்டம். கார் ஓட்டப்போவது அருண், அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. வழியில் எந்த ஊரையும் பார்க்கும் திட்டம் இல்லை. கலக்மூல் காடுகள் வழியில் உள்ளன. இந்தக் காடுகள் மெக்ஸிக்கோவின் கம்பச்சே மாகானத்தில் தொடங்கி, குவாத்தமாலா நாட்டின் பீட்டன் மாகானம்வரை பரவியுள்ளது. கலக்மூல் மாயாக்களின் சங்க காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) சேர்ந்த ஊர். சங்க கால சோழ – பாண்டியர்களைப் போல, கலக்மூலுக்கும், சில நூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் (தற்போது, குவாத்தமாலா நாட்டிலுள்ள) திக்காலுக்கும் எப்போழுதும் தீராப் பகை. கலக்மூல் எங்கள் பயண திட்டத்தில் இல்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், போய் பார்ப்போம் என்று சென்றோம். மதிய வேளையிலே, சுற்றியிருந்த அடர் காடுகளால், இருட்டத் துவங்கிவிட்டது. மாயா பிரமிடுகளிலே உயரமான (145 அடி உயரம்) பிரமிட் கலக்மூல் பிரமிட். ஆறாம் நூறாண்டில் கட்டப்பட்டது. அதிக நேரம் செலவிடவில்லை. (காடு ஒரு பீதியை உண்டுபன்னத்தான் செய்கிறது). செட்டுமாலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

கலக்மூல் பிரமிடுகள்

மெக்ஸிக்கோ விசா வாங்கச் செல்லும் போது, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மெக்ஸிக்கோவின் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று விசா கொடுத்த அம்மாள் அறிவுருத்தினாள். கலக்மூல் காடுகள் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். அவள் சொல்லியதன் தீவிரம் அப்போது எங்களுக்கு புரியவில்லை. நாங்கள் சென்று வந்த சில மாதங்களில், கலக்மூல் காடுகள் வழியாக, இருநூறு பேர் கொண்ட ஒரு போதை மருந்து கடத்தல் கும்பல் (லாஸ் ஜீட்டாஸ்), குவாத்தமாலாவின் பீட்டனுக்கு சென்று, போதை மருந்து கடத்தலுக்கு உடன்படாத முப்பது விவசாயிகளை கொடூரமாக கொன்றுவிட்டது. மெக்ஸிக்கோவின் தற்போதைய பெரிய பிரச்சனை போதை மருந்து குழுக்களிடையே நடைபெறும் அதிகாரச் போர்கள் (Gang Wars). இவற்றை சமாளிக்க முடியாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ராணுவங்கள் திணறுகின்றன.  வருடந்தோறும், ஆயிரக்கணக்கில் மக்கள் இச்சண்டைகளில் மடிகிறார்கள்.

அமெரிக்காதான் உலகிலேயே பெரிய போதை மருந்து கன்ஸ்யூமர் மார்கட். அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்துவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. கரீபிய தீவுகள் வழியாக, கடல் மார்கமாக கடத்துவது ஒரு வழி. மெக்ஸிகோ – அமெரிக்கா எல்லை வழியாகக் கடத்துவது இன்னோரு வழி. கரீபியத் தீவின் போதை மருந்து குழுக்களை அமெரிக்கா அழித்துவிட்டது. மிச்சம் இருப்பது மெக்ஸிக்கோ தான். மெக்ஸிக்கோவின் போதை மருந்து குழுக்கள் தங்களுக்கென தனி ஆயுதப்படைகள் வைத்திருக்கின்றன (இதில் பலர் முன்னாள் ராணுவ சிறப்புப் படையை சேர்ந்தவர்கள்). மெக்ஸிக்கோவின் ராணுவத்தை எதிர்க்குமளவிற்கு அவை ஆயுத / பண பலம் பொருந்தியவை. இவை தவிர காசு கொடுத்தால், அவர்களுடன் இனைந்து போரிடும் கூலிப்படைகளும் உள்ளன. மெக்ஸிக்கோ அரசு, போதை குழுக்களை அழிக்க, அமெரிக்கா தன படையை அனுப்ப வேண்டும் என்று கெஞ்சுகிறது. (அமெரிக்காவில் சட்டப்படி கஞ்சா, பாப்பி செடிகளை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது). நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் எங்கள் காரை நிறுத்தி சோதனையிட்டார்கள். எங்கிருந்து வருகிறோம், எங்கு செல்கிறோம் போன்ற விவரங்களை கேட்பார்கள். சொல்வோம். அதற்குமேல் கேட்டால், ஸ்பானிய மொழி தெரியாததால் முழிப்போம். ‘போங்க’ என்று அனுப்பிவிடுவார்கள்.

நான் அமெரிக்காவில் மூன்று வருடமாக இருக்கிறேன். இதற்கு முன் இத்தாலியில் ஒரு மாதம் வேலை நிமித்தமாக, தங்கியிருந்தேன். இந்த இரண்டு நாடுகளிலும், அங்குள்ளவர்கள் நிறைய இந்தியர்களை பார்த்திருக்கிறார்கள். நான், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுடன் நிறைய இந்தியாவைப் பற்றி பேசியிருக்கிறேன் என்றாலும், அறிமுகம் இல்லாதவர்கள், பொதுவாக என்னை கண்டுகொண்டதில்லை. தெருவில் பார்ப்பவர்கள், பல சமயம் புன்னகையோடு கடந்து சென்றுவிடுவார்கள். (இத்தாலியில் எதிர்மறை அனுபவம் உண்டு). ஆனால், மெக்ஸிக்கோவில் கிடைத்த வரவேற்பு இதற்குமுன் நான் கண்டதில்லை.  மெக்ஸிக்கோவில் இந்தியர்களை மிகக் குறைவாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால், நிறைய இடங்களில் எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சில இடங்களில் ஆட்டோகிராப் வாங்கிக்கொண்டார்கள். (தற்காலிக) பச்சை குத்திக்கொள்ள, அவர்கள் பெயரை தமிழில் எழுதித் தந்தேன். சீனாவிலும் நிறைய பேர் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள் என்று நன்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உலகில், இந்தியர்கள் அதிக அளவில் போகாத இடம் குறைவு. அங்கேல்லாம் சிறப்பு வரவேற்பு/ விருந்தோம்பல் மிச்சம் இருக்கிறது. [அது கண்டிப்பாக பணக்கார மேற்கத்திய நாடுகளில் இல்லை].

அருணுடைய ரசிகர் பட்டாளம்.

லால்துன் குகை முன்பு, ஒரு பெண்மணி, ஒரு கருப்பு துண்டை என்னிடம் நீட்டினார். நான், ஏதோ விற்க வருகிறார் என்று நினைத்து, எனக்கு வேண்டாம் என்றேன். மீண்டும், இரண்டு முறை வந்தார். அவருக்கு, தலைப்பாகை கட்டிவிடச் சொல்கிறார் என்று புரிந்தது. இந்தியர்கள் என்றால் தலைப்பாகை கட்டியிருப்பார்கள் என்று எப்படி தோன்றியதோ தெரியவில்லை. (மன்மோகன் சிங்கை செய்திகளில் பார்த்திருக்கலாம்). கையில் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து, இந்தியாவைப் பற்றி விளக்குவதை ஒரு கலையாகவே கற்றுக்கொண்டேன். நம் ருபாய் நோட்டில் உள்ள பல்வேறு மொழிகளின் வரி வடிவங்களே, இந்தியா ஒரு பன்மைச் சமூகம் என்றுணர்த்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வரி வடிவங்களில், தமிழைக் காட்டி, இது, என் மொழி என்று சொல்வதில், எனக்கு ஒரு தனி பெருமை. [ஆர்வமாக கேட்பது போல தோன்றினால் ‘கல்தோன்றி மண்தோன்றா’ பெருமைகளை விளக்காமல் விடமாட்டேன்). இந்திய ரூபாய் நோட்டை பார்த்தவுடன் காந்தி தாத்தாவை எல்லோரும் அடையாளம் கண்டுகொண்டார்கள். (உஷ்மாலில், ஒரு பதின்பருவ குழு, எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு, ‘காந்தீ’, ‘இந்தியா’ என்று கத்தியது). பயணத்தின் போது, செட்டுமால் என்ற ஊரில் தங்கினோம்.  ‘ஹீரோஸ் அவென்யூ’ (Heroes Avenue) என்ற தெருதான் அவ்வூரின் முக்கியத் தெரு. அதில் பிரிந்த பத்து குட்டித் தெருக்களுக்கு பல்வேறு உலகத் தலைவர்களின் பெயரைச் சூட்டியிருந்தார்கள். அதில், ‘காந்தி’ தெருவும் ஒன்று. உலகத் தலைவர்கள் பெயரை வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியிருக்கிறதே..அதிலும் , காந்தி பெயரை சூட்ட வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே… இத்தனைக்கும் செட்டுமால் என்ற ஊர், சுற்றுலா நகரம் இல்லை. மிகச் சின்ன ஊர். காந்தி, உலகத்தின் மூலையில், ஏதோ ஒரு பெயர் தெரியாத ஊரின், மக்கள் மனதில் வாழ்கிறார் என்று உணர்ந்த போது, காந்தியையும், செட்டுமாலையும் நினைத்து பெருமைப்பட்டேன். (ஒப்புனோக்க, நம் ஊரில், இந்தியத் தலைவர்கள் பெயர்களைத் தவிர உலகத் தலைவர்கள் பெயரை தெருக்களுக்கு சூட்டியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், உள்ளூர் கவுன்சிலர் மறைந்தவுடன் அவர் பெயர் சூட்டப்பட்டுவிடும் ).

காந்தி தெரு - செட்டுமால்

செட்டுமாலுக்கு அருகிலிருந்த மஹவால் என்ற கடற்கரைக்குச் சென்றோம். நீல நிற கரீபியக்கடல். பவழப் பாறைகளையும், பல வண்ண மீன்களையும் பார்க்க ஸ்கூபா டைவிங் (ஆழ்கடல் நீச்சல்) செய்தோம். முதல் முறையாதலால் பயம் எனக்கு. கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கட்டிக்கொண்டு குதித்தது வித்தியாசமாக இருந்தது. குதிக்கும்போதே அருணுடைய முகமூடியை தட்டிவிட்டுவிட்டேன். கண்ணாடி போடாததால், தொலைவில் இருந்தது ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றம்தான்.

துலும் தீம் பார்க்

துலும் என்ற கடற்கரை ஊர் மாயர்களின் முக்கிய துறைமுக நகரம். துலும் சென்று பார்த்தால், தீம் பார்க்கிற்கு உரிய அனைத்து அம்சங்களுடன், ஏதோ கிஷ்கிந்தாவுக்கோ, மாயாஜாலுக்கோ போனது போல இருந்தது. அங்கிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து, துலும் பிரமிடை பார்க்காமலே கிளம்பிவிட்டோம்.  துலுமிலிருந்து கேன்கூன் கடற்கரை வரை மாயா ரீவேரா என்று அழைக்கப்படுகிறது. நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள மிக அழகான நீல நிற கடற்கரை. ஆனால், முழுக்க முழுக்க தனியார் வணிக சுற்றுலா நிறுவனங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட்டுகளுக்குள் நுழையாமல், கடற்கரைக்கு போகவே முடியாது. தொலைவிலிருந்தே வேடிக்கை பார்த்துவிட்டு, விடுதிக்கு திரும்பினோம். மறுநாள் காலையில் கேன்கூனிலிருந்து கிளம்பி அட்லாண்டவிற்கு வந்து சேர்ந்தோம்.

நாங்கள் இதுவரை பார்த்த ஊர்களில்,

கலக்மூல் – சங்க காலம்

சிச்சன் இட்சா, உஷ்மால் – பிந்தைய சங்க காலம்

மெரிடா, கம்பச்சே, செட்டுமால் – ஸ்பானிய ஆக்ரமிப்பு கால கட்டம் / தற்காலம்

கேன்கூன் –  தற்காலம்.

ஒரு கலாசாரத்தை உள்வாங்க பத்து நாள் போதாதுதான் என்றாலும், எனக்கு மிக நிறைவான பயணமாக அமைந்தது. என்றோ ஒருநாள், மாயாக்களை அவர்களுக்கு உண்டான உரிய மரியாதையுடன், முறையான ஆராய்ச்சியில் , அவர்களின் ஞானத்தை, தத்துவத்தின் ஆழத்தை, கலாச்சாரத்தை உலகம் உணர்ந்துகொள்ளும். [ இதை மேலை நாட்டினர் செய்ய முடியாது. செவ்விந்தியர்களாலோ,  கீழை சிந்தனையாளர்களாலோதான் செய்ய முடியும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை].

Leave a comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: